சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, April 30, 2012

சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு விவரங்கள்

Bus Wiring and Electrical Work அல்லது BUS A/C Mechanism தெரிந்தவர்கள் DEEE, DECE மற்றும் ITI Electrician, A/C Mechanic முடித்தவர்கள் Venda Engineering and Trading Company, Singapore க்கு வேலைக்குத் தேவை

சம்பளம் : 1600 சிங்கப்பூர் டாலர்

----------------------

வீட்டு வேலைக்கு பெண்கள் தேவை.

சம்பளம் : 400 சிங்கப்பூர் டாலர்

உணவு தங்குமிடம் இலவசம்

----------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள
தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்



டாஸ்மார்க்கு ரசிகர்கள் - 1

குடிப்பழக்கம் கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் தொற்றிக் கொண்டது. முதலில் முகர்ந்து பார்த்து போதையாகி பிறகு சில நாட்கள் கழித்து மூடி அளவுக்கு குடித்த பிறகு மட்டையாகிக் கொண்டிருந்தேன். 2002ம் ஆண்டு வரை அது தான் என் கெபாசிட்டியாக இருந்தது. அதுவும் எனக்கு ஒயின்சாப் சென்று சரக்கு வாங்க பயமாக இருக்கும்.

என் நண்பர்களை கடைக்கு சென்று வாங்க வைத்து திருவாரூர் SVT வேபிரிட்ஜ் அருகில் உள்ள காட்டில் தான் குடிப்போம். சென்னையாக இருந்தால் நான் இருந்த ஹாஸ்டலின் மேல்மாடியில் வாட்டர் டேங்கின் உள் அமர்ந்து குடிப்போம். ஒரு குவாட்டரை ஐந்து பேர் பங்கிட்டு குடிப்போம். குடித்து விட்டு அங்கேயே தூங்கி விட்டு தெளிந்த பிறகு தான் வீடு வந்து சேர்வோம்.

இது வரை உள்ளது என் கல்லூரி கால குடிப்பழக்கத்தின் சுயசொறிதல், இத்துடன் நிறுத்திக் கொண்டால் மானம் தப்பிக்கும். தற்போது நான் குடித்து விட்டு நடத்தும் கலாட்டாவை நம் பதிவுலக நண்பர்களே நன்று அறிவார்கள் என்று எண்ணுகிறேன்..

நான் அறிந்த நண்பர்கள் மற்றும் உறவினர்களில் பலர் குடித்து விட்டால் அடிக்கும் லூட்டி பற்றி பகிர்ந்து கொள்ளவே இந்த தொடர்.

இத்தொடரின் முதலாமவர் சக்தி மாமா. என் அப்பாவின் அத்தை மகன். என் அப்பாவுக்கு மிக நெருங்கிய உறவினரான நண்பர். கும்பகோணத்தில் உள்ள ஒரு அய்யர் ஹோட்டலில் சப்ளையராக வேலை பார்க்கிறார். காலையில் ஹோட்டலில் 04.00 மணிக்கு பூஜை போட்டு கடையை திறந்து வைப்பவர் அவர் தான். மதியம் இரண்டு மணி வரை அவரது ஷிப்ட் இருக்கும்.

ஷிப்ட் முடிந்தவுடன் அங்கிருந்து கிளம்பி காரைக்கால் பக்கம் இருக்கும் அம்பகரத்தூர் சென்று சாமி கும்பிட்ட பிறகு சாராயம் வாங்கி குடித்து விட்டு கோயிலின் பிரகாரத்திலேயே மட்டையாகி விடுவார். பிறகு நள்ளிரவு தெளிந்தவுடன் எழுந்து கும்பகோணம் வந்து விடுவார். மறுநாள் வழக்கம் போல முதல் பூஜை அவர் தான். வயது 64 ஆகிறது. திருமணம் செய்து கொள்ளவில்லை. ஹோட்டலின் மாடியில் தான் தங்கியுள்ளார். எங்கள் வீடு தான் அவர் வீடு போல. வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். வரும் போது அவரது பையில் என் அப்பாவுக்கென தனி குவார்ட்டர் இருக்கும்.

யாருக்கும் தெரியாமல் என் அப்பாவின் கையில் கொடுத்து விட்டு என் வீட்டையே அல்லோகலப்படுத்தி விடுவார். நான், என் தம்பி உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் தன் கையால் தான் பறிமாறுவார். வேண்டாம் என்றாலும் கேட்காமல் அளவுக்கு அதிகமாக சாப்பாட்டை வைத்து பொறுமையை சோதிப்பார். ஆனால் சிறு வயதில் இருந்தே என்னை தூக்கி வளர்த்தவர் என்பதால் எனக்கு அவர் என்ன செய்தாலும் கோவம் வராது. வீட்டில் உள்ளவர்களுக்கும் அப்படியே.

ஒரு முறை அளவுக்கு மிக அதிகமாக குடித்து விட்டு திருவாரூரில் உள்ள எங்கள் ஜெராக்ஸ் கடையின் முன்பு விழுந்து கிடந்தார். என் அப்பாவும் நானும் எவ்வளவோ முயற்சி செய்தும் எழுப்ப முடியவில்லை. என் அப்பா மிகுந்த கோபமடைந்து ரெண்டு வாளி தண்ணீரை கொட்டி எழுப்பி அடித்து விரட்டி விட்டார். அடடா பெரிய சண்டையாகி விட்டதே இனி மேல் வர மாட்டாரோ என்று நினைத்தால் இரண்டு நாள் கழித்து மாமாவும் அப்பாவும் புல் மப்பில் வீட்டிற்கு வந்தார்கள். சரிதான் இவர்களது நட்பை நாம் பிரிக்க நினைத்தாலும் அவர்களாக பிரிய மாட்டார்கள் என்று புரிந்து விட்டது.

ஒரு மாதத்திற்கு முன்பு கூட என் தம்பியின் திருமணத்திற்கு திருப்பதிக்கு அழைத்திருந்தோம். ஆனால் மேல் திருப்பதியில் சரக்கு கிடைக்காததால் வரமாட்டார் என்றே அனைவரும் நினைத்திருந்தோம். அது போலவே வண்டிகள் திருவாரூரிலிருந்து கிளம்பும் வரை மாமா வரவில்லை. ஆனால் மறுநாள் காலை திருமண நேரத்தன்று டான்னென்று மனிதர் ஆஜராகியிருந்தார்.

"நான் இல்லாமல் எப்படி கல்யாணம் நடக்கும்" என கேட்டு விட்டு மொத்த வேலைகளையும் முன்னின்று செய்தார். திருமணம் நல்லபடியாக முடிந்ததும் சத்தமில்லாமல் கீழ்திருப்பதிக்கு சென்று விட்டார். போய் நன்றாக சரக்கடித்து விட்டு நாங்கள் கீழ்திருப்பதியில் விட்டுச் சென்றிருந்த டெம்போ டிராவலரில் ஏறிப் படுத்திருந்தார்.

நாங்களெல்லாம் ஆளைக் காணோமே கல்யாணத்தில் சாப்பிடாமல் கூட சென்று விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டு கீழ்திருப்பதிக்கு வந்தால் மனிதர் வண்டியிலிருந்து எழுந்து வந்து எனக்கு கல்யாண சாப்பாடு இல்லையா என்று கேட்டாரே பார்க்கலாம். என் அப்பா அவரை அடித்த அடியில் மனிதர் எழுந்திருக்கவே மாட்டார் என்று நினைத்திருந்தோம். நான் மற்றும் சில உறவினர்கள் வேறு காரில் திருவாரூர் வந்து விட்டோம். வரும்வழியில் ஏற்கனவே வண்டியில் தனியாக சரக்கு வாங்கி வைத்திருந்து என் அப்பாவும் அவரும் குடித்து கும்மாளமிட்டு வந்ததை மறுநாள் அறிந்து தலையில் அடித்துக் கொண்டோம்.

இன்றும் சரி அவர் இல்லாமல் எங்கள் வீட்டில் விஷேசம் இல்லை. அந்த விஷேசத்தில் அவர் இல்லாமல் தொல்லை இல்லை.

ஆரூர் மூனா செந்தில்.


Saturday, April 28, 2012

தம்மு - சிங்கமகன் - திரை விமர்சனம்



கலீஜா படத்துல சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு, ஓடும் ஸ்கார்ப்பியோவின் மீது குதித்ததும் முன் இரண்டு சக்கரங்கள் பிய்த்துக் கொண்டு ஓடுவதும், மாஸ் மகாராஜா ரவிதேஜா வீரா படத்தில் ஒரே குத்தில் JCBயை பத்தடி தூரத்திற்கு பறக்க விடுவதும், பவர் ஸ்டார் பவன் கல்யாண் கொமரம் புலி படத்தில் பத்தடி தூரத்தில் இருந்து ஒருவன் துப்பாக்கியால் சுட்டதும் சீறி வரும் குண்டை ஜஸ்ட் லைக் தட் ஒரு கத்தியால் திசை மாற்றி விடுவதும், ஊசரவெல்லி படத்தில் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் நாற்காலியில் கட்டப்பட்டு இருக்கும் போது ஜூனியர் என்டிஆர் தரையில் கால்களை ஊன்றாமல் அப்படியே பறந்து எதிரிகளை பந்தாடுவதும் தமிழ்நாட்டில் பிறந்த சினிமா ரசிகனுக்கு பார்ப்பதற்கு கஷ்டமாக இருக்கலாம். ஆனால் இவை தான் அவர்களின் அதிகபட்ச ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் தன்மை.

நாமெல்லாம் C கிளாஸ் ரசிகனுங்க. என்னதான் தெலுங்கு படத்தில மேற்சொன்ன மாதிரி ஹீரோக்கள் படுபயங்கர ஹீரோயிசத்தை காட்டியதும், மூளை "இது உண்மையில்லை, ரொம்பத்தான் காதுல பூ சுத்துறானுங்க" ன்னு கதறினாலும் மனசு "அடடடா என்ன ஒரு அட்டகாசமான சண்டை" என்று விசிலடிச்சான் குஞ்சாக கூவுகிறது.

நேற்று ஜூனியர் என்டிஆர் நடித்த படமான தம்மு வெளியாகிறது என்று தெரிந்ததும் முதல் காட்சியே போய் விடனும் என்று முடிவு செய்து விட்டேன். இது வரை வெளியான அனைத்து வகை ஹீரோயிசத்தையும் மிஞ்சும் வகையில் என்ன தான் செய்யப்போகிறார் என்று பார்க்கவே அம்பத்தூர் முருகன் திரையரங்கத்திற்கு சென்றேன். ஏற்கனவே மனவாடுகளான ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் முக்கால்வாசி திரையரங்கை நிறைத்திருந்தார்கள்.

படத்தின் கதை தெலுங்கு படம் என்பதாலும் விமர்சனம் படிப்பவர்களில் பெரும்பாலானோர் படம் பார்க்க மாட்டார்கள் என்பதனாலும் கதையை ஓரளவுக்கு விலாவரியாக சொல்லி விடுகிறேன்.

ராயலசீமா பகுதியில் உள்ள இரு கிராமங்களின் தலைவர்களான நாசர் மற்றும் சுமன் இடையே பகை. எப்போது பார்த்தாலும் இரு கிராமங்களும் அடிக்கடி மோதி ஏகப்பட்ட உயிரிழப்பை சந்திக்கின்றன. இதற்காக மத்தியஸ்தம் செய்ய வரும் ஒருவர் வித்தியாசமாக தீர்ப்பளிக்கிறார். ஏன் தினமும் சண்டையிட்டுக் கொள்கிறீர்கள், வருடத்தில் இரண்டு நாள் மட்டும் சங்கராந்தி சமயத்தில் (நம்ம பொங்கல் தானுங்க) மோதிக்கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் யாரை வேணுமேன்றாலும் வெட்டிக் கொள்ளலாம், போலீஸ் தலையிடாது என்று. ஆஹா என்ன அருமையான தீர்ப்பு.

சுமன் குடும்பத்தில் சுமனைத்தவிர மற்ற ஆண்கள் அனைவரும் செத்து விடுகின்றனர். அப்பொழுது சுமனுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்தவுடன் செத்து விடுகிறது. சுமன் அதனை எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு சொல்லாமல் பருவம் வரும் வரை இந்தக்குழந்தை வெளியூரில் படித்து அனைத்து சண்டைகளையும் கற்று வந்து உங்களை காப்பாற்றுவான் என்று கூறி குழந்தையின் பிணத்தை கோட்டா சீனிவாசராவிடம் ஒப்படைக்கிறார்.

அடுத்த சீசனில் நடக்கும் சண்டையில் சுமனும் செத்து விடுகிறார். அந்த குழந்தை வந்து நம்மை காப்பாற்றும் என்று ஊர் மக்கள் அனைவரும் காத்திருக்கிறனர். பிற்காலத்தில் எங்கோ அனாதையாக வளரும் நம் ஹீரோ அந்த குழந்தையாக ஊருக்கு வந்து மக்களை காப்பாற்றுவார் என்பதை நான் சொல்லவும் வேணுமோ. எல்லோராலும் யூகிக்க முடிந்த அதுதாங்க கதை.

அட அட அடடா ஹீரோவின் அறிமுகமே சூப்பராக இருக்கிறது. காரை சுற்றி வில்லன்கள் நிற்க முதல் மாடியிலிருந்து கண்ணாடியை உடைத்துக் கொண்டு காரின் மீது குதித்ததும் காரின் நான்கு கதவுகள், பானட் மற்றும் டிக்கி அனைத்தும் பிய்த்துக் கொண்டு சுற்றி நிற்கும் எதிரிகள் மீது தாக்கி அனைவரும் வீழ்ந்து விடுகிறார்கள். தியேட்டரே விசில் சத்தத்தில் அலறுகிறது. இயக்குனர் எப்படியெல்லாம் யோசித்திருப்பார்.

அடுத்த காட்சி ஹீரோவுக்கு எதிரில் வில்லன் துப்பாக்கியை நீட்டுகிறார். மற்றவர்களாக இருந்தால் ஒரு ஜம்ப்படித்தோ குனிந்தோ தப்பிப்பார்கள். ஆனால் ஜூனியர் என்டிஆர் பின்பக்கம் கையை கட்டி கிட்டே வந்து தோள்பட்டையால் துப்பாக்கியை தட்டி விடுகிறார்கள் பாருங்கள். எல்லா ஹீரோவும் அவரின் பின்னால் கை கட்டி நிற்கிறார்கள்.

படத்தில் த்ரிஷா மற்றும் கார்த்திகா என இரு ஹீரோயின்கள். ஹீரோவுக்கென நேர்ந்து விடப்பட்டவர்கள் போல. இஷ்டத்திற்கு என்டிஆரின் மேல் விழுந்து கொஞ்சுகிறார்கள். இரண்டு ஹீரோயின்களுடன் சேர்ந்து தெலுங்கின் சம்பிரதாயமான குத்தாட்டமும் இருக்கிறது.

கீரவாணி தான் இசை. பாடல்கள் ஏற்கனவே ஆந்திராவில் செம ஹிட்டாம். எல்லாமே செம குத்தாக இருக்கிறது.

படத்தில் பானுப்பிரியா, பிரம்மானந்தம், ஆலி, வேணு, சம்பத் குமார், கிஷோர் மற்றும் ஏகப்பட்ட நட்சத்திரங்கள்.

படம் ஓவர் ஹீரோயிசமாக இருந்தாலும் எனக்கு பார்க்கும் போது விசிலடித்து சந்தோஷமாக பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. மூளையை செயல் இழக்க வைத்து மனதை மட்டும் குஷிப்படுத்தும் இந்த மாஸ் மசாலா ஆந்திராவில் சூப்பர் ஹிட் தான்.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, April 26, 2012

தெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு

தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலங்கள் அவைகள். இராமாயணமும், கிரிக்கெட்டும் தான் தொலைக்காட்சிகள் பெருகி, ஆடம்பர, ஆரம்ப நிலையிலிருந்த தொலைக்காட்சியை பெரும் சந்தைகளுக்கு (mass market )முன்னேற முக்கிய காரணமாய் இருந்தன, என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. மேலாண்மை தத்துவத்தின் படி, ஒரு பரப்பின் விளையாட்டு நிகழ்வோ, பெரும் கேளிக்கை நிகழ்வோ அந்தப் பரப்பின் வாங்கும் தன்மையை (buying pattern) பெருமளவு பாதிக்கிற குணத்தை உட்கொண்டிருக்கிறது.அவ்வாறான மாற்றத்தில் ங்களது நிறுவனம்அடிக்கிற காற்றில் எவ்வளவு அள்ளிக் கொள்ள முடியுமோஅவ்வளவு அள்ளிக் கொள்ளலாம். அது உங்கள் சமர்த்து.

இந்திய தொலைக்காட்சி விற்பனையில் 30%க்கு மேலே தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை குழுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, மேலே சொன்ன கருத்து இன்றைய கால கட்டத்திலும் மாறவில்லை என தெரிகிறது.

"கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவிற்கு வருதோ இல்லையோ நம்ம கல்லா பெட்டில காசு பாருப்பா", "ஏதாவது செய். எதுவேணாலும் செய்.. விற்பனை உயர்த்து மவனே" என்கிற கார்ப்பரேட் உள் அறை கூவலோடு பல நிறுவனங்கள் இதற்காகவே கடந்து இரு வருடங்களுக்கு மேலா மண்டையை பிய்த்து விற்பனை திட்டம் தீட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நிறைய கருத்துக் கணிப்பு, சந்தை ஆராய்ச்சி. பிரேசில், இத்தாலியின் புட்பால் விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சந்தை சூத்திரங்களை (market strategy) மீள் ஆய்வு செய்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் சந்தைக்காக சில உல்டா செய்து நமது சந்தைக்கேற்ப மாறுதலுக்குட்படுத்தியிருக்கிறார்கள்.

அந்த ஆராய்ச்சியில் ஓன்று - கிரிக்கெட் பார்க்கும்போது பார்வையாளரின் பழக்க வழக்கங்களை, உப செயல்களை, உற்று நோக்கல். வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது, அலுவலக்த்தில் இணைய வழி பார்ப்பது, பய நேரத்தில் ஸ்கோர் கேட்பது, அடுத்த நாள் மறுபடியும் பார்த்த மேட்சை பற்றிய பத்திகளை மறுபடி மேய்ந்து அசை போடுவது - இப்படி நிறைய விசயங்கள் விவாதிக்கப்படுகிறது.

அந்த ஆய்வு கொடுக்கிற முடிவுகளை சார்ந்து நிறைய விளம்பரங்களையும், துணை சந்தை நடவடிக்கைகளையும் ( sub market activity) மற்ற நிறுவனத்தோடு சில ஓப்பந்தங்களையும், நிறைய பரிசுப் போட்டிகளையும் அறிவித்திருக்கின்றனர் அந்த தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள்.

அப்படி செய்வதில் எல்லா துணை நடவடிக்கைகளோடும் தொலைக்காட்சி பெயரும் இணைவதில் ”பிராண்ட் ரீகால் “ அதிகமாகி, அதனால் தங்களது தொலைக்காட்சி அதிகமாக வாங்கப்படும் என்பது விற்பனை திட்டம்.

தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் வெண்ணெய், சிப்ஸ், படுக்கை நிறுவனத்திற்கும் என்ன இழவு சம்பந்தம் இருக்க முடியும். ? ஆனால் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.

எல்லா மூலை முடுக்குகளையும் அலசி ஆராய்ந்த மேலாண்மை மேதாவிகள் ஒரு சின்ன குழுவை மட்டும் மெல்லிதாய் மறந்து விட்டார்கள். அதை சொன்னவுடன் அதிசியத்தார் அந்த நிறுவனர். ஆனால் கார்ப்பரேட்கள் வாங்கும் திறன் உள்ள வாடிக்கையாளனை மட்டும்தான் மனிதர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும். மற்றவர்கள் எல்லாரும் வெறும் எண்ணிக்கை தான். அந்த குழு அவர்களின் தொலைக்காட்சி விற்பனையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் அதைப்பற்றி அவ்வளவாய் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் சமாதானம் கூறிக் கொண்டார்.

அந்த குழு - தெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு. (தெ.நி.ஓ.டீ)

இப்போதும் கிரிக்கெட் பார்வையாளனாய் எனக்கு பிடித்தது அந்த குழு தான். அதன் அங்கத்தினன் நான் என்பதில் மகிழ்ச்சி தான். சிலருக்கு - தோடி ராகம், பில்டர் காப்பி, வடா பாவு, அதரங் சாயி, பையா ஜிலேபி. அதுபோல தெருவில் நின்று டீவி பார்ப்பது.

தெருவில் நின்று ஓசியில் டீவி (தெ.நி.ஒ.டீ) பார்க்கும் குழுவில் நிறைய வர்ணம், வர்க்கம், வயது எல்லாம் கலந்திருக்கும். புதிதாய் வந்து சேர்பவர்களுக்கு ஸ்கோர் சொல்வது ஒரு கர்ம ஞானம் போல நடக்கும். சில சந்தோசங்கள், கெட்ட வார்த்தைகள், அநுமானங்கள், மெல்லியதான எதிர்ப்பார்ப்பு, கடைசியில் ஏதாவது நடந்து எல்லாம் நல்லபடியாகும் என்கிற ஆறுதல் வார்த்தைகள், அறிவுத் தெளிப்பு, நாயக ஆராதனைகள் - எல்லாம் கூட்டுக் கலவையாய் ஈஸ்ட் மென் கலரில் மானுட மனதில் குறுக்கு வெட்டு தோற்றம்.

மூன்று உலக கோப்பைகள், நிறைய டெஸ்ட் மேட்சுகள், அப்படித்தான் பார்த்தது. தெருவில், கடை வெளியில் நின்று கொண்டே பார்த்தது. வலி மறந்து பார்த்த கணங்கள்.
ஹரி சேட்டா கடையில் பைனல் மேட்சுகள் பார்க்கக் கூடாது. அது ராசியில்லை. ராவ் ஹோட்டலில் பைனல் எப்போதும் ராசி. டெஸ்ட் மேட்ச் என்றால் கண்டிப்பாய் தோற்காது. என்ன, சர்வர் குமார் எங்களை போல கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு வடை கொடுத்துவிட்டு கொஞ்சம் தொடை எடுத்துப்பான். [ ‘என்னடா தடியா ஓழிஞ்சு போறாண்டா.. கடைசி அஞ்சு ஓவர்ரா.. வெயிட் பண்றா. நீ போனா.. டீவியை ஆப் பண்ணிருவாண்டா.. இன்சமாம் வேறா.. கம்மாநாட்டி.. அவுட்டாகல..
ப்ளிஸ்ரா. “ நாங்கள்லாம் அவனிடம் கெஞ்சுவோம் ].

நாயர் ஹோட்டலில் அவனால் எந்த தொந்திரவு இல்லையென்றாலும் சாக்கடை நாத்தம் குடலை புடுங்கும். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. நல்ல ஜெயிக்க வேண்டிய மேட்சுகளெல்லாம் நாயரின் இரண்டாவது பெண்டாட்டி போல கை கழுவி போகும். இந்தியாவின் வெற்றியை முன்னிட்டு அவன் கடைப் பக்கமே போவதில்லை. பாகிஸ்தான், இங்கிலாந்து மேட்சுகளை மட்டும் அவன் கடையில் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அந்த மேட்சுகளில் பாகிஸ்தான் தோற்றுப் போவதுண்டு.

பெங்களூர் டெஸ்ட் மேட்சு. ஆடுதளம் கண்ட மேனிக்கு ஆடுகிறது. பாட்டி ஸ்பின் போட்டால் கூட விக்கெட் விழும் போல. ஐந்து நாள் மேட்சு மூணரை நாளில் முடிந்து விடும் போலயிருந்து. ஆனால் பள்ளியில் தேர்வு. இரண்டு மணிக்கு மணி அடித்து கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டன. வாங்கியபின் ஓன்னுக்கு போக அனுமதி கேட்டு சுவர் ஏறி குதித்து கேபியார் கடையில் ஸ்கோர் கேட்க போவதற்குள் அனில்கும்ப்ளே பிரமாதமாய் ஸ்பின்னில் கலக்கிக் கொண்டிருந்தார். இந்தியா ஜெயிப்பதற்கான எல்லா நட்சத்திரங்களும் மின்னிட்டன. அதற்குள் அந்தப் பக்கம் வந்த ராஜமாணிக்கம் வாத்தியார் பார்த்து,என் காதை பிடித்து திருகி பளார் என்று அறை விட்டதை அங்கு நின்ற கூட்டம் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் இந்தியா எப்படியோ தோற்றுபோனது. வலித்தது. நான் பார்த்திருந்தால் அன்று இந்தியா கண்டிப்பாய் ஜெயித்திருக்கும்.

நிறைய முக்கியமான மேட்சுகளை கால் வலிக்க தெருவில் நின்று கொண்டு ஏதாவது ஒரு ஓசி டீவியில் பார்த்தது எனது மகிழ்ச்சிகாக மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றிக்காகவும் தான். சேப்பாக்கம் ஸ்டேடியத்தை ஓவ்வொரு முறையும் பேருந்து கடக்கிற கணங்களில் எழுந்து நின்று பார்க்க தூண்டும் என் உள்ளே ஏதோ ஓன்று. இந்த ஐபிஎல்லில் சென்னை பைனல் வந்தால் என் நண்பனின் அலுவலகத்திற்கு பின்னே உள்ள ஒரு கடையை பார்த்து வைத்திருக்கிறேன். பார்க்கலாம். என்னவாகிறதென்று

ஆரூர் மூனா செந்தில்

Monday, April 23, 2012

எவெஸ்ட் சிகரத்தை அடைந்த ஹில்லரி மற்றும் டென்சிங்.

இமயமலையில் உள்ள 29,118 அடி உயர சிகரம் எவரெஸ்ட் இமய மலையை அளவிடும் பணியைச் செய்த இங்கிலாந்து `சர்வே, நிபுணர் ஜார்ஜ் எவரெஸ்ட் நினைவாக, சிகரத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது. பனியால் உறைந்த இமய மலையில் ஏறி எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி செய்தவர்கள் பலர். அவர்களில் பெரும்பாலோர் நடுவழியிலேயே திரும்பினார்கள்.

மீதி பேர், குளிர் தாங்காமல் இறந்து போனார்கள்.இச்சிகரத்தை மனிதன் வெற்றி கொண்ட நிகழ்ச்சி, 1953ம் ஆண்டு மே மாதம் 29ந்தேதி நிகழ்ந்தது. இச்சாதனையை நிகழ்த்தியவர்கள் நேபாளத்தைச் சேர்ந்த டென்சிங் (வயது 39) மற்றும் நியுசிலாந்து நாட்டைச் சேர்ந்த எட்மண்ட் ஹில்லரி (வயது 34).

டென்சிங் 1914 மே மாதம் நேபாளத்தில் பிறந்தவர். சாதாரணக் கூலி தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கியவர். எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயற்சி மேற்கொண்ட மலை ஏறும் கோஷ்டிகளுடன் மூட்டை சுமக்கும் போர்ட்டராகப் பல முறை இமயமலை மீது ஏறி அனுபவம் பெற்றவர். அவரே 6 முறை எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்று தோல்வி அடைந்தார்.

1935ல், சார்லஸ் வாரன் என்ற வெள்ளைக்காரர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோல்வி அடைந்தார். அப்போது அவருடன் டென்சிங்கும் மலை ஏறினார். அவருடைய துடிப்பும், திறமையும் சார்லசுக்குப் பிடித்திருந்தன. அவர், டென்சிங்குக்கு ஹில்லரியை அறிமுகம் செய்து வைத்தார். ஹில்லரி, நியூசிலாந்து நாட்டில் 1919 ஜுலை 20ந்தேதி பிறந்தவர்.

மலை ஏறுவதில் ஆர்வம் கொண்டவர். டென்சிங்கும், ஹில்லரியும் நெருங்கிய நண்பர்களானார்கள். எவரெஸ்ட் சிகரத்தில் ஏற, பல காலம் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய இடைவிடாத முயற்சி கடைசியில் வெற்றி பெற்றது. 1953 மே 29ந்தேதி பகல் 11.30 மணிக்கு, டென்சிங்கும், ஹில்லரியும் எவரெஸ்ட் உச்சியை அடைந்தனர்.

அங்கு பிரிட்டிஷ் கொடியையும், இந்தியக் கொடியையும், நேபாளக் கொடியையும், ஐ.நா.சபைக் கொடியையும் பறக்க விட்டனர். அவர்களுடைய சாதனையை உலகமே பாராட்டியது. "ஹில்லரி, டென்சிங் ஆகிய இருவரில் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் முதலில் காலடி வைத்தது யார்? என்று சர்ச்சை நீண்ட காலம் இருந்தது.

"இருவரும் உச்சியை நெருங்கிவிட்டோம். ஹில்லரி முதலில் காலடி வைத்தார். அடுத்து என் காலடி பதிந்தது" என்று டென்சிங் அறிவித்து சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தார். டென்சிங், 1954ல் டார்ஜிலிங்கில் உள்ள மலை ஏறுவோர் பயிற்சி நிலையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1986 மே 9ந்தேதி, தமது 72வது வயதில் மரணம் அடைந்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை அடைவதில் வெற்றி கண்ட ஹில்லரி, 1958ல் பனிப்பாறைகளால் சூழப்பட்ட தென் துருவத்தை (அன்டார்டிக்கா) அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அவரும் விவயன் பபூக்ஸ் என்பவருடன் வெவ்வேறு திசையிலிருந்து பயணம் செய்து, தென் துருவத்தில் சந்தித்து கை குலுக்கினார்.

தென் துருவம், உலகின் நிலப்பரப்பில் 10 சதவீதத்தைக் கொண்டது. உலகில் உள்ள ஐஸ் கட்டிகளில் 90 சதவீதம் அங்கு உறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனை மேல் சாதனை புரிந்த ஹில்லரிக்கு, பிரிட்டிஷ் அரசு "சர்" பட்டம் வழங்கிக் கவுரவித்தது.

டிஸ்கி : ரயில்வே தேர்வுக்காக தயாரான போது புத்தகத்தில் படித்த கட்டுரை இது. புதிய தகவல்களாக இருந்ததனால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, April 20, 2012

எந்த கடையில அரிசி வாங்குற

"எந்த கடையில அரிசி வாங்குற" இந்த வார்த்தை யாருக்கு அதிக பரிட்சயமாகியிருக்கோ தெரியாது ஆனால் எனக்கு அதிக பரிட்சயமான வார்த்தை இது தான். பிறந்ததிலிருந்தே குண்டாக இருப்பதனால் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இந்த ஒரு வாக்கியத்தில் அடைத்து விடலாம்.

மற்றவர்களை பட்டப்பெயர் வைத்தே அழைக்கும் தஞ்சை ஜில்லாவில் பிறந்த எனக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே பள்ளியில் நண்பர்களால் சூட்டப்பட்ட பட்டப்பெயர் "தடியன்". என்னை பெயர் சொல்லி அழைத்தவர்களை விட தடியன் என்று சொல்லி அழைத்தவர்கள் தான் அதிகம். ஆனால் நான் அந்த அளவுக்கு குண்டு கிடையாது என்பது அந்த காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை தற்போது பார்த்தால் தெரிகிறது.

சிறு வயதிலிருந்தே பெற்றோர்களால் அதிகம் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு சாப்பிட்டு குண்டாகி விட்டேன். மற்றக் குழந்தைகளை எல்லாம் பெற்றோர்கள் சாப்பிட வைக்க மிகுந்த பிரயத்தனப்பட்டு கொண்டிருக்கும் போது நான் மட்டும் அசைவ உணவுகளை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருப்பேனாம். அப்புறம் எப்படி உடம்பு ஏறாமல் இருக்கும்.

ஆனால் அந்தளவுக்கு சாப்பிட்டு வலுவாக இருந்ததனால் தான் என்னால் உற்சாகமாக விளையாடவும் ஸ்டாமினா குறையாமல் வேலை செய்யவும் முடிந்தது. மற்ற நண்பர்கள் திருவாரூர் கமலாலய குளத்தை இரண்டு சுற்று மட்டுமே ஒடிக் கடக்க முடிந்த போது என்னால் ஆறு சுற்றுகள் ஒடிக் கடக்க முடிந்தது.

நான் பலசாலி என்று கர்வப்பட்டுக் கொண்டிருந்த போது 16 வயது வந்து சைட் அடிக்க தொடங்கிய போது தான் என்னுடைய நிறையாக நான் நினைத்து கொண்டிருந்தது குறையாக மாறிப்போனது. ஏதாவது ஒரு பொண்ணை நான் பார்த்தால், நண்பர்களே "நீ குண்டாக இருக்கிறாய் எனவே அவள் உன்னைப் பார்க்க மாட்டாள்" என்று சொல்லி சொல்லி என் மனது எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் நான் குண்டு எனவே விலகிப் போ என்று சொல்ல ஆரம்பித்தது.

என்னை ஒரு பெண் மிகவும் விரும்பி காதலித்து இலைமறை காயாக என்னிடம் சொல்லியும் நான் மரமண்டையாக இருந்ததால் காதல் கை கழுவிப் போனது பின்னாளில் தெரிய வந்த போது வருத்தமாகத்தான் இருந்தது. அது போல் என் முறைப் பெண்ணொருத்தி என்னை விரும்பி நானாக வந்து காதலை சொல்லும் வரை காத்திருப்பேன் என்று இருந்திருக்கிறாள். அதுவும் என் தயக்கம் காரணமாக பறிபோனது.

பள்ளி முடிந்து கல்லூரிக்கு படிக்க வந்த போது எனக்கு வைக்கப்பட்ட பெயர் பெரியப்பா. எல்லாப் பெண்களும் என்னை பெரியப்பா என்று கூப்பிடும் போது எந்தப் பெண்ணை நான் காதலிக்க முடியும்.அப்படியும் ஒரு பெண்ணின் மீது எனக்கு ஈர்ப்பு வந்து சில காலம் தயக்கத்தி்ல் இருந்து பிறகு சொல்லலாம் என்று நினைக்கும் முன்பே வேறொருவன் தட்டிக் கொண்டு சென்று விட்டான்.

காதலில் நான் குண்டாக இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையால் ஏகப்பட்ட பல்புகள் வாங்கியிருந்தாலும் என்னுடைய 27 வயதில் அழகினை முன்னிலைப்படுத்தாமல் நல்ல குணம் மற்றும் ஆளுமைத்திறன் காரணமாக என்னுடன் பணிபுரிந்த பெண்ணின் மீது காதல் வந்து அவரையே திருமணம் செய்து கொண்டது அனைத்து சொதப்பல்களுக்கு விடிவுகாலமாக அமைந்து விட்டது.

குண்டாக இருந்ததனால் ஏகப்பட்ட அவமானங்களை சந்தித்திருந்தாலும் பதின் வயது சைட் அடிக்கும் சிரமங்களை மட்டும் தனிப்பதிவாக இடலாம் என்று தோன்றியதால் அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

பெற்றோர்களே இனியாவது குழந்தைகளுக்கு சாப்பாட்டை திணித்து திணித்து அவர்களுக்கு இதுதான் ஆரோக்கியம் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மையை குழந்தைகளுக்கு உண்டாக்காதீர்கள். பின்னாளில் உங்கள் குழந்தையும் ஒரு நாள் இது போல் உங்களைத் திட்டி பதிவெழுதும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்


Monday, April 16, 2012

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு


சிங்கப்பூரில் டிகிரி முடித்தவர்களுக்காக பல தரப்பட்ட வேலைகளுக்கு சென்னை அம்பத்தூரில் இன்றும் நாளையும் நேர்முகத் தேர்வு நடக்கிறது. தேர்ச்சி பெற்றால் உடனடியாக விசா பெற்றுத் தரப்படும். விருப்பமுள்ளவர்கள் உடனடியாக 8883072993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ஆரூர் மூனா செந்தில்


Friday, April 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி - சினிமா விமர்சனம்

திருவாரூரில் அதுவும் முன்னணி ஹீரோ இல்லா ஒரு படத்தில் இவ்வளவு கூட்டமா என வியந்து போனேன். ஆச்சரியம் தான். நண்பன் படத்துக்கே 35 பேர் மட்டுமே வந்த சிறுநகரம் இது. ஆனால் வந்த கூட்டம் அனைத்தும் சந்தானம் மற்றும் இயக்குனர் ராஜேஷூக்காக என்பது மட்டும் உண்மை. திமுக நகர செயலாளர் தியேட்டர் வாசலில் நின்று அனைவருக்கும் ஜாங்கரி கொடுத்துக் கொண்டிருந்தார். அடுத்த தலைவர் திமுகவில் உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கு.

படம் எப்படி இருக்கு. சிறப்பான நடிப்பு, மிகச்சிறந்த கதை, ஆக்சன், செண்டிமெண்ட் இல்லாமல் வழக்கம் போல இயக்குனர் ராஜேஷின் படம் இது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கற பாஸ்கரன் போன்ற அதே டைப் காமெடி படம் இது. ஆனால் நமக்கு அலுக்கவேயில்லை.

படத்தி்ன் கதை என்ன? நாயகன் உதயநிதி ஹன்சிகாவை ஒரு தலையாக காதலிக்கிறார். பிறகு ஹன்சிகாவும் காதலித்து எப்படி இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்பது தான் படம். இந்த மாதிரி படத்துல கதை இவ்வளவு தான் இருக்கும். ஆனால் சொன்ன விதத்தில் வழக்கம் போல அசத்துகிறார்.

உதயநிதி, ஆதவன் படத்தில் கடைசி காட்சியில் வந்து டயலாக் பேசும் போது எனக்கு பயமாயிருந்தது. இவர் படத்தில் ஹீரோவாக நடித்தால் பார்க்க சகிக்காது என்றே நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் சற்று முன்னேறியிருக்கிறார். டயலாக் பேசினால் உதடு அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால் நடிப்பு, போக வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. இந்தப்படம் ஜாலியானபடம் என்பதால் நடிக்க சிரமப்படாமல் உணர்ச்சிகளை காட்டாமல் நகைச்சுவையிலேயே அசத்தி விடுகிறார். ஒரு சில இடங்களில் மட்டும் நடிக்க இன்னும் பயிற்சி வேண்டும் என்பது தெரிகிறார்.

ஹன்சிகா பொம்மை போல் இருக்கிறார். ப்ராம்ட்டில் வசனம் பேசுகிறார். படத்திலேயே சொல்லி விடுகிறார்கள். பார்ப்பதற்கு குஷ்பு போல இருக்கிறார் என்று, நான் என்ன சொல்ல. மற்ற படங்கள் போல சில காட்சிகளில் தலை காட்டுவது இல்லாமல் நிறைய காட்சிகளில் வருகிறார்.

சந்தானம் படத்தின் நிஜ ஹீரோ. ராஜேஷின் முதல் இரு படங்கள் போல இதிலும் படம் முழுக்க வருகிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. இதில் அய்யர் பையனாக வந்து சில இடங்களில் கோவத்தை கட்டுப்படுத்த காயத்ரி மந்திரம் சொல்லும் போது தியேட்டரில் பயங்கர கிளாப்ஸ். தனியாளாக படத்தினை தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆர்யா சிறப்புத் தோற்றத்தில் வந்து போகிறார். சினேகாவும் ஆண்ட்ரியாவும் அவ்வாறே வந்து செல்கின்றனர். சினேகா ஆண்ட்டியாகி விட்டார் என்பது தெரிகிறது.

பாடல்கள் ஏற்கனவே சின்னத்திரை விளம்பரத்தில் வந்து ஹிட்டாகி விட்டதால் சொல்வதற்கு ஒன்னுமில்லை. ஆனால் வேணாம் மச்சான் வேணா என் பாடல் வந்தவுடன் மொத்த தியேட்டரும் எழுந்து ஆடுகிறது. அதுவும் "கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதும்டா" என்ற வரிக்கு கூடுதல் அப்ளாஸ்.

சரண்யா வழக்கம் போல இன்னோசன்ட் அம்மாவாக வருகிறார். உதயநிதி மற்றும் சந்தானத்துடன் சேர்ந்து காமெடியிலும் அசத்துகிறார். அழகம் பெருமாளுடன் சிறு செண்ட்டிமெண்ட்டிலும் சூப்பர்.

படம் எப்படி என்று சொல்ல வேண்டியதெல்லாம் இல்லை. ஏன், எதற்கு என்று யோசிக்காமல் நான் சிறந்த விமர்சகன் என்று நோண்டாமல் சென்றால் பார்த்து சிரித்து குடும்பத்துடன் மகிழ அருமையான படம். பார்த்து சிரித்து ரசியுங்கள்.

இன்னும் நிறைய சொல்லலாம், ஆனால் நீங்கள் கண்டிப்பாக இந்தப்படத்தை தியேட்டரில் சென்று தான் ரசிக்க வேண்டும், இந்த ஆண்டின் மிகச்சிறந்த பொழுது போக்கு படம்.

நான் கண்டிப்பாக இன்னும் சில முறை தியேட்டரிலேயே பார்ப்பேன்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : நான் கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் பின்னூட்டத்திற்கு பதில் நாளை தருகிறேன். நன்றி.


Monday, April 9, 2012

அப்பா....

எனக்கு தெரிந்து சிறு வயதிலிருந்தே என் அப்பாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே இருந்தது. எந்த குளிருக்கும் ஸவெட்டர் போட்டுக் கொள்ள மாட்டார். சிறு காய்ச்சலோ, ஜலதோஷமோ வராது. எனக்கு சிறு வயதில் இருந்தே என் அப்பாவைப் போல் எந்த உடல் நலக்குறைவையும் தைரியமாக எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டுமென்று முயற்சி கொண்டிருந்தேன். ஆனால் என்னால் முடியவில்லை என்பது வேறு விஷயம்.

அப்படிப்பட்ட அன்றைய என் அப்பா,

சிறுவயதில் நான்காம் வகுப்பு படிக்கும் போது என்னை ஆசிரியர் அடித்ததால் தழும்பாகி விட்டது. என்னைக் குளிப்பாட்டும் போது அதனை பார்த்து விட்டு உடனடியாக வந்து ஆசிரியரை மிரட்டிய என் அப்பா,

நான் பதின்வயதில் ஒரு சினிமாவுக்கு பொய் சொல்லி விட்டு சென்று விட்டேன். ஆனால் நேரமாகி வீட்டுக்கு வராததால் நேராக பள்ளிக்கு சென்று என் வகுப்பு ஆசிரியரை "நீ தான் என் பையனை எங்கோ உன் வீட்டு வேலைக்கு அனுப்பியுள்ளாய், இன்னொரு முறை அனுப்பினால் உன்னை தொலைத்து விடுவேன்" என்று மிரட்டிய என் அப்பா,

பட்டயப்படிப்பு முடித்து விட்டு வேலையில்லாமல் நான் சுற்றிக் கொண்டிருந்த போது என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடிவந்த ரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் திட்ட மேலாளரை அணுகி எனக்கு வேலை வாங்கிக் கொடுத்து என் எதிர்காலத்தையே மாற்றிய என் அப்பா,

நான் ஒரு பெண்ணை காதலிப்பதை தெரிந்து கொண்டதும் என் தம்பியிடம் "அவன் வாழ்க்கையில் சம்பாதித்து விட்டு பொறுப்பானவனாக மாறிய பிறகு தான் காதலித்துள்ளான், அந்த பெண்ணையே திருமணம் செய்து கொள்ளட்டும்" என்று பொண்ணை பார்க்காமலே என் திருமணத்திற்கு சம்மதித்த என் அப்பா,

நான் வேலையை விட்டு விட்டு சொந்த நிறுவனம் தொடங்கி மிகப்பெரிய அளவுக்கு சரிவு ஏற்பட்டு சென்னையில் இருக்க முடியாத அளவுக்கு மனமொடிந்த நிலையில் இருக்கும் போது என்னை திருவாரூருக்கு அழைத்து சென்று மீட்டெடுத்த என் அப்பா,

இன்று என் அப்பா,

என் தம்பியின் திருமணத்திற்காக அலைந்து திரிந்து கொண்டிருந்த என் அப்பாவுக்கு மலத்தில் ரத்தம் கலந்து போக ஆரம்பித்தது. உடல்சூடு அதிகமாகி இருக்கும் என்று உணவில் கட்டுப்பாட்டை கொண்டு வந்தார். ஆனாலும் ரத்தம் வருவது நிற்கவேயில்லை. பிறகு திருவாரூரில் உள் ஒரு மருத்துவரிடம் காட்டிய போது அவர் மருந்துகள் எழுதிக் கொடுத்தார். அவற்றை சாப்பிட்ட பிறகு ரத்தம் வருவது நின்று போனது, ஆனால் வயிறு உப்ப ஆரம்பித்தது.

உடனடியாக திருவாரூரில் ஸ்கேன் செய்து பார்த்த போது மலக்குடலில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக தஞ்சாவூரில் உள்ள ரோகிணி மருத்துவமனையில் பயாப்ஸி டெஸ்ட் எடுத்தோம். ரிசல்ட் வர ஒரு வார தாமதமாகும் என்றும் தஞ்சையில் உள்ள சுடர் மருத்துவமனையில் மருத்துவரை அணுகினால் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அகற்றி விடலாம் என மருத்துவமனையில் தெரிவித்ததால் உடனடியாக அங்கு அட்மிட் செய்து ஆபரேசன் மூலம் கட்டியை தொடாமல் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மலக்குடலை வெட்டி எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று தெரிவித்ததால் ஆபரேசனுக்கு நாள் குறிக்கப்பட்டது.

அது போல் அவர்கள் குறிப்பிட்ட தினத்தில் ஆபரேசன் துவங்கியது. என் அப்பாவுக்கு உடன்பிறந்தவர்கள் ஏழு சகோதரிகள், இரண்டு சகோதரர்கள் அது போக ஏகப்பட்ட ஒன்று விட்ட சகோதரிகள், சகோதரர்கள் என மருத்துவமனையில் ஆபரேசன் தியேட்டருக்கு எதிராக கூட்டம் கூடியது. ஆனால் நாங்கள் சாதாரண ஆபரேசன் என்று நினைத்து சிரித்து பேசிக் கொண்டிருந்தோம். மூன்று மணிநேரம் கழித்து சர்ஜன் எங்களை உள்ளே அழைத்தார். வெட்டி எடுக்கப்பட்ட குடல்பகுதியை காண்பித்து அதில் உள்ளது கேன்சர் கட்டி என்றார். அவ்வளவு தான். அந்த இடமே வேறு மாதிரியாக மாறி விட்டது. குடும்பத்தினர் அழ ஆரம்பித்தனர். அப்பா ஐசியுவில் நினைவில்லாமல் ஒரு நாள் முழுக்க இருந்தார்.

என்ன தான் பகுத்தறிவுவாதி என்றாலும், எவ்வளவோ ஆத்திகர்களுக்கு எதிராக சொற்போர் நடத்தியிருந்தாலும், கடவுள் ஒன்று இருந்தால் என் அப்பாவை காப்பாற்றட்டும் என்று வேண்டும் அளவுக்கு என் மனநிலை மாறியது. நானும் குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தேன். அது வரை என் தம்பியிடம் பல மனஸ்தாபங்களால் பேசாமல் இருந்த நான் என் அப்பா தான் முக்கியம் என்று அவனிடமும் பேச ஆரம்பித்தேன்.

நேற்று முன்தினம் பயாப்ஸி ரிப்போர்ட் வந்தது. அதில் அவர் சொல்லியிருந்தது போல் தான் இருந்தது. டாக்டர் ரிப்போர்ட்டை பார்த்து விட்டு என் அப்பாவுக்கு கேன்சர் கட்டியை முற்றிலுமாக நீக்கியாகி விட்டது. வேண்டுமென்றால் கீமோதெரபி எடுத்துக் கொள்ளலாம் என்றார். இன்னும் குறைந்தது 10 நாட்களாவது அவர் மருத்துவமனையில் தான் இருக்க வேண்டும் என்றார்.

ஐந்து நாட்கள் ஐசியு வில் வைத்திருந்து நேற்று தான் தனி ரூமுக்கு என் அப்பாவை மாற்றினர். நான் வெளியில் சென்றிருந்ததால் அவர் கூப்பிடும் போது நான் இல்லை என்பதால் வந்ததும் திட்ட ஆரம்பித்தார். என் மனம் மகிழ ஆரம்பித்தது. பழைய கோவம் இன்னும் கொஞ்சமும் குறையவில்லை. இன்னும் பலமாக திட்டவும் முடிந்தால் என்னை அடிக்கவுமாவது என் அப்பா உடல்நலம் தேறி வரவேண்டும். அவர் கையால் எத்தனை அடி வேண்டுமானாலும் வாங்க கண்ணீருடன் காத்திருக்கும்,

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, April 3, 2012

பஞ்சேந்திரியா 03/04/2012

பெட்ரோல் விலை உயர்த்தப்படுமா?

பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அடம் பிடிக்கின்றன. மத்திய அரசு விலையை ஏற்ற விடாமல் செய்கிறது. இன்றைய நிலையில் டீசலினால் ஒரு லிட்டருக்கு ரூ.16.16 ம், சமையல் எரிவாயுவினால் ரூ.570.50 ம் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக தெரிகிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெட்ரோலை ஒரு லிட்டருக்கு ரூ.7/- ஏற்றினால் தான் நஷ்டம் சரியாகும் என்று தெரிகிறது. ஆக இந்த முறை கடுமையான விலை உயர்வினால் நடுத்தர வர்க்கம் மிகக்கடுமையாக பாதிக்கப்படும் என்பது மற்றும் உறுதி. மத்திய அரசு கலால் வரியாக மட்டும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ. 14.78/- ஐ பெறுகிறது. இவனுங்க இது போன்ற சூழ்நிலையில் கலால் வரியை சற்று குறைப்பதன் மூலம் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும், செய்வானுங்களா.

----------------------------------------------

சென்னையில் குளிப்பவர்கள்

தற்போது எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின் மூலம் சென்னையின் சில சுவையான விவரங்கள் தெரிய வருகின்றன. சென்னை நகரில் உள்ள 95.6 சதவீத வீடுகளில் முழுமையான குளியலறை உள்ளது. மேல்கூரையில்லாத குளியலறைகள் 1.4 சதவீதம் வீடுகளில் உள்ளன. குளியலறையே இல்லாத வீடுகள் 3 சதவீதம் மட்டுமே. மற்ற ஊர்களை விட சென்னையில் தான் தினமும் குளி்ப்பவர்கள் அதிகமுள்ளனர் என தெரிய வருகிறது. அதுபோல் சென்னை நகரில் உள்ள 94.3 சதவீத வீடுகளில் சமையலறை உள்ளது. சமையலறை இன்றி சமைப்பவர்கள் 4.8 சதவீதம் பேர். வீட்டிலேயே சமைக்காதவர்கள் 0.4 சதவீதம் பேர் மட்டுமே. இந்தியாவிலேயே குளிப்பதிலும் சமைப்பதிலும் சென்னைவாசிகள் தான் முன்னணியில் உள்ளனர். அருமையான கணக்கெடுப்பு, வெளங்கிடும்.

------------------------------------------------

எங்கள் ஊரின் பெருமை



------------------------------------------------

மீண்டும் தமிழ்நாட்டில் பரவும் பன்றிக் காய்ச்சல்

மீண்டும் தமிழ்நாட்டில் AH1N1 என்னும் வைரஸ் மூலம் உருவாகும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் சாதாரணமாகவும், சில வேளைகளில் தீவிரமாகவும் பாதிக்கும். முக்கியமாக வயதானவர்கள், சிறுகுழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், நீரிழிவு நோய், ரத்தக் கொதிப்பு மற்றும் கல்லீரல் நோய் இருப்பவர்களுக்கு தீவிரமாக உடல் நிலையை பாதிக்கக்கூடும். காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி காணப்படும் நபர்கள் காய்ச்சல் குணமாகும் வரை வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். அருகில் உள்ள மருத்துவமனையை அணுகி சரியான சிகிச்சையை பெற வேண்டும். தும்மல் மற்றும் இருமலின் போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும். தினமும் நான்கு அல்லது ஐந்து முறை கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும்.

------------------------------------------------

இந்த வார புகைப்படம்


------------------------------------------------

சச்சின் விலகல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து சச்சின் விலகியுள்ளார். ஹர்பஜன் சிங் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான்கு முறை கேப்டனாக இருந்தும் ஒரு முறை கூட சச்சினால் கோப்பையை பெற்றுத்தர முடியவில்லை. ஆனால் கடந்த முறை சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ஹர்பஜன் கேப்டனாக இருந்து கோப்பையை பெற்றுத் தந்தார். எனவே தான் சச்சினை தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறு கட்டாயப்படுத்தியாக தெரிய வருகிறது. அடப்பாவிகளா, எப்படியெல்லாம் செண்ட்டிமென்ட் பாக்குறானுங்கப்பா.

--------------------------------------------------

தந்தையின் உடல்நலம்

என் தந்தைக்கு நீண்ட நாட்களாக மலக்குடலில் பிரச்சனை இருந்து வந்தது. அவர் மூலம் (Piles) என்று சொல்லி அதற்காக மட்டும் மருந்து எடுத்து வந்தார். பிரச்சனை தொடரவே மீண்டும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று சொல்லி தஞ்சாவூரில் உள்ள ரோகிணி மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் மற்றும் ஸ்கோப்பி எடுத்துப் பார்த்ததில் கட்டி இருப்பது தெரிய வந்தது. எனவே அவருக்கு நாளை மறுநாள் தஞ்சையில் ஆபரேசன். இன்றிரவு சென்னையிலிருந்து புறப்படுகிறேன். மீண்டும் சென்னை வர 15 நாட்களாகும். இடையில் நான் பார்த்தாக வேண்டும் என்று எதிர்ப்பார்க்கும் சகுனி மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் வந்தால் மட்டும் விமர்சனம் எழுதுவேன். உணவு உலகம் சங்கரலிங்கம் அய்யா வீட்டு திருமணத்திற்கு சென்று அதன் பிறகு சென்னை திரும்ப உத்தேசம். அதுவும் சிதம்பரத்திலிருந்து நாய்-நக்ஸ் நக்கீரனுடன் இணைந்து திருநெல்வேலி பயணம், திருமணம் முடிந்து திரும்பி வரும் வரை அவருடன் தான். அதை நினைத்தால் தான் வயித்தை கலக்குகிறது. எனக்கு மட்டும் தான் சோதனையா, அட ஆண்டவா.

--------------------------------------------------

இந்த வார பலசாலி



------------------------------------------------

இந்த வார மொக்க கவிதை

காதல் ! காதல் !
காதல்
ஒரு கழட்டிப் போட்ட செருப்பு !
சைஸ் சரியா இருந்தா
யார் வேணும்னாலும்
எடுத்து மாட்டிக்கலாம் !


ஆரூர் மூனா செந்தில்


Monday, April 2, 2012

மக்கள் இயக்குனர் சேரன் இறுதிப் பகுதி



சேரனின் அடுத்தப்படமாக பாண்டவர் பூமி வந்தது. மிக அருமையான படம். ஆனால் தோல்விப்படம். படத்தின் மையக்கருத்து இன்றைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு மிகவும் தேவை. அதாவது ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கு வேலை தேடி வருபவர்கள் அவர்களது உழைக்கும் காலம் முடிந்ததும் மீண்டும் சொந்த ஊரில் குடியேற வேண்டும். நகரம் அடுத்த தலைமுறைக்கு வேலை தர தயாராக வேண்டும். வேலை பார்த்த காலங்களில் சம்பாதித்த பணத்தை வைத்து கடைசி காலங்களில் விவசாயத்தை மீண்டும் தொடர வேண்டும். என்ன காரணமோ தெரியவில்லை, படம் ஓடவில்லை.

நான் இந்த படம் வந்த போதே முடிவு செய்து விட்டேன். என்னுடைய கடைசி காலம என்பது திருவாரூர் சுற்றியுள்ள ஏதோ ஒரு கிராமத்தில் விவசாயம் பார்த்து தான் கழியும் என்பதை. என்றைக்கு சென்னை போன்ற பெருநகரங்கள் இது போன்ற மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்படுகிறதோ அப்பொழுது தான் கிராமங்களில் இருந்து புதிதாக பிழைப்புக்கு வருபவர்கள் சென்னையில் அவர்களது பணிக்காலம் வரை சென்னையில் கழிக்க முடியும். இல்லையென்றால் கூடிய விரைவில் சென்னையின் பரப்பளவு விரிந்து தெற்கே திண்டிவனம் வரையும் வடக்கே ஆந்திராவுக்குள்ளும் செல்லும் என்பது கண்கூடாக தெரிகிறது.

அடுத்தது தேசிய விருது பெற்ற படங்களான ஆட்டோகிராப் மற்றும் தவமாய் தவமிருந்து. இவை பெரிய வெற்றி பெற்று அனைவராலும் அதிகளவில் விமர்சிக்கப்பட்டு விட்டதால் நாம் இதனை தவிர்த்து அடுத்த படமான மாயக்கண்ணாடிக்கு வருவோம். 2007ல் வெளி வந்தது. படத்தின் கருத்து சினிமாவுக்கோ, மற்ற தொழில்களுக்கோ முயற்சிக்கும் போது கையில் இருக்கும் வேலையை விடக்கூடாது என்பதும் எதைப் பற்றிய முழு அறிவு இல்லாமல் இறங்குவது ஆபத்து என்பதும் தான். ஆனால் அந்தப்படம் இப்பொழுது வெளிவந்த 3 ஐப் போல் எதிர் விளைவாகி படுதோல்வி அடைந்தது.

கடைசியாக இயக்கிய படமான பொக்கிஷம். 1970களில் நடந்த ஒரு காதல், அது சந்திக்கும் பிரச்சனைகள், அந்த காதலின் தோல்வி, கடைசி வரை காதலுக்காக திருமணமே செய்து கொள்ளாமல் வாழும் கதாநாயகி, கண்முன்னே கொண்டு வந்த 1970 காலக்கட்டம் என எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் குறை என்னவென்றால் அது சேரனின் முற்றிய முகம் தான். வேறு நடிகர்கள் நடித்திருந்தால் படம் நன்றாக ஒடியிருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் சிக்கலான விஷயம் இந்து முஸ்லீம் காதல், அதுவும் 1970களில் நாகூர் போன்ற சிற்றூரில் எப்படியிருக்கும் என்பதை தெள்ளத்தெளிவாக காட்டிய படம் இது. ஆனால் அதுவும் நன்றாக போகவில்லை.

எது எப்படியிருந்தாலும் கமர்சியல் என்ற பெயரில் மற்ற பெரிய இயக்குனர்களைப் போல் கவர்ச்சியை வலிந்து திணிக்காமல், 100 பேரை ஒரே அடியில் பறக்க வைக்கும் ஹீரோயிசத்தை வளர்க்காமல், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனங்கள் வைக்காமல் ஒவ்வொரு படத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் வைத்து தான் படமெடுக்கும் சேரனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...