சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, April 25, 2014

வாயை மூடி பேசவும் - சினிமா விமர்சனம்

இன்னிக்கி சினிமாவுக்கு போகனும் என்றெல்லாம் திட்டமில்லை. பதினோரு மணிக்கு அவசர வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு பணம் போட சென்றேன். அவர்களிடம் பணம் போடுவதற்கு குறைந்தது ஒரு மணிநேரமாகும். ஆனால் இன்று பணம் போடுவதற்கு மிசின் வைத்திருக்கிறார்கள். ஐந்து நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. பிறகென்ன நேரம் நிறைய இருந்ததால் வண்டியை சினிமாவுக்கு விட்டேன்.


இது சரியாக எல்லோராலும் கணிக்க முடியாத படம், சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காது. இன்னும் சிலரை மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விடும். எனவே இந்த விமர்சனம் எனது பார்வையில் மட்டுமே.

பனிமலை என்ற ஊரில் வாழ்ந்து வரும் மக்களிடையே ஒரு அபூர்வ நோய் பரவுகிறது. அதாவது வைரஸ் கிருமி தாக்குதலால் பேசும் தன்மையை மக்கள் இழக்கத் தொடங்குகின்றனர். அரசாங்கம் சுகாதாரத்துறை அமைச்சரை அனுப்பி தீர்வு காண பார்க்கிறது. 


ஆனால் நோய் முற்றி மரணம் வரை செல்கிறது. வாயைத் திறந்து பேசியதால் மரணம் சம்பவித்தது தெரிய வருகிறது. இதனால் பீதியாகும் அரசு பனிமலையில் மக்கள் வாயைத் திறந்து பேச தடை விதிக்கிறது. மக்கள் பேசுவதை முற்றிலும் நிறுத்தி விட்டு சைகையாலேயே பேசிக் கொள்கின்றனர். 

இறுதியில் அரசு இதற்கு மருந்து கண்டுபிடித்து மக்களுக்கு நோயை குணமாக்குகிறது. இது தான் கதை. 


அய்யய்யோ இது தான் கதைன்னு நினைச்சீங்கன்னா அது தப்பு, இது கதையல்ல, இது தான் படத்தின் ப்ளாட்பார்ம். 

இந்த பிளாட்பார்ம்மில் துல்கரும் நஸ்ரியாவும் ஓட்டும் அழகான காதல் கதை தான் படம். கூடவே ரோபோ சங்கர் மற்றும் குழுவினர் ஒரு தள்ளுவண்டியும், இயக்குனர் நியுஸ் சானல் அறிவிப்பாளராக ஒரு தள்ளுவண்டி, ஜான்விஜய் ஓட்டும் ஒரு தள்ளுவண்டி, அர்ஜுனன் காதல் கதை ஒரு தள்ளுவண்டி, வினுசக்கரவர்த்தி அவர் இடத்தில் நடக்கும் அனாதை இல்லம் ஒரு தள்ளு வண்டி என எல்லாம் கலந்து கட்டி ஓடுகிறது.

எவ்வளவு தான் விழிப்பாக இருந்து பார்த்தாலும் ஒரு வித அயர்ச்சி ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. ஆனால் வித்தியாசமான முயற்சி தான். 


துல்கர் சல்மான் தமிழுக்கு இனிய வரவு. அந்த ப்ரெஷ்னஸ் தான் அவரது பலம். உற்சாகமான நடிப்பு அவர் முகத்தில் துள்ளி விளையாடுகிறது. டயலாக் டெலிவரி, சிறுபுன்னகை, பாஸிட்டிவ் மனோபாவம், துறுதுறுப்பு என டிஸ்டிங்சனில் பாஸாகிறார். சரியான படத்தை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கான எதிர்காலம் தமிழ்சினிமாவில் பிரகாசமாகவே இருக்கிறது.

