சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, September 30, 2011

வெடி படம் விமர்சனம்

இன்று மூன்று படம் ரிலீஸ் ஆகியிருப்பதால் எதாவது ஒரு படம் பார்க்கலாம் என்று அம்பத்துர் ராக்கி தியேட்டருக்கு நானும் என் நண்பர்களும் சென்றோம். வாகை சூடவா ஞாயிறு அன்று என் மனைவியுடன் செல்லும் திட்டம் இருப்பதால் அதை தவிர்த்து வெடி அல்லது முரண் பார்க்கலாம் என்று சென்று டிக்கெட் கவுண்டரில் கேட்டால் முரண் மதிய காட்சி இல்லை என்று கூறியதால் வெடி படம் பார்க்கலாம் என்று டிக்கெட் எடுத்தேன். டிக்கெட் விலை நூறு ரூபாய்னு சொன்னானுங்க. நாலு டிக்கெட் நானூறு ரூவாயாயம். முழுசா நாலு நாளைக்கு நாலு குவாட்டர் அடிச்சிருக்கலாம், ம்ஹூம்,என் நண்பன் வேணாம்டா டிரெய்லரே பயமுறுத்துகிறது, என்றான் அப்படி என்னதான் என்று பார்க்கலாம் வாடா என்று கூறி உள்ளே சென்றோம், அதுதான் நாங்கள் செய்த தப்பு. அதைப்பற்றி பிறகு பார்ப்போம், முதலில் படத்துக்கு வருவோம்,

படத்தின் கதை என்ன? அதுக்கு முன்னால் ஒரு விஷயம். இரண்டு நாட்களுக்கு ஒரு தெலுங்கு படம் ஜெமினி டிவியில் வந்தது, படத்தின் பெயர் செளர்யம் என்று நினைக்கிறேன். முன்பே அந்த படத்தின் ரீமேக் தான் இது என்று தெரியாது தெரிந்திருந்தால் போயிருக்க மாட்டேன், அங்கு தான் விதி விளையாடியிருக்கிறது.

விஷால் கொல்கத்தாவுக்கு வருகிறார், அங்கு பூனம்மை சந்தித்து நட்பாகி அவரால் சமீரா ரெட்டி வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்குகிறார். பூனம்மிற்கு உதவிகள் செய்து அவரது பாதுகாவலராக இருக்கிறார், அப்பொழுது வில்லன் ஷாயாஜி ஷிண்டேவி்ன் கும்பல் தூத்துக்குடியிலிருந்து அவர்களை தேடி கொல்கத்தா வருகிறது. அங்கு அவர்களை கணடுபிடித்து பூனம்மை கடத்தி செல்கிறது. போகும் வழியில் விஷால் வழிமறி்த்து அவர்களை தாக்குகிறார். அப்பொழுது தான் சொல்கிறார், பூனம் தனது தங்கை என்று கூடவே வில்லனின் மகனை கொலை செய்கிறார், இன்டர்வெல் வருகிறது.

என் நண்பன் என்னை போட்டு அடித்தான், நான் தான் அப்பவே சொன்னேன்ல. ஏண்டா டிக்கெட் எடுத்த என்று, அதற்கு தண்டனையாக பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் செலவு என் தலையில் கட்டப்பட்டது. வெளியில் சென்றால் பல குமபல் பல பேரை போட்டு அடித்துக் கொண்டு இருந்தார்கள், அப்போது தான் எனக்கு உயிரே வந்தது, அப்படா தியேட்டரில் கம்பெனிக்கு பலர் உள்ளனர் என்று ஆறுதல் அடைந்து கொண்டேன். என்னடா படத்தை விட்டு விட்டேன் என்று பார்க்கிறீர்களா? சரி உங்க தலையெழுத்து படத்துக்கு வருவோம்.

அடிபட்ட பூனம் ஆஸ்பத்திரியில் இருக்கிறார். சமீரா ரெட்டி அவரது பெற்றோர்களிடம் முன்கதை சுருக்கத்(1)தை சொல்கிறார். அவரது அப்பா பெரிய ரெளடியாக இருந்து செத்துப் போகிறார். சிறுவயது விஷாலும் பூனமும் சாப்பிட கூட வழியில்லாமல் பசியில் தவிக்கின்றனர், அப்பொழுது ஒரு கிறிஸ்துவ பாதிரியார் அனாதை பெண்குழந்தை என்று பூனம்மை அழைத்துச் செல்வதாக கூறுகிறார். தங்கைக்கு சாப்பாடு கிடைக்கும் என்பதால் அவரை யாரென்று தெரியாது என்று கூறுகிறார். அதனால் தங்கை அவரை வெறுக்கிறார், முன்கதை சுருக்கம் (1) ஓவர். வில்லனின் மகனை கொன்றதால் வில்லன் கும்பல் மீண்டும் அவரையும் சமீராவையும் துரத்துகிறது. அவர்களையெல்லாம் சும்மா சுளுக்கெடுத்து விட்டு முன்கதைசுருக்கத்(2)தை சமீராவுக்கு சொல்கிறார். அவர் ஒரு போலீஸ் ஐபிஎஸ் ஆபீசர். தூத்துக்குடியில் அராஜகம் பண்ணும் ஷாயாஜி ஷிண்டேவை அடக்குகிறார். அவரை ரவுடியிசம் செய்ய விடாமல் தடுக்கிறார்.ஜெயிலுக்கு அனுப்புகிறார். தங்கை பற்றிய விவரம் தெரிந்ததால் வேலைக்கு லீவு போட்டு விட்டு கல்கத்தா புறப்படுகிறார், முன்கதை சுருக்கம் (2) ஓவர், அப்புறம் என்ன வில்லன் தங்கையை கடத்தினாரா? தங்கைக்காக விஷால் அடி வாங்கினாரா? வில்லனை அடித்து படத்தை முடித்தாரா? என்பதை காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து கொள்ளவும். ஏனென்றால் பிளாஷ்பேக் முடிந்ததும் நாங்கள் வெளியில் வந்து விட்டோம். நாங்கள் மட்டுமல்ல திரையரங்கில் இருந்த பாதிக்கூட்டம் வந்து விட்டது

ஸ்ஸ்ஸ் அப்ப்ப்பா இதை டைப் பண்ணும் போதே கண்ண கட்டுதே.

படத்தில் விவேக்கும் இருக்கிறார். படம் பார்க்கும் நமக்கு தான் சிரிப்பு வர மாட்டேங்குது. சமீரா ரெட்டியும் இருக்கிறார், ஆனால் ஒன்னும் சொல்லிக் கொள்வது போல் இல்லை. உடம்பும் தளர்ந்து போய் இருக்கிறது.

ஆந்திராவில் படம் ஓடினால் தமிழ்நாட்டிலும் படம் ஓட வேண்டுமா என்ன?

வெடி - நூறு ரூவா டமார்.

அண்ணே இவ்வளவு பேர் படிக்கிறீங்க. சும்மா சீ போ அப்படினாவது யாராவது கமெண்ட் போடுங்கப்பா.

ஆரூர் முனா செந்திலு





Wednesday, September 28, 2011

மும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா

நான் அப்பொழுது திருவாரூரில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், என் சித்தப்பா ஒருவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரைப்போல் ஒரு நபரை வேறு எங்கும் பார்க்க முடியாது. மனிதர் பழகுவதற்கும் அடுத்தவருக்கு ஒரு உதவி என்றால் முன்னின்று செய்வதற்கும் அவரைப்போல் ஒருவர் கிடையாது. ஆனால் அவர் ஒரு ஜொள்ளர். வயது வித்தியாசமெல்லாம் அவருக்கு கிடையாது. யார் ஒருவர் புடவைக்கட்டிக் கொண்டு அவரது கடைக்கு வந்தாலும் அவரிடம் வழிந்து பேசுவார், அதுவும் அழகாக இருந்து விட்டால் இலவசங்கெலல்லாம் கிடைக்கும். அதில் சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார், லவற்றில் செருப்படியும் பட்டுள்ளார்.

எங்கள் சொந்தங்களில் எந்த வீட்டு விசேஷம் என்றாலும் அவரே முக்கியஸ்தர் ஆகிவிடுவார், அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்வது என் வயதையொத்த பசங்களை வேலை வாங்குவது எல்லாம் அவரே, ஆனாலும் அவர் சொல்லும் வேலைகளை நாங்கள் விரும்பி செய்வதற்கு காரணம் அவர் சொல்லும் அவரது வாழ்வில் நடந்த கிளுகிளு தைகள், நாம் நம் வயதில் பார்க்கும் கிழவிகளை பற்றிய டீன்ஏஜ் கதைகலெல்லாம் அவரிடம் இருக்கும், எங்களுக்கெல்லாம் அவர் கதாநாயகர், ஏனெனில் எங்களுக்கு அப்பொழுது பதின்வயது என்பதால் பெண்களைப்பற்றிய ஆர்வமிக்க வயது என்பதால் தான்.

எங்கள் தாத்தா நாங்கள் அவரிடம் சுற்றிக் கொண்டிருக்கும்போது எல்லாம் பசங்களை எல்லாம் உன் போல் ஆக்கிவிடாதே என்று எஙகள் சித்தப்பாவை திட்டிக் கொண்டிருப்பார், இதில் நாங்கள் நாங்கள் நான் கூறுவது நான், என் அத்தை மகன் சதீஷ் (தற்பொழுது மன்னார்குடியில் பேருந்து நிலையம் எதிரில் புட்பிளாசா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறான்),என் சித்தப்பா மகன் வினோத் (தற்பொழுது ஹூண்டாயில் இன்ஜினியர்),என் மாமா மகன் ஜானகிராமன் (தற்பொழுது அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்) ஆகியோர் தான்.

