சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, November 30, 2011

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - கடைசி நாட்கள்.../பகுதி 2

ஆகஸ்ட் 18 காலை 10 மணி: விமானம் சைகோன் விமான தளத்தில் இறங்கியது. அங்கு ஜப்பானிய போர் விமானம் ஒன்று புறப்படத்தயாராக இருந்தது. அதில் ஒருவருக்கு மட்டும் இடம் இருக்கிறது என்றும், நேதாஜி மட்டும் வரலாம் என்றும், விமானத்தில் இருந்த ஜப்பானி அதிகாரிகள் கூறினார்கள். விமானத்தில் போவதா, வேண்டாமா என்று ஒரு கணம் நேதாஜி யோசித்தார்.

சைகோன் நகரை எந்த நிமிடமும் பிரிட்டிஷ், அமெரிக்கப்படைகள் கைப்பற்றலாம் என்ற நிலை இருந்தது. அந்தப் படைகளிடம் சிக்கினால் தன்னைக் கைது செய்வது நிச்சயம். போர்க் கைதியாகப் பிடிபடுவதை நேதாஜி விரும்பவில்லை. எனவே, விமானத்தில் போவதே மேல் என்று முடிவு செய்தார். விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

கடைசி நேரத்தில், "இன்னொருவர் வரலாம்" என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறினார்கள். எனவே ஹபிப்_வுர்_ ரகிமான், நேதாஜி அருகில் போய் அமர்ந்தார். விமான நிலையத்தில் கூடியிருந்தவர்களைப் பார்த்து நேதாஜி "ஜெய் ஹிந்த்" என்று கூறினார். விமானம் புறப்பட்டது. அது எந்த இடத்துக்குப் போகிறது என்று அறிவிக்கப்படவில்லை.

நேதாஜியின் கடைசி விமானப் பயணம் அதுவாக இருக்கும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆகஸ்ட் 19ந்தேதி, ஜப்பான் ரேடியோ "நேதாஜி இறந்துவிட்டார்" என்ற திடுக்கிடும் செய்தியைறிவித்தது. ஜப்பானிய ரேடியோ கூறியதாவது: "சுதந்திர இந்திய தற்காலிக அரசாங்கத்தின் தலைவரான நேதாஜி, 1945 ஆகஸ்ட் 16ந்தேதி ஜப்பானிய அரசுடன் பேச்சு நடத்த விமானத்தில் புறப்பட்டார்.

18_ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு, பார்மோசா தீவில் உள்ள தைஹோக்கு விமான நிலையத்தில் அவர் விமானம் விபத்துக்குள்ளாகியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார். ஜப்பானில் ஒரு மருத்துவமனையில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அன்று நள்ளிரவில் அவர் மரணம் அடைந்தார். அவருடன் விமானத்தில் பயணம் செய்த ஜெனரல் சுனாமாசா என்ற ஜப்பானிய அதிகாரி விபத்து ஏற்பட்டவுடனேயே மரணம் அடைந்தார்.

நேதாஜியின் உதவித் தளபதி கர்னல் ஹபிப் வுர் ரகிமானும், மற்றும் 4 ஜப்பானிய அதிகாரிகளும் பலத்த காயம் அடைந்தனர்" இவ்வாறு ஜப்பானிய ரேடியோ அறிவித்தது. இந்தச்செய்தி, இந்திய மக்களை நிலைகுலையச் செய்தது. நேதாஜி இறந்துவிட்டார் என்பதை பலர் நம்பவில்லை. "நேதாஜி இறந்து விட்டார் என்றால், அவர் உடலை ஏன் இந்திய மக்களிடம் ஒப்படைக்கவில்லை?" என்று கேட்டனர்.

ஆயினும் நேதாஜியுடன் பயணம் செய்து, படுகாயத்துடன் தப்பிய ஹபிப்_வுர்_ ரகிமான், "நேதாஜியின் உடல் தகனம் செய்யப்பட்டதை என் கண்ணால் பார்த்தேன்" என்று கூறினார். ஆயினும், முத்துராமலிங்க தேவர் உள்பட பல தலைவர்கள், "நேதாஜி உயிருடன் இருக்கிறார்" என்றே கூறி வந்தனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1956_ல் நேதாஜி பற்றிய உண்மைகளைக் கண்டறிய மூவர் கொண்ட ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி டோக்கியோ, சைகோன், பாங்காக் உள்பட பல இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தியது. இறுதியில், கமிட்டியின் மூன்று உறுப்பினர்களில் இரண்டு பேர், விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை.

டோக்கியோவில் உள்ள புத்தர் கோவிலில் இருப்பது அவருடைய அஸ்திதான்" என்று அறிக்கை கொடுத்தனர். மூன்றாவது உறுப்பினர் சுரேஷ் சந்திரபோஸ் (நேதாஜியின் அண்ணன்) இதை ஏற்க மறுத்து தனி அறிக்கை கொடுத்தார். 1967ல், 350 "எம்.பி."க்கள் கையெழுத்திட்டு, நேதாஜி பற்றி மீண்டும் விசாரணை நடத்தும்படி, ஜனாதிபதியிடம் மனு கொடுத்தனர்.

அதன்படி ஓய்வு பெற்ற பஞ்சாப் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஜி.டி.கோசலாவைக் கொண்ட "ஒரு நபர் விசாரணை கமிஷன்" அமைக்கப்பட்டது. அவர் ஜப்பான், தைவான் உள்பட பல நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி, "விமான விபத்தில் நேதாஜி இறந்தது உண்மை" என்று உறுதி செய்து அறிக்கை கொடுத்தார்.

ஆரூர் முனா செந்திலு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - கடைசி நாட்கள்.../பகுதி 1


Tuesday, November 29, 2011

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - கடைசி நாட்கள்.../பகுதி 1

இரண்டாம் உலகப்போரில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக அமெரிக்கா குதித்ததும், போரின் போக்கே தலைகீழாக மாறியது. வெற்றி மேல் வெற்றி பெற்று வந்த ஜப்பானுக்கும், ஜெர்மனிக்கும் தோல்வி மேல் தோல்வி ஏற்பட்டது. பர்மாவில் இருந்த ஜப்பான் படைகள் அங்கிருந்து பின்வாங்கின. அமெரிக்க தளபதி மக்ஆர்தர், பெரும் படையுடன் ஜப்பானை நெருங்கிக் கொண்டிருந்தார்.

1945 ஏப்ரல் 30_ந்தேதி ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரை ரஷியப்படைகள் முற்றுகையிட்டன. இனி தப்ப வழி இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹிட்லர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து, ஜெர்மனி சரண் அடைந்தது. ஜெர்மனி சரண் அடைந்த பிறகும் ஜப்பான் போரை நிறுத்தவில்லை.

எனவே, 1945 ஆகஸ்ட் 6_ந்தேதி ஜப்பான் நகரமான ஹிரோஷிமா மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. அப்படியும் ஜப்பான் சரண் அடையாததால், இரண்டாவது அணுகுண்டை ஜப்பானின் மற்றொரு நகரா நாகசாகி மீது வீசியது. இதைத்தொடர்ந்து 1945 ஆகஸ்ட் 12_ந்தேதி, ஜப்பான், தோல்வியை ஒப்புக்கொண்டு சரண் அடையத் தீர்மானித்தது.

அப்போது நேதாஜி மலேயாவில் இருந்தார். அவர் உடனே கார் மூலம் சிங்கப்பூர் திரும்பினார். சுதந்திர அரசாங்கத்தின் இதர தலைவர்களுடனும், தளபதிகளுடனும் ஆலோசனை நடத்தினார். 1945 ஆகஸ்ட் 15_ந்தேதி ஜப்பான் மன்னர் ரேடியோவில் பேசும்போது, ஜப்பானின் சரணாகதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அன்றிரவு நேதாஜி தூங்கவில்லை. விடிய விடிய நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று, ராணுவத் தளபதிகளுக்கு கட்டளைகள் பிறப்பித்தார். முக்கியமாக, "ஜான்சி ராணிப்படை"யில் உள்ள பெண்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வற்புறுத்தினார்.

இதற்கிடையே, ஜப்பான் அரசிடமிருந்து, நேதாஜிக்கு ஒரு செய்தி வந்தது. "ரஷியா வசம் இருக்கும் மஞ்சூரியா பகுதிக்கு உங்களை பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்த்துவிடுகிறோம். அதன் பிறகு என்ன செய்வது என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்" என்பதுதான் அந்தச் செய்தி. அதன்படி அடுத்த நாள் காலை பாங்காக் (தாய்லாந்து) செல்வதென்றும், அங்கிருந்து மஞ்சூரியாவுக்குப் புறப்படுவது என்றும் நேதாஜி முடிவு செய்தார்.

1945 ஆகஸ்ட் 16_ந்தேதி சிங்கப்பூரில் இருந்து புறப்படுவதற்கு முன், இரண்டு செய்திகளை வெளியிட்டார். முதலாவது செய்தி, இந்திய தேசிய ராணுவத்தினருக்கு. "ஜப்பான் சரண் அடைந்துவிட்டாலும், டெல்லியை அடையப் பல வழிகள் இருக்கின்றன. இந்தியாவை மீட்பதுதான் நமது லட்சியம்" என்பதே அந்தச் செய்தி.

அடுத்த செய்தி, கிழக்கு ஆசியாவில் வாழும் மக்களுக்கு. "நமது வரலாற்றில் இதற்கு முன் கண்டிராத நெருக்கடியான நேரம் இது. நமது தற்காலிக தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். இந்தியாவின் விடுதலையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. வெகு விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும். ஜெய்ஹிந்த்.

இந்தச் செய்தியை வெளியிட்டு விட்டு, காலை 10 மணி அளவில் பாங்காக் நகருக்கு விமானத்தில் புறப்பட்டார். பிற்பகலில் பாங்காக் போய்ச்சேர்ந்தார். ஆகஸ்ட் 17 அதிகாலை பாங்காக் நகரிலிருந்து, சைகோன் (தென் வியட்நாம்) நகருக்கு விமானத்தில் புறப்பட்டார்.

துணைத்தளபதி கர்னல் ஹபிப் வுர் ரகிமான், கர்னல் குல்ஜாராசிங், கர்னல் பிரிதம்சிங், மேஜர் அபித் ஹசன் (நேதாஜி நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்தபோது உடன் இருந்தவர்) ஆலோசகர் தேவநாத் தாஸ், நேதாஜியின் சுதந்திர அரசாங்கத்தில் பிரசார இலாகா மந்திரியாக பதவி வகித்த எஸ்.ஏ.அய்யர் (தமிழர்) ஆகியோர் உடன் சென்றனர்.