நஸ்ரியா அமைதியான மருத்துவர். அனாவசியமாக பேசாதவர், வேறொருவனை காதலிக்கும் அவர் துல்கரை கண்டால் உற்சாகமடைவதும் மற்றவர்களை கண்டால் சோகமாக இருப்பதுமாய் இருக்கிறார். சாக்லேட் சாப்பிடும் போது காட்டும் எக்ஸ்பிரசன் சூப்பர். நமக்கும் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையே வருகிறது.

அர்ஜுனன் காதல் எபிசோடுகள் படத்தின் ஆகப்பெரும்பலம். ஒவ்வொரு முறையும் அவர் காதலை சொல்ல முயற்சித்து பிறகு வார்த்தை குழறி கெட்ட வார்த்தை பேசுவதும், காதலியிடம் காதலை சொல்லப் போய் பேசும்திறன் இழந்து அதனால் காதலை பெறும்போதும் பட்டையை கிளப்புகிறார். இன்னொசன்ட் முகம் தான் அவர் பலம்.

ரோபோ சங்கர் குடிகாரர்களின் சங்கத் தலைவனாக வந்து படம் முழுக்கவே சரக்கடித்து அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார். சினிமா நாயகனாக வந்து மொக்கைப் படங்களாக நடித்து கடுப்பேற்றும் பாத்திரத்தில் ஜான் விஜய், வெல்டன்.

பாண்டியராஜன் அப்பாவி அமைச்சராக வந்து மக்களிடையே பேச முடியாமல் பேசமுடியாதது போல் நடித்து இறுதியில் பரிசோதனை முயற்சியில் குரலையே இழக்கிறார்.

மதுபாலா நீண்ட இடைவேளைக்குப் பிறகு திரையில், பெரிய ஈர்ப்பு ஒன்றுமில்லை. நல்லா சாப்பிட்டு உடம்பை தேத்துங்கம்மா இப்படியெல்லாம் இருந்தா நம்ம ஆட்களுக்கு பிடிக்காது.

பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை, பார்க்க நல்லாயிருக்கிறது. அவ்வளவு தான். பெரிய திருப்பங்களோ ஆச்சரியங்களோ இல்லாத திரைக்கதை இடைவேளை தாண்டி சற்று நொண்டியடிக்கிறது. தியேட்டரில் இருப்பவன் எல்லாம் கடுப்பாகி புலம்ப ஆரம்பித்து விட்டான். 

எனக்கு இரண்டாம் பாதி சைகை மொழி பிடித்து இருந்தது. க்ளைமாக்ஸ்க்கு முன்பு வரை படத்தில் கை, கண் அசைவு மொழி தான்.
 
 ந்ல்ல ஒரு காதல் படம் வித்தியாசமான ப்ளாட்பார்மில், சினிமா ஆர்வலர்கள் ரசிக்கலாம்.  இல்லையென்றால் கழுவி ஊற்றலாம். எனக்கு டபுள் ஓகே.

ஆரூர் மூனா

Friday, April 18, 2014

தெனாலிராமன் - சினிமா விமர்சனம்

வடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை தாண்டி விடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் நடந்தது என்ன, வேறென்ன எனக்கு விபத்து தான். இதுல கூடுதலா ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு போய் அந்த காசும் எனக்கு தண்டம்.


மூன்று வருடம் கழித்து பார்ப்பதாலோ என்னவோ நமக்கு வடிவேலுவின் காமெடிகள் அவுட் ஆப் பேசனாக தெரிகிறது. வெறும் உடல்மொழியால் செய்யும் அலப்பறைகள் போரடிக்கின்றன.

வடிவேலு சார், மீண்டும் வந்து இருக்கீங்க, சந்தோஷம், ஆனா இந்த மாதிரி சோதனை முயற்சிகளை கைவிட்டு மீண்டும் ஜனரஞ்சகமான நகைச்சுவைக்கு வாங்க, உங்க இடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறது. இதுபோன்ற உங்கள் பரிசோதனைக்கு நாங்கள் என்ன சோதனை எலியா.


என்பதுகளில் பிறந்தவர்கள் அனைவரும் அம்புலிமாமா புத்தகத்திலும், மற்ற கதைபுத்தகத்திலும், தாத்தா பாட்டிகள் கதையாக சொல்லியும் கேட்ட கதை தான் தெனாலிராமன். அதே கதையை அதே போல் அமெச்சூர்த்தனமாக படமாக்கி நம்மிடம் கொடுத்து இருக்கிறார்கள்.

கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் தெனாலிராமன் அரசவையில் ஒரு அமைச்சர் பதவி காலியாக இருப்பதை அறிந்து தன் மதியூகத்தால் அந்த பதவியை அடைகிறான். ஆனால் அவன் வந்தது ஊழல் பேர்வழிகளான மற்ற மந்திரிகளுக்கு பிடிக்கவில்லை. 


தந்திரம் செய்து தெனாலிராமனை அரசவையை விட்டு வெளியேற்றுகிறார்கள். பிறகு எப்படி தெனாலிராமன் அரசரை திருத்தி கெட்டவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுகிறான் என்பது தான் படம். 

உங்களுக்கு 23ம் புலிகேசி கதையைப் போலவே இருக்குமே. அதே தான் படம் புலிக்கேசியை தழுவி எடுக்கப்பட்ட ரீமேக் தான் இந்த படம்.

வடிவேலுவுக்கு இந்த படம் தானே எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. அதனால் கொடுத்த காசை விட ரெண்டு மடங்கு அதிகமாகவே கூவுகிறார். நமக்கு தான் காது ஜவ்வு கிழிந்து தொங்குகிறது. 


திரையில் உடல்மொழியாலும் வசனஉச்சரிப்பாலும் விழுந்து விழுந்து காமெடி செய்து கொண்டு இருப்பார் வடிவேலு. ஆனால் அரங்கில் மட்டும் மயான அமைதி. நான் படம் முழுவதுமே அப்படித்தான் இருந்தேன். யோசித்துப் பார்த்தால் ஒரு இடத்தில் கூட நான் சிரிக்கவேயில்லை.

பாடல்கள் எல்லாம் வேகத்தடை தான். பார்க்கும் போது சலிப்பு தட்டுகிறது. 

இந்தப்படத்தின் இயக்குனர் யுவராஜ் இயக்குனர் சிம்புதேவனின் ரசிகராக இருப்பார் போல இருக்கிறது. அதனால் தான் சில சமூக கருத்துக்களை அதாவது உலகமயமாக்கல் போன்ற விஷயங்களை எடுத்து அங்கங்கே அவரைப் போலவே விரவியிருக்கிறார். ஆனால் அது பொருந்தவேயில்லை.

நாயகி அழகாக மட்டும் இருந்தால் போதுமா. ஒரு படம் எடுக்கும் போது நாயகிக்கு வசனம் சொல்லிக் கொடுத்து  உச்சரிக்க சொல்லும் அளவுக்கு கூட உழைப்பில்லையென்றால் எப்படி. ப்ராம்ட் கூட ஓழுங்கில்லாமல் அவர் ஏதோ ஒன்றுக்காக வாயசைக்கிறார். வசனம் ஏதோ ஒன்று வருகிறது. அடப் போங்கப்பா.

படத்தில் மெச்சக்கூடிய விஷயங்கள், ஆர்ட் டைரக்ஷனும், ஒளிப்பதிவும் தான், கச்சிதமாக இருக்கிறது. மற்றபடி உங்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரை மட்டுமல்ல, ஒரு டிக்கெட்டை 120ஓவா கொடுத்து வாங்கிப் பார்க்கும் என்னைப் போன்ற ரசிகர்களையும் இப்படி அம்போன்னு விட்டுடீங்களே அப்பு.

தெனாலிராமன் - பழைய மொந்தை ரொம்ப புளிச்ச பழைய கள்ளு

ஆரூர் மூனா

Friday, April 4, 2014

மான் கராத்தே - சினிமா விமர்சனம்

காலையிலேயே பேஷா படத்தை பார்த்தாகி விட்டது. படத்தில் நிறைய ஜோக்குகள் இதற்கு முன்பே நிறைய படங்களில் வந்து இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் விசிலடித்து ரசிக்கிறோம். காரணம் அதை சொல்பவர் சிவகார்த்திகேயன்.


ஏற்கனவே நிறைய படங்களில் வந்த க்ளிஷே காட்சிகள் இருக்கின்றன. ஆனாலும் ரசிக்கிறோம் காரணம் அந்த காட்சிகளில் இருப்பவர் சிவகார்த்திகேயன். நாம் ஏற்கனவே தொலைக்காட்சி புண்ணியத்தில் சிவகார்த்திகேயனை நம்ம வீட்டு ஆளாக ஏற்றுக் கொண்டு விட்டோம். அவர் அதற்கான பலனை சினிமாவில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு தெரிந்து 2005 அல்லது 2006 காலகட்டத்தில் சாதாரணமாக சிவகார்த்திகேயன் முன்வரிசையில் இருக்க நான் உதயம் திரையரங்கில் ஏதோ ஒரு படம் பார்த்து இருக்கிறேன். இன்று ராக்கியில் காலை 08.30 மணி சிறப்பு காட்சி சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த படத்தை பார்க்கிறேன். 

சாதித்து விட்டாயடா சிவகார்த்திகேயா. 



நான்கு கம்ப்யுட்டர் இஞ்சினியர் நண்பர்களுக்கு சாமியார் மூலமாக சில மாதங்களுக்கு பிறகு வரவேண்டிய நாளிதழ் கிடைக்கிறது. அதில் உள்ள செய்திப்படி குத்துசண்டை போட்டியில் பீட்டர் என்பவர் குத்து சண்டை போட்டியில் இரண்டு கோடி வெற்றி பெற்று இருக்கிறார்.

ஆனால் உண்மையில் பீட்டர் ராயபுரத்தில் வெட்டியாக சுற்றிக் கொண்டு இருக்கும் வாலிபன். குத்துசண்டை பற்றி அனாஆவன்னா கூட தெரியாது. அவனை ஸ்பான்சர்ஷிப் செய்து அவனுக்கு கிடைக்கப் போகும் பரிசுப்பணத்தை பெற நினைக்கிறார்கள். இது நடந்ததா என்பது தான் படத்தின் கதை.


இதை பேப்பர் நியுஸ், சாமியார் என்ற மோல்ட்டை எடுத்து விட்டு பார்த்தால் சாதாரண கதை தான். ஆனால் அந்த மோல்ட் தான் படத்திற்கு ஒரு விறுவிறுப்பை கொடுத்து சுவாரஸ்யப்படுத்தி இருக்கிறது.

நாயகனாக சிவகார்த்திகேயன், நமக்கு பிடித்த ஆள் ஆகிட்டாப்ல. அதனால் நாம் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். நன்றாக நடிக்கிறார். மாஸ் ஹீரோ ஆகி விட்டார். கதையை தேர்ந்தெடுப்பதில் சறுக்காமல், எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல், பில்ட்அப் காட்டாமல் இப்படியே தொடர்ந்தால் தமிழ்சினிமாவின் மணிமகுடம் சாருக்கு தான்.


ஹன்சிகா நாயகியாக இளைத்து அசத்தியிருக்கிறார். நடித்தே ஆக வேண்டிய பாத்திரம் என்பதால் நடித்து இருக்கிறார். நடிப்பு என்றால் நடிகர்திலகம் அளவுக்கு இல்லை. அவர் பாக்கெட் பேனா அளவுக்கு தான்.டார்லிங் டம்பக்கு பாடல் முன்பே டீசராக வந்த போது அசத்தியிருந்தது. குட்டைப் பாவாடையில் ஆட்டம்  போட்டு இளசுகளின் இதயத்தில் பால் வார்த்து இருக்கிறார்.

படத்தில் சதீஷின் ஒன்லைனர் காமெடிகள் கைதட்டல்களை அள்ளுகிறது. சதீஷ் வாகை சூடவா படத்தில் தான் கவனிக்க வைக்கும் அளவுக்கு சில காட்சிகள் நடித்து இருந்தார்.  மூன்று வருடத்திற்குள் பிரமிக்க வைக்கும் வளர்ச்சி. இன்னும் சில படங்கள் இது போல் அமைந்தால் சந்தானம் சீட்டை பறித்து விடுவார்.

ஏற்கனவே ஹிட்டான பாடல்கள் பார்ப்பதற்கும் குளுகுளுவென்று இருக்கிறது. 

சூரியும் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் வந்து அபத்த காமெடியா இருந்தாலும் அதை மூளைக்கு எட்ட விடாமல் சிரிக்க வைத்து விட்டு செல்கிறார்.

சிவா ப்ரிமிலினரி ரவுண்டுகளில் ஜெயிப்பதை சற்று காமெடி குறைத்து விட்டு அவர் முயற்சியில் ஜெயிப்பது போல் இருந்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்கும். பைனல் வரை ஜாலியாக வந்து விடுவது தான் லைட்டாக உறுத்துகிறது.

மற்றபடி எந்த குறையும் இல்லை. குடும்பத்துடன் சென்று கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் சிரித்து விட்டு வரலாம். இந்த ஆண்டின் கோடை விடுமுறையை நிறைவாக்க வந்திருக்கும் எண்டர்டெயினர் மூவி.

ஆரூர் மூனா.

Friday, March 21, 2014

குக்கூ - சினிமா விமர்சனம்

ஏகப்பட்ட வேலைகளும் அழுத்தங்களும் இருந்ததால் இன்று சினிமாவுக்கு போவது சந்தேகமாகவே இருந்தது. வட்டியும் முதலும் தொடரின் காரணத்தால் ராஜு முருகனுக்காகவே படம் பார்க்க வேண்டும் என்று முன்பே முடிவு செய்திருந்தேன். 

 

இரு மனதாக இருந்த போது நண்பர் மயில் ராவணன் காலையிலேயே மெசேஜ் அனுப்பியிருந்தார். மதியம் 12மணிக்கு அழைக்கவும் செய்தார். நான் டிராபிக்கில் இருந்ததால் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி போனை வைத்தேன். பிறகு யோசித்து அவருக்காகவே படம் பார்க்க சென்றேன்.
 படம் பார்க்கும் போதும் அழைத்தார். ஆக இந்த விமர்சனம் நண்பர் மயில்ராவணனுக்காக.

எனக்கு ஒரு பழக்கம் உண்டு. படம் பார்க்கும் போது கதாபாத்திரங்களுடன் நானும் பயணிப்பேன். சிரித்தால் சிரித்து, அழுதால் அழுது அவர்களுடனே இருப்பேன். அந்த மனஉணர்வுகளுக்கு சரியான தீனி இந்த படம்.


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே படம்.


இது போன்ற மென்சோகப் படங்களில் சோகத்தை இன்னும் திணிக்கிறேன் என்று கொடுமையான க்ளைமாக்ஸை கொடுத்து பார்ப்பவர்களை ரணகளமாக்கி விடுவார்கள்.

அதைத்தான் நானும் நினைத்தேன், படத்தை தவிர்க்க நினைத்த காரணங்களுள் இதுவும் ஒன்று. எனக்கு மிகவும் பிடித்த அங்காடி தெரு படத்தில் நேர்ந்தது போல இதிலும் எதுவும் நடந்து விடக்கூடாது என்று நினைத்தேன். அப்படி எதையும் செய்யாத நண்பர் ராஜுமுருகனுக்கு பூங்கொத்துகள் அர்ப்பணம்.

மனிதனின் மனஉணர்வுகள் மிகவும் நுட்பமானவை, அவற்றை சரியாக கட்டுரையாக்கம் செய்வதில் வல்லவரான ராஜுமுருகன், படமாக்குவதிலும் முதல் படத்திலேயே பர்ஸ்ட் கிளாஸை தாண்டி இருக்கிறார். 


நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.

நாயகனின் பார்வையற்ற நண்பர் இயல்பாக சிறப்பாக பெர்பார்மஸில் அசத்தியுள்ளார். சந்தானத்திற்கு நிகரான டைமிங் கவுண்ட்டர் கொடுத்து அரங்கை கலகலக்க வைக்கிறார். 

எனக்கு மான்டேஜ் பாடல்கள் தான் பிடிக்கும். இருவரின் புரிதல்களை, மனஓட்டத்தை சிறு சிறு காட்சிகளாக எடுத்து ஒரே பாடலில் பார்க்கும் போது மனது ரெக்கை கட்டி பறக்கும். 

நிறைய மலையாள படங்களில் காதல் பாடல்கள் மான்டேஜ் பாடல்களாகத் தான் இருக்கும். அதற்காகவே நிறைய மலையாள பாடல்களை பார்ப்பேன். அதே போல் இந்த படத்திலும் பாடல்கள் மான்டேஜ் இருப்பது என்னை இன்னும் படத்திற்குள் ஈர்த்தது.

படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு  பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

படத்தில் கிறிஸ்துவராக வரும் நாயகி எப்படி பொட்டு அணிகிறார் என்று தான் புரியவில்லை. சென்னையில் பொதுவாக ஆர்சி மற்றும் பெந்தகோஸ்து பிரிவு கிறிஸ்துவர்கள் தான் இருக்கின்றனர். ஆனால் இருவருமே நெற்றியில் பொட்டு வைக்க மாட்டார்கள். பின்ன எப்படி ஒரு வேளை எனக்கு தெரியாமல் இன்னுமொரு பிரிவும் இருக்குமோ.

முதல் பாதி வட்டியும் முதலும் படிப்பது போலவே எனக்கு தெரிந்தது. அவ்வளவு பேரின்பம். இரண்டாம் பாதி சற்று அலுப்பையும் அயற்சியையும் தருகிறது. க்ளைமாக்ஸ் ஓவர் சோகத்திற்கு வித்திடுகிறது.

இருந்தாலும் இந்த படத்தின் முயற்சிக்காகவும், பெண்மையை போற்றியதற்காகவும், என் ஊர்க்காரரான ராஜுமுருகனுக்காகவும், மான்டேஜ் பாடல்களுக்காகவும் இன்னொரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Sunday, March 9, 2014

நிமிர்ந்து நில் - சினிமா விமர்சனம்

சமுத்திரகனியின் ஆகச் சிறந்த பலமே அவரின் சமூக அக்கறை தான், சொல்ல வந்ததை மறைமுகமாக கூட சொல்லி விடுவார். எனக்கு அவரை உன்னைச் சரணடைந்தேன் படம் முதலே பிடிக்கும்.


இந்த படம் கூட ஏதாவது சமூக கோவம் அதற்கான விழிப்புணர்வும் இருக்கும் என ஒருவாறு யூகித்தேன்.அதற்கேற்றாற் போல் தான் முதல் பாதியும் இருந்தது. ஆனால் இரண்டாம் பாதி முதல் பாதியின் ஹைப்புக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறி விட்டது. க்ளைமாக்ஸ் தான் படத்தின் மைனஸ்.

நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்


ஆசிரமத்தில் நேர்மையாக வாழ போதிக்கப்பட்டு படிப்பு முடிந்து வெளிவரும் ஜெயம்ரவி சட்டம் ஒழுங்கை மக்கள் மதிப்பதில்லை என்ற நிஜமே புரிய மறுக்கிறது.

அப்பாவியாக ஒரு சிக்னலில் டிராபிக் போலீஸிடம் மாட்டும் ரவி 100 ரூபாய் லஞ்சம் தர மறுக்கிறார், அதனால் ஏற்படும் சிக்கலில் போலீஸில் மாட்டி நீதிபதியிடம் சிக்கி தண்டனை பெறுகிறார். வெளி  வரும் ரவி எல்லா அதிகாரிகளையும் பற்றி மேலிடத்தில் புகார் தருகிறார்.


சிக்கலுக்கு உள்ளாகும் அதிகாரிகள் ரவியை தாக்கி விடுகிறார்கள். ஒரு கட்டத்தில் வாழ்வதற்காக ஊரை விட்டே செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால் எதிர்த்து நிற்கும் ரவி சமூகத்தையே திருத்த நினைக்கிறார்.

அதற்காக இல்லாத ஒரு ஆளுக்காக அனைத்து அரசு அடையாள அட்டைகளையும், சான்றிதழ்களையும் பெறுகிறார் நல்ல அதிகாரிகளின் துணை கொண்டு.


நீதிபதி, டாக்டர், போலீஸ், எம்பி என 147 பேர் இந்த ஊழலில் சிக்குகிறார்கள். அனைவரையும் மக்கள் முன்னாலும் சட்டத்தின் முன்னாலும் நிறுத்துகிறார் ரவி. அனைத்து அதிகாரிகளும் சிக்கிக் கொள்கிறார்கள்.

இடைவேளை வரை இவ்வளவு தான். ஊழலில் மாட்டிய அனைத்து அதிகாரிகளும் ஒன்று சேர்ந்து ரவியை எதிர்க்கிறார்கள். மேற்கொண்டு என்ன நடந்தது என்பது தான் படம்.

இந்தியன், சாமுராய், சிட்டிசன் போன்ற படங்களின் நினைவுகள் அவ்வப்போது வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

ஜெயம்ரவிக்கு கேரியரில் இந்த படம் மிக முக்கியமான படம் தான்.சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார். இயலாமையில் பொறுமும் போதும், விட்டேத்தியாக காதலிக்கும் போதும், நரசிம்ம ரெட்டியின் பாடி லாங்குவேஜிலும் அசத்தியிருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிறது.

அமலாபால், அவரின் முகம் பார்த்ததுமே படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது என்பது அப்பட்டமாக தெரிகிறது. படத்தில் வந்து செல்கிறார். அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.

நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக  செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

சரத்குமார் இன்டர்வெல் பிளாக்குக்கு மட்டும் தேவைப்பட்டு இருக்கிறார். எனக்கு இதில் பெரிய ஆச்சரியம் கு.ஞானசம்பந்தனின் நடிப்பும் நகைச்சுவையும் தான். இனி நகைச்சுவை நடிகராகவும் அசத்தப் போகிறார். அவரின் முகபாவங்கள் இயல்பாகவே நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன.

பாடல்கள் எல்லாமே ஸ்பீடுபிரேக்கர்கள் தான். படத்தின் துவக்கமே படத்தில் ஏதோ ஒரு விஷயம் இருக்கப் போகிறது என்பதை உணர்த்துகிறது. படமும் அதற்கேற்றாற் போல் தான் நகர்கிறது.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது, சற்றே மிஸ்ஸாகி ஆவரேஜ் படமாகிவிட்டது.

மற்றபடி முயற்சிக்கு பாராட்டுகள் சமுத்திரகனி.

ஆரூர் மூனா

Friday, February 21, 2014

பிரம்மன் - சினிமா விமர்சனம்

தொழிற்சாலையில் நேற்று குடித்த குடிநீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்படாததால் நேற்றிலிருந்து காய்ச்சல், சளி, த்ரோட் இன்பெக்ஷன், பேப்பரை சுருட்டி ஓவராக காது குடைந்ததால் காதுவலி, கூடவே வீரசாகசம் காட்டுகிறேன் என்று நேற்று ரயில் பெட்டியில் இருந்து குதித்ததால் கால் பிசகி ஒருசேர பெரும் நோயாளியாகி ரