சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, April 9, 2013

சுகமான குளியல் நினைவுகள்

அம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இக்கிராமத்தில் தான் செலவழிப்போம். அம்மாவின் பிறந்த வீடு மிகப்பெரிய மண் வீடு. 1993ல் தான் அந்த வீட்டை இடித்து விட்டு பெரிய கல்வீடாக கட்டினார்கள்.

(என் அப்பாவுடன் நானும் தம்பிகளும்)

வீட்டில் என் தாய்மாமாக்கள் 4 பேர் அவர்களது குடும்பத்தினர், பெரியம்மா வீட்டினர், எங்கள் வீட்டினர் மற்றும் சித்தி வீட்டினர் அனைவரும் கோடை விடுமுறைக்கு வந்து விடுவோம். வீட்டின் எதிரில் தேவர்குளம் என்றொரு குளம் இருந்தது. நான், என் தம்பி மற்றும் என் சித்தி பசங்க இருவர் தான் ஒரு குழுவாக இருப்போம். காலை நேரக் குளியல் அங்கு தான்.

என் தாத்தா குளத்தில் இறங்கும் போது நாங்களும் இறங்கி விடுவோம். தாத்தா குளித்து விட்டு வயலுக்கு சென்று விடுவார். செல்லும் போது சீக்கிரம் எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சொல்லி விட்டு வயலுக்கு செல்வார். நாங்கள் 11 மணி வரை சாப்பிடாமல் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீச்சலடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டே இருப்போம்.

 
வயலில் வேலை செய்பவர்களுக்கு டீ எடுத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வரும் தாத்தாவிடம் வீட்டில் உள்ளோர் நாங்கள் இன்னும் வரவில்லை என்பதை சொல்லிவிட குளத்திற்கு வந்து ரெண்டு சாத்து சாத்தி வீட்டிற்கு அழைத்து செல்வார். சில காலங்களுக்கு பிறகு குளம் மாசடைந்து விட்டதால் பிறகு அந்தக் குளத்தில் குளிப்பதேயில்லை.

திருவாரூரில் மிகப்பிரச்சித்திப் பெற்ற கமலாலயக் குளம் உள்ளது. திருவாரூரில் உள்ள பெரியவர்களில் பெரும்பாலானோர் தினமும் காலையில் அந்தக்குளத்தில் தான் குளிப்பர். இன்றும் கூட மகாலய அமாவாசை அன்று என் அப்பா மற்றும் அவரது நண்பர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கமலாலயத்தில் குளித்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.


எங்கள் வீட்டில் செவிட்டுப் பாட்டி ஒருவர் இருந்தார். அவர் என் அப்பாவுக்கு சொந்த அத்தை. எப்பொழுது திருவாரூருக்கு வந்தாலும் கமலாலயத்தில் தான் குளிப்பார். குளித்து விட்டு ஈரத்துணியுடன் நெற்றியில் பட்டை இட்டுக் கொண்டு முராசன்ஸ் பிள்ளையாரிடம் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென மனமுருகி வேண்டிக் கொண்ட பிறகு தான் வீடு திரும்புவார். அவருடன் நானும் கமலாலயத்திற்கு செல்வேன்.

கமலாலயத்தில் குளிப்பது புண்ணியம் என்பதையெல்லாம் தாண்டி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் வெட்டப்பட்ட குளத்தில் குளிப்பது என்பதே பெருமை தானே. கமலாலயம் எங்கள் ஊரின் பெருமைக்குரிய மற்றுமொரு அடையாளம்.

எங்கள் நிலத்தில் உள்ள பம்புசெட்டில் குளிப்பது என்பது மற்றுமொரு இனிய அனுபவம். கோடை விடுமுறைகளில் மதிய வேளைகளில் நாங்கள் குளிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் தெற்கு பம்புசெட் தான். பம்புசெட்டில் விசாலமான தொட்டியிருக்கும். என் அம்மா, பெரியம்மா, சித்தி மற்றும் மாமிகள் அனைவரும் குளிப்பதற்கு கிளம்பும் முன் எனக்கும் என் சகோதரர்களுக்கும் எண்ணெய் தேய்த்து அனுப்பி விடுவர்.



நாங்கள் முன்பே சென்று குளித்துக் கொண்டிருப்போம். ஒரு மணிநேரம் கழித்து வரும் அம்மா சீயக்காயுடன் கரிசலாங்கண்ணியையும் சேர்த்து தேய்த்து விடுவார். என்ன ஒரு பரிபூரணத்துவக் குளியல். வாரம் ஒருமுறை இந்தக்குளியல் உண்டு. குளித்து விட்டு வந்து சாப்பிட்டால் ஏழு மணிக்கெல்லாம் தூக்கம் கண்ணை சொக்கும். இன்று குடும்பங்கள் எல்லாம் பிரிந்து போய் விட்டன. இனியொரு முறை அது போன்ற ஒரு குளியல் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இவ்வளவு சொல்லி விட்டு தஞ்சாவூர்க்காரன் காவிரியாற்றுக் குளியல் பற்றி சொல்லாவிட்டால் நன்றாக இருக்குமா. திருவாரூரில் காவிரியின் கிளையாறான ஒடம்போக்கியாறு ஒடுகிறது. இதில் ஜூன் முதல் தை மாதம் வரை தான் தண்ணீர் செல்லும் மற்ற நேரங்களில் எல்லாம் இது தான் கிரிக்கெட் கிரவுண்ட். பத்தாவதுக்கு பிறகு வேலைக்கு சேரும்வரை ஒடம்போக்கி ஆற்றில் தான் குளிப்பேன்.

இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது தான் என்னுடன் குளிக்கும் நண்பர்களிடையேயான போட்டி. அப்பொழுது ஸ்டாமினா இருந்ததால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது எல்லாம் சாதாரண விஷயம். இப்பொழுது எல்லாம் ரெண்டு முங்கு முங்கினாலே மூச்சிரைக்கும். எல்லாம் நெப்போலியனின் சாபம்.

பட்டயப்படிப்புக்காக சென்னை வந்த பிறகு பாத்ரூம் குளியல் தான். அதுவும் 1999 காலத்தில் வில்லிவாக்கத்தில் மெட்ரோ வாட்டர் வீட்டு பம்புகளில் வருவது நின்று விட்டது. லாரிகளில் அடித்துப் பிடித்து தண்ணீர் வாங்கி வந்து குளிப்பது தான் அந்தக் காலங்களின் ஸ்டைல். அதிலும் நான் இருந்தது பாச்சிலர் ரூமில்.

நான் இருந்த தெருவுக்குள் மிகுந்த டீசண்ட்டாக அதுவரை நடந்து கொண்டிருந்த நான் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் எதிர் வீட்டு ஆண்ட்டி, அடுத்த வீட்டு அக்காவையெல்லாம் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டைப் போட்டு அந்த அக்காவின் ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு கிடைக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் கழிவறைக்கு கால் பக்கெட், குளிக்க முக்கால் பக்கெட் என இருந்ததெல்லாம் காலத்தின் கோலம்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இரண்டு நாட்களாக கம்ப்யூட்டரில் உட்கார நேரமில்லாததால் பதிவெழுத முடியவில்லை. எனவே ஏற்கனவே எழுதி அவ்வளவு பிரபலமாகாத இந்த பதிவை மீண்டும் மீள்பதிவு செய்கிறேன்.

7 comments:

  1. பிரிந்து போனதில் உங்கள் ஆதங்கம் புரிகிறது... அந்த சந்தோசம் வரப்போவதில்லை... சிலதை மறந்து விட்டால் மீண்டும் ஒரு இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்லலாம்...

    ReplyDelete
    Replies
    1. அதை விடத்தான் முயற்சித்து வருகிறேன். முடியும் என்றே நினைக்கிறேன். நன்றி தனபாலன்

      Delete
  2. அண்ணே நான் குட முருட்டி ஆற்றில் குளித்து இருக்கிறேன் இப்ப கூட இடையிலே சென்றேன் முன்பு போல இல்லை மணலை எல்லாம் வறண்டி எடுத்துடாங்க முன்பு இருந்த சந்தோஷமான அனுபவம் தற்போது கிடைக்கவில்லை

    ReplyDelete
    Replies
    1. இனிமேல் இது போன்ற அனுபவங்கள் அடுத்த தலைமுறையினருக்கு கனவு தான் போல.

      Delete
  3. ஹ்ம்ம்.. மலரும் நினைவுகள்..

    குளிக்கும் போது சிறு மீன்கள வந்து காலை கடிக்கும் சுகமே தனி. தாமிர பரணியை நினைத்து ஏக்கம் மட்டுமே விட்டு கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  4. பழைய நினைவுகள் எப்போதும் பசுமையானவை .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...