சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, February 21, 2014

பிரம்மன் - சினிமா விமர்சனம்

தொழிற்சாலையில் நேற்று குடித்த குடிநீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படாததால் நேற்றிலிருந்து காய்ச்சல், சளி, த்ரோட் இன்பெக்ஷன், பேப்பரை சுருட்டி ஓவராக காது குடைந்ததால் காதுவலி, கூடவே வீரசாகசம் காட்டுகிறேன் என்று நேற்று ரயில் பெட்டியில் இருந்து குதித்ததால் கால் பிசகி ஒருசேர பெரும் நோயாளியாகி ரெஸ்ட்டில் இருந்தேன். இன்று சினிமாவுக்கு போகும் மூடெல்லாம் இல்லை.


ஆனால் பாருங்கள் நேற்று போட்ட மாத்திரைகளில் விளைவாக காலையில் எல்லாமே லேசாக குறைந்திருந்தது. பத்து மணிக்கு உடலில் பலம் சேர்ந்ததால் டொய்ங்கென்று மண்டையில் கொம்பு முளைத்தது. வீட்டில் யாரிடமும் சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லாமல் கிளம்பி அரங்குக்கு வந்து விட்டேன். 

அது என்னமோ தெரியவில்லை, சசிக்குமாரின் எல்லாப் படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுகிறேன். சுப்ரமணிபுரம் முதலே நடந்து வரும் விஷயம் இது. ஆனால் பெரும்பாலான படங்கள் ஏமாற்றியதில்லை. ஆனால் இந்த படம் கொஞ்சம் அதிகமாகவே நெஞ்சை நக்கி விட்டது.


படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.

திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்கும் கூடவே டைம்பாஸ்க்கு காதலிக்கும் ஹீரோ. அவரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம். அவரையும் எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி.


திரையரங்கிற்கும் காதலுக்கும் பணத்தேவையின் காரணமாக சிக்கல் வர நாலாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் சினிமாவில் பெரிய இயக்குனராக இருப்பதை அறிந்து அவரிடம் உதவி கேட்க சென்னை வரும் ஹீரோ, எதேட்சையாக இயக்குனராகிறார். 

நண்பனுக்காக அந்த வாய்ப்பையும், தன் காதலியையும் விட்டுத் தருகிறார். மீண்டும் அந்த திரையரங்கமும் காதலியும் நாயகனுக்கு கிடைப்பதை கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.


தனக்கு வராத ஏரியாவான ரொமான்ஸ், நடனம் போன்றவற்றிலும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். சில இடம் நம்மை கஷ்டப்படுத்தினாலும் பல இடத்தில் அசால்ட்டாக பாஸ் செய்து கடந்து போகிறார்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். அந்த சதைப்பத்து இல்லாத கன்னத்திலும் குழி விழுவது அழகாக இருக்கிறது. அதை தாண்டி எதுவும் சொல்வதற்கில்லை.

சந்தானம் ஒன்லைனர்களால் திரையரங்கில் சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார். கடைசி அரைமணிநேரத்தில் பெர்மார்மன்ஸிலும் பின்னுகிறார்.சூப்பர் சந்தானம்.

சென்னையில் நான் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நான் எதிர்பார்த்தது சந்தானம் சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். என்ன பஞ்சாயத்தோ என்ன அரசியலோ யாமறியேன் பராபரமே.

அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது சம்பாதித்து தியேட்டர்  ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் இருக்கிறது. 

திருப்பதி பயணமும், அங்கு ஒரு சினிமாவும், தேவையில்லாத சண்டைக் காட்சியும் நேரத்தை கடத்த மட்டுமே பயன்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில முறை கேட்டதால் பாடல்கள் ஒன்றிரண்டு பிடிக்கிறது. 

போதும் இதற்கு மேல் விம் வைத்து விளக்க எதுவுமில்லை. எனக்கும் பசிக்கிறது, அதனால் இத்துடன் எல்லாத்தையும் முடித்துக் கொள்வோம்.

படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம். 

ஆரூர் மூனா

7 comments:

  1. ஆயிரம் மிளகாய் சுற்றி போட வேண்டும் உங்களுக்கும் சசிக்கும். கண் பட்டிருக்குமோ?

    ReplyDelete
  2. காயத்தோடு கழுத்தில் இன்னொரு காயம்... உங்கள் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா...?

    ReplyDelete
  3. உங்களுக்கு காயம்...
    எனக்கோ பெருங்காயம்....
    வாசலில் படம் எப்படியிருக்கு...? என்று கேட்டு ஒரு கூட்டம்
    அப்ப வடிவேல் தக்காளி சட்டணி கதை நினைவு வந்தது.......

    ReplyDelete
  4. இப்படியே போனால் நிறைய விழுப்புண்கள் இருக்கும் போல???

    ReplyDelete
  5. நான் சசிகக்காவே பார்த்துவிட்டேன்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...