சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 23, 2014

ஆட்டோகிராப்பும் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பும்

2003-04ல் சென்னையின் குடிநீர்த் தேவைக்கான வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியிருந்தது. அதற்கான பணிஆணை 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டு இருந்தது. வீராணம் ஏரியில் தொடங்கும் குழாய் பதிக்கும் பணி போரூர் ஏரியில் அந்த நீரை சுத்திகரித்து வழங்குவதில் முடியவடையும்.


இதில் நான் வேலை பார்த்த நிறுவனம் மேல்மருவத்தூரில் இருந்து போரூர் சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிஆணையை பெற்றிருந்தது. இதில் வண்டலூர் முதல் போரூர் வரை உள்ள இடத்தில் குழாய்களை தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்து இறக்கும் பொறுப்பு என்னுடையது.

எனக்கு உதவியாக ஆறு பேர், 25 கண்டெய்னர் லாரிகள் மற்றும் ஒரு டவர் கிரேன். இந்த பணிக்காக எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. வண்டலூரில் இருந்து தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை வரை மண்ணுக்குள் வரும் குழாய் புறவழிச்சாலை தொடங்கியதும் சிறுபில்லர் அமைக்கப்பட்டு மண்ணுக்கு மேலேயே பயணிக்கும்.

பில்லர் போடுவது, குழாயை வெல்டிங் அடிப்பது இடையில் பட்டர்ப்ளை வால்வுகள் பொருத்துவது, இடையில் வரும் சாலைகளை கடக்க சுரங்கம் அமைப்பது, அனகாபுத்தூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற இன்ன பிற பொறியாளர்களிடமும் அலுவலர்களிடமும் கொடுக்கப்பட்டு இருந்தன.

10 டன் எடையுள்ள மாபெரும் குழாய்கள் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு புறவழிச்சாலையில் இருந்து டவர் கிரேன் மூலம் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

இப்பொழுது உள்ளது போல் நடுவில் சென்டர் மீடியன் உள்ள நான்கு வழிச்சாலை அப்போது கிடையாது. இருவழிச்சாலை மட்டும் தான். நடுவில் தடுப்பு கூட கிடையாது. எந்நேரமும் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வரும் வாகனங்களை வேகம் குறைக்க வைத்து அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் டவர் கிரேன் சாலையின் முக்கால் பகுதி இடத்தை அடைத்துக் கொள்ளும். மீதியுள்ள சாலையை இருபக்க வாகனங்களும் கடக்க வேண்டும். தொழிற்சாலையில் குழாயை எடுப்பதில் தொடங்கி இவ்வளவு சிக்கல்களையும் கடந்து குழாயை புறவழிச்சாலையின் பக்கவாட்டில் அடுக்க வேண்டும்.

எங்கள் குழு குழாயை வைத்து முடித்ததும் அடுத்த குழு பில்லரில் குழாயை வைத்து வெல்டிங்கை துவக்கும். இது ஒரு செயின் லிங்க் ஒர்க். பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இருள் தொடங்கியதும் புறவழிச்சாலையில் குழாய்கள் வைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும்.

கடைசி நேரத்தில் மேலிடத்தின் அழுத்தத்தினால் வேலை அசுர வேகத்தில் நடைபெற தொடங்கின. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. 24 மணிநேரமும் புறவழிச்சாலையில் தான் இருக்க வேண்டும்.

இருக்கும் 25 கண்டெய்னர் லாரிகளை வைத்து இடைவெளி விடாமல் குழாய்களை இறக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேரம் முழுவதும் மொத்த வண்டிகளையும் தொழிற்சாலைக்கு அனுப்பி குழாய்களை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஆறு மணிக்கு குழாய்களை இறக்கத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் தலைவராக இருந்தார். எனக்கு அவர் குரு மாதிரி. மிகச்சாதாரண ஆளாக இருந்த என்னை வளர்த்து நல்ல பொறுப்பில் வைத்திருந்தார்.

அவருக்கு மேல்மருத்தூர் முதல் போரூர் வரை வேலையிருக்கும். எங்கள் பகுதிக்கு அவர் வரும் போது நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையாக சத்தம் போடுவார். அவரது பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது, மொத்த குழுவும் அவரைப் பார்த்து நடுங்குவர்.

நிற்க. தலைப்புக்கும் இதுவரை சொல்லிய கதைக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறீர்களா, கதையை சொல்வதற்கு முன்பு கால சூழ்நிலையை உங்களிடம் சேர்த்தால் தான் சம்பவத்தின் வீரியம் உங்களுக்கு புரியும்.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் கிடைக்கும் கேப்பில் எஸ்கேப்பாகி சினிமாக்களை முடிந்த வரை முதல் காட்சி பார்த்து விடுவேன். சரக்கும் எப்படியாவது அடித்து விடுவேன். என் தலைவர் வரும் நேரம் கொஞ்சம் வெடவெடவென்று நடுக்கமாக இருக்கும்.

ஒரு கணக்கு உண்டு, அவர் எங்கள் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பி விட்டால் மறுபடியும் அதே இடத்திற்கு வர குறைந்தது 8 மணிநேரம் ஆகும். மேல்மருவத்தூர் வரை சென்று வழியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு திரும்ப வர வேண்டுமே.

ஆட்டோகிராப் படம் வெளியான அன்று முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். காலையில் முதல் லோடு குழாய்களை இறக்கி வைத்து விட்டு லாரிகளை அனுப்பி படம் பார்த்து வருவதற்குள் குரோம்பேட்டை வெற்றியில் படம் பார்த்து விட்டு வந்து விடலாம் என திட்டம் போட்டேன்.