இந்நிலையில் எங்கள் சித்தப்பா அவரது கூட்டுறவு சங்கத்தின் சார்பாக ஒரு பணிநிமிர்த்தமாக மும்பைக்கு முதல் முறையாக செல்ல வேண்டியிருந்தது. அவரோ அதுவரை ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டம், பழைய திருச்சி மாவட்டம் ஆகியவற்றை விட்டு வெளியில் சென்றதில்லை. வெளியூர் செல்வதால் அதுவரை பேண்ட் போடாத அவர், புதிதாக கடைக்கு சென்று புது பேண்ட், புது சட்டை, புது ஷு ஆகியவற்றை வாங்கி வந்தார், புதிதாக ஹேர் டை அடித்துக் கொண்டார். எங்களுக்கெல்லாம் திடீரென்று அவரின் செய்கை வியப்பை அளித்தாலும் நாங்களும் அவருக்கு கிளம்புவதற்குரிய உதவிகளை செய்து வந்தோம், ரு நாள் அதிகாலை சைக்கிள் எடுத்து வீட்டுக்கு வந்து என்னை அழைத்தார், என்னவோ ஏதோவென்று அவருடன் சென்றேன். என்னவென்று விசாரித்தால் அவருக்கு மும்பை செல்வதால் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும், பக்கத்து ஊரில் ஆந்திராவில் வேலை செய்த ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறினார், சரி என்று அவருடன் சென்று பக்கத்து ஊருக்கு சென்று தேடி வந்தவரை அணுகி கேட்டால் அவரோ தனக்கு தெலுங்கு மட்டுமே தெரியுமென்றும், ஹிந்தி தெரியாது என்றும் கூறி விட்டார், நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம்.

என்னை வீட்டில் இறக்கி விடும்போது சித்தப்பா நீ யாராவது ஹிந்தி தெரிந்தவர் இருந்தால் விசாரித்து வை நாம் சென்று அவரிடம் அந்த வார்த்தையை கற்று வருவோம் என்றார், நானும் என் உறவுக்கார பசங்களும் அவருக்காக தேடியலைந்தால் இரண்டு நாட்களாக யாரும் கிட்டவில்லை, இரண்டு நாள் கழித்து வடஇந்தியாவிலிருந்து செட்டியார் கடைக்கு லோடு ஏற்றி லாரி வந்ததாகவும் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று கேள்விப்பட்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் ததக்கா பிதக்கபவென பிதற்றினார்கள், பிறகு தான் தெரிந்தது வந்தவர்கள் ஒரிசாக்காரர்கள் அவர்களுக்கும் இந்தி தெரியவில்லை என்று. நொந்துகொண்டே திரும்பி வந்தோம்.

சித்தப்பாவுக்கு செல்லும் நாள் நெருங்கி கொண்டு வந்தது. அப்பொழுது என் நண்பன் பிரசாத் ஒரு ஐடியா சொன்னான். எங்கள் ஊரில் கமலாலயம் தென்கரையில் ஹந்தி டியூசன் சென்டர் இருப்பதாகவும் அங்கு சென்றால் உங்கள் சித்தப்பாவுக்கு வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிடலாம் என்றும் கூறினான். மிகுந்த சந்தோஷத்தோடு சித்தப்பா வீட்டுக்கு சென்று அவரிடம் செய்தியை கூறினேன். அவரும் என்னுடன் புறப்பட்டு வந்தார். அவரிடம் சென்று சித்தப்பாவை அந்த ஹிந்தி வார்ததையை கற்றுக் கொள்ளக் கூறினேன். அவர் டியூசன் சென்டர் உள்சென்று சிறிது நேரம் கழித்து சந்தோஷமாக வந்தார். வெளியில் வந்த ஹந்தி வாத்தியார் வெளியில் வந்து தலையில் அடித்துக் கொண்டு இவரையெல்லாம் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று அலுத்துக் கொண்டார்.
எல்லாம் சரி என்னடா ஓவர் பில்ட்அப் செய்கிறாயே, அந்த வார்த்தை என்னவென்று கேட்கிறீர்களா? அது பெரிய காமெடி, நம்ம சித்தப்பு மும்பை போய் பலான இடத்துக்கு போனா அங்க பேசறதுக்கு கத்துக்கிட்டு போன வார்த்தை "பூரா கப்டா நிக்காலோ". இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்குறீங்களா, எல்லா துணியையும் கழட்டுன்னு அர்த்தம், எப்பூடி


ஆரூர் முனா செந்திலு




Tuesday, September 27, 2011

நானும் என் பிரியாணியும் - பகுதி 2


பிரியாணி வாவ். எங்கள் நிறுவனத்தின் லைமை அலுவலகம் ஐதராபாத்தில் இருந்த காரணத்தால் அடிக்கடி நான் அங்கு சென்று வருவேன். ஐதராபாத்தில் லக்டிகபூல் என்ற பகுதியில் உள்ள ஹோட்டல் அசோகாவில் தான் நான் வழக்கமாக தங்குவேன், அங்கு சென்றது முதல் காலை, மதியம், இரவு மூன்று வேளையும் நமக்கு பிரியாணி தான். ஹோட்டல்காரர்கள் சாப்பாடு நேரத்தில் என்ன வேண்டும் என்று கேட்காமல் பிரியாணியை அனுப்பி விடுவார்கள், இந்தியாவில் வேறு எந்த ஊரில் சாப்பிடும் பிரியாணியை விட ஐதராபாத்தில் உள்ள பிரியாணிக்கு மட்டும் அந்த சுவை வருகிறதோ தெரியவில்லை, அங்கு ஓரு கடை தான் என்றில்லை, எந்த கடையில் சாப்பிட்டாலும் அந்த சுவை வரும்.
அதிலும் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஹோட்டல் தான் மிகுந்த பேமஸ். நள்ளிரவு, விடியற்காலை நேரத்திலும் அங்கு சுடச்சுட பிரியாணி கிடைக்கும். மதிய நேரத்தில் அலுவலகத்திலேயே கேண்டீன் இருக்கும். நண்பர்கள் சாப்பிட அழைப்பார்கள், நான் அவர்களையும் அழைத்துக் கொண்டு வெளியே பிரியாணி சாப்பிட வந்து விடுவேன். அதிலும் அங்கு ட்டும் தான் பிரியாணியில் எந்த ஒரு மசாலாவும் வாயில் பிடிபடாது, அப்படியே எடுத்து சாப்பிடும் வகையில் இருக்கும். பட்டை, ஏலக்காய், இலை இது போன்ற எதுவும் சிக்காது. ஆனால் அவற்றின் வாசம், சுவை மட்டும் இருக்கும்.
அது மட்டும் இல்லை, ஒரு முறை சென்னை ஏர்போர்ட் எதிரில் உள்ள பகுதியில் மிலிட்டரி ரம் கிடைக்கும், ஒரு முறை நானும் என் நண்பன் எட்வினும் ஒரு புல் ரம் வாங்கி அங்குள்ள ஒரு மைதானத்தில் ஒரு ஏழு மணியளவில் ஆரம்பித்தோம், எட்டு மணிக்கு முடிந்தது, பைக் எடுத்து ரூமுக்கு வரும் போது ஏர்போரட் எதிரில் வரும் போது நான் பிரியாணி சாப்பிட்டு போகலாம் என்று கூறினேன். அவன் சுவையான பிரியாணி என்றால் ஐதராபாத் தான் போக வேணடியிருக்கும் என்று கூறினான். போதையில், விடுறா வண்டியை ஏர்போர்ட்டுக்கு என்று கூறி பைக்கை பார்க் செய்து விட்டு அப்பொழுது இருந்த ஏர்டெக்கான் விமானத்தில் அந்த நிலையிலேயே ஏறி ஐதராபாத் சென்றோம். ஏறுவதற்கு முன் அங்குள்ள எனது நண்பன் சீனிவாசலுவுக்கு போன் செய்து விட்டதால் அவன் கார் எடுத்து வந்து ஏர்போர்ட்டில் நின்றான். வண்டியில் ஏறினோம்.

நேரே பாரடைஸ் ஹோட்டல் சென்றோம். வழியில் பத்தவில்லை என்பதால் அங்கு ஆளுக்கு ஒரு குவாட்டரை சாய்த்து விட்டு பிரியாணியை புல் கட்டு கட்டிவிட்டு கையில் பார்சலும் வாங்கிக் கொண்டு திரும்பி ஏர்போர்ட் வந்தோம். அப்பொழுது 11 மணிக்கு ஒரு விமானம் இருந்தது, டிக்கெட்டும் இருந்ததால் புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்து விட்டோம். பிறகு என்ன மறுநாள் முழுக்க சென்னையில் ஐதராபாத் பிரியாணி தான். ஆனாலும் சென்று வந்த செலவுக்கு பங்கு போடும் போது சண்டை போட்டு மாலை சமாதானத்திற்கு மீண்டும் சரக்கு போட்டது தனிக்கதை.