(தொடரும்...)

ஆரூர் முனா செந்திலு

டிஸ்கி 1: ஒரு பகுதியிலேயே முடிக்கலாம்னு நினைச்சேன் ஆனால் முடித்த பிறகு பார்த்தால் மிகவும் அதிகமாக இருந்தது. எனவே 2 பகுதிகளாக பிரித்து வெளியிடுகிறேன். இரண்டாம் பகுதி நாளை மறுநாள்.

டிஸ்கி 2 : நேற்று போதையில் பதிவில் செய்த அலப்பறைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாம ஒழுங்கா இருக்கனும்னு நினைச்சாலும் சேர்க்கை நம்மள அப்படி இருக்க விடமாட்டேங்குது.


Monday, November 28, 2011

காலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 4

1999-ன் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியான "சேது' திரைப்படத்தினால் மக்கள் மாறினார்கள். ஆனால், கோடம்பாக்கம் மாறவில்லை. அதன் பிறகும் வில்லன்கள் வந்தனர். ஆனந்தராஜ், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் அதீத பணக்கார பின்புலத்துடன் வில்லனாக வலம் வந்தனர். "சேது'வுக்கு பிறகு, தொடர்ந்து பல திரைப்படங்கள் தோல்வியுற்றபோதும் மக்களின் ரசனை மாற்றத்தை கோடம்பாக்கம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

தயாரிப்பாளர்கள் மீண்டும் க்ளைமாக்ஸ் கருத்து சொல்லும் படங்களையும், பணக்கார வில்லன்களையும் எதிர்பார்த்தனர். இக்கால கட்டத்தில்தான் பல இந்திக்கார வில்லன்கள் கஷ்டப்பட்டு தமிழ் பேசி விஜயகாந்த், அர்ஜுன் மற்றும் விஜய், அஜித், சூர்யா, விக்ரமோடு சண்டை போட்டனர். பிரகாஷ்ராஜ் அவர்களை தன் அனாயசமான வசன உச்சரிப்பால் ஓரம் கட்டி ஆதிக்கம் செலுத்தினார். இக்காலத்தில் தங்கர்பச்சான் "அழகி' எனும் மாறுபட்ட ஒரு திரைப்படத்தை மக்கள் முன் வைத்தார். பச்சையான மரம் செடிகொடிகளைபோல தங்கர்பச்சானின் செம்பட்டை முடி மனிதர்களும் பச்சையான வாசத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார்கள். இவர் படத்தில் வில்லன் வாழ்க்கையின் விதியும், காலமுமாக இருந்தது.

"சேது'வில் மன நலம் குன்றியவர்களை காண்பிக்கும் காட்சியும், "அழகி'யில் சிறுவயது பருவ காட்சிகளிலும் இயக்குநர்கள் தங்களது தனித்தன்மையை நிரூபித்திருந்தனர்.

இக்காலத்தில் தமிழில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடும் அதன் காரணமாக இயக்குநர்களின் கதை சொல்லல் போக்கும் நிறையவே மாறத் துவங்கியிருந்தது. கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் போன்ற தொழில்நுட்ப தேர்ச்சி கொண்ட, அதே சமயம் புதிய தலைமுறைக்கான ரசனைகளை அறிந்த இயக்குனர்கள் இளைஞர்களை கவர்ந்தனர். செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை' இக்கால இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் உளவியலை அப்பட்டமாக சித்தரித்திருந்தது. அதன் பிறகு, வெளியான இவரது படங்களில் செக்ஸூம், வன்முறையும் இடம் பிடித்ததே தவிர, அந்த யதார்த்தம் காணாமல் போனது ஒரு இழப்பு.

இவர்களின் வரவுக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த மாறுதல் 2004-ல் தான். இதற்கு முன் பாலா, தங்கர்பச்சான் ஆகியோரது பாதையில் சேரன் மற்றும் பாலாஜி சக்திவேல் பயணத்தை துவங்கினார்கள். "ஆட்டோகிராஃப்', "காதல்' இந்த இரண்டு படங்கள்தான் முதன் முதலாக திரைக்கதை வசனத்தை சினிமாவாக பிரதி எடுக்கும் வழமையான போக்கை மாற்றின. அதுவரை காட்சி ரீதியாக கதை நகர்த்தும் தன்மை விலகி ஷாட் பை ஷாட்டாக கதை நகர்த்தும் உலக சினிமாவின் அடிப்படை தகுதியை தமிழ் சினிமா இப்படங்களின் மூலமாகத்தான் எட்டத் துவங்கியது. இதில் "காதல்' படத்தில் வில்லன் இருந்தாலும் அக்காலகட்டத்தில் மண் சார்ந்த அல்லது இனவரவியல் கூறுகளுடன் கூடிய பாத்திரப்படைப்புகளின் துவக்கமாக இந்த படத்தின் வில்லன்களின் தன்மை மாறியிருந்தது. இந்த இரு படங்களும் தமிழில் தர அடிப்படையில் முதன் முதலாக வெளிநாடுகளில் நடக்கும் உலக பட விழாக்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருந்தன.

(தொடரும் ...)
ஆரூர் முனா செந்திலு

Sunday, November 27, 2011

மகாத்மா காந்தியின் இறுதி ஊர்வலம்

காந்தி சுடப்பட்டார் என்ற தகவல், பிரதமர் நேருவுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் அலுவலகத்தில் இருந்து பிர்லா மாளிகைக்கு விரைந்தார். காந்தியின் உடல் அருகே ண்டியிட்டு அமர்ந்து, காந்திஜியின் ரத்தக்கறை படிந்த உடையில் தனது முகத்தைப் புதைத்துக்கொண்டு, குழந்தை போல அழுதார்.

சற்று நேரத்திற்குப்பின் காந்தியின் மகன் தேவதாஸ் காந்தியும், மந்திரி அபுல்கலாம் ஆசாத்தும் வந்து சேர்ந்தனர். இதற்குள் வெளியே பெருந்திரளான கூட்டம் கூடிவிட்டது. காந்தி இறந்துவிட்டார் என்பதை அறிந்து அவர்கள் கதறி அழுதார்கள். காந்திஜி உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

காந்தி உடலைச்சுற்றி பலர் அமர்ந்து பிரார்த்தனை செய்தார்கள். பகவத் கீதை வாசிக்கப்பட்டது. காந்தியின் உடலை தைலமிட்டு (லெனின் உடல் போல்) நிரந்தரமாக வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்த யோசனையை, அவர் மகன் தேவதாஸ் நிராகரித்தார். மறுநாளே தகனம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மறுநாள் அதிகாலையிலிருந்து வெளிநாட்டுத் தூதர்களும், தலைவர்களும், பிரமுகர்களும் வந்து அஞ்சலி செலுத்தியவண்ணம் இருந்தனர். காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ், நாகபுரியிலிருந்து 11 மணிக்கு விமானம் மூலம் வந்து சேர்ந்தார். அதன்பின் 11.15 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பீரங்கி வண்டியில் காந்தியின் உடல் வைக்கப்பட்டு, உடல் மூவர்ணக்கொடியால் பார்த்தப்பட்டது.

அந்த வண்டியில் நேரு, பட்டேல் உள்பட சில தலைவர்கள் இருந்தார்கள். முப்படைகளைச் சேர்ந்த 200 வீரர்கள், ராணுவ வண்டியை இழுத்துச் சென்றார்கள். 2 மைல் நீள ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் பேர் நடந்து சென்றனர். "மகாத்மா அமரர் ஆனார்" என்று கூட்டத்தினர் குரல் எழுப்பினர். இடையிடையே பலர் காந்தியடிகளுக்குப் பிடித்தமான "ரகுபதி ராகவ ராஜாராம்" கீதத்தைப் பாடியபடி சென்றனர்.

ஊர்வலத்துக்கு மேலாக மூன்று விமானங்கள் பறந்து ரோஜா இதழ்களைத் தூவின. பீரங்கி வண்டியின் முன்னும், பின்னும் 4,000 ராணுவ வீரர்களும், 1,000 விமானப் படையினரும், 1,000 போலீசாரும், 100 கடற்படையினரும் நடந்து சென்றனர். ஊர்வலம், 5 மைல் தூரம் சென்று, மாலை 4.20 மணிக்கு யமுனை நதிக்கரை அருகில் உள்ள ராஜ கட்டத்தை அடைந்தது.

சந்தனக் கட்டைகளால் ஆன சிதையில் காந்திஜியின் உடல் வைக்கப்பட்டது.4.15 மணிக்கு மகன் ராமதாஸ், கற்பூரத்தைக் கொளுத்தி, "சிதை"க்குத் தீ மூட்டினார். கூட்டத்தினர் கதறி அழுதனர். "சிதை" 14 மணி நேரம் எரிந்தது. அதுவரை தொடர்ந்து பிரார்த்தனைகள் நடந்தன. பகவத் கீதை முழுவதும் வாசிக்கப்பட்டது.

27 மணி நேரத்துக்குப்பின், தீ முழுவதும் ஆறிய பின், அஸ்தி (சாம்பல்) சேகரிக்கப்பட்டது. அஸ்தியுடன் ஒரு துப்பாக்கி குண்டும் கிடந்தது. அஸ்திக் கலசம், பிர்லா மாளிகைக்குக் கொண்டு செல்லப்பட்டது. பெரும் பகுதி, கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் கலக்கும் திரிவேணி சங்கமத்தில் நேரு, பட்டேல், ஆசாத், சரோஜினி நாயுடு ஆகியோர் முன்னிலையில் கரைக்கப்பட்டது.

அஸ்தியின் ஒரு பகுதி, சிறு சிறு கலசங்களில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை புனித நதிகளிலும், கடலிலும் கரைக்கப்பட்டது. பர்மா, இலங்கை, மலாயா, திபெத் ஆகிய நாடுகளுக்கும் சிறிது அஸ்தி அனுப்பப்பட்டது. காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட அன்று, நேரு ரேடியோவில் பேசினார்.

அமைதி காக்கும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார். குரல் தழுதழுக்க அவர் கூறினார்: "நமது வாழ்வின் ஒளி விளக்கு அணைந்து விட்டது. தேசத்தந்தை மறைந்துவிட்டார். ஆறுதல் பெறுவதற்கோ, ஆலோசனைகள் பெறுவதற்கோ இனி அவரிடம் போக முடியாது. எனக்கு மட்டுமின்றி, இந்த நாட்டின் கோடானுகோடி மக்களுக்கு இது ஒரு பேரிடி.

"மகாத்மா காந்தி தமது பணிகளை ஏற்கனவே முடித்துக்கொண்டு விட்டார் என்று நினைத்தால் அது தவறு. குறிப்பாக, பல சோதனைகள் சூழ்ந்துள்ள நிலையில் அவர் நம்மிடையே இல்லாதது பயங்கர பேரிடி. "ஒளி விளக்கு அணைந்துவிட்டது என்று நான் கூறினேன். ஒரு விதத்தில் அது சரியல்ல. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாட்டில் ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த ஒளி விளக்கு, மேலும் பல ஆண்டுகள் ஒளி பரப்பிக்கொண்டிருக்கும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த ஒளி விளக்கை நம் நாட்டிலும், உலகம் முழுவதிலும் காணலாம்" இவ்வாறு நேரு கூறினார். உலகத் தலைவர்கள் அஞ்சலி "புத்தருக்குப்பின் இந்தியாவில் தோன்றிய மாமனிதர் மறைந்துவிட்டார்" என்று உலகத் தலைவர்கள் கண்ணீர் சிந்தினர்.

"அளவுக்கு மீறி நல்லவராக இருப்பதுகூட கொடியதுபோலும்" என்றார், ஜார்ஜ் பெர்னாட் ஷா இந்தியாவின் பெயரையே "காந்தி நாடு" என்று மாற்றலாம் என்று கூறினார், காந்தியின் மரணச்செய்தியை அறிந்ததுமே, அப்போது நடந்து கொண்டிருந்த ஐ.நா. சபைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. உலக நாடுகள் அனைத்திலும், அந்நாட்டுக் கொடிகள் அரைக் கம்பத்தில் பறந்தன.

தீர்க்கதரிசி தனது முடிவு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அது இயற்கையானது அல்ல என்பதையும் முன்பே உணர்ந்த தீர்க்கதரிசி காந்தியடிகள். "நோய்வாய்ப்பட்டோ, விபத்தினாலோ நான் மரணம் அடையமாட்டேன்.ஒரு கொலையாளியின் கையினால், கொள்கைக்காக உயிர் துறக்கும் தியாகியாக உயிர் துறப்பேன்" என்று சில நாட்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார். அதன்படியே, ஒரு இந்து தீவிரவாதியின் குண்டுக்கு இரையானார்.

காந்தியின் மறைவினால், இந்திய வரலாற்றில் ஒரு யுகம், ஒரு சகாப்தம் முடிவடைந்தது.

ஆரூர் முனா செந்திலு

Saturday, November 26, 2011

காலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 3

இதுவரையிலான வில்லன் நடிப்பில் நாசருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படம் எதுவென்று கேட்டால் "தேவர் மகன்'தான் என கண்ணை மூடி கூறிவிடலாம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இன்னமும் நம் கண்முன்னால் நிற்கிறது.

ஒரு பக்கம் கமலுக்கு வில்லனாக நாசர் என்பதும், ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் என்பதும் எழுதப்படாத விதியாகவே இருந்தது. கமல், நாசர் இருவரும் "மெதட் ஆக்டிங்' எனப்படும் திட்ட நடிப்பில் ஒத்துப்போவதாலும் ரஜினி, ரகுவரன் இருவரும் "ஹைப்பர் ஆக்டிங்' எனப்படும் ஆற்றல் நடிப்பு வகையைச் சேர்ந்ததாலோ என்னவோ இந்த காம்பினேஷன் இயல்பாகவே ஒத்து போனது.

இதன் பிறகு அஜித், விஜய் ஆகியோர் காதல் கதைகளுடன் வந்தபோது வில்லனின் ரோல் கொஞ்சம் மாறத் துவங்கியது. அதுவரை உயரமாக இருந்த வில்லனுக்கு இப்போது மீசை காணாமல் போனது. கொஞ்சம் பணக்காரத் தன்மை அல்லது அமெரிக்க ரிட்டர்ன் ஆகியோர் வில்லன்களாக வந்தனர். இக்காலங்களில் கதாநாயகன் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனாகவே இருந்து வந்ததால் அவர்களது வில்லன்கள் தவிர்க்க முடியாத பணக்கார இளைஞனாகவும், அமெரிக்க ரிட்டர்னாகவும் இருந்தார்கள். இக்காலத்தில் கரண்தான் பிஸியாக இருந்தார். அஜித்துடன் நண்பனாக, விஜய்யிடம் வில்லனாக அல்லது அஜித்திடம் வில்லனாக, விஜய்யிடம் நண்பனாக என மாறிமாறி பிஸி கால்ஷீட்டில் பறந்தார்.

இக்காலத்தில் க்ளைமாக்சில் வில்லன்கள் அடி வாங்குவது குறைந்து மிக நல்லவர்களாக மாறி நாயகியையும், நாயகனையும் சேர்த்து வைப்பது ஒன்றை மட்டுமே செய்து வந்தனர். க்ளைமாக்சில் நாயகன் கருத்து சொல்வது அல்லது அதிர்ச்சி அடைய வைப்பது போன்றவை இக்காலத்தில் துவங்கியது.

வில்லன்கள் என்பது ஆட்கள் என்பதிலிருந்து விலகி சமய, சந்தர்ப்பங்கள் வில்லன் ரோலில் முக்கிய பங்கு வகித்தன. வில்லன்கள் இல்லாத அல்லது அவர்களது ஆதிக்கம் குறைய குறைய தமிழில் மெல்ல நல்ல சினிமாக்கள் உதயமாகத் துவங்கின. அதன் முதல் துவக்க புள்ளியாக வந்த திரைப்படம் "சேது'.

(தொடரும் ...)

ஆரூர் முனா செந்திலு

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - திரை விமர்சனம்

காலையிலேயே என் மனைவி இன்று விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்று 07.00 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள். சரி என்னடா செய்யலாம் என்று யோசித்து இணையத்தை திறந்து ராக்கி தியேட்டர் வெப்சைட்டை திறந்தால் 07.30 மணிக்கு மயக்கம் என்ன சிறப்பு காட்சி என்று குறிப்பிட்டிருந்தது. உடனே கிளம்பி விட்டேன். 10.30 மணிக்கெல்லாம் படம் முடிந்து விட்டது. மழையும் பெய்வதால் தியேட்டரில் கூட்டமும் இல்லை.

மயக்கம் என்ன படத்தின் கதைக்குள் செல்வோமா?

கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு போட்டோகிராபர். மிகப் பெரிய Wild Life Photographer ஆக வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கிறான். பெற்றோர் இல்லை. நான்கு நண்பர்களுடன்(இரண்டு ஆண் நண்பர்கள், இரண்டு பெண் நண்பர்கள்) சேர்ந்து அவனும் அவனது தங்கையும் வளர்கிறார்கள். நான்கு நண்பர்களின் ஒருவன் சுந்தர், அவன் அவனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன்(கதாநாயகி ரிச்சா) டேட்டிங்கில் உள்ளான். ஆனால் அவளோ தனுஷை காதலிக்கிறாள். ஆனால் தனுஷ் உள்ளுக்குள் அவளை காதலிக்கிறார், வெளியில் நண்பர்களுக்காக அவளை வேண்டாம் என்கிறார். பிறகு பிரச்சனை அனைவருக்கும் தெரிய வந்து தனுஷூக்கும் ரிச்சாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கும் ஒரு விபத்தில் தனுஷூக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. தனுஷ் அந்த பிரச்சனையில் இருந்து மனைவியின் உதவியுடன் வெளிவந்து மிகப் பெரிய Wild Life Photographer ஆக வாழ்வில் ஜெயிப்பதே கதை.

தனுஷ் பிரமாதமாக நடித்துள்ளார். மிக இயல்பாக அவருக்கு பொருந்துகிறது. படத்தில் அவரது பட்டப்பெயர் ஜீனியஸ். ரிச்சாவைப் பார்த்த உடன் அவர் கூறும் வார்த்தை "போடி முண்டகலப்பை". தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. மனநலம் சரியில்லாத காலக்கட்டத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு வந்து மாப்பிள்ளையை பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து விட்டு தன்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என்று புலம்பும் போது அசத்துகிறார்.

ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன். ஆனால் அந்தப்படத்தை டிவியில் பார்த்ததால் அந்த அளவு ஈர்க்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நடிப்பில் அசத்துகிறார். மிகப் பொறுமையாக மனஉறுதியுடன் உள்ள போதும், தனுஷை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போதும் நன்றாக நடித்துள்ளார். மிக அழகாக உள்ளார் (கொஞ்சம் ஜொள்ளு கூட விட்டேன் ஹிஹிஹி). தனுஷ் திருமணத்தில் கலாட்டா செய்ததால் மற்றொரு நண்பன் முன் கண்ணீர் விட்டு அழுததும் அவன் வந்து ரிச்சாவை கட்டியணைத்து ஆறுதல் கூறும் போது தனுஷை விட்டு விட்டு தன்னிடம் வந்துவிடும் படி கூறும் போது, மறுத்து விட்டு தனுஷ் மீதான காதலை சொல்லும் போதும், அந்த பிரச்சனையை லாவகமாக தீர்க்கும் போதும் அசத்துகிறார்.

மற்ற நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் ஓகே. அதிலும் சுந்தராக வருபவர் மிக அருமையாக நடித்துள்ளார். தனுஷூடன் ரிச்சாவுக்கு திருமணமாகும் போது திட்டிக்கொண்டே வாழ்த்தும் போது தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. பாடல்கள் பார்க்க அருமையாக உள்ளது. .ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார். பின்னணி இசையும் நன்றாக உள்ளது. குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு தனுஷ் - ரிச்சா ஆடி முடிக்கவும் வந்த பின்னணி இசை அற்புதம்.

தனுஷூக்கு திருமணமாகி விட்டதாலும் ரஜினி மாமனார் என்பதாலும் தான் ஒரளவுக்கு சில காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அந்த பேருந்து நிறுத்தத்தில் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் நெருங்கும் போது உதட்டு முத்தம் அழுத்தமாக இருந்திருக்கும். திருமணத்திற்கு பின்பு வரும் அந்தரங்க காட்சிகளும் அரையிருட்டில் அவ்வளவு டீடெயிலாக காட்டப்படாமல் முடிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் செல்வராகவன் அவரது உணர்வுகளுக்கு அந்தக்காட்சிகள் இன்னும் ஆபாசமாக இருந்திருக்கும்.

இது ஒரு மனநலம் பாதிப்பு பற்றி பட்டும் படாமல் சொல்லும் படம். படம் பார்க்கும் நமக்கு கொஞ்சம் பொறுமை இருந்தால் படத்தை பார்க்கலாம், படம் மிகவும் மெதுவாக செல்கிறது. சில காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. வித்தியாசம் என்றால் இது தானா. எனக்கு பிடிக்கவில்லை.

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் ஒப்பிட்டால் இது வெற்றிப்படமே.

ஆரூர் முனா செந்திலு

Thursday, November 24, 2011

காலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 2


அந்தக் காலத்தில் வில்லன்களுக்கு எப்போதாவது கற்பழிக்க வேண்டிய தேவை மட்டும் ஏற்படும். அதிலும் பெரும்பாலும் நாயகியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் கிளப்பில் இரண்டு அரைகுறை ஆடையுடன்கூடிய நங்கைகளின் தோளில் சரிந்து கொண்டு மது அருந்துவது, அல்லது மது அருந்திக்கொண்டே ஃபோன் பேசுவது இதுதான் அவரது முக்கிய பணி. (பேசாமல் அந்த காலத்து வில்லனாக பிறந்திருந்தால் செம வாழ்க்கை!)

அதேபோல "பாஸ்' அவ்வளவு சீக்கிரம் சுலபமாக காட்சியளிக்கமாட்டார். மேடைமேல் நிழல் உருவமாகத்தான் காட்சி கொடுப்பார். அவரை எல்லோரும் ""பாஸ்...பாஸ்'' என்றுதான் அழைக்க வேண்டும். ஒரு கட்டத்தில் ""சுட்றாதீங்க பாஸ்...பாஸ்...'' என ஒருவர் அலற அவரை பாஸ் துப்பாக்கியால் சுட்டு புகையை வாயால் ஊதுவார்.

படத்தின் இறுதிக்காட்சியில் காலி கள்ளி பெட்டிகள் அல்லது அட்டைப்பெட்டிகள் அடுக்கப்பட்ட குடோவுனில் கதாநாயகனின் அண்ணி, அம்மா, காதலி, தங்கை அல்லது தங்கச்சி புருஷன் இவர்களில் யாராவது மூன்றுபேரை கயிற்றில் கட்டிபோட வேண்டும். வில்லன்களுக்கும் இந்த கள்ளிபெட்டிகளுக்கும் அப்படி என்ன தொடர்போ? சினிமா ஷூட்டிங்களுக்கு கள்ளிபெட்டி சப்ளை செய்தே கோடீஸ்வரர் ஆன ஏஜெண்ட் கதைகளும் உண்டு. மற்றபடி க்ளைமாக்சில் மட்டும் நேரடியா கதாநாயகனுடன் சண்டை போட வேண்டிவரும். அப்போது மட்டும் நான்கைந்து குத்துக்களை வாங்க உடம்பை தேத்திவைத்துக் கொண்டால் போதும். மற்றபடி பாஸ்களின் வாழ்க்கை ஜாலி வாழ்க்கை.

1977-க்கு முன் தமிழ் சினிமா எப்படி இருந்தது என்பதற்கு இந்த "பாஸ்'களின் அட்டூழியம் ஒன்றே போதும். அதன் பிறகு "பாஸ்'கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதி, கதாநாயகியின் அப்பா அல்லது அண்ணன் என யதார்த்த முகங்களுக்கு மாறினர். ஹெலன், சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு பதில் சில்க், அனுராதா கச்சைக் கட்டினார். எம்.ஜி.ஆரிடம் வாங்கிய அடிகளைத் தொடர்ந்து நம்பியார் பாவம் ரஜினி, கமல்களிடமும் கொஞ்சநாள் அடி வாங்கினார். பிறகு அந்தப் பொறுப்பை ஜெய்சங்கர், விஜயகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு வயதுக்கு தகுந்த கேரக்டர் பக்கம் ஒதுங்கிக் கொண்டார். இவர்களைத் தொடர்ந்து கொஞ்சநாள் தியாகராஜனும் பிறகு ராதாரவியும் நாயகிகளுக்கு அண்ணனாக அல்லது அப்பாவாக அல்லது கிராமத்து பண்ணையாராக வலம் வந்து வில்லத்தனங்கள் செய்தனர்.

"மம்பட்டியானு'க்குப் பிறகு தியாகராஜன் கொஞ்சம் ஹீரோ பக்கமாக ஓரம் கட்டப்போக, ராதாரவி மட்டுமே ரொம்ப நாளைக்கு வேட்டி கட்டிய வில்லனாக வெற்றி வலம் வந்தார். அப்படியே அவர் பேண்ட் போட்டாலும் கோட்டு சூட்டுடன் தொழிலதிபர் வில்லனாகவே வந்தாரே ழிய, நகரத்து வில்லன் வேஷத்துக்கு அவரை யாரும் கூப்பிடவில்லை என்றே சொல்லலாம். இடைப்பட்ட காலத்தில், தமிழ் ரசிகர்களுக்கு உயரமான வில்லன்களைப் பார்க்கும் ஆசை வந்தது. மேலும் அவர்கள் ஒரே மாதிரி சுயமற்றவர்களாக க்ளைமாக்சில் கோழைகளைப்போல கதாநாயகனுக்கு பயந்து ஓடுபவர்களாக இல்லாமல் கொஞ்சம் விவரமானவர்களாகவும், சுயமரியாதை மிகுந்தவர்களாகவும் இருக்க வேண்டுமெ ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சத்யராஜும், ரகுவரனும் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய, பிற்பாடு இதே பாணியில் பிரகாஷ்ராஜும் அதே உடல் தகுதியுடன் வில்லனாக நெடுங்காலத்துக்கு வலம் வந்தார்.
தியாகராஜன் படத்தில் கூட எதுக்குடா சிலுக்கு என்று கேட்கிறீர்களா, ஹி ஹி ஹி பழைய பாசம் தான்.

இப்படி உயரமானவர்களை வில்லனாக்கி பார்க்கும் மனோபாவம் தமிழ் ரசிகர்களுக்கு வர காரணம் என்ன? என ஒரு கலாச்சார ஆராய்ச்சியே கூட செய்யலாம். இப்படியான வில்லன்கள் "வில்லர்' எனும் மரியாதையான இடத்துக்கு வந்தாலும் க்ளைமாக்சில் அவர்கள் தர்ம அடி வாங்குவது மட்டும் குறையவில்லை. என்ன சாகும்போது மட்டும் கொஞ்சம் விறைத்துக் கொண்டு அப்போதும் அதே திமிருடன் இறந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சில படங்களில் எதிலுமே சேத்தி இல்லாமல் மன்சூர் அலிகான் வில்லனாக வலம் வந்தார்.

இப்படியாக பல "வில்லர்'கள் வலம் வந்தாலும் தனது யதார்த்தமான நடிப்பால் வில்லத்தனத்திற்கும் மரியாதை கொடுத்தவர் நாசர். கமல்ஹாசனுடன் அவர் வில்லனாக நடித்த பல படங்களில் குணச்சித்திரமும், ஹாஸ்யமும் களைக்கட்டின. இன்னும் சொல்லப்போனால் "தேவர் மகன்' படத்தில் அவரது நடிப்பு கமல் மற்றும் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக இருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது. இதுவரையிலான வில்லன் நடிப்பில் நாசருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படம் எதுவென்று கேட்டால் "தேவர் மகன்'தான் என கண்ணை மூடி கூறிவிடலாம். அது பற்றி . . .

(தொடரும் . . .)



ஆரூர் முனா செந்திலு


Wednesday, November 23, 2011

மகாத்மா காந்தியின் கடைசி நாள் . . .

கடைசியாக உண்ணாவிரதம் இருந்தபின், அவர் உடல் மிகவும் சோர்வடைந்திருந்தது என்றாலும் மாலையில் பிரார்த்தனை கூட்டத்திற்கு செல்லத் தவறுவதில்லை. 1948 ஜனவரி 30ந்தேதி வெள்ளிக்கிழமை, வழக்கம்போல அதிகாலை 3.30 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்தார், காந்தியடிகள். சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். எலுமிச்சை ரசமும், தேனும் கலந்த வெந்நீர் பருகினார்.
பின்னர் தன் அறைக்குள்ளேயே சிறிது நேரம் உலாவினார். 8 மணிக்கு தன் உதவியாளர் பியாரிலாலை அழைத்து, காங்கிரஸ் கட்சியின் விதிகளில், தான் செய்ய உத்தேசித்திருந்த மாறுதல் களைக் கொடுத்துப் படித்துப் பார்க்கச்சொன்னார். பிறகு பத்திரிகைகள் படித்தார். இந்தக் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் (பழைய சென்னை மாகாணம்) கடும் உணவுத் தட்டுப்பாடு நிலவியது.

அதுபற்றி பியாரிலாலிடம் பேசினார். "தென்னை, பனை, வேர்க்கடலை, வாழை ஆகியவற்றையும், பலவிதமான கிழங்குகளையும் தமிழ்நாட்டுக்கு இயற்கை வழங்கியிருக்கிறது. அப்படியிருக்க அங்கு உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது. இயற்கை வளங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை மக்களுக்குத் தெரிவித்தால், அவர்கள் பட்டினி கிடக்கவேண்டிய அவசியம் இருக்காது" என்றார்.

உணவுப்பிரச்சினையைச் சமாளிப்பது எப்படி என்பது பற்றி குறிப்பு தயாரிக்கும்படி தன் செயலாளரிடம் கூறி விட்டுக் குளிக்கச் சென்றார். குளித்துவிட்டு வந்தபின், 9.30 மணிக்கு வங்காளி மொழிப் பாடங்களை கற்கலானார். உணவு பின்னர் காலை உணவாக 12 அவுன்ஸ் ஆட்டுப்பால், பச்சை முள்ளங்கி, தக்காளிப் பழப் பச்சடி, ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள், இஞ்சிச் சாறு ஆகியவற்றை அருந்தினார்.
பியாரிலால், காங்கிரஸ் விதிகளில் மாற்றம் செய்வது பற்றி தன் கருத்துக்களை எழுதிக் கொடுத்தார். அதைக் காந்திஜி ஆழ்ந்து பரிசீலனை செய்தார். பிறகு படுத்துத் தூங்கினார். பகல் 12 மணிக்கு எழுந்து, தேன் கலந்த வெந்நீர் குடித்தார். டெல்லியைச் சேர்ந்த முஸ்லிம் தலைவர்களுக்கு பேட்டி அளித்தார்.

தனக்கு வந்திருந்த கடிதங்களைப்படித்துப் பதில் எழுதினார். பிற்பகல் 2.15 மணிக்கு காந்தி வழக்கம்போல பேட்டிகள் அளிக்கத் தொடங்கினார். இலங்கை பிப்ரவரி 14_ந்தேதி சுதந்திரம் பெறுவதால், சுதந்திர தினச்செய்தி வாங்கிச் செல்வதற்காக இலங்கையிலிருந்து டாக்டர் டி.சில்வா வந்திருந்தார். உடன் வந்திருந்த அவருடைய மகள், காந்தியிடம் கையெழுத்து வாங்கினாள். மகாத்மா போட்ட கடைசிக் கையெழுத்து இதுதான்.
மாலை 4 மணிக்கு சர்தார் பட்டேல் வந்தார். அவரும், காந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். பட்டேலுடன் அவர் மகள் மணிபென் பட்டேலும் இருந்தார். 4.30 மணிக்கு பேத்தி ஆபா காந்தி, மாலை உணவைக் கொண்டு போய்க்கொடுத்தார்.

12 அவுன்ஸ் ஆட்டுப்பால், 12 அவுன்ஸ் காய்கறி சூப், ஆரஞ்சு ரசம், வேக வைத்த காய்கறிகள் ஆகியவற்றை காந்திஜி அருந்தினார். மாலை 5 மணி, வழக்கமாக பிரார்த்தனைக் கூட்டத்தில் இருக்க வேண்டிய நேரம். பட்டேல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்கும், நேருவுக்கும் கருத்து வேற்றுமை இருந்து வந்தது.
காந்திஜி அவ்வப்போது தலையிட்டுச் சமாதானப்படுத்தி வந்தார். பட்டேல் ராஜினாமாச் செய்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். அவரைக் காந்தி சமாதானப்படுத்தினார். பத்து நிமிடம் தாமதமாக 5.10 மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்துக்குப் புறப்பட்டார். பேத்திகள் மனு காந்தி, ஆபா காந்தி ஆகிய இருவருடைய தோள்களில் சாய்ந்தபடி நடந்து சென்றார்.
ஆபா காந்தியுடன் அவர் நகைச்சுவையாக பேசியபடி சென்றார். பிரார்த்தனைக் கூட்டத்திற்கு சுமார் 500 பேர் வந்திருந்தனர். 10 நிமிடம் தாமதமாகி விட்டதால் காந்தி சற்று வேகமாக நடந்தார். கூடியிருந்தவர்களில் பலர் எழுந்து நின்று, வழி விட்டபடி வணங்கினர். காந்தியும் பதிலுக்குக் கை கூப்பி வணங்கினார்.

திடீரென்று ஒரு இளைஞன், இடது பக்கத்திலிருந்து கூட்டத்தை விலக்கியபடி வந்தான். அவன் காந்தியின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு வருவதாக மனு காந்தி நினைத்தார். யாரும் தன் காலில் விழுவதை காந்தி விரும்புவதில்லை. எனவே மனு காந்தி, "வேண்டாம். பாபு விரும்பமாட்டார்" என்று தடுத்தார்.

அந்த இளைஞன், மனு காந்தியைப் பிடித்து அப்பால் தள்ளி விட்டான். மனுவின் கையிலிருந்த காந்தியடிகளின் நோட்டுப் புத்தகம், ஜபமாலை, எச்சில் படிகம் ஆகியவை கீழே விழுந்தன. அவற்றை எடுப்பதற்காக, மனு காந்தி கீழே குனிந்தார். கண் மூடிக்கண் திறப்பதற்குள் அந்த இளைஞன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, காந்திஜிக்கு எதிரே இரண்டு அடி தூரத்திலிருந்து மூன்று முறை சுட்டான்.

மூன்று குண்டுகளும் காந்தியின் மார்பில் பாய்ந்தன. அவற்றில் இரண்டு குண்டுகள் உடலை ஊடுருவிச்சென்று விட்டன. ஒரு குண்டு, இதயத்துக்கு உள்ளேயே இருந்து விட்டது. முதல் குண்டு பாய்ந்ததும், காந்திஜியின் கால் தடுமாறியது. வணங்கியபடியிருந்த கைகள், கீழே சரிந்தன. இரண்டாவது குண்டு பாய்ந்ததும், அவருடைய உடையில் ரத்தக்கறை படிந்தது.

அவர் "ஹே... ராம்" என்று இரண்டு முறை சொன்னார். மூன்றாவது குண்டு பாய்ந்ததும், தரையில் ஈர மண்ணிலும், புல் தரையிலும் விழுந்தார். அப்போது மணி 5.17. காந்தியின் உடலை, பிர்லா மாளிகைக்கு எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்து வல்லபாய் பட்டேல் விரைந்து வந்தார். காந்தியின் நாடியைத் தொட்டுப் பார்த்தார்.

இலேசாக நாடி துடிப்பது போலத்தோன்றியது. இதற்குள் டாக்டர் டி.பி.பார்க்கவா வந்து சேர்ந்தார். அவர் பரிசோதித்து விட்டு "காந்திஜி உயிர் பிரிந்து பத்து நிமிடங்கள் ஆகிவிட்டன" என்று தெரிவித்தார். இதற்கிடையே, காந்தியடிகளை சுட்டுக் கொன்றவனை போலீசார் கைது செய்தனர். அவன் தப்பி ஓட எவ்வித முயற்சியும் செய்யவில்லை.

துப்பாக்கியுடன் நின்ற அவனை, கூட்டத்தினர் ஆவேசத்துடன் தாக்கினர். அந்த தாக்குதல் நீடித்திருந்தால், கொலையாளி கொல்லப்பட்டிருக்கலாம். போலீசார் தலையிட்டு அவனை மீட்டு, துப்பாக்கியை கைப்பற்றினர். கொலையாளி பாதுகாப்புடன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் அவன் பெயர் நாதுராம் விநாயக் கோட்சே என்றும், 37 வயதான அவன் புனா நகரை சேர்ந்தவன் என்றும் தெரியவந்தது

ஆரூர் முனா செந்திலு


Tuesday, November 22, 2011

காலத்தினால் கலர் மாறிய தமிழ் சினிமா வில்லன்கள்

சென்ற வாரத்தில் 10 வருடங்களுக்கு முன் வந்த பத்திரிக்கையை புரட்ட நேர்ந்தது. அந்த கட்டுரையும் உடன் நமது சரக்கும் கலந்து நான்கு பகுதிகளாக உங்களுக்கு. தமிழ் சினிமா வில்லன்கள் ற்றி 90ளின் வரையான கட்டுரையை நீட்சி செய்தால் எந்த காலத்திற்கும் அவற்றினை கொண்டு செல்லலாம் என்று மட்டும் புரிந்தது.

எழுபதுகளில்தான் முதன் முறையாக வில்லன்களுக்கு கோட்டு போடும் உரிமையே வந்தது. அதுவரை பெரும்பாலும் கட்டம் போட்ட லுங்கி, கர்ச்சீப், கன்னத்தில் பெருமாள் கோயில் உருண்டை சைசில் மச்சம் என வில்லத்தனத்தோடு உப காரியமாய் பூச்சாண்டி காட்டுவதையும் செய்து வந்தனர். அதிலும் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் சொல்ல வேண்டாம். அவர்கள் திரையில் தோன்றினாலே கரிச்சு கொட்ட ஆரம்பித்தனர். பாவம் நம்பியார்தான் அதிகமான திட்டு வாங்கியிருப்பார். ராமதாஸ், பி.எஸ். வீரப்பாவுக்கு கூட அப்படி கிடைத்திருக்காது.

ஒரு பக்கம் எம்.ஜி.ஆரிடம் அடி இன்னொரு பக்கம் பார்வையாளர்களின் வசவு என இரண்டு பக்கமும் கும்மாங்குத்து வாங்கி அவதிப்பட்டனர். இந்த சூழலில்தான் அசோகன் வந்தார். கொஞ்ச நாள் அவரும் எம்.ஜி.ஆரிடம் அடிவாங்கி களைத்துபோய் கடைசியாக ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் காலம் வந்ததும் அப்படியே ஷிப்ட் ஆகினார். ""வாங்கோ...உக்காருங்கோ...'' என குரலை நீட்டி மக்கள் கைதட்டி ரசிக்கத் தக்க வில்லனாக மாறினார். இக்காலத்தில்தான் வில்லன்களின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் துவங்கியது.

அதுவரை நேரடியாக அடிதடியில் இறங்கிய வில்லன்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பித்தது. உடன் அவர்களும் ஒதுங்கி போய் ஒரு மேசைமேல் இருட்டில் உட்கார்ந்து கொண்டு பல கலர் பல்புகளுடன் மிஷின் ஆபரேட்டர்போல் தோற்றம் தர ஆரம்பித்தனர்.

எழுபதுகளில் சினிமாவுக்கு யாராவது சென்று வந்தால் சிறுவர்கள் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி, "இந்த படத்தில் பாஸ் யாரு?'

"பாஸ்' என்றால் ஏதோ பெரிய மல்டிநேஷ்னல் கம்பெனியின் அதிபர் என நினைக்க வேண்டாம். இவர்கள் கேட்பது கொள்ளை கூட்ட பாஸ். அதுவும் புரியாதவர்களுக்கு இன்றைய பாஷையில் சொல்வதானால் வில்லன்.

இன்று இருப்பதுபோல அன்றைய வில்லன்களுக்கு அரிவாளை தூக்கிகொண்டு அங்குமிங்குமாக ஓட வேண்டியதோ, சரியாக மீசைகூட முளைக்காத கதாநாயக பயல்களின் அடிக்கு பயந்து கடைசியில் மானம்கெட்டு கைகூப்ப வேண்டியதோ, நாயகிகளின் அப்பாவாக, அண்ணனாக, மாமனாக, டாடா சுமோவில் வெள்ளை சட்டை, மீசை சகிதம் ஆயுதங்களுடன் திரிய வேண்டிய அவசியமோ அல்லது முகத்தை அஷ்ட கோணலாக்கி பக்கம் பக்கமாக வசனம் பேச வேண்டிய அவசியமோ இல்லை. சிம்பிள் ஒரே ஒரு மொட்டை மட்டும் போட்டு கொண்டிருந்தால் போதும். கூடுதலாக வித்தியாசமாக சிரிக்க தெரிந்து கொண்டால் போனஸ் பாயிண்ட். பெரிதாக அடிதடி எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எல்லாம் மிலிட்டிரி டிரஸ் போட்டு துப்பாக்கி சகிதம் நடமாடும் ஆட்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எப்போதாவது கற்பழிக்க வேண்டிய தேவை மட்டும் ஏற்படும். அதிலும் பெரும்பாலும் நாயகியாகத்தான் இருக்கும். இல்லாவிட்டால் கிளப்பில் இரண்டு அரைகுறை ஆடையுடன்கூடிய நங்கைகளின் தோளில் சரிந்து கொண்டு மது அருந்துவது, அல்லது மது அருந்திக்கொண்டே ஃபோன் பேசுவது இதுதான் அவரது முக்கிய பணி. (பேசாமல் அந்த காலத்து வில்லனாக பிறந்திருந்தால் செம வாழ்க்கை!)

(தொடரும் . . .)

ஆரூர் முனா செந்திலு

Monday, November 21, 2011

சரக்கடித்த மச்சானுடன் நான் பட்ட பாடு


என் மச்சான் பெண்ணின் திருமணத்திற்கு பத்திரிக்கை சென்னையில் வைப்பதற்காக மற்றொரு மச்சான் சதீஷ், அவனுடன் மற்றொரு நண்பன் கலை ஆகியோர் நேற்று வீட்டிற்கு வந்திருந்தார்கள். எனது மச்சான் சதீஷ் ஊரில் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாகி விட்டபடியாலும் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வென்று ஊராட்சி மன்ற துணைத்தலைவராகி விட்டதாலும் கெளரவத்திற்காக அவன் ஊரில் குடிப்பதில்லை (நல்லவன் வேஷம்).

கலையை வீட்டிலேயே விட்டு விட்டு நானும் அவனும் பைக்கில் நேற்று காலை புறப்பட்டு போரூரில் மூன்று இடங்கள், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம், மணலி மாத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர் இடங்களில் எல்லாம் உள்ள எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டில் பத்திரிக்கை வைத்து முடிக்க மதியம் மணி 03,00 ஆகி விட்டது. இன்னும் சாந்தோம், திருவான்மியூர், பெசன்ட் நகர் ஏரியாக்களில் பத்திரிக்கை வைப்பது பாக்கியிருந்தது.

ஆனால் மதியம் சாப்பிட வேண்டுமென்பதற்காகவும், எனது மனைவிக்கு டைபாய்டு ஜூரத்திற்காக ஊசி போட அவளை அழைத்துக் கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு 05.00 மணிக்கு செல்ல வேண்டியிருந்ததால் மீண்டும் அம்பத்தூருக்கு திரும்பினோம். வரும் வழியில் மிகவும் களைப்பாக இருக்கிறது. எதாவது பாரில் சரக்கடிக்கலாம் என்று கூறினான். சரி என்று எனது வீட்டிற்கு மிக அருகாமையில் உள்ள பாருக்கு சென்று அங்கிருந்து வீட்டில் இருந்த கலைக்கு போன் செய்து பாருக்கு வரும்படி கூறினோம். அவனும் வந்தான்.

நான் அவனிடம் நான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருப்பதால் குடிக்கவில்லை. நீங்கள் இருவரும் குடியுங்கள் என்று கூறினேன். சரி என்று அவர்கள் குடிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கு ஆப் உள்ளே இறங்கியதும் நானும் குடிக்க வேண்டும் என்று ரகளை செய்தார்கள். என்னடா இது வம்பாகி போய் விட்டதே, நான் மருத்துவமனைக்கு 05.00 செல்ல வேண்டுமென்று கூறினேன். அவனோ நீ செல்ல இன்னும் 2 மணிநேரமிருக்கிறது. இப்போது பீர் குடி, இல்லையென்றால் எங்களை அவமானப்படுவது போல் இருக்கும் என்று வம்பு செய்தான். சரி என்று ஒரு பீர் வாங்கி நான் குடிக்க அவர்கள் மேலும் ஒரு ஆப் குடித்தார்கள்.

வீட்டிற்கு சாப்பிட போனால் சண்டை வரும் என்று அருகில் உள்ள பிரியாணி கடைக்கு சாப்பிட சென்றோம். நானும் சதீஷூம் ஒழுங்காக சாப்பிட எங்களுடன் வந்த கலை பாதி பிரியாணி சாப்பிட்ட போது கடையின் உள்ளேயே வாந்தியெடுக்க ஆரம்பித்தான். ஆரம்பித்தது தகராறு. அவனை வெளியில் கொண்டு வந்து ஒரு கேன் மினரல் வாட்டர் வாங்கி அவனை கழுவி விட்டு கடைகாரர்கள் சத்தம் போட்டதால் நான் கடையில் இவன் எடுத்த வாந்தியை மீதமுள்ள தண்ணீரில் கழுவி விட்டு இருவரையும் பைக்கில் ஏறுங்கள் என்று கூறி தட்டுத்தடுமாறி வீட்டிற்கு கொண்டு வந்து போட்டேன். என் மனைவியோ மருத்துவமனைக்கு செல்லும் நேரத்தில் இதெல்லாம் தேவையா என்று ஒரே சத்தம் போட்டாள். பிறகு அவளை சமாளித்து விட்டு இருவரையும் வீட்டில் படுக்கச் சொல்லி விட்டு நான் மனைவியை அழைத்துக் கொண்டு மருத்துவமனை சென்றேன்.

இரவு 07.00 மணிக்கு நான் மருத்துவமனையில் இருந்த போது சதீஷ் போன் செய்து நான் கிளம்புகிறேன் என்றான். அவனிடம் திருமணத்திற்காக நான் ஊருக்கு வருவேன், கண்டிப்பாக திருமணத்தில் குடித்து விட்டு உன் மேலேயே வாந்தியெடுக்கிறேன் என்று கலாய்த்து விட்டு பக்கத்து வீட்டில் சாவி கொடுத்து செல்லும்படி கூறினேன். அவர்களும் கிளம்பி விட்டார்கள். இப்பொழுது என் முறை, டிசம்பர் 5ம் தேதி நான் அவர்கள் ஊரான மன்னார்குடி அருகில் உள்ள மேலவாசல் சென்று நன்றாக குடித்து விட்டு கலாட்டா செய்வேன் என்று இப்போதே சபதம் செய்து விட்டேன்.



ஆரூர் முனா செந்திலு

Friday, November 18, 2011

1911 - ஜாக்கிசான் 100வது படம் - விமர்சனம்

வர வர நான் எந்தப் படத்தையும் விமர்சனம் எழுதணும் என்பதற்காக போய் பார்த்தால் அந்தப்படம் மொக்கையாக போய் விடுகிறது. இதற்கு முதல் உதாரணம் வெடி இன்று ஜாக்கிசானின் 1911 திரைப்படம்.

படத்தைப் பற்றி சொல்வதானால் சீனர்களுக்காக, சீனாவைப் பற்றி, சீனர்களால், சீன மொழியில் எடுக்கப்பட்ட சீனத் திரைப்படம் இது. அவ்வளவே. முக்கியமான விஷயம் என்னவென்றால் இது ஜாக்கிசான் படமல்ல, இந்தப்படத்தில் ஜாக்கிசான் இருக்கிறார். மற்றப்படி இந்த திரைப்படத்தை புறக்கணிப்பது தான் இந்தியர்களான நமக்கு நல்லது.

கதை என்னவென்றால் வெளிநாட்டில் சுன்யாட்சன் என்பவர் சீனப்புரட்சிக்காக பணம் திரட்டுகிறார். அங்கிருந்து சீனாவி்ல் நடக்கும் புரட்சிக்கு ஜாக்கிசான் தலைமையேற்க வருகிறார். போர் நடக்கிறது. சீனாவின் ராணி சீனப்புரட்சியை ஒடுக்க இங்கிலாந்திடம் பணம் கடனாக கேட்கிறார். சுன்யாட்சன் இங்கிலாந்து சென்று சீனராணிக்கு பணம் தரக்கூடாது என்று வாதிடுகிறார். இங்கிலாந்து பணம் தர மறுத்து விடுகிறது.

சீனபுரட்சி சிப்பாய் கலகமாக வெடிக்கிறது. அவர்கள் அந்த நாட்டின் பாதிப்பகுதியை கைப்பற்றி விடுகிறார்கள். இதனால் வெளிநாட்டிலிருந்து சுன்யாட்சன் சீனாவுக்கு வருகிறார். பிறமாநிலங்களின் பிரதிநிதியுடன் கூடிப்பேசி தற்காலிக குடியரசுத் தலைவராக சுன்யாட்சன் பதவியேற்கிறார். மேலும் போர் வலுவடைந்து மொத்த சீனாவையும் கைப்பற்றுகிறார்கள். சுன்யாட்சன் சுதந்திரமாக தேர்தல் மூலம் குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று பதவி விலகுகிறார். அவரின் பெருந்தன்மையை மக்கள் வரவேற்கிறார்கள். படம் முடிகிறது.

இதில் ஜாக்கிசான் நடித்திருக்கவே வேண்டாம். சுத்த வேஸ்ட். அவருக்கென்று நறுக்கான காட்சிகளே படத்தில் இல்லை. ஏதோ பத்தோடு பதினொன்றாகத்தான் படத்தில் அவர் உள்ளார். படத்தின் உண்மையான நாயகன் சுன்யாட்சனாக நடித்திருப்பவர்தான்.

இதை விடக் கொடுமை என்னவென்றால் படம் ஒரு கோர்வையாவே இல்லை. கடைசியில் ஜாக்கிசான் இருக்கிறாரா, செத்தாரா என்றே தெரியவில்லை. போரில் காயமடைகிறார். யாரோ ஒருவருடைய மனைவி அழுகிறார். சரி ஜாக்கிசான் செத்துவிட்டார் என்று நினைத்தால் கடைசியில் வருகிறார். அது படத்தின் எடிட்டிங் ஸடைலோ என்னவோ தெரியவில்லை ஆனால் எனக்கு புரியவில்லை.

அவர்கள் சீனாவைப் பற்றி புகழும் போதெல்லாம் நமக்கு கடுப்பாகத்தான் வருகிறது. போரில் கன்னாபின்னாவென்று செத்து விழுகிறார்கள். மீண்டும் வருகிறார்கள். ஒன்றும் புரியவில்லை. படமும் மிகவும் மெதுவாக செல்கிறது.

இதை விட கொடுமை என்னவென்றால் படம் துவங்கி சில நிமிடங்களிலேயே ஒருவர் தூங்கி குறட்டை விடுகிறார். தியேட்டரே சிரிக்கிறது. பிறகு அவரை எழுப்பி விட்டு படம் பார்த்தவர்கள் கமெண்ட் அடித்துக் கொண்டே படம் சென்றது, திடீரென்று இடைவேளை ஸ்லைடு போடுகிறார்கள். பிறகு படம் துவங்கியதும் மற்றொருவர் தூங்கி குறட்டை விட்டதும் தியேட்டரில் அவனவன் தலையில் அடித்துக் கொண்டு அவரையும் எழுப்பி விட்டனர்.

படம் மொத்தம் ஒன்றரை மணிநேரம் தான் ஒடுகிறது. கொடுத்த பணம் வேஸ்ட். இதற்கு பதில் வித்தகன் படமாவது போயிருக்கலாம். ஜாக்கிசானின் 100வது படம் என்று போஸ்டரில் போட்டே படத்தை ஒட்டப்போகிறார்கள். ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், இது சத்தியமாக ஜாக்கிசான் படமல்ல. பொதுவாக சென்றால் சீன வரலாற்றை தெரிந்து வரலாம் அவ்வளவே.

நன்றி

ஆரூர் முனா செந்திலு


Thursday, November 17, 2011

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு, பால் விலை உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், ஆவின் பால் விலையும் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரைவை கூட்டத்துக்குப் பிறகு, அவர் இன்று மாநில மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்களாவன:

* மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பலமுறை கேட்டும் மத்திய அரசு பணம் ஒதுக்கவில்லை. மேற்கு வங்க அரசுக்கு மட்டும் உரிய நிதியை ஒதுக்கி வருகிறது.

* தமிழகத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் மரணப் படுக்கையில் உள்ளன.

* மின்சார வாரியம் கடன் சுமையில் உள்ளது. கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் உள்ளது. மரணப் படுக்கையில் உள்ள மின்சார வாரியத்தை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

* மின் துறையைப் போலவே போக்குவரத்து துறையும் மரணப் படுக்கையில் உள்ளது.

* மின் வாரியத்துக்கு ரூ.42 ஆயிரம் கோடி கடன் உள்ளது.

* அரசு போக்குவரத்துத் துறையும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. போக்குவரத்து கழகத்துக்கும் திவால் நிலையே நீடிக்கிறது.

* அரசு போக்குவரத்துத் துறை ரூ.6,150 கோடி கடனில் உள்ளது.

* ஆவின் நிறுவனத்துக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

* மின்சாரம், போக்குவரத்து, ஆவின் முதலிய துறைகளை காப்பற்ற வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

* இந்தத் துறைகளை காப்பற்ற வேண்டும் என்பதால், பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க முடியாது. இதேபோல், ஆவின் பால் விலை உயர்வையும் தவிர்க்க முடியாது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 24ரூபாயாக உயர்த்தப்படுகிறது

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


பத்திரிக்கை செய்தி


Wednesday, November 16, 2011

கில்மா கதைகளை எழுதிய நான்


இன்று இந்த சம்பவங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மிகவும் சிரிப்பாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது. நான் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்தது. திருவாரூர் .சோ. ஆண்கள். மேல்நிலைப் பள்ளியில் இந்த பள்ளி நூற்றாண்டு கால வரலாறு உடையது. இந்த பள்ளியில் தான் கலைஞர், பேராசிரியர் .அன்பழகன். முரசொலி மாறன் படித்தனர்.

இந்த பள்ளியில் நான் 1993ம் ஆண்டு 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பெண்களின் மீதான ஈர்ப்பு தோன்றிய காலம் அது. முதன் முதலாக கில்மா புத்தகம் படித்ததும் அந்த காலக்கட்டத்தில் தான். அப்பொழுது எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் சுதாகர் ராஜ் மற்றும் ராஜா. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். சினிமாவுக்கு, ஆற்றில் குளிக்க, தேர் திருவிழா ஆகியவற்றில் சேர்ந்தே இருப்போம்.


அந்த கில்மா புத்தகங்கள் படிப்பதற்கு என்றே ஓர் இடத்தை ஓதுக்கி வைத்திருந்தோம். அது விளமல் பகுதியில் ஆற்றங்கரையை ஒட்டியிருந்த சுடுகாட்டின் பின்புறம். பத்து ரூபாய் சேர்த்து ஒரு புத்தகம் வாங்கி அங்கு எடுத்துச் சென்று மூவரும் அமர்ந்து படிப்போம். பிறகு எங்களுக்குள் சந்தேகங்களையெல்லாம்(!) நாங்களே தீர்த்துக் கொள்வோம். இன்று யோசித்துப் பார்த்தால் அது பெரும்பாலும் தவறாகவே இருக்கும்(பெண்களைப் பற்றி எங்களுக்கென்ன தெரியும் நாங்கள் படித்ததெல்லாம் ஆண்கள் பள்ளியில் மட்டுமே). படித்த பிறகு புத்தகங்களை திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஒரு ண்டபத்தில் ஒளித்து வைத்திருப்போம். சில நாட்களுக்கு பிறகு வேறொரு நண்பர்கள் குரூப்புக்கு அந்த புத்தகங்களை கொடுத்து விட்டு அவர்களிடம் உள்ள புத்தகங்களை பெற்றுக் கொள்வோம்.

தினம் ஒரு புத்தகங்களை வாங்குவோம். ஆனால் எங்களுடைய பாக்கெட் மணிக்கு அவ்வளவு செலவு செய்வது சாத்தியமில்லாத காரணத்தால் என்னடா செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது என்னுடைய அத்தை பையன் மன்னார்குடியில் உள்ள சதீஷ் இதற்கு ஒரு தீர்வை சொன்னான். இந்த புத்தகங்களில் வரும் கதையெல்லாம் உண்மை கிடையாது, ஒரு டுபாங் (போலி) எழுத்தாளர் தான் எழுதுகிறார் என்றும், நீயே முயற்சித்துப்பார் எழுத முடியும் என்றும் கூறினான். (ஆக என்னை முதன் முதலில் அவன் தான் எழுதத்தூண்டினான், அதுவும் கில்மா கதைகளை, கருமம்) சரி என்று நாங்களே எழுத முடிவு செய்தோம்.

இரு குழுக்கள் தாங்கள் கதைகளை எழுதுவது என்றும் எழுதியவர்களே படித்தால் மேட்டர் சப்பென்று இருக்கும் என்ற காரணத்தினால் நாங்கள் எழுதிய கதைகளை அவர்களிடம் ஒப்படைத்து விடுவது என்றும் அவர்களின் கதைகளை நாங்கள் எடுத்துக் கொள்வது என்றும் முடிவானது. எழுத நோட்டு வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அப்பொழுதெல்லாம் ரப் நோட்டுக்காக ஒரு பக்கம் Dot Matrix Printerல் பிரிண்ட் எடுத்த பேப்பரினை வைத்து தைத்த நோட்டு கிடைக்கும் நல்ல நோட்டை விட குறைந்த விலைக்கு கிடைக்கும். ஒரு பெரிய நோட்டு 3ரூபாய். அந்த நோட்டை வாங்கி விட்டு அந்த சுடுகாட்டு பின்புறம் நானும் என் நண்பர்களும் கதை விவாதத்தை தொடங்குவோம். நான் தான் எழுதுவேன். ராஜாவும் சுதாகரும் கதையை சொல்வார்கள்.

அவர்கள் இருவரும் ஏதோ பெரிய எழுத்தாளர் போல் யோசிக்க நான் நடுநடுவே ஐடியாக்களை கொடுப்பேன். ஒரு வழியாக ஒரு நோட்டு முழுவதும் எழுதிய பிறகு நோட்டுகளை மாற்றிக் கொள்வோம். அதையெல்லாம் நினைத்தால் இன்றும் எனக்கு சிரிப்பு தாங்க முடியாமல் வரும்.

இன்றுள்ள பதின் இளைஞர்கள் (Teen Agers) செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் மிகச்சாதாரணமாக பிட்டுகளை பார்க்கிறார்கள். நமக்கே ஆலோசனை சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு கில்மா மேட்டரில் அறிவு இருக்கிறது. ஆனால் என் வயதில் புத்தகம் வாங்க வழியில்லாமல் நாங்களே எழுதிய கதை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டை தான்.


இன்று என் நண்பர்களில் சுதாகர் இல்லை. ஏழு வருடங்களுக்கு முன் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இடையே நடந்த சாலை விபத்தில் பலியாகி விட்டான். அவன் BE (சிவில்) முடித்தவன். அவனது கனவுகள் நிறைவேறும் முன் காலன் அவன் உயிரை பறித்து விட்டான். ராஜா திருவாரூரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான். நானோ சென்னையில் ரயில்வேயில் செக்ஷன் இஞ்சினியராக இருக்கிறேன். என்றோ நம் வாழ்வில் நடந்த சாதாரண சம்பவங்கள் பின்னாளில் நமக்கு வரலாறாகின்றன.

மலரும் நினைவுகளை நினைத்துப் பார்த்த மகிழ்ச்சியுடன்


ஆரூர் முனா செந்திலு

Tuesday, November 15, 2011

பெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள் - பகுதி 2



காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2. அதுவே காமராஜ் பிரிந்த நாளாகவுமாகியது. காந்தி மறைந்த செய்தி கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி, அன்றும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டது. புனிதன் போனால் பூவுண்டு நீருண்டு என்பது பெரியவர்கள் வாக்கு. அது காமராஜர் மறைவிலும் பொய்க்கவில்லை. அன்று விடாத மழையிலும் கூடப் காமராஜர் மறைவுச் செய்தி காட்டுத்தீயாக நாடு முழுக்கப் புயல் வேகத்தில் பரவியது.

உதடுகளிலே ஒரு மவுனப் புன்னகை, எளியத் தோற்றத்தில் பெருந்தலைவன் புகழோடு ஐக்கியமாகி விட்டான். தமிழகம் எங்கு நோக்கினும் கதறியழும் மனிதர்கள். ராஜாஜி மண்டபத்துக்கு அவர் உடலைக் கொன்டு செல்ல முடிவானது. அன்று மாலை 05.30 மணிக்கு விசேஷ மோட்டார் வண்டியில் காமராஜ் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.


மறைவு பற்றிய செய்தி அறிந்ததும் நாடெங்கும் எல்லாக் ட்சிக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காமராஜ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காந்தி ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்றும், தமிழ்நாடு அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கிராமங்கள், நகரங்களில் எல்லாம் தெருக்களிலும் வீடுகளிலும் தலைவர் படத்துக்கு மலையிட்டு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ராஜாஜி மண்டபம் மக்கள் கடலால் முற்றுகையிடப்பட்ட சிறு தீவு போல் விளங்கியது. மக்கள் வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். மூவர்ணக் கொடியால் காமராஜரின் உடல் போர்த்தப்பட்டு, ராஜாஜி மண்டபத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டது.


அப்போதைய தமிழக கவர்னர் ஷா, முதல் மந்திரி கருணாநிதி, புதுவை கவர்னர் சேத்திலால், தமிழக மந்திரிகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தமிழக தலைவர்கள், சிவாஜி கணேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். காமராஜரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் மயங்கி விழுந்தனர். மாரடைப்பு ஏற்பட்டு இரண்டு பேர் மரணம் அடைந்தனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. 20க்கும் அதிகமானோர் வரும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மாண்டனர். காமராஜரின் உடலைக் கண்டு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. 2மைல் தூரம் வரை இரண்டு மூன்று வரிசைகளில் தலைவர்கள் முகத்தை கடைசியாக கண்டுவிட மக்கள் திரண்டு நின்றனர்.

இரவு கொட்டும் மழையிலும், தலைவருக்கு நினைவாலயம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க முதல் மந்திரி கருணாநிதியும், காங்கிரஸ் செயலாளர் திண்டிவனம் ராமமூர்த்தியும், ராஜ்பவன் தோட்டத்திற்கு சென்றனர். மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தின் அருகே, இரண்டு ஏக்கர் நிலத்தில் நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

இரவில் வெளியூர் மக்கள் குவியத் தொடங்கினர்.

ஆரூர் முனா செந்திலு

S

Saturday, November 12, 2011

ஏழாம் அறிவு படத்தின் வசூல் விமர்சனங்களால் பாதிக்கப்படவில்லை

தீபாவளிக்கு வெளியாகும் முன்பே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படு்த்தியிருந்த படம் ஏழாம் அறிவு. சூர்யாவும் .ஆர். முருகதாஸ் ஏழு வருடங்களுக்கு பிறகு இணைவதாலும், நடிப்பின் இலக்கணமான கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் அறிமுகமாவதாலும். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பதாலும் எதிர்ப்பார்ப்பு எகிறியிருந்த படம் ஏழாம் அறிவு.

ஆனால் படம் வெளி வந்த பிறகு அத்தனை வலைப்பதிவுகளிலும், ஆனந்த விகடனைத் தவிர ஏறக்குறைய அனேக பத்திரிக்கைகளாலும் விமர்சிக்கப்பட்ட படமானது ஏழாம் அறிவு. வலைப்பதிவுகளில் அவரவர் ரேஞ்சுக்கு படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள்.

'ஏழாம் அறிவு' படம் சொன்ன போதிதர்மன் தமிழர் இல்லை, அவர் தமிழ்நாட்டில் தான் வாழ்ந்தார் என்பதற்கு எந்தவித எழுத்துபூர்வ ஆதாரம் இல்லை என்று பல்வேறு தகவல்கள் வலைப்பூக்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளியானது. இத்தகைய தகவல்களினால் இந்த வாரம் வரை வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டின் படி படத்தின் வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லை.

ஏழாம் அறிவு படம் தமிழ்நாட்டில் மட்டும் வெளியான 14 நாட்களில் 45 கோடி வசூல் செய்து இருக்கிறது. உலகம் முழுவதும் ஆன வசூலை பார்த்தால் கண்டிப்பாக படம் வணிக ரீதியான வெற்றி தான் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.

ஆரூர் முனா செந்திலு


Friday, November 11, 2011

பெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள். . .


இப்படியும் ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்பதை நம்பாத ஒரு தலைமுறையும் இங்கு வந்து விட்டது. இந்நிலையில் ஒரு அரசியல்வாதியின் இலக்கணமாக வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் கடைசி நாள் சம்பவங்களின் தொகுப்பு -

1975ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி காலை 06,30 மணிக்கு காமராஜர் எழுந்தார். காலைப்பத்திரிக்கைகள் அனைத்தும் அவரிடம் கொடுக்கப்பட்டன. எல்லாப் பத்திரிக்கைகளையும் படித்தார். பின்னர் குளித்து விட்டு வந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.

10 மணிக்கு காமராஜரை தினந்தோறும கவனிக்கும் டாக்டர் வந்து உடல் நிலையைப் பார்த்து இன்சுலின் ஊசி போட்டு விட்டு சென்றார். 11 ணியளவில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 50 பேர் காமராஜர் வீட்டிற்கு வந்தனர், அவரைப் பார்க்க விரும்புவதாக கூறினார்கள். உடல்நலமின்றி இருந்த காமராஜரின் அறைக்குள் அவர்கள் அனைவரும் நுழைந்தனர். இந்த சிறிய அறைக்குள் இத்தனைப்பேருக்கும் இடமில்லையே என்று காமராஜர் கூறியபடியே அறைக்குள் நுழைந்தார். அவரை கைத்தாங்கலாக வெங்கட்ராமன் அழைத்து வந்தார். அவரைப் பார்த்ததும் மாணவர்கள் காந்தி வாழ்க, காமராஜர் வாழ்க என்று கோஷமிட்டனர். மூன்று நிமிடம் அவர்களுடன் உரையாடிய காமராஜர் நிற்க முடியாமல் அவர்களிடம் விடைப்பெற்று சென்றார்.காங்கிரஸ் செயலாளர்களுக்கு 12 மணிக்கு செய்து அவர்களை வந்து சந்திக்கும்படி அழைத்தார். பின்னர் சிதம்பரம் நகர காங்கிரஸ் இணைச்செயலாளரும், பத்திரிக்கை நிருபருமான தணிக்கை தம்பி காமராஜரை சந்தித்து உரையாடினார். வழக்கமாக 1 மணிக்கு உணவருந்தும் காமராஜர் அன்று 01.30 மணிக்கு சாப்பிட்டார்.பாவக்காய் கறி, முளைக்கீரை மசியல், பருப்பு துவையல், மோர் சாதம் ஆகியவற்றை காமராஜரின் உதவியாளர் வைரவன் பறிமாறினார். உணவு அருந்தும் போது மின்விசிறி ஒடியபோதும் வியர்ப்பதாக கூறினார். வைரவன் அதெல்லாம் ஒன்றுமில்லை, பிரமை என்று கூறி காமராஜருடைய உடம்பை துடைத்து விட்டார்.

சாப்பிட்ட பிறகு பாத்ரூம் சென்று விட்டு தன்னுடைய படுக்கை அறைக்கு சென்றார். அவர் மணியடித்தால் தான் உதவியாளர் உள்ளே நுழைவது வழக்கம். இரண்டு மணிக்கு காமராஜர் மணியடித்தார். வைரவன் உள்ளே சென்று பார்த்தால் காமராஜருக்கு உடம்பெல்லாம் வியர்வையாக இருந்தது. ஆனால் அந்த ரூம் A/C செய்யப்பட்டிருந்த ரூம். பயந்து போன வைரவன் காமராஜரின் தலையை தொட்டுப் பார்த்தார். ஜில்லென்று இருந்தது. உடனே அவர் டாக்டரை கூப்பிடட்டுமா என்று காமராஜரிடம் கேட்டார். டாக்டர் செளரிராஜனுக்கு போன் செய்து தரும்படி காமராஜர் கேட்டார்

உடனே பல இடங்களில் தேடிப்பார்த்து அவர் எங்கிருக்கறார் என்று தெரியாததால் மற்றொரு டாக்டரான ஜெயராமனை போனில் பிடித்த வைரவன் காமராஜரை டாக்டரிடம் பேச வைத்தார். காமராஜர் டாக்டரிடம் A/C ஒடிக்கொண்டிருக்கிறது, ஆனால் வேர்க்கிறதே என்று கேட்டார். டாக்டர் மூச்சு திணறுகிறதா, மார்பில் வலியிருக்கிறதா என்று காமராஜரிடம் கேட்டு விட்டு உடனே புறப்பட்டு வருவதாக கூறினார். டாக்டரிடம் பேசி முடித்த பிறகு வைரவனை அழைத்த காமராஜர் வரும்போது ரத்த அழுத்தம் பார்க்கிற கருவியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லு, டாக்டர் வந்தவுடன் எழுப்பு, விளக்கை அணைத்து விட்டு போ என்று கூறினார். உதவியாளரும் விளக்கை அணைத்து விட்டு சென்றார். மூன்று மணியளவில் முதலில் காமராஜர் அவர்கள் தேடிய டாக்டர் செளரிராஜன் விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்குள் ஓடிவந்து அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே போனார்.

கட்டிலின் இடதுபுறம் திரும்பிக் கொண்டு இரண்டு கைகளையும் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு கால்களை மடக்கியவாறு காமராஜர் அவர்கள் படுத்திருந்தார். ஆனால் காமராஜரிடம் இருந்து வழக்கமாக வரும் குறட்டை ஒலி வராததை கண்ட டாக்டர் பயந்து போய் காமராஜரை தோளைத் தொட்டு எழுப்பினார். பதில் எதுவும் இல்லை. நாடித்துடிப்பை பார்க்கலாம் என்று கையைத்தொட்டார். ஜில்லென்று இருந்தது. கையில் இருந்த ரத்த அழுத்தக் கருவியையும், ஸ்டெதஸ்கோப்பையும் தரையில் அடித்து, அழுது புரண்டார். அதற்குள் வந்த டாக்டர் ஜெயராமன் நிலைமையைப் பார்த்து நேரிடையாக இதயத்திற்குள் ஊசி மருந்தை செலுத்த முயன்றார். பயனில்லை. அடுத்ததாக டாக்டர் அண்ணாமலையும் அங்கு வந்தார். அவரும் முயற்சித்துப் பார்த்து விட்டு வெளியில் வந்து அதிகாரப்பூர்வமாக காமராஜர் இறந்து விட்டதை அறிவித்தார். அப்போது மணி 03.20.

காந்தியத்தின் கடைசி தூண் சாய்ந்தது.

ஆரூர் முனா செந்திலு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...