லாரிகளை அனுப்பி வைத்து விட்டு தொழிற்சாலையில் உள்ள என் நண்பனிடம் "ஏதாவது காரணம் சொல்லி ஒரு இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு குழாய்களை லாரியில் ஏற்று" என்று சொல்லி விட்டு தியேட்டருக்கு வந்து விட்டேன்.

நான் திரையங்கிற்கு போன சமயம் எங்கள் தலைவர் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார். லாரிகள் லோடு ஏற்றாமல் நிற்கவே அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு "இன்னும் பதினைந்து நிமிடத்திற்குள் லாரிகள் கிளம்ப வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

அவன் பதற்றத்தில் எனக்கு சொல்லாமல் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான். லாரிகள் ஊரப்பாக்கம் பக்கம் ரோட்டில் நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த தலைவர் லாரிகள் நிற்பதை பார்த்து எனக்கு போன் போட்டிருக்கிறார்.

அவரது போனிலிருந்து எனக்கு கிடைக்காமல் போகவே பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து போன் அடித்தார். நான் படம் துவங்கி அரைமணிநேரம் வரை ஜாலியாக படம் பார்த்துக் கொண்டு இருக்க லோக்கல் நம்பரில் இருந்து போன் வரவும் மிகவும் அசால்ட்டாக போனை எடுத்து "யாரு" என்று நக்கலாக தியேட்டரின் உள்ளேயே அமர்ந்து பேசினேன்.

சில நொடிகளில் நான் தியேட்டரில் இருப்பதை கண்டுபிடித்து விட்டார். கடுமையாக சத்தம் போட்டு "இன்னும் அரைமணிநேரத்திற்குள் லாரிகளில் உள்ள குழாய்கள் இறக்கப்பட்டு தொழிற்சாலைக்கு திரும்பாவிட்டால் நீ வேலையை விட்டு அனுப்பப்படுவாய்" என்றதும் எனக்கு சர்வமும் நடுங்கி விட்டது.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் தியேட்டர்காரன் பைக்கை எடுக்க விட மாட்டேங்கிறான். படம் முடியாமல் எடுக்க முடியாது. கதவையும் திறக்க முடியாது என்று சத்தம் போடவே வெற்றி தியேட்டரின் பெரிய கதவை ஏறி குதித்து வெளியில் வந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஊரப்பாக்கம் வந்தேன்.

லாரிகளை எடுத்துக் கொண்டு புறவழிச்சாலைக்கு வந்து அவசர அவசரமாக குழாய்களை இறக்கி லாரிகளை அனுப்பி வைத்ததும் தான் நிம்மதி வந்தது. படம் முடியும் நேரம் தியேட்டருக்கு போய் பைக்கை எடுத்து வந்தேன். மறுநாள் காலை திட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்காக ஆலோசனை கூட்டம் நடந்தது.

என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டே உள்ளே அமர்ந்தேன். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் கலையும் போது ஒரு நிமிடம் என்று எல்லோரையும் அமர வைத்த தலைவர் என் கதையை சொல்லி "இப்படிப்பட்ட பொறுக்கிகளையும் வைத்து தான் இந்த திட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது" என்று முடித்தார்.

நல்ல வேளை பிரச்சனை அத்துடன் முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. அதற்காக அடுத்த வாரம் சினிமாவுக்கு போகாமல் இருந்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள், ஹி ஹி.

ஆரூர் மூனா 
 
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

8 comments:

  1. செம ப்ளோ. எங்கயுமே தடுக்கல.சூப்பர் ப்ரோ

    ReplyDelete
  2. மூஞ்ச பாத்தா குயந்த புள்ள கணக்காகீதூ, இன்னான்னா வேல பண்ணிகினு திரியிது?

    ReplyDelete
  3. கசப்பான அனுபவத்தை இனிக்கும்படி சொல்லியிருக்கிறீர்கள்.

    படித்துச் சுவைத்தேன். நீங்கள் ‘சரக்கடிப்பதை’ மட்டும் வெறுக்கிறேன்.

    ஒரு வேண்டுகோள்......

    அருனா செல்வம் அவர்களின் இன்றைய பதிவைப் பாருங்கள். நம் இருவர் பதிவிலும் ‘துள்ளல்’ இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனக்கு அப்படித் தெரியவில்லை.

    பிரச்சினை இருந்தால் அதைச் சரி செய்தல் அவசியம்.

    நன்றி.

    ReplyDelete
  4. //அருனா...// பிழை. ‘அருணா...’என்பதே சரி.

    ReplyDelete
    Replies
    1. துள்ளலைத் தவிர்ப்பதற்கான வழிமுறையைப் ‘பிளாக்கர் நண்பன்’ ஒரு பதிவில் சொல்லியிருக்கிறார். அதன்படி, Gadget இருந்த ஒரு நிரலை நீக்கிவிட்டு, HTML இல் ஒரு நிரலைச் சேர்த்திருக்கிறேன்.

      பிரச்சினை சரியாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

      நன்றி செந்தில்.

      Delete
  5. இது ஒரு மீள் பதிவு.......அண்ணே தலைப்பை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது..... உஙககிட்ட இருந்து ரொம்ப பதிவுகள் எதிர்பார்கிறேன்....... தேர்தல் முடிவு பற்றி காங்கிரச பாராட்டி ஒரு பதிவு பிளீஷ்......அவ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  6. எப்பவோ படிச்ச மாதிரி இருக்கேன்னு தோணுச்சு! மீள்பதிவுன்னாலும் கலக்கல்!

    ReplyDelete
  7. ஹீரோ வேலையும் தெரியும் போலயே....
    Killergee
    www.killergee.blogspot.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...