சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 23, 2012

சென்னையின் மிச்சமுள்ள ஆங்கிலேயர்களின் அடையாளங்களில் ஒன்றான மனித சித்ரவதை கூடம்

சென்னையில் இது போன்ற இடம் இருப்பது நம்மில் முக்கால்வாசிப் பேருக்கு தெரியாது. ஏன் எனக்கு கூட சில மாதங்கள் முன்பு வரை தெரியாது. என்னுடன் பணிபுரியும் சகஊழியர் சொன்ன பின்பு தான் தெரியும்.

பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் ரயில்வே ஸ்டேசனில் இறங்கியதும் நடைமேம்பாலத்தில் ஏறியதும் பெரம்பூர் செல்ல ஒரு பக்கமும் கேரேஜ் ஒர்க்ஸ் செல்ல மறுபக்கமும் இறங்க வேண்டும். இதில் நீங்கள் கேரேஜ் ஒர்க்ஸ் பக்கம் செல்லும் பாதையில் இறங்க வேண்டும். படியிறங்கியதும் இடது பக்க திருப்பத்தின் முனையில் கேள் நாயக்கர் டீக்கடை சுருக்கமாக கேஎல்லார் டீக்கடை வரும். அதற்கடுத்து ஒரு பாழடைந்த கட்டிடம் தான் இது. மிகவும் சிதிலமடைந்த பகுதி இது.

சுதந்திரத்திற்கு முன்பு வரை ரயில்வே பொருட்களை திருடிய நபர்கள் பிடிபட்டால் நிர்வாணப்படுத்தி இதில் பின்புறமாக கட்டி வைத்து சக்கரத்தை சுழற்றினால் அப்படியே இறுகி மிகுந்த வலியை கொடுக்குமாம். அதன் பிறகு பிரம்பால் பின்புறத்தில் அடிப்பார்களாம். மூன்று நாட்கள் வரை அப்படியே கட்டி வைத்து பிறகே ஜெயிலில் அடைப்பார்களாம்.

சுதந்திரத்திற்கு பின்பு இந்த கொடூர சித்ரவதை நிறுத்தப்பட்டு இப்பொழுது கவனிப்பாறின்றி இந்த இடம் பாழ்பட்டு கிடக்கிறது.

எத்தனையோ மனிதர்களின் கதறல்களையும், வலியையும் கண்ட இந்த இடம் இன்று எதற்கும் சாட்சியின்றி மெளனமாக நிற்கிறது. சென்னையின் மையப்பகுதியில் இப்படியொரு மனித சித்ரவதை கூடம் இருந்தது என்பதை நம்புவதற்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆனால் உண்மை அதுதான்.

நீங்கள் யாராவது இந்தப் பக்கம வந்தால் ஒரு முறை சென்று பாருங்கள்.

 ஆரூர் மூனா செந்தில்

Tuesday, October 16, 2012

பஹ்ரைனில் உள்ள நிறுவனத்திற்கு BE மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

பஹ்ரைனில் உள்ள நிறுவனத்திற்கு BE மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

இதில் BD என்பது பஹ்ரைன் தினார் சம்பளம். இத்துடன் 140 உடன் பெருக்கிக் கொண்டால் இந்திய பணம் வரும்.

SENIOR ELECTRICAL SUPERVISOR            05 NOS        BD 550
ELECTRICAL SUPERVISOR                           10 NOS        BD 375-425
ELECTRICAL FOREMAN                               10 NOS        BD 250-300
ELECTRICAL CHARGEHAND                       10 NOS        BD 125-150
ELECTRICIAN                                                 100 NOS      BD 90-110
ASST ELECTRICIAN                                        20 NOS        BD 80

ஒரு பஹ்ரைன் தினார் : 140 ரூபாய்
கல்வித்தகுதி : BE மற்றும் டிப்ளமோ (எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்)


SENIOR MECHANICAL SUPERVISOR (PIPE FITTING)    05 NOS        BD 550
SENIOR MECHANICAL SUPERVISOR (PLUMBING)        05 NOS        BD 550
MECHANICAL SUPERVISOR (PIPE FITTING)                   10 NOS        BD 375
MECHANICAL SUPERVISOR (PLUMBING)                       10 NOS        BD 375
MECHANICAL FOREMAN (PIPE FITTING)                       10 NOS        BD 250-300
MECHANICAL FOREMAN (PLUMBING)                           10 NOS        BD 250-300
MECHANICAL CHARGEHAND                                           10 NOS        BD 125-150

ஒரு பஹ்ரைன் தினார் : 140 ரூபாய்
கல்வித்தகுதி : BE மற்றும் டிப்ளமோ (மெக்கானிக்கல்)



PIPE FITTER                           60 NOS        BD 90-110
ASST PIPE FITTER                20 NOS        BD 75
PLUMBER                              60 NOS        BD 90-110
ASST PLUMBER                    20 NOS        BD 75