ஆரூர் முனா செந்திலு






Monday, September 26, 2011

நானும் என் பிரியாணியும் - பகுதி 1

பிரியாணி. இந்த ஒரு வார்த்தை, அதன் ருசி என் வாழ்வில் ஏற்படுத்திய கிளர்ச்சிகள், மாற்றங்கள், நடந்த சுவையான சம்பவங்கள் இவற்றை தொகுத்து வழங்குகிறேன்,


சிறுவயதில் எனக்கு திருவாரூரில் என் அப்பா டீலக்ஸ் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்து தரும் பிரியாணி, அடடா அதன் சுவை மாதம் இருமுறை வாங்கித்தருவார்,நானும் என் தம்பியும் போட்டிப்போட்டு திருப்தியுடன் சாப்பிடுவோம், நான் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் வரை எனக்கு தெரிந்த வரையில் இந்த ஒரு கடை பிரியாணியை மட்டும் தான் சாப்பிட்டு இருக்கிறேன், பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை ஐசிஎப் வந்து விட்டேன். எனக்கான வெளியுலக வாசலை திறந்து விட்டது இந்த காலக்கட்டம் தான். சென்னையில் ஏராளமான பிரியாணி கடைகள், தோன்றும் போதெல்லாம் பிரியாணி தான். இருந்தாலும் அது, படித்த காலகக்கட்டம். மேலும் இந்த குடிப்பழக்கம் என்னிடம் இல்லாத நாட்கள் அவை, அந்த சமயத்தில் வில்லிவாக்கத்தில் உள்ள மகேஷ் ஓட்டல் பிரியாணி, அயனாவரம் நூர் ஹோட்டல் பிரியாணி. பெரம்பூரில் ரயில்வே கீழ்ப்பாலத்திற்கு அருகில் உள்ள ஒரு அசைவ ஹோட்டல் பிரியாணி(அதன் பெயர்ப் பலகையில் ராஜ்கிரண் தொடைக்கறி கடிப்பது போல் ஓவியம் தீட்டப்பட்டிருக்கும்) ஐசிஎப் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு பிரியாணி கடை பிரியாணி ஆகியவை எங்கள் பகுதியில் மிகவும் புகழ் பெற்றவை.


படிப்பு முடிந்த பிறகு ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன். என் வாழ்க்கையை புரட்டிப்போட்ட இடம் அது, 2001 முதல் நான் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியே வந்த 2009 வரை நான் இருந்த நிலையே வேறு, நிர்வாக அலுவலர் என்பதால் அந்த நிறுவனத்திற்கு வரும் வெளியூர், வெளிநாட்டு விருந்தினர்களை விமான நிலையத்தில் பிக்அப் செய்ய கார் அனுப்புவது முதல் அவர்க்ள் தங்கியிருக்க விருந்தினர் இல்லம் ஏற்பாடு செய்வது, அவர்களது அலுவல் பணி முடியும் வரை உடன் இருப்பது, சென்னையை சுற்றிப்பார்க்க உறுதுணையாக இருப்பது, திருப்பி ஏர்போர்ட்டில் இறக்கி விடும் வரை என்னுடைய பொறுப்பு. அந்த நாட்களில் அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது என்னுடைய பொறுப்பு என்பதால் எனக்கு பிடித்த கடையில் பிரியாணி வாங்க வண்டி ஓட்டுனரை அனுப்புவேன். இது வாரம் மூன்று நாட்கள் குறைந்தது இருக்கும் என்பதால் என் பிரியாணி நண்பன் என்னுடன் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான். ஊருக்கு திரும்பி சென்ற விருந்தினர்கள் எல்லாம் என்னையும், பிரியாணியையும் மறக்க முடியவில்லை என்று மின்னஞ்சல் அனுப்பும் அளவுக்கு அவர்களையும் பிரியாணி பிரியன் ஆக மாற்றியவன் நான்.


இன்னும் தொடரலாம் தான் ஆனால் ஒரே நாளில் எல்லாவற்றையும் மீண்டும் யோசித்து தட்டச்சு செய்வது சிறிது அலுப்பை கொடுக்கிறது. எனவே மீதியை நாளை தொடருகிறேன்.


ஆரூர் முனா செந்திலு





Saturday, September 24, 2011

நிலக்கொள்ளையால் நெருங்கும் உணவுப்பஞ்சம்

"தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்திணை அழித்திடுவோம்" என்று பாரதி பாடி ஒரு நூற்றாண்டு முடியவில்லை. அதற்குள் தனிமனிதர்கள் சிலர் சேர்ந்து ஜகத்தினை பட்டினியால் அழிக்கும் திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். மக்களைப் பட்டினி போடும் அரசுகளைக் கொண்ட நாடுகள், லட்சக்கணக்கான ஹெக்டேர் விளைநிலத்தை அடிமாட்டு விலைக்கு அன்னியரிடம் விற்று செயற்கையாக பஞ்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தால் மடியப் போவது உறுதியாகத் தெரிந்தும் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் அந்நாடுகளிலுள்ள விளை நிலங்களை வாங்கிக் குவித்து வருகின்றன "பன்னாட்டுக் கம்பெனிகள்" எனப்படும் பிணந்தின்னிக் கழுகுகள். அப்படியாவது பிற நாடுகளில் சென்று விளைநிலம் வாங்க வேண்டிய அவசியமென்ன? சொந்த நாட்டு மக்களை பட்டினியிலிருந்து காப்பாற்றப் போகிறார்களாம்!

இந்த "மனிதநேயர்கள்" ஐரோப்பாவிலும் வடஅமெரிக்காவிலும் மட்டுமே இருப்பதாக தவறாக எண்ணிவிடக் கூடாது. ஜப்பான், அரபு நாடுகள் ஒன்றியம், சவூதி அரேபியா, தென் கொரியா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் நில அபகரிப்புப் போட்டியில் முன்னணியில் உள்ளன. எந்த நாடு உலகின் எப்பகுதியில் எவ்வளவு நிலத்தை அபகரித்துள்ளது என்பதை கீழே தரப்பட்டுள்ள பட்டியலில் பார்க்கலாம்.

நீண்டதோர் பட்டியலின் ஒரு சிறு பகுதியே இது. இந்தியா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள் எந்தளவுக்கு நில அபகரிப்பில் இறங்கியுள்ளன என்பதைக் காட்டவே இந்தப் பட்டியல் இங்கு இடம்பெறுகிறது.

தெற்காசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா கண்டங்களில் உள்ள நாடுகளின் விளை நிலங்களை அதிவேகமாக வாங்கிக் குவித்து வருகின்றன பல பன்னாட்டுக் கம்பெனிகள். ஏற்கெனவே நாட்டு மக்களைக் கூட்டங்கூட்டமாக பட்டினியால் சாகவிடும் அரசுகள், ரகசியமாக காதும் காதும் வைத்தாற்போல பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு வருகின்றன. இவ்வாறு விளைநிலங்கள் பன்னாட்டு முதலாளிகள் வசமாகி எதிர்காலத்தில் உணவு என்பதே சாமானிய மனிதருக்கு எட்டாத கனியாகி விடும் அபாயம் நெருங்குகிறது. வெளிநாடுகளில் உணவை உற்பத்தி செய்து உள்நாட்டில் பெரும் லாபத்திற்கு விற்கும் உரிமை கார்ப்பரேட் நிறுவனங்களின் வசமாவதால் உலகில் என்னென்ன கேடுகள் விளையும் என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.

நிலஅபகரிப்புப் போட்டியினால் உடனடியாக பெருமளவு பாதிப்பைச் சந்திக்கப் போவது ஆப்பிரிக்க நாடுகளே. ஏற்கெனவே எத்தியோப்பியாவில் ஆயிரக் கணக்கில் மக்கள் பஞ்சத்தில் மடிந்து வருவது அனைவரும் அறிந்த செய்தி. அந்த நிலையில், "எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்" என பல நாடுகள் போட்டி போட்டு எத்தியோப்பிய விளைநிலங்களை அபகரித்து வருகின்றன.

எத்தியோப்பியாவில் 6 லட்சம் ஹெக்டேர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேருக்கு ரூ.150 லிருந்து ரூ.500 வரை விலை தரப்பட்டுள்ளது. அங்கு சராசரியாக ஒரு குடும்பத்திற்கு 2 ஹெக்டேர் நிலம் உளளது. இந்த நில அபகரிப்பால் ஏறக்குறைய 3 லட்சம் குடும்பங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். அபகரிக்கப்பட்ட நிலங்களில் இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்யப்படுவதால், வெறும் 20000 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.

நிலப்பறிப்புப் போட்டியில் முதலிடம் வகிப்பது இந்தியா.

கருதூரி குளோபல் லிமிடெட் என்ற பெங்களூர் கம்பெனி ஒன்று மட்டுமே 3,50,000 ஹெக்டேர் நிலத்தை அபகரித்துள்ளது. இந்திய அரசின் கடனுதவியோடு இதுவரை 30,000 ஏக்கர் நிலத்தில் பயிர் செய்யப்பட்டிருக்கிறது. உணவு தானியங்கள், கரும்பு, பாம் ஆயில் போன்றவற்றை விளைவித்து அவற்றை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்போவதாக அறிவித்துள்ள கருதூரி குளோபல் கம்பெனி, "உலகிலேயே பெரிய விவசாய நிலப்பரப்பு" தன்னிடம் உள்ளதாக மார்தட்டிக் கொள்கிறது. உணவுப் பொருட்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமென்ற நிபந்தனையோடு இதுவரை எத்தியோப்பியாவுக்கு இந்திய அரசு 50 கோடி பவுண்ட் கடனுதவி அளித்துள்ளது.

எத்தியோப்பியாவில் மட்டுமே 80 இந்திய கம்பெனிகள் நில அபகரிப்புப் போட்டியில் இறங்கியுள்ளன. எத்தியோப்பியாவில் மட்டுமின்றி கானா, மாலி, மட காஸ்கர், மொசாம்பிக், சூடான், டான்சானியா ஆகிய நாடுகளிலும் இந்திய கம்பெனிகள் விளை நிலங்களைப் பறித்து வருகின்றன.

ஆப்பிரிக்க விளை நிலங்களை அபகரித்து, புதியமுறை காலனியாதிக்கத்திற்கு இந்தியா வழிகோலியுள்ளது என்ற குற்றச்சாட்டை வேளாண் அமைச்சர் சரத் பவார் மறுத்துள்ளார். "சில கம்பெனிகள் சர்க்கரை உற்பத்திக்கென விளை நிலங்களை வாங்கி, விளைச்சலை சர்வதேசச் சந்தையில் விற்கப் போகின்றன - அவ்வளவு தான்" என்கிறார் அவர்.

இந்தியாவில் விளையும் பாசுமதி அரிசியை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, பிறவகை அரிசியை சர்வதேசச் சந்தையில் விற்பனை செய்ய ஏதுவாக ஆப்பிரிக்க விளை நிலங்களில் முதலீடு செய்யுமாறு இந்தியாவின் "யெஸ் பேங்க்" முதலாளிகளுக்கு அறிவுரை வழங்குகிறது.

அதேபோல தற்போது இந்தியாவில் மாமிச உணவுக்கான தேவை அதிகரித்துள்ள போதிலும் மாட்டுத் தீவனமாக மக்காச்சோளம் விளைவிக்க இந்திய அரசு உதவி ஏதும் செய்யவில்லை. ஆனால், ஆப்பிரிக்காவில் சோளம் விளைவிக்க இந்திய கம்பெனிகளுக்கு இந்திய அரசின் கடனுதவி அளிக்கிறது. எத்தியோப்பியாவில் மட்டுமே இதுவரை இந்தியா 430 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. விரைவில் இத்தொகை ஆயிரம் கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற அநியாயமான நில பறிப்பால் எத்தியோப்பியாவில் ஏற்கெனவே பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலை என்னவாகும்? எத்தியோப்பியாவின் கிழக்கு, தெற்கு பகுதிகளில் மட்டுமே 52 லட்சம் மக்கள் உணவுக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல - ஏற்கெனவே சர்வதேச சமூகத்தின் உதவியால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வலைத்திட்டம் தான் பட்டினியால் சாகும் அபாயமுள்ள 80 லட்சம் கிராமப்புற மக்களை காப்பாற்றி வருகிறது. கோடிக் கணக்கான மக்களை பட்டினியில் சாகவிட்டுவிட்டு விளைச்சலை அந்நிய முதலாளிகளிடம் விற்பதை என்னவென்று சொல்வது?

பனை எண்ணெய்க்காகவும், தாவர டீசல் எண்ணெய் உற்பத்திக்காகவும் பர்மா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் விளைநிலங்கள் காவு கொடுக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ள நாசத்தை நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம்.

அடுத்தபடியாக நில அபகரிப்பு காரணமாக சூழலியல் பாதிப்புக்கு இரையாகப் போவது அண்டை நாடான பாகிஸ்தான். கத்தார் நாடு பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 16 லட்சம் ஹெக்டேரில் உணவு உற்பத்தியைத் தொடங்கவிருக்கிறது. இதனால் 25,000 கிராமங்களில் மக்கள் தங்கள் விளைநிலங்களையும் வாழ்விடங்களையும் விட்டு துரத்தப்படுவார்கள். சவூதி அரேபியாவும் பாகிஸ்தானில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. பாகிஸ்தானின் வேளாண் நிலங்களை கம்பெனிகளுக்கு வாரி வழங்கும் படலம் முசரப் ஜனாதிபதியாக பொறுப்பிலிருந்த காலத்தில் வேகமெடுத்தது. அதற்கு முன்பே பாகிஸ்தானில் விவசாயம் மிக மோமான நிலையில் தான் இருந்து வந்தது.

1967இலேயே பாகிஸ்தான் மெக்சிகோவிலிருந்து 47,000 டன் குட்டைரக கோதுமையின் "உயர் தரமான" விதைகளை இறக்குமதி செய்திருந்தது. (அதற்கு முன் 1966இல் இந்தியா மெக்சிகோவிலிருந்து 18,000 டன் கோதுமை விதையை இறக்குமதி செய்துதான் பசுமைப் "புரட்சியை"(!) தொடங்கியிருந்தது). விவசாயத்தை தாராளச் சந்தை அழிப்பது ஏன், எவ்வாறு என்று ஆராய வேண்டுமானால், அதற்குச் சரியான இடம் பாகிஸ்தான் என்று அந்நாட்டின் பொருளாதார வல்லுனர்களே கூறுகின்றனர்.

தனிநாடுகளின் இந்த நிலைமை தொடர்ந்தால் உலகம் முழுவதிலுமுள்ள நாடுகள் பலவும் பட்டினிச்சாவை எதிர்நோக்கும் அபாயநிலை ஏற்படும். இதனைத் தடுக்க சர்வதேச அமைப்புகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளன?

உலகெங்கிமுள்ள 16 சர்வதேச வேளாண் ஆராய்ச்சி நிலையங்களின் நிர்வாக அமைப்புதான் "சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு". முதலில் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிலையம் நில அபகரிப்பு நடவடிக்கையில் கம்பெனிகளுக்கு நடைமுறை விதிகளை ஏற்படுத்துவது குறித்துப் பேசியது. இப்போது சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிலையம் அதிகமாக அரிசி விளைவிப்பதற்காக சவூதி அரேபியாவின் கம்பெனிகளுடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது! சர்வதேச வேளாண் ஆராய்ச்சிக்கான ஆலோசனைக் குழு சிறு விவசாயிகளுக்கு உதவும் கடமையைக் கைவிட்டு நீண்டகாலமாகி விட்டது. தற்போது பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் அமைப்பு உள்ளிட்ட பெருங் குழும முதலாளிகளுக்கு எந்தெந்த நாடுகளில் நிலங்களைப் பறித்து விவசாய உற்பத்தி செய்யலாம் என்று அறிவுரை வழங்கி வருகிறது.

ஒருபுறம் வங்கிகளும், காப்பீட்டுக் கழகங்களும் பெரு முதலாளிகளின் நில அபகரிப்புக்கு எவ்வித உத்தரவாதமும் பெறாமல் கடனுதவி அளிப்பதற்காக சாதாரண மக்களின் சேமிப்புகளை வீணாக்கி வருகையில், மறுபுறம் ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் புவி வெப்பமாதல் பற்றியும் உணவு உற்பத்திப் பெருக்கம் பற்றியும் ஓயாமல் பேசி வருகின்றன. "எதிர்வரும் அபாயத்தை நாம் உணருமுன்பே நம் காலடியில் உள்ள நிலம் கைமாறிப் போயிருக்கும்! எனவே இந்த உணவுக் கொள்ளையர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்கிறார் உணவுக் கொள்கை ஆய்வாளரான தேவீந்தர் சர்மா.

உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜாக்வெஸ் தியோஃப், "உள்நாட்டின் உணவு மற்றும் பிற வேளாண் பொருட்களின் உற்பத்திக்காக அந்நிய நாடுகளில் நிலம் வாங்கினால் கச்சாப் பொருட்களுக்கான விலையும், அவற்றின் உற்பத்தியாளர்களுக்கான கூலியும் அநியாயமாகக் குறைந்து புதுக் காலனி ஆதிக்கம் ஏற்பட ஏதுவாகும்" என்று கூறினார்.

ஆனால் இதற்கு எதிராக உணவுப் பொருள் வணிகத்துக்கு ஆதரவாக வாசிங்டனிலுள்ள சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹொவாச்சிம் வான் பிரவுன் பின்வரும் பதிலைக் கூறினார்:

"சர்வதேசச் சந்தையை அண்டியிருப்பதால் இறக்குமதி செய்யும் நாடுகள் விலை உயர்வால் மட்டுமின்றி முக்கியமாக - பொருட்களின் வரத்து தடைப்படுவதாலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அந்நாடுகள் தடையற்ற உணவுப் பொருள் வரத்துக்கு உத்தரவாதம் இருக்க வேண்டுமெனக் கருதுகின்றன".

மேற்கூறியவற்றைப் பார்க்கும்போது, உள்நாட்டு மக்களுக்கான உணவை உற்பத்தி செய்வதற்காக அந்நிய மண்ணில் உற்பத்தி செய்வது ஏற்கெனவே பட்டினிக்கு ஆளான மக்கள் வாழும் ஏழை நாடுகளை மேலும் சுரண்டுவதுதான் என்பது தெளிவாக விளங்கும். நிலங்களைக் கையகப்படுத்தும் பன்னாட்டுக் கம்பெனிகள் வேளாண் உற்பத்தியை பெரும் லாபத்திற்கு வேறு நாட்டில் விற்பனை செய்வதால், உள்நாட்டில் மக்கள் உணவுக்குப் போதுமான நிலம் இல்லாமல் பஞ்சத்தில் மாள்வதை அறிந்தே இந்த நிலக் கொள்ளைக்கு சுரண்டல்வாத அரசுகள் வழிய மைத்துக் கொடுக்கின்றன. அது மட்டுமின்றி விளை நிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு விற்பனை செய்வது, "வேளாண் உற்பத்தியில் தனியார் முதலீட்டை அதிகளவில் ஊக்குவிக்கும்" என்றும், "பொறுப்புள்ள சர்வதேச வேளாண் முதலீட்டை நல்ல முறையில் ஊக்குவிக்க நடைமுறை விதிகளை உருவாக்க வேண்டும்" என்றும் ஐ.நா. சபையும் உலக வங்கியும் இதற்கு சப்பைக் கட்டு கட்டுகின்றன.

2008ஆம் ஆண்டு வட அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியின் மோசமான விளைவுகளை இன்றுவரை அனுபவித்து வருகிறோம். விளை நிலங்களின் பரப்பளவு குறைவதால் உலகெங்கும் உணவுப் பற்றாக்குறையும் அதிகரித்து வருகிறது. முதலாளிகளுக்கு இந்த இரண்டு பற்றாக்குறைகளும் சேர்ந்து புதியதோர் லாபகரமான தொழிலுக்கு வழியமைத்துள்ளன. பொருளாதார நெருக்கடியால் மலிவாகிவிட்ட விளைநிலம், குறைந்த கூலியில் கிடைக்கும் உழைப்பு, அதிக விலைக்கு விற்கக்கூடிய உணவை விளைவிக்கும் நிலத்தை வாங்கக் கிடைக்கும் கடனுதவி - இவையாவும் பெருமுதலாளிகளை நிலக் கொள்ளைத் தொழிலை நோக்கி கவர்ந்திழுக்கின்றன.

உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம், மறுகட்டமைப்புக்கும் வளர்ச்சிக்குமான ஐரோப்பிய வங்கி போன்ற பகாசுர நிதி நிறுவனங்கள் நில அபகரிப்புக்கு பெரும் தொகைகளை கடனாக அளிக்கின்றன. இதற்காக அரசுகளை நில உரிமைக் கொள்கைகளை மாற்றியமைக்குமாறு வற்புறுத்தி வருகின்றன. (அண்மையில் இந்திய அரசு அயல் நாட்டவர் இந்தியாவில் விளைநிலம் வாங்கலாம் என்ற சட்டத்தை முன் வைத்ததும், அதனை எதிர்த்து வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் தலைமையில் தஞ்சையில் ஏப்ரல் 17 அன்று தாளாண்மை உழவர் இயக்கம், தமிழக உழவர் முன்னணி, த.தே.பொ.க., மனிதநேய மக்கள் கட்சி, இந்திய பொதுவுடைமைக் கட்சி, தஞ்சையிலுள்ள பல்வேறு உழவர் சங்கங்கள் இவை யாவும் ஒன்றிணைந்து தஞ்சையில் எதிர்ப்பு மாநாடு நடத்தியது நினைவிருக்கலாம்).

நிலப் பறிப்பில் உலக வங்கி போன்ற கொள்ளை லாபம் ஈட்டும் நிதி நிறுவனங்கள் மட்டுமின்றி, 2008 பொருளாதார நெருக்கடியில் திவாலாகி, பின்பு வட அமெரிக்க அரசின் நிதி உதவியால் பிழைத்துப் போன மார்கன் ஸ்டான்லி, டாயிச் வங்கி, கோல்ட்மேன் சாக்ஸ் ஆகியவை பெருமளவு முதலீடு செய்துள்ளன. மக்களின் இயல்பான உரிமையாக இல்லாமல் பொருள் படைத்தவரின் தனியுரிமையாக உணவை மாற்றும் சூதாட்டத்தில் கொழுத்த லாபம் அடைவதற்காக உலகெங்கிலும் விளை நிலங்களை இந்நிறுவனங்கள் அபகரித்துள்ளன.

பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் மட்டுமின்றி, தென் அமெரிக்க நாடுகளான பிரேசில், அர்ஹென்தினா, உருகுவாய், பராகுவாய் ஆகியவற்றிலும் விளை நிலங்களை வாங்க இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகள் போட்டியில் இறங்கியுள்ளன. தென் அமெரிக்காவில் விளை நிலங்களை வாங்குமாறு இந்திய அரசு இந்திய முதலாளிகளை ஊக்குவித்து வருகிறது.

சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற பெயரில் நாட்டின் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரமான சிறுதுண்டு நிலங்களையெல்லாம் பிடுங்கி பெருமுதலாளிகளின் வசம் ஒப்படைக்கும் இந்திய அரசு, அதே மக்களின் உணவுத் தேவையை நிறைவேற்ற வெளிநாடுகளில் நிலம் வாங்கும்படி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. ஒட்டுமொத்த நாட்டின் உணவு உற்பத்தியை நாட்டை ஆளும் பெருமுதலாளிகளுக்கு வாங்கித் தரும் தரகு வேலையைத்தான் இந்திய அரசு முழு வேகத்தில் செய்து வருகிறது.

டாட்டாவிற்கு நிலத்தை தாரைவார்க்க சிங்கூரில் மக்களை வேட்டையாடிய மேற்கு வங்க அரசும், அதே டாட்டாவிற்கு தூத்துக்குடியில் நிலத்தை விற்க முயன்ற தமிழ்நாட்டின் அரசும், பீகார், ஒரிசா, ஜார்கண்ட், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களின் கனிம வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று கமிசனை அள்ளும் இந்திய அரசும், நமது "மக்கள் பிரதிநிதிகள்" தரகு வேலையில் கைதேர்ந்தவர்கள் என்பதையே பறைசாற்றுகின்றன. நாட்டை ஆள்வது காங்கிரஸ் கட்சி அல்ல - கம்பெனிகளே என்றும் உறுதி செய்கின்றன.

தூத்துக்குடியில் டைட்டானியம் ஆக்ஸைட் அகழ்ந்தெடுக்கும் டாட்டாவின் திட்டம் பொதுமக்களின் போராட்டத்தால் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ரகசியமாக பல பகுதிகளில் ஓசைப்படாமல் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதால் நாட்டிலேயே அதிகமான சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியின் கீழுள்ள சிங்கூரில் போலீசும் துணை ராணுவப் படைகளும் மக்களை வேட்டையாடின. தற்போது வடமாநிலங்களில் ராணுவமும் போலீசும் பழங்குடி மக்களை ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு, கனிமங்களை கொள்ளையடிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாரி வழங்க முற்படுகின்றன.

வருகின்ற 10-15 வருடங்களில் பருப்பு உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்ற அறிவிப்போடு அரியானா முதலமைச்சர் தலைமையிலான செயற்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு ஜூன் 6ஆம் நாள் ஒரு வரைவு அறிக்கையை அளித்துள்ளது. இக்குழுவில் மேற்குவங்க முதல்வர், பீகார் முதல்வர், பஞ்சாப் முதல்வர் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வறிக்கை கனடா, அர்ஹென்தினா, ஆஸ்திரேலியா, பர்மா ஆகிய நாடுகளில் நிலம் வாங்கி பருப்பு விளைவிக்க இந்தியக் கம்பெனிகளை ஊக்குவிக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறது. இதே அறிக்கை எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை அதிகரிக்க ஆசிய நாடுகளில் நிலம் அபகரிக்க அறிவுறுத்துகிறது.

நிலப்பறிப்பு அரசியல் கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மேற்கு வங்க அரசும் சேர்ந்திருப்பது சீரழிவின் புதிய நி€ல் ஆபத்தின் புதிய வளர்ச்சி. மிகப்பெரும் ஜனநாயக நாடு, வளரும் நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறி சர்வதேச அரங்கில் அந்நிலையைத் தக்கவைத்துக் கொள்வதற்காக வல்லரசுகள் மேற்கொள்ளும் அனைத்துவித மக்கள் விரோத நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது இந்திய அரசு.

உணவை உற்பத்தி செய்யும் விளைநிலங்களை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்தாவிட்டால், மண்ணைத் தின்று வாழும் ஹைத்தி மக்களைப் போல, எத்தியோப்பிய மக்களைப் போல நாமும் பட்டினியால் கூட்டங் கூட்டமாக மடியும் நாள் வெகு தூரத்திலில்லை. எனவே இந்திய விளை நிலங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்பனை செய்வதையும், வெளிநாடுகளில் இந்திய கம்பெனிகள் விளை நிலங்களை வாங்கிக் குவிப்பதையும், எதிர்த்து தெரடர் போராட்டங்களை முன் னெடுப்பது நமது அவசரமான, அவசியமான கடமை. ஏனெனில் இவை ஒரே பிரச்சினையின் இரண்டு கூறுகள். வேளாண் வல்லாதிக்கத்தின் இரண்டு முனைகள்.


இணையத்தில் படித்தது

ஆரூர் முனா செந்திலு



மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யுனிஸ்ட்களின் கதி


நன்றி : தினமலர்

ஆரூர் முனா செந்திலு

Friday, September 23, 2011

சிங்கப்பூரில் Catering Company யில் புட் பேக்கிங் வேலைக்கு ஆள் தேவை

சிங்கப்பூரில் Catering Company யில் புட் பேக்கிங் வேலைக்கு ஆள் தேவை
கல்வித்தகுதி : பட்டப்படிப்பு
சம்பளம் 1000 சிங்கப்பூர் வெள்ளி.
உணவு, தங்குமிடம் இலவசம்.
தினம் 12 மணிநேரம் வேலை.
வாரம் 1 நாள் விடுமுறை,
விசா 2 வருடம்.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8883072993

மெயில் ஐடி : senthilkkum@gmail.com

ஈழத்தில் புத்தரின் படையெடுப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்தகைய கொடுமையானது? இதை அறிவிக்கும் அளவிற்குத் தமிழர் நிலத்தில் சிங்கள இனவாதமும் பௌத்த மதவாதமும் தலையெடுத்திருக்கிறது.

இன்று ஈழத் தமிழர்கள் எல்லாவற்றையும் கண்டு அஞ்ச வேண்டிய காலத்தில் வாழ்கிறார்கள். யுத்தத்தால் அழிவு, ஆக்கிரமிப்பால் ராணுவ மயம், அதனால் அச்சம் மிகுந்த வாழ்க்கை முதலியவற்றோடு எதிர் காலத்தையும் இருப்பையும் பயமுறுத்தும் புத்தர் சிலைகளும் பௌத்த மத வாசனையை வீசிக்கொண்டு ஈழத் தமிழரது நிலம் நோக்கி படையெடுக்கின்றன.

பௌத்த சமயம் இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தோன்றியதாக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. முழுக்க முழுக்க ஞான போதனைகளையும் தத்துவங்களையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு மதம். இந்தியாவில் உருவாகிய இந்த மதம் மத்திய ஆசியா, இலங்கை, ஜப்பான், திபெத், கொரியா, மங்கொலியா போன்ற நாடுகளுக்குப் பரவியிருக்கின்றன. இதில் இலங்கையில் சிங்கள மக்கள் பௌத்தத்தையும் சிங்களத்தையும் இணைத்துப் பார்த்து மதம் என்பதற்கு அப்பால் வெறியாக வளர்த்து வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் மீதான போரின்போதும் ஈழத் தமிழ் மக்கள்மீதான அரசியல் நடவடிக்கைகளின்போதும் புத்தரின் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டும் பிக்குகளின் ஆசிபெற்றும் நடத்துவதாக சிங்கள அரசியல் தலைவர்களும் ராணுவத்தினரும் குறிப்பிடுகின்றனர்.

யுத்தம் முடிவுறுத்தப்பட்ட இன்றைய காலத்தில் பௌத்த மதத்தை எப்படியாவது பரப்ப வேண்டும் என்னும் தீவிர நோக்கத்துடன் பல செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்கிறது. போர் வேலைப் பளுக்கள் இல்லாத இன்றைய நிலையில் சிங்கள பௌத்த அடையாளங்களையும் உருவாக்கும் முயற்சியில் ராணுவத்தினர் மும்முரமாக ஈடுபடுகின்றனர். போரால் கைப்பற்றப்பட்ட இடங்களில் எவ்வளவு வேகமாக அந்த இடங்களில் உள்ள ஈழத் தமிழர்களின் பண்பாட்டு வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டனவோ அதே வேகத்திலேயே புத்தர் சிலைகள் நடப்பட்டன. போர் முடியும் முன்னரும்கூடக் கைப்பற்றப்பட்ட இடங்களில் புத்த சிலைகளை நடும் நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்றிருக்கின்றன.

ஞானம், போதனை, அமைதி ஆகிய பிரகடனத்துடன் கண்களை மூடிக்கொண்டு உறைந்திருக்கிற புத்தர் ஏன் தமிழ் மக்களின் அமைதியைக் குலைப்பவராகவும் இருப்பிடங்களைவிட்டுத் துரத்துபவராகவும் இருக்க வேண்டும்? புத்தர் சிலை என்றால் ஈழத் தமிழர்கள் கலவரம் கொள்கிறார்கள். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் புத்தர் மீதான எல்லா ஞான, தத்துவச் சிந்தனைகளும் உடைந்து பல வருடங்களாகின்றன. இப்போது புத்தர் இலங்கைப் படைகளின் சீருடை அணிந்த ராணுவத்தைப் போல இருக்கிறார். இலங்கை ஜனாதிபதியின் கழுத்தில் உள்ள சிவப்புப் பட்டியணிந்த சிங்களத் தலைவரைப் போல இருக்கிறார். புத்தர் கண்களை மூடிக்கொண்டு எல்லா அநியாயங்களுக்கும் கட்டளையிடுபவரைப் போல இருக்கிறார். புத்தரின் பெயராலேயே எமக்கெதிரான எல்லா அநியாயங்களும் இழைக்கப்படுகின்றன என்று ஈழத் தமிழர்கள் உணர்வதும் நம்புவதும் தற்போதைய நிலைமைகளாலும் காலங்களாலும் ஏற்பட்டிருக்கின்றன.

போரின் பிறகு ஈழத் தமிழர்களின் நிலம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. பெருமளவான பகுதிகளுக்குச் சென்றபோது புத்தர் சிலைகளைப் பார்க்கத் தவறவில்லை. அரச மரங்கள் இருந்த இடங்களிலெல்லாம் புத்தர் வந்து அமர்ந்திருக்கிறார். அவரது சிலைகள் கிராமங்கள்தோறும் தெருக்கள்தோறும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நகரங்கள் தோறும் பெரும் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மாங்குளத்திலும் கனகராயன்குளத்திலும் வவுனியாவிலும் யுத்தத்திற்குப் பிறகு பெரும் விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அடையாளங்கள் முழுக்க முழுக்க எங்களுக்குப் புறம்பானவை. கனகராயன்குளம், முல்லைத்தீவு நகரம் போன்ற சில இடங்களில் மக்களின் எதிர்ப்பால் புத்தர் சிலை நடுகை தடைபட்டிருக்கிறது.

வன்னி இன்று பௌத்த நிலத்தைப் போல பௌத்த நகரங்கள் கொண்டிருக்கும் அடையாளங்களோடு இருக்கிறது. இந்த உணர்வும் திணிக்கப்பட்ட அடையாளங்களும் மிகுந்த பதற்றத்தையும் மனவுளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. இந்தப் புத்தர் சிலைகள் நடப்பட்டுச் சில வருடங்கள் கழியும்போது பெரும் வரலாற்றைக் கொண்டவையாகப் பௌத்தவாதிகளால் சொல்லப்படும். பௌத்த பூமி சிங்கள பூமி என்னும் வரலாறு கட்டப்படும். இதனால் ஈழத் தமிழ் நிலம் ஆபத்தையே எதிர்கொள்ளப் போகிறது. ஏற்கனவே சிங்கள இனவெறி பிடித்த பௌத்த பிக்குகள் வடக்கு கிழக்கு என்னும் ஈழம், பௌத்த சிங்கள நாடு என்பதற்கு அங்கே தடயங்கள் இருந்தன என்றும் அதைப் புலிகள் அழித்துவிட்டார்கள் என்றும் நாம் அவற்றைக் கிண்டிக் கண்டு பிடிப்போம் என்றும் ஊடகங்களில் பரபரப்பு அறிக்கைகளை விட்டு மக்களை நோகடித்தார்கள்.

புத்தர் ஞானத்தையும் அமைதியையும் எங்களுக்குப் போதிக்கிறார். அவரை நாம் வணங்க வேண்டும் அவரைப் பின்பற்ற வேண்டுமென்றும் சொல்கிறது ராணுவத்தரப்பு. பௌத்தத்திற்கும் இந்து மதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ராணுவம் சொல்கிறது. புத்தரை வணங்கும் உங்களிடத்தில் ஞானத்தையும் அமைதியையும் நாங்கள் ஒருபோதும் பார்த்ததில்லையே? துப்பாக்கியை வைத்துக்கொண்டு கொலைவெறி பிடித்தலைவதைத்தானே பார்த்திருக்கிறோம். உங்களால் மிகக் கொடுமையாக நிகழ்த்தப்பட்ட பேரழிவுகளைத் தாமே பார்த்திருக்கிறோம். அதனால் ஏற்பட்ட பெருந்துயரங்களைத்தாமே பார்த்திருக்கிறோம். புத்தரின் கைகளில் துவக்குகள் இருப்பதைப் போலவும் அவர் போர்த் தாங்கிகளில் நகர்வதைப் போலவுமே இருக்கிறது. இதில் ஞானமும் அமைதியும் எங்கிருக்கிறது?

புத்த விகாரை அமைக்க இடமளித்தால் ஆறுலட்சம் ரூபா பெறுமதியான வீடு என்னும் திட்டம் மக்களால் முறியடிக்கப்பட்டது. அதன் பிறகு எப்படிப் பௌத்தத்தைப் பரப்புவது என்பது தொடர்பில் சிந்திக்கப்பட்டுத் தொடர்ந்தும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. யாழ் பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கத்தை அமைத்ததுடன் யாழ்ப்பாணம் பௌத்த இந்து பண்பாட்டுப் பேரவை அமைக்கப்பட்டுள்ளது. இவை பௌத்த ஜெயந்தி தினத்திற்கு அண்மையாக மேற்கொள்ளப்பட்டன. யாழ்ப்பாணத்திலும் யாழ் பல்கலைக்கழகத்திலும் எதற்குப் பௌத்த சங்கம்? பௌத்த பேரவை? தமிழர்களின் நிலத்தில் பௌத்த பேரவையும் புத்தர் சிலையும் எதற்கு என்பதுதான் ஈழத்தில் எழுந்த பிரச்னையாக இருக்கிறது.

இதே காலத்தில் பௌத்த ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 28 புத்தர் சிலைகள் ராணுவத்தினரின் அழைப்பின் பேரிலேயே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அவை யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி படைத்தளத்தைச் சுற்றிய பகுதிகளில் வைக்கப்படும் என்று முதலில் கூறப்பட்டது. இந்தச் செய்தி யாழில் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. பின்னர் அவற்றைப் பலாலி படைத்தளத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கீழாக வைத்தனர். புத்தரின் வெவ்வேறான ஞான நிலைகளைக் குறித்த அந்தப் புத்தர் சிலைகள் வைக்கப்பட்ட புகைப்படமும் வெளியிடப்பட்டிருந்தது. யாழ் நகரத்தில் வைத்திய சாலைக்குப் பின்புறமான வீதி சுமார் 20 வருடங்களின் பின்னர் திறக்கப்பட்டபோது இதேபோலவே சின்னச்சின்ன புத்தர் சிலைகள் பல அரச மரங்களின் கீழ் வைக்கப்பட்டிருந்தன. யாழ்ப்பாணம் ராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தது முதல் நடப்பட்டு வந்தமையால் இந்த அரச மரங்களில் பல இந்த 20 வருடங்களில் வளர்த்தெடுக்கப்பட்டவை போலவே இருக்கின்றன. பலாலி படைத்தளத்தைப் போல அனைத்துப் படைத்தளங்களிலும் இந்த அபாயச் சிலைகளை நாம் எதிர்பார்க்க வேண்டியிருக்கிறது.

யாழ் பல்கலைக்கழகமும் தொல்லியல் அமைச்சும் இணைந்து கந்தரோடையில் தொல்லியல் மையங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அத்தோடு இதே அணியினர் பழமையும் வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்த யாழ் கோட்டையையும் ஆய்வுசெய்து புனரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆய்வின்போது இயல்பாகவே வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த ஆதாரங்கள் உள்ளன என வாய்க்கு வந்தபடி கூறும் சிங்கள ஆராய்ச்சியாளர்களும் பௌத்த பிக்குகளும் உண்மையான முடிவுகளை வெளியிட விடுவார்களா? பௌத்த பிக்குகள் உட்படத் தெற்கு மாணவர்களும் ஈழத்துத் தொல்லியல் மாணவர்களும் ஆய்வில் ஈடுபட்டுவந்தார்கள். ஆய்வுக் களத்தில் ஆய்வுக்கு முன்பாகவே இவை சிங்கள பௌத்தத் தடங்கள் உள்ள இடம் என்று பிக்குகள் தெரிவித்திருந்தது ஈழத்துத் தொல்லியல் மாணவர்களிடம் ஆய்வு நடவடிக்கைகளில் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியிருந்தன.

ஆய்வுக்குப் பொறுப்பு வகித்த சிங்கள ஆராய்ச்சியாளர் கந்தரோடையில் சிங்கள பௌத்தத் தடங்கள் உள்ளன என்று சிங்களப் பத்திரிகை ஒன்றிற்குத் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து ஈழத்தில் பதற்றத்தை உருவாக்கியது. அவருடன் இணைந்து ஆய்வில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் இதை மறுத்தோ இதற்கு விளக்கமளித்தோ கருத்துத் தெரிவிக்கவில்லை. கந்தரோடையில் உள்ள பழம் பெரும் பௌத்த விகாரைகள் தமிழ் பௌத்தத்திற்கு உரியவை என்ற கருத்தை ஆய்வுசெய்த வரலாற்று, தொல்லியல் ஆய்வாளர்கள் பலர் தெரிவித்துவந்திருந்தார்கள். இன்று ஈழத் தமிழர்களின் வரலாற்றுக்கு முற்பட்ட தொல்லியல் மையங்கள் மீதும் விடுதலைப் புலிகள் காலத்து நினைவு மையங்கள்மீதும் சிங்கள வரலாற்றுக் கதைகள் திணிக்கப்படுகின்றன. குறித்த மையங்கள் சிங்களவர்களின் சுற்றுலாத்தளங்களாவதுடன் வடக்கு கிழக்குப் பகுதிகளுக்கு அவர்களைப் படையெடுக்கத் தூண்டி அவர்களிடத்தில் வடக்கு கிழக்கு நிலத்தின் மீது கவர்ச்சியை ஏற்படுத்திக் குடியமரத் தூண்டும் நடவடிக்கைகளில் அரசும் ராணுவமும் செயற்படுகின்றன. இந்த அணுகு முறையே கந்தரோடையிலும் நிகழ்ந்தது.

திருமலையில் புத்தர் சிலைவைக்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றம் வரை அதிர்வை ஏற்படுத்தியது. அதை எதிர்த்த வ.விக்கினேஸ்வரன் திருமலை நகரில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர் குறித்த புத்தர் சிலை ஆயுதம் தரித்த ராணுவத்தால் பாதுகாக்கப்பட்டது. பின்னர் திருமலையின் பல இடங்களிலும் புத்தர் சிலைகள் பெருகிப்போயின. மாங்குளம், நயினாதீவு விகாரை, யாழ் நாக விகாரை என்று முழு விகாரைகளின் முன்பாகவும் ஆயுதம் ஏந்திய படைகள் காவல்செய்கின்றன. இந்தப் பாதுகாப்பில் இன்று வடக்கு கிழக்கு என்கிற ஈழமெங்கும் புத்தர் சிலைகள் பெருகிவிட்டன. அரச மரங்கள் உள்ள இடங்களிலெல்லாம் புத்தர் சிலைகளும் அரச மரங்கள் இல்லாத இடங்களிலும் அவை புதிதாக நடப்பட்டுத் தண்­ர் ஊற்றியும் வளர்க்கப்படுகின்றன.

நிலத்திற்காகப் போராடிய இனம் இன்று பெரும் போரை எதிர்கொண்டு பேரழிவுகளைச் சந்தித்து நலிந்து எஞ்சியிருக்கிறது. இருக்கும் உயிரையும் வதைக்கும் விதமாகவும் காயப்பட்ட காலத்தை அச்சுறுத்தும் விதமாகவும் எதிர்காலத் தலைமுறைகளை எச்சரிக்கும் விதமாகவும் நகரும் இந்தப் புத்தர் சிலைகள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டேயிருக்கின்றன. தடுக்க முடியாதபடி ராணுவப் பாதுகாப்பும் அரச கட்டளையும் வளர்ந்துகொண்டிருப்பதுடன் இனவாதமும் ராணுவ வெற்றியும் புத்தரின் படை யெடுப்பை ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன. மிக நீளமான கால்களால் மிக அகலமாகக் கால்களை நீட்டி வைத்துக்கொண்டு புத்தர் ஈழத்து நிலமெங்கும் படையெடுப்பை நடத்தி நிலத்தைக் கைப்பற்றுகிறார்.

நன்றி: காலச்சுவடு

ஆரூர் முனா செந்திலு



சிங்கப்பூருக்கு துணிக்கடையில் சேல்ஸ்கேர்ள் வேலைக்கு பட்டதாரி பெண் தேவை.

சிங்கப்பூருக்கு துணிக்கடையில் சேல்ஸ்கேர்ள் வேலைக்கு பட்டதாரி பெண் தேவை.
சம்பளம் 1200 சிங்கப்பூர் வெள்ளி.
தினம் 12 மணிநேரம் வேலை.
மாதம் 3 நாட்கள் விடுமுறை,
எஸ் பாஸ் 2 வருடம்.

முன்பணம் தேவையில்லை.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 8883072993

மெயில் ஐடி : senthilkkum@gmail.com

பதிவர்களில் ஒரு சிறந்த ஆலோசகர்

பதிவர்களில் தானே முன்வந்து உதவி செய்யும் நல்லவர்களும் இருக்கிறார்கள். எனக்கு தமிழ்மணத்தில் இணைப்பதற்குரிய பிரச்சனைகளை கூறி பதிவிட்டிருந்தேன், அதனை பார்த்த பிலாசபி பிரபாகரன் போன்ற பதிவர்கள் நேரடியாக தமிழ்மணத்திற்கு மெயில் அனுப்பி பிரச்சனையை தீர்க்கும்படி சொல்லியிருந்தார்கள். ஆனால் பதிவுலகில் ஒரு நண்பர் நேரடியாக என்னுடைய பதிவிற்கு பின்னுட்டத்திலேயே தீர்வும் சொல்லியிருந்தார், முயற்சித்து பார்த்தேன். பிரச்சனை தீர்ந்தது. இது போல் சிலருக்கு தமிழ்மணத்தில் இணைப்பதில் பிரச்சனை இருக்கலாம். அவர்கள் இதில் உள்ள முகவரிக்கு சென்றால் தீர்வதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படும் என்பதனை சொல்லிக் கொள்கிறேன்.

ஆரூர் முனா செந்திலு




Wednesday, September 21, 2011

தவிர்க்கவே முடியாத 'எங்கேயும் எப்போதும்'

என்னடா இது இப்படி ஒரு படம் நானெல்லாம் சிறு வயதில் ஒரு உணர்ச்சி களஞ்சியம், எந்த படத்திலாவது சோககாட்சிகள் வந்தால் அழுது விடுவேன் சிறு வயதில் என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள், பிறகு பால்ய வயதில் அது சுத்தமாக நின்று போனது, அதன் பிறகு யாராவது சினிமா பார்க்கும் போது அழுதால் அவர்களை நானே ஓட்டி எடுத்து விடுவேன், மிக நீண்ட நாட்களுக்கு பிறகு வெயில் படம் பார்த்து அழுதேன், அதன் பிறகு அங்காடி தெரு, அவ்வளவு தான்,

இத்தனைக்கும் எங்கேயும் எப்போதும் படம் வெளியான அன்றே நான் எனது ஓபிசி சர்டிபிகேட் விஷயமாக திருவாருர் சென்றிருந்ததால் அங்குள்ள நடேஷ் தியேட்டரில் படம் பார்த்தேன், துவக்கத்திலேயே பஸ் விபத்து நடப்பதை காட்டியிருந்தாலும் கதைக்குள் சென்ற பிறகு அதுவும் அநத மரணங்களை பார்த்த பிறகு தியேட்டரில் அழுதேன், பிறகு யாராவது நான் அழுவதை பார்க்கிறார்களா ரகசியமாக திரும்பி பார்த்தால் தியேட்டரில் உள்ள வெகுஜன மக்கள் அழுது கண்களை துடைத்துக் கொண்டிருந்தனர், சரி நாமும் மக்களுடன் கலந்து விட்டோம் என்று நினைத்துக்கொண்டேன்.