•    FOOD OR FOOD ALLOWANCE WILL BE PROVIDED BY THE COMPANY
•    FREE ACCOMMODATION
•    FREE INSURANCE
•    FREE TRANSPORTATION
•    FLIGHT FROM CHENNAI
•    2 YEARS CONTRACT RENEWABLE


சென்னையில் வரும் 18ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணிலும் senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆரூர் மூனா செந்தில்

Monday, October 15, 2012

பஞ்சேந்திரியா - இரண்டாம் முறை பார்த்த மாற்றானும், ஆங்கிலக் கவிஞர் நக்கீரனும்

மாற்றான் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்தே கிறுக்கு புடிச்சி திரிஞ்சேன். நைட்டு ரெண்டு லார்ஜ் கூட அடிச்சி தான் தலைவலியை நிறுத்த முடிந்தது. நேற்று என் பெரியப்பா, என் ஒன்று விட்ட தங்கை, அவள் கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் வந்திருந்தனர்.

பகல் முழுவதும் நேரம் செலவழித்து விட்டு மாலை கிளம்பும் நேரம் மாற்றான் பற்றிய பேச்சு கிளம்ப அவர்களும் பார்க்க வேண்டும் என்று கூற என் இல்லாளோ என்னையும் கிளம்பச் சொல்லி நச்சரிக்க வேறு வழியில்லாமல் நேற்று இரவு காட்சி இரண்டாவது முறையாக அந்த தண்டனையை மறுபடியும் அனுபவிக்க நேர்ந்தது. ஆனால் கூட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.

அம்பத்தூர் ராக்கி காம்ப்ளக்ஸில் உள்ள ராக்கி, மினிராக்கி, சினிராக்கி் லட்சுமிராக்கி ஆகிய நான்கு திரையரங்கிலும் நேற்று மாற்றான் தான். நேற்று பகல் மற்றும் மாலைக்காட்சிக்கான டிக்கெட் நேற்று முன்தினமே விற்றுத் தீர்ந்து விட்டது. இரவு காட்சிக்கு டிக்கெட் எடுத்து சென்றால் கூட்டம் கன்னாபின்னாவென்று அலைமோதியது.

மற்றவர்களெல்லாம் படம் பார்க்கப்போற சந்தோஷத்தில் இருக்க எனக்கு மட்டும் கூடுதலாக தலையை வலித்தது. நேற்று முன்தினம் வரை எந்த எந்த காட்சிகள் இழுவை என்று நாம் பட்டியலிட்டோமோ அனைத்தையும் வெட்டி விட்டனர். வோல்கா அறைக்கு சென்று சூர்யாவின் தந்தை மிரட்டும் காட்சி, தாரா தன் கணவனுக்கு எனர்ஜியான் கலந்து காப்பி தரும் காட்சி, உக்வேனியாவில் உரக்கம்பெனிக்கு சென்று அதன் முதலாளியை மிரட்டும் காட்சி, ராணுவ மேஜரை சூர்யா துப்பாக்கியால் மிரட்டும் காட்சி ஆகியவற்றை வெட்டி எறிந்து விட்டனர்.

அதனால் படத்தில் சற்று தொய்வு குறைகிறது. ஆனாலும் இரண்டாம் முறை படத்தை பார்த்த கடுப்பு கொஞ்சம் குறையவில்லை. எனக்கு மட்டும் ஏண்டா மாதவா இந்த மாதிரியெல்லாம் நடக்குது.

---------------------------------------------------------------------

என்னை மாதிரியே திங்கிறானுங்களே


----------------------------------------------------------------

நேற்று காலை அபூர்வமாக ஒரு சம்பவம் நடந்தேறியது. திருவாரூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1996 - 97 ஆம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு படித்தேன். அதில் என்னுடன் படித்த பெரும்பாலான நண்பர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. அதில் முக்கியமானவர்கள் அம்மையப்பன் பாலாஜி, தினேஷ், மஞ்சரொட்டி விஜயன், காட்டான் அருண்குமார்.

படிப்பு முடிந்ததும் சில வருடங்கள் மட்டுமே தொடர்பில் இருந்த இவர்கள் சில வருடங்களில் சுத்தமாக தொடர்பு எல்லைக்கு வெளியில் சென்று விட்டனர். சில வாரங்களுக்கு அவர்கள் அனைவரும் பேஸ்புக்கின் மூலமாகவும் கூகிள் பிளஸ் மூலமாகவும் என்னை கண்டுபிடித்து தொடர்புக்குள் வந்தனர்.

ஆனால் அனைவரும் ஆளுக்கொரு நேரத்திற்கு இணையத்திற்குள் வந்ததால் சாட் செய்யவோ பேசவோ முடியவில்லை. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நேற்று அனைவரும் ஒரு சேர என்னுடன் சாட்டில் வந்து பிறகு போனிலும் நெடுநேரம் பேசிக்கொண்டோம்.

இதில் பாலாஜி அமெரிக்காவில் புரூக்ளினில் சாப்ட்வேர் இன்ஜினியராக இருக்கிறான். அருண் சிங்கப்பூரில் மரைன் இன்ஜினியராக இருக்கிறான். தினேஷ் சீனாவில் சாப்ட்வேர் தொழிலை சொந்தமாக நடத்திக் கொண்டு இருக்கிறான். விஜயன் ஏற்றுமதி தொழிலில் திருவாரூரிலேயே இருக்கிறான்.

ஒரு மணிநேரம் அனைவருடனும் அளவளாவிய பிறகு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அதிலும் நாங்கள் அந்த காலக்கட்டத்தில் எப்பொழுதும் மலையாள பிட்டு படம் பார்க்கப் போகும் செங்கம் திரையரங்கை பற்றி பாலாஜி சிலாகித்து கூறியதும் ரொம்ப நேரத்திற்கு சிரித்தேன். அவன் இருக்கும் பொசிசனுக்கு இன்னும் பழசை மறக்காத பாங்கு என்னை ரொம்பவே வியக்க வைத்தது.

இதைப் பார்த்து கடுப்பான இல்லாள் என்னுடன் பேசச்சொன்னால் வார்த்தை வரவே மாட்டேங்குது, ஆனால் நண்பர்களுடன் பேசும் போது மட்டும் சத்தம் கிழியுது என்று சைடில் வாரிக் கொண்டு இருந்தாள். எல்லா சந்தோஷங்களும் நிமிடத்தில் அடங்கியது. அட ஆண்டவா ஆட்டுக்கு வாலை அளந்தா வைப்பாங்க.

----------------------------------------------------------------

ஒளிரும் இந்தியா - தமிழ்நாடு தவிர


--------------------------------------------------

இப்ப இணைத்தில் கவிதைகாற்று வீசுகிறது போல. அவனவன் கவிதைங்கிற பேரில் கொன்னுக்கிட்டு இருக்கான். ஒரு வாக்கியத்தை மடக்கி மடக்கி அடிச்சா கவிதைன்னு சொன்னவன் எவன்னு தெரியல. கிடைச்சான் மவனே அவன் சங்க கடிச்சி துப்பியிருப்பேன். சாம்பிளுக்கு நம்ம வீடு சுரேசு கக்கிய கவிதை இலக்கியமோ இலக்கியம்.

விட்டா என்னையும் கவிஞனாக்கிடுவானுங்க போல. இதையெல்லாம் சமீப காலத்துல துவக்கி வச்சது லக்கிலுக் யுவகிருஷ்ணா தான்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு லுலல்லாயிக்கு பெரியவர் கவிதைய எடுத்து உல்டா அடிக்க ஆளாளுக்கு இதையே புடிச்சிக்கிட்டு தொங்குறானுங்க.

விட்டுத் தொலைங்கடா டேய். இதப் படிச்சிபுட்டு தூக்கத்துல கெட்ட கனவா வந்து அலறிகிட்டே எந்திரிக்க வேண்டியிருக்குது. இது தொடர்ந்தா மொக்க கவிதைகள் வெளியிடப்படும் பதிவுகளில் ஆங்கில கவிதை எழுதும் பவர் ஸ்டார் நக்கீரனை வைத்து பின்னூட்ட கவியரங்கம் நடத்தப்படும் என்பதை கூறி எச்சரிக்கின்றேன்.

 
ஆரூர் மூனா செந்தில்


Friday, October 12, 2012

மாற்றான் - சினிமா விமர்சனம்

மாற்றானுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு கூடியிருந்ததால் டிக்கெட் முன்பதிவு செய்வதில் ஏற்கனவே சிக்கல் இருந்தது. இருந்தாலும் காலையில் வேலைக்கு செல்லும் முன்பே நண்பன் சத்யாவிடம் முருகன் தியேட்டரில் டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வேலைக்கு சென்றேன். வழக்கம் போல் நமக்கு சீக்கிரம் வெளியில் செல்ல வேண்டும் என்று நினைத்தால் வரும் தாமதம் இன்றும் வந்தது.

சத்யாவை தனியாக படம் பார்க்கச் சொல்லி விட்டு வேலையை முடித்து விட்டு பார்த்தால் மணி 12 ஆகி விட்டிருந்தது. வழக்கம் போல் ஏஜிஎஸ்க்கே போவோம் என்று முடிவு செய்து நண்பன் அசோக்குடன் தியேட்டருக்கு சென்றேன். கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக அலைமோதியது.

அசோக்கை டிக்கெட் எடுக்கச் சொல்லி விட்டு வெளியில் காத்திருந்தால் டிக்கெட் 12.45 காட்சிக்கு கிடைத்தது. ஆனால் கவுண்ட்டரில் டிக்கெட் விலை ரூ.200 என்று சொன்னான். என்னவென்று விசாரித்தால் டிக்கெட்டுடன் பாப்கார்ன் கோக்குக்கும் சேர்த்து டோக்கன் கொடுத்திருந்தார்கள்.

டிக்கெட் எடுத்து விட்டதால் ஒன்றும் சொல்லமுடியாமல் வண்டியை பார்க்கிங்கில் போட்டு விட்டு நின்றால் கவுண்ட்டரில் ஒரு பெண்மணி கூடுதல் பணம் பெற்றதற்காக சண்டையிட்டு கொண்டிருந்தார். நமக்கு தான் கொடுப்பினையில்லை ஒரு பெண்மணியாவது சண்டையிடுகிறாரே என்று சந்தோஷம்.

நேரமானாலும் உள்ளே விடாமல் தாமதித்துக் கொண்டே இருந்தார்கள். அப்பொழுது ஒரு சேட்டுப்பெண் அந்த ஆட்களை சத்தம் போட்டு உள்ளே விடச் சொன்னார்கள். அப்போது என் நண்பன் நாமும் சுடிதார் போட்டு வந்திருந்தால் கேட்டது எல்லாம் கிடைத்திருக்கும் என்று சொன்னான்.

டிக்கெட் கிழிப்பவரிடம் யார் அந்த பெண் அவர் சொன்னதும் உடனே உள்ளே விடுகிறீர்களே என்று கேட்டால் அவர் தான் ஓனர் என்று சொன்னான். கல்பாத்தி வகையறாவில் யாராவது ஒருத்தராக இருக்கக்கூடும். எல்லா களேபரமும் முடிந்து திரையரங்கின் உள்ளே சென்று அமர்ந்ததுமே படத்தை போட்டு விட்டான். முன்கதை சுவாரஸ்யம் முடிந்து விட்டதா. படத்தின் கதைக்கு செல்வோம்.

தாராவுக்கும் ஒரு ஜெனிட்டிக் இன்ஜினியருக்கும் ஒட்டிக்கொண்டு விமல், அகில் ஆண்குழந்தைகள் பிறக்கிறது. அது வளர்ந்ததும் டபுள் சூர்யா என்று நான் சொல்லவா வேண்டும். இருவருக்கும் அனைத்து உறுப்புகளும் தனித்தனியாக இருந்தாலும் இதயம் மட்டும் ஒன்று தான் இருக்கிறது. அது விமலின் உடம்பில் இருக்கிறது.

விமல் நல்ல குணங்கள் கொண்டவராகவும் படிப்பில் வல்லவராகவும் வளர்கிறார். அதற்கு நேர் மாறான குணத்தோடு அகில் இருக்கிறார். ஒரு வெளிநாட்டுப் பெண் மூலம் தங்கள் அப்பாவின் கம்பெனியில் தயாரிக்கப்படும் குழந்தைகள் ஊக்கப்பானத்தில் தவறு நடப்பதை அகில் போதையில் இருக்கும் போது விமல் அறிந்து கொள்கிறார். அதனால் அந்த வெளிநாட்டுப் பெண்ணும் விமலும் கொள்ளப்படுகிறார்கள்.

விமலின் உடம்பில் உள்ள இதயம் அகிலுக்கு பொருத்தப்படுகிறது. இடைவேளை. அகில் விமலின் நினைவுகளால் நல்லவனாக மாறுகிறார். பிறகு உண்மைகள் விமலுக்கு தெரியவர அதன் ஆதாரங்களை தேடி காதலி காஜலுடன் வெளிநாடு போகிறார். அங்கிருந்து கொண்டு வந்த சாட்சியங்களை வைத்து இந்தியாவில் ஊக்கப்பானத்தை தடை செய்கிறார். இந்தியாவை காப்பாற்றுகிறார். அவ்வளவு தான் கதை. போதுமா.

கேட்கும் போது படுசுவாரஸ்யமாக போகும் கதை எடுத்த விதத்தில் சற்று தடுமாறியிருக்கிறது. அந்த ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விஷயம் இந்த படத்திற்கு தேவையே இல்லை. ஏன் இதனுள் நுழைத்தார்கள் என்றே புரியவில்லை.

அயன் படத்தில் அந்த காங்கோவில் வைரம் வாங்க போகும் காட்சி, காங்கோவில் தெருக்களில் ஒட்டமான சண்டைக் காட்சி எனவும், கோ படத்தில் பாங்க் ராபரி, கோட்டா சீனிவாசராவின் திருட்டு கல்யாணத்தை படம் பிடித்தல் என்ற துவக்கக் காட்சிகள் படம் தொடங்கிய உடனே நம்மை படத்தின் உள்ளே இழுத்து அடுத்தது என்ன என்ற ஆர்வத்திற்கு கொண்டு செல்லும், அது போன்ற காட்சி இந்தப் படத்திற்கு இல்லாதது பெரிய மைனஸ்.

அதன் காரணமாகவே என்னால் படத்துடன் இடைவேளை வரை ஒன்ற முடியவில்லை. அது போல் இரட்டையர்களை இயல்பாக காட்ட முயற்சிக்க வைக்கும் கிராபிக்ஸ் வேலைகள் படு சுமார். விமல் கேரக்டரில் படத்தில் வேறொருவர் இருப்பதும் முகத்தை மட்டும் சூர்யாவை ஒட்ட வைத்திருப்பது என்னைப் போன்ற சாமான்ய ரசிகனுக்கே தெரிய வருகிறது என்றால் புரோபசனல் விமர்சகர்கள் என்ன சொல்வார்கள் என்றே தெரியவில்லை.

சூர்யாவைப் பற்றி நான் தனியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இரண்டு கேரக்டர்களுக்கும் உரிய வித்தியாசத்தை முகத்தில் மிக இயல்பாக கொண்டு வந்திருக்கிறார். இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் அந்த பார் டான்ஸ் மற்றும் எம்ஜிஎம்மில் நடக்கும் சண்டைக் காட்சியிலும் மிகுந்த உழைப்பை கொடுத்து இருக்கிறார்.

காஜல் அகர்வால் படத்தில் ரஷ்ய மொழிப் பெயர்ப்பாளராக வருகிறார். படத்தில் சும்மா வந்து போகும் நாயகியாக இல்லாமல் படம் முழுக்கவே வருகிறார். சும்மா இல்லென்று இருக்கிறார். வசீகரமான முகம். அவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது தியேட்டரில் தெளிவாக தெரிகிறது. அவர் வரும் போதெல்லாம் விசில் பறக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தாரா தமிழில் நடித்திருக்கிறார். பெர்பார்மர் என்று சொல்வார்கள். அதற்கு தகுதியானவர் அவர் தான். அம்மாவாக வாழ்ந்திருக்கிறார்.

நான் இதற்கு முன் பாடல்களை கேட்டதேயில்லை. முதல் முறை கேட்பதால் அவ்வளவாக ஈர்க்கவில்லை. படத்தில் காமெடிக்கு என்று தனியாக யாருமில்லை. என்ன தான் வில்லன் அப்பா என்றாலும் மகனையே கொல்வது எல்லாம் ரொம்ப ஓவர். படம் ஒரு சில விஷயங்களில் 7ம் அறிவை நினைவுபடுத்துகிறது.

ஒரு ராணுவ மேஜர் ஒரு சுமோ போன்ற வாகனத்தில் வெறும் இரண்டு பாதுகாவலர்களோடு வெளியில் செல்வதும் வெளிநாடுகளில் ஒரு இந்தியர் சர்வசாதாரணமாக ராணுவ மேஜரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயற்சிப்படும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். இன்னும் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது ஆனால் பார்ப்பவர்களின் சுவாரஸ்யத்திற்காக இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

அதற்காக படம் சுமார் பார்க்கவே வேண்டாம் என்றெல்லாம் சொல்லக்கூடாது. பார்க்கலாம் தான். ஆனால் அயன், கோ படத்தை கொடுத்த குழுவின் அடுத்த படம் என்ற எதிர்ப்பார்ப்போடு போனால் சற்று வருத்தமாக இருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனால் பார்க்கக்கூடிய படம் தான்.

ஆரூர் மூனா செந்தில்
 

Tuesday, October 9, 2012

சவுதியில் உள்ள நிறுவனத்திற்கு டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

சவுதியில் உள்ள நிறுவனத்திற்கு டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

கல்வித்தகுதி - DME, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

கல்வித்தகுதி - DCE, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

கல்வித்தகுதி - DEEE, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

சம்பளம் - 3500 சவுதி ரியால் முதல் 3800 சவுதி ரியால் வரை
தங்குமிடம் இலவசம்

சென்னையில் வரும் 12ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணிலும் senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, October 5, 2012

பஞ்சேந்திரியா - கடுப்பேற்றிய அரசியல் கட்சியினர்


விடுதலை சிறுத்தைகளுக்கு யாரும் முடிவு கட்ட வேண்டியதில்லை. அவர்களே தனக்குத் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வார்கள். நேற்று ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு திருமாவளவன் வந்திருந்தார். எனவே அவரது அடிப்பொடிகள் எல்லாம் திருவாரூருக்கு படையெடுத்தார்கள்.

நான் மாலை 5 மணிக்கு நான் மாயவரத்திலிருந்து குடும்பத்தினர் சகிதம் திருவாரூரை நோக்கி காரில் வந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்பு ஒரு பேருந்தில் வந்து கொண்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆ ஊ என்று கூச்சலிட்டுக் கொண்டே எவ்வளவு ஹாரன் அடித்தும் வழி விடாமல் வந்தனர்.

அவர்களில் ஒருவன் குடித்து விட்டு பீர் பாட்டிலை மேலே எறிந்தான். என் காருக்கு நேரே வந்தது. நான் சற்று விலகியிக்காவிட்டால் பாட்டில் பேனட்டில் வந்து விழுந்திருக்கும். சிறிது நேரம் கழித்து பேருந்து போகும் போதே ஒருவன் படியிலிருந்தே ஒன்னுக்கடித்தான். நான் விலகி அப்படியே வண்டியை நிறுத்தி விட்டேன்.

என்னுடன் என் அம்மா, மனைவி, அக்காள் மற்றும் அக்காள் குழந்தைகள் ஆகியோர் வண்டியில் அமர்ந்திருந்தனர். அவர்களின் மனநிலை எவ்வாறு இருந்திருக்கும். இவனுங்களை நான் மட்டும் காறித்துப்பவில்லை. இவர்களுடயை செயலால் நேற்று மட்டும் குறைந்தது 2000 பேர் அதிருப்தி அடைந்து இருப்பர். எனக்கு இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை.

----------------------------------------

தத்ரூபமான மெழுகு சிலை


-----------------------------------------------------

இன்று மதியம் திருவாரூர் பெட்ரோல் பங்க்கில் காருக்கு டீசல் போட்டுக் கொண்டு இருக்கும் போது "டேய் செந்தில்" என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தால் என்னுடைய பள்ளிக் கால நண்பன் அரவிந்த் பைக்கில் நின்று கொண்டிருந்தான். கூலிங்கிளாஸ், பர்முடாஸ், காதில் கடுக்கண் என திருவாரூருக்கு சம்பந்தமில்லாத கெட்அப்பில் இருந்தான்.

"என்னடா மாப்ள" என்று அருகில் சென்றால் என்னை ஏளனமாக பார்வை பார்த்தான். நான் நெற்றியில் பட்டையை போட்டுக் கொண்டு வேட்டியில் இருந்தேன். சற்று அலட்சியமாக சிரித்தப் படி "என்னடா நான் உனக்கு பேஸ்புக்கில் மட்டும் தான் நண்பனா" என கூறினான். "ஏன்டா என்ன ஆச்சு" என்று கேட்டேன்.

"நான் பேஸ்புக்கில் எப்படியெல்லாம் கலக்கி வருகிறேன் தெரியுமா, நீ என்னுடைய போட்டோவையெல்லாம் பார்ப்பதில்லையா" என்று கேட்டான். நான் சற்று நேரம் ப்ளாஷ்பேக்கிற்கு சென்றேன். சில மாதங்களுக்கு முன்பு அவன் எனக்கு பேஸ்புக்கில் ப்ரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் கொடுத்தான். நானும் அதனை அக்செப்ட் செய்தேன்.

அதிலிருந்து தினமும் வித்தியாசமான சில சமயத்தில் கிறுக்குத்தனமாக எடுத்த எதாவது ஒரு போட்டோவை அப்டேட் செய்து அவனே அதனை ரசித்து கமெண்ட்டும் போட்டுக் கொண்டு இருந்தான். பையன் சரியான விளம்பரப் ப்ரியன். நமக்கு பந்தாவைக் கண்டால் ஆகாது. எனவே பேஸ்புக்கில் இருந்து அவனை விட்டு விலகினேன். ப்ளாஷ்பேக் ஓவர்.

"நீயெல்லாம் இணையம் பக்கமெல்லாம் வருவதில்லையா" என்று கேட்டான். நானும் இவனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் "எனக்கு அந்த வேலை இல்லைடா மச்சான். நான் ரயில்வேயில் மெக்கானிக்காக குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன். எனக்கு அதனைப் பற்றிய அனுபவமில்லை" என்று கூறினேன்.

அதற்கு அவன் "பரவாயில்லைடா மச்சான் நான் பேஸ்புக்கில் உலகளவில் பேமசாகி விட்டேன். இப்பொழுது கூகிள் ப்ளஸ்ஸில் இணையப் போகிறேன். அடுத்த மாதம் இணையத்தில் ப்ளாக் என்று ஒன்று இருக்கிறது. அதில் நான் கதையெல்லாம் எழுதப் போகிறேன். நீ என்னுடைய பேஸ்புக் மேட்டரையெல்லாம் லைக் செய்து கமெண்ட் போட்டால் உன்னையும் நிறைய பேருக்கு தெரிந்து பிரபலமாவாய்" என்று கூறி விட்டு ஏதோ இங்கிலீஷ் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.

எனக்குத்தான் இவனையெல்லாம் சந்தித்ததற்கு எதனால் என்னை அடித்துக் கொள்வது என்று தெரியவில்லை. எல்லாம் கலிகாலம்டா சாமி. கடவுளே இந்த மாதிரி அரவேக்காட்டு பசங்ககிட்டயிருந்து என்னைக் காப்பாற்று.

-----------------------------------------

நம்ம ரயில்வேல தான் இப்படியெல்லாம் நடக்கும்



---------------------------------------------------

சென்னையிலிருந்து திருவாரூருக்கு நேற்று முன்தினம் ஆம்னி பேருந்தில் வந்தேன். 10 மணிக்கு கோயம்பேட்டில் பேருந்தை எடுத்தவன் 11.30க்கு திருவான்மியூர் வந்தான். அதன் பிறகு அவன் எடுத்தது அசுரவேகம். காலை நாலரை மணிக்கெல்லாம் திருவாரூரில் எங்களை இறக்கி விட்டான். 300 கிலோமீட்டரை 5 மணிநேரத்தில் கடந்திருந்தால் என்ன வேகத்தில் வந்திருப்பான். கண்டிப்பாக அடுத்த பெரிய பேருந்து விபத்து எங்கள் பகுதியிலிருந்து காத்திருக்கிறது.


ஆரூர் மூனா செந்தில்

Tuesday, October 2, 2012

சவுதியில் உள்ள நிறுவனத்திற்கு டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

சவுதியில் உள்ள நிறுவனத்திற்கு டிப்ளமோ முடித்தவர்கள் வேலைக்குத் தேவை.

கல்வித்தகுதி - DME, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

கல்வித்தகுதி - DCE, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

கல்வித்தகுதி - DEEE, முன்அனுபவம் குறைந்தபட்சம் 2 வருடம்

சம்பளம் - 3500 சவுதி ரியால் முதல் 3800 சவுதி ரியால் வரை
தங்குமிடம் இலவசம்

சென்னையில் வரும் 05ம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் 8883072993 என்ற எண்ணிலும் senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆரூர் மூனா செந்தில்

Monday, October 1, 2012

நா ப்ரியமைன ஆந்திர பிரதேசம்



எனக்கும் ஆந்திராவுக்குமான தொடர்பு திருப்பதியின் மூலமாக தொடங்கினாலும் தெலுங்குக்கும் எனக்குமான தொடர்பு ரொம்ப கால தாமதமாகவே ஆரம்பித்தது. சிறுவயதில் எங்கள் குடும்பம் திருப்பதிக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

திருவாரூரிலிருந்து ஒரு ஆன்மீக சுற்றுலா பேருந்து கிளம்பும் அதில் என் குடும்பத்தினர் மற்றும் என் அப்பாவின் நண்பர்கள் குடும்பத்தினர் மற்றும் திருவாரூரில் உள்ள குடும்பத்தினர் பலர் இணைந்து திருப்பதி சுற்றுலாவுக்கு கிளம்புவோம். சாத்தனூர் அணையில் துவங்கி திருவண்ணாமலை, வேலூர், சித்தூர் வழியாக திருப்பதி. அங்கு தரிசனம் முடிந்ததும் அலர்மேலுமங்காபுரம், காளஹஸ்தியுடன் சுற்றுலாவை முடித்து திருவாரூர் திரும்புவோம்.

என்னுடைய 5 வயதிலிருந்து 15 வயது வரை தொடர்ந்தது. பிறகு ஏன், எதற்கு, எப்படி என்ற கேள்விகள் கேட்க ஆரம்பித்து பகுத்தறிவு பக்கம் சாய்ந்து திருப்பதி செல்வதை தவிர்த்து விட்டேன். என் அப்பா மட்டும் பலமுறை கேட்டுப் பார்த்து நான் மறுக்கவே திட்டி விட்டு என்னை மட்டும் வீட்டில் விட்டு விட்டு குடும்பத்தினர் சென்று வந்தனர்.

அத்தனை முறை திருப்பதி சென்று வந்திருந்தாலும் ஜருகண்டி என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு தெலுகு வார்த்தைகள் ரொம்ப நாட்களாக தெரியாமலே இருந்தது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்களோ தெலுகு தெரிந்தவர்களோ எங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருந்ததே அதற்கு காரணம்.

என்னுடைய பதினாலாவது வயதில் எங்கள் வீட்டிற்கு அருகில் நாயுடு குடும்பம் ஒன்று குடிவந்தது. அவர்கள் தெலுகுகாரர்கள் என்று தெரிந்ததும் உடனே நோட்டு புக்கு வாங்கிக் கொண்டு தெலுகு கற்றுக் கொள்ள எண்ணி ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் தமிழ் அர்த்தம் எழுதிக் கொண்டேன். மனப்பாடம் செய்து கொண்டால் தெலுகு வந்து விடும் என்று வேறு எண்ணிக் கொண்டேன். பலநாட்கள் ரொம்ப ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்.

எவ்வளவு நாட்கள் தான் படித்தாலும் செப்பு என்றால் செருப்பு என்றும் சொல்லு என்று இரு அர்த்தங்கள் மட்டுமே நினைவில் இருந்தது. நாளாக நாளாக போரடித்து ஒரு நாள் நோட்டை தூக்கி கடாசி விட்டேன். நான் பத்தாவது படிக்கும் போது அதே வயதுடைய ஒரு பெண் அந்த நாயுடு வீட்டுக்கு விஜயவாடாவிலிருந்து விருந்தினராக வந்திருந்தார். நல்ல கலராக வேறு இருந்ததால் எப்படியும் பேசி விடலாம் என்று முடிவு செய்து நெருங்கினால் அந்தப் பெண்ணுக்கு ஒரு வார்த்தை கூட தமிழ் தெரியாதாம்.

பிறகு மரோசரித்ரா ரேஞ்சுக்கு முயற்சித்து நெருங்கியதும் அந்த பெண் தன்னுடைய மாமன் பையனை விரும்புவது தெரிய வர தாடி வளராத காலத்திலும் காதல் தோல்வியில் திரிந்தேன். பிறகு ரொம்ப நாட்களுக்கு ஆந்திராவோ தெலுகோ என்னை விட்டு விலகியே இருந்தது.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தொழிற்கல்வி பட்டயப்படிப்பு படிக்க சென்னை வந்ததும் தான் சென்னையில் கலவையாக தமிழ் மற்றும் தெலுகு பேசும் மக்கள் இருப்பது தெரியவந்தது. என்னுடன் படித்த சக நண்பர்களுக்கு பல வார்த்தைகள் பேசத் தெரிந்திருந்தன.

என்னுடன் படித்த சுஜாதா என்ற பெண் ஐசிஎப் பள்ளியில் தெலுகு மீடியத்தில் படித்தது தெரிந்ததும் எனக்கு வியப்பாக இருந்தது. ஐசிஎப்பில் தனது டூல்ஸ்களை வைத்துக் கொள்ள கப்போர்டு கொடுப்பார்கள். அதில் எனக்கும் அந்த பெண்ணுக்கும் சேர்த்து ஒரு கப்போர்ட் கொடுத்தார்கள். அவருடன் நெருங்க ஆரம்பித்தேன்.

பிறகு அந்த பெண்ணையும் தெலுகு தெரியும் என்ற காரணத்துக்காகவே சைட் அடிக்க முயற்சிக்க அந்தப் பெண்ணோ டிபிக்கல் சென்னைப் பெண்ணாக என்னை ஜஸ்ட் லைக் தட் என்று டீல் பண்ண அதிர்ந்து பின் வாங்கினேன். இன்று திருமணமாகி மூன்று குழந்தைகள் பெற்றுக் கொண்டு 100கிலோவுக்கு நெருங்கி விட்டார். ரயில்வேயில் கர்னூல் என்ற ஆந்திர ஊரில் கேட் கீப்பராக இருக்கிறார்.

படிப்பை முடித்ததும் திருவாரூருக்கு திரும்பி எந்த வேலையிலும் சேராமல் வெளங்காமல் போய்க் கொண்டிருந்த நேரம். எங்கள் வீடு இருந்த நகருக்கு ஒரு தெலுகு குடும்பம் குடி வந்தது. எங்கள் அப்பாவுக்கு அந்த குடும்பத் தலைவர் நண்பரானார். அவர் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் திட்ட மேலாளர். அவர் மூலமாக அந்த ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன்.

இன்று எனக்கான பொது அறிவு, கம்ப்யூட்டர் அறிவு, வேலை பார்க்கும் திறன், மேலாண்மை அறிவு என என்னை முழுவதுமாக செதுக்கிக் கொடுத்தது அந்த கம்பெனி தான். வேலையின் காரணமாக அடிக்கடி ஐதராபாத் செல்ல வேண்டி நிர்ப்பந்தமானது. பிறகு ஐதராபாத் பிரியாணி பற்றி தெரிய வந்து பிரியாணி என் குலதெய்வமானது. இன்றும் யாராவது ஐதராபாத்திலிருந்து யாராவது வந்தால் எனக்கு பிரியாணி வந்து விடும்.

வேலையின் காரணமாக தெலுகு கற்றுக் கொள்ள நேர்ந்து இன்று சரளமாக தெலுகு பேசுகிறேன். இன்றும் தமிழகத்தை தாண்டி ஆந்திராவில் காலடி எடுத்து வைத்தால் புது அனுபவமாகத்தான் இருக்கும். அவர்களின் கண்மூடித்தனமான ஆன்மீகம், காரமான சாப்பாடு, ஜிகினா டான்ஸ் சினிமா, முக்கியமாக ஐதராபாத் பிரியாணி என ஒவ்வொன்றும் எனக்குள் ஐக்கியமாகி விட்டது.

இவ்வளவு ஏன் என்னுடன் பணிபுரிந்த தெலுகை தாய்மொழியாகவும் ஆந்திராவை பூர்வீகமாகவும் கொண்ட சக ஊழியர் பெண் ஒருவரை பிஸ்ஸா பங்கிடுவதில் சண்டையிட தொடங்கி, சமாதானமாகி பிறகு ஏழு வருடம் காதலில் இருந்து ஏகப்பட்ட எதிரப்புகளை சமாளித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணமும் செய்துக் கொண்டுள்ளேன். இனி நான் தெலுகை மறக்க நினைத்தாலும் வீட்டம்மா என்னை வசைபாடும் போதெல்லாம் வரும் தெலுகு வார்த்தைகள் என்னை மறக்க விடுமா.


ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...