இப்பொழுது
சென்னை வந்து விட்டேன், நான் சென்னை ஐசிஎப்பில் படித்தவன், என்னுடன் அங்கு படித்தவர்களுக்கு இப்பொழுது தென் மேற்கு ரயில்வேயில் பணிபுரிவதற்கான ஆர்டர் வந்து கொண்டு இருக்கிறது, நான் ஆர்ஆர்பி தேர்வில் தேர்ச்சியடைந்து விட்டதால் நான் அதற்கு விண்ணப்பிக்கவில்லை, ஏனெனில் நான் தேர்வெழுதி கிடைத்த வேலையில் அவர்கள் கொடுக்கும் வேலையின் சம்பளத்தை விட பத்தாயிரம் ருபாய் அதிகம். எனது நண்பர்களுக்காக அவர்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்காக செல்லும் போது என்னையும் அழைத்ததால் சென்றிருந்தேன்,

அவர்களின் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் ஒன்று சேர்ந்ததால் நீண்ட நேரம் அரட்டையடித்து விட்டு சினிமாவுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து அம்பத்துர் ராக்கி திரையங்கிற்கு சென்றோம். மிகுந்த கலாட்டாவோடு துவங்கிய படம், நான் ஏற்கனவே பார்த்த படம் என்றாலும் மீண்டும் படத்தின் இறுதிகாட்சியில் அழுது விட்டேன். நண்பர்கள் பார்த்து விட்டு என்னை ஓட்டி எடுத்து விட்டார்கள்.

அதனால் தான் சொல்கிறேன். படம் உண்மையில் நம் உணர்வுகளை தட்டியெழுப்புகிறது. கண்டிப்பாக நான் மீண்டும் பலமுறை பார்ப்பேன் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
என்னா படம்யா


ஆரூர் முனா செந்திலு




Tuesday, September 20, 2011

காபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம்

இதையெல்லாம் வெளியில் சொல்வார்களா என்ன. இருந்தாலும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது அதனால் சொல்கிறேன். அப்பொழுது எனக்கு வயது 15. இன்று மன்னார்குடி பேருந்து நிலையம் எதிரில் புட் பிளாசா என்று உணவகம் வைத்திருக்கும் என் அத்தை மகன் சதீஷ் என் வயதை ஒத்தவன். நாங்கள் அந்த வயதில் எங்கு கரகாட்டம், கிளப் டான்ஸ் நடந்தாலும் அங்கு சென்று விடுவோம். ஒரு முறை அவர்கள் ஊரான மேலவாசல் அருகில் உள்ள மற்றொரு கிராமத்தில் கிளப் டான்ஸ் நடப்பதாகவும் ஐந்து ரூபாய் டிக்கெட் என்றும் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். எங்களுக்கு சிறிய வயது என்பதாலும் நாங்கள் அரைக்கால்சட்டை அணிந்திருந்ததாலும் உள்ளே விட மறுத்து விட்டார்கள். பிறகு மறுபடியும் சைக்கிளில் வீட்டிற்கு சென்று யாருக்கும் தெரியாமல் எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட்களின் வேட்டியை எடுத்துக் கட்டிக்கொண்டு மறுபடியும் அந்த ஊர் சென்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்று டான்ஸ் பார்க்க அமர்ந்தோம், சிறிது நேரத்தில் டான்ஸ் துவங்கியது . அப்பப்பப்பா நடனமாடிய பெண்ணின் வாளிப்போ அருமை.

ஆரம்பித்து ஒரு மணி நேரத்தில் வெளியில் இருந்து ஒருவன் போலீஸ் என்று கத்திக் கொண்டு உள்ளே வந்தான். எல்லோரும் டெண்ட் கொட்டாயை பிரித்துக் கொண்டு பறந்தார்கள். நாங்கள் ஒடினோம். நாங்கள் சிறிய வயது பையன்கள் என்பதால் நடனமாடிய அந்த பெண்ணும் எங்களுடன் ஒடி வந்தார். சிறிது தூரம் ஓடி ஒரு வைக்கப்போரின் பின் சென்று அமர்ந்தோம் எங்களுடன் அவளும் அமர்ந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் எங்களுடன் பேசினாள். நானும் நீ என்ன செய்கிறாய், எப்படி இந்தவாறு நடனமாடுகிறாய் என்று கேட்டேன். அவளோ தான் மதுரை பக்கம் என்றும் வீட்டுத்தேவைக்காக நடனமாடி பிழைக்க வந்ததாகவும் கூறினாள். தனக்கு ஒரு புடவை தேவை என்றும் கிடைத்தால் கட்டிக் கொண்டு ஊர் சென்று விடுவதாகவும் கூறினாள். பிறகு நானும் என் மச்சானும் எங்கள் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள ஒரு புடவையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து கொடுத்தோம். அவள் வாங்கி கட்டிக் கொண்டு செல்லும் போது எங்கள் இருவருக்கும் முத்தம் கொடுத்து சென்றாள். ஆஹா அன்று நாங்கள் ஊருக்கு சென்று எங்கள் வயதை ஒத்த நண்பர்களிடம் சொல்லி கர்வப்பட்டு கொண்டிருந்தோம்.

இன்று நினைத்துப் பார்த்தால் அதெல்லாம் சிரிப்பாக இருக்கிறது.

பழைய நினைவுகளுடன்


ஆரூர் முனா செந்திலு




Tuesday, September 13, 2011

என்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா ?

நான் சிறுவயதிலிருந்தே கடவுள் நம்பிக்கையில்லாதவன். இன்று வரை அப்படித்தான். எவ்வளவோ ஏற்ற, இறக்கங்கள் பார்த்த போதும் அதன் மீது கடவுள் மறுப்பு கொள்கையிலிருந்து சிறிதளவும் மாறாதவன்.

எனக்கு தற்பொழுது ரயில்வேயில் பொறியாளர் வேலை கிடைத்துள்ளது. விண்ணப்பம் செய்து, படித்து, தேர்வு எழுதி தற்பொழுது தேர்ச்சியடைந்தவனும் நான் தான். எனது முயற்சியால் தான் இது நடந்தது என்று நான் நம்புகிறேன். இப்பொழுது அதுவும் இன்று காலை முதல் ஒரு பிரச்சனை. என் மனைவி என் இஷ்ட தெய்வத்திடம் வேண்டியதால் தான் நான் தேர்ச்சியடைந்ததாக கூறுகிறாள். அதற்காக கடவுளுக்கு வேண்டுதல் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறாள். ஊரிலிருந்து என் அம்மா போன் செய்து அவர்கள் இஷ்ட தெய்வத்திடம் மனமுருகி வேண்டியதால் தான் நான் தேர்ச்சியடைந்ததாக சொல்கிறார். எனது தோழியோ தான் இயேசுவிடம் பிரார்த்தித்ததால் தான் தேர்ச்சியடைந்தாக கூறுகிறாள். எனது நண்பன் சத்யாவோ தான் எனக்கு பத்து ரூபாய் கொடுத்து விண்ணப்பம் வாங்கி தந்ததால் தான் நான் தேர்ச்சியடைந்ததாக கூறுகிறான். அதற்காக பெரும் தொகையில் பார்ட்டியும் கேட்கிறான். எனது சித்தப்பா மகன் சீனுவோ நான் தேர்வு எழுத அவனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றதால் தான் தேர்ச்சியடைந்ததாக கூறுகிறான்.

அடக்கடவுளே

உண்மையில் நானாக தேர்வு எழுதவேயில்லையா, எனக்கு தேர்ச்சியடையும் அளவுக்கு தகுதியே இல்லையா, இவர்களுடைய பிரார்த்தனையால் தான் நான் என்னுடன் தேர்வு எழுதிய இருபதாயிரம் பேரில் முதல் 10 பேரில் ஒருவனாக வந்தேனா,

அய்யய்யோ என் மண்டை காய்கிறதே யாராவது நல்ல மனம் படைத்தவர்களே இதற்கு ஒரு வழி சொல்லுங்கப்பா

குழப்பத்துடன்

ஆரூர் முனா செந்திலு





கிடைத்தது மத்திய அரசு வேலை

ஒரு வழியாக அதோ இதோ என்று என்னை ஏமாற்றிக் கொண்டிருந்த ரயில்வே வேலை கிடைத்தே விட்டது. நான் 2000-ம் ஆண்டு ரயில்வேயில் அப்ரென்டிஸ் முடித்தவன். அன்றிலிருந்து நேற்று வரை சீனியாரிட்டி படி வேலை வரவில்லை. அதற்குள் நான் வேறு துறைக்கு வேலைக்கு சென்று விட்டேன். பிறகு சொந்தமாக பிஸினஸ் செய்து வந்தேன். இதற்கிடையில் நான் கடந்த ஜனவரியில் ரயில்வேயில் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நுழைவுத்தேர்வு எழுதினேன். தேர்வு முடிவுகள் வர தாமதமானதால் நான் அதைப்பற்றி மறந்தும் விட்டேன். நேற்று ஒரு தபால் வந்தது. பிரித்துப் பார்த்தால் செக்ஷன் இஞ்சினியர் வேலைக்கு நான் தேர்வாகி விட்டதாக அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.

சந்தோஷம்.

இன்றிலிருந்து நான் மத்திய அரசு ஊழியர். அதுவும் ரயில்வே ஊழியர். நேற்று இரவிலிருந்து பார்ட்டிகள் தொடங்கி விட்டது. நேற்று வரை தொடர்பில் இல்லாத நண்பர்கள் கூட இன்று தொடர்பு கொண்டு வாழ்த்துகின்றனர். பார்ட்டிக்கு நாள் குறிக்கின்றனர். இப்பொழுது கூட நான் பார்ட்டியில் பிஸி.
சரி நண்பர்களே. பார்ட்டி முடிந்ததும் சந்திப்போம்.


நன்றி


ஆரூர் முனா செந்திலு




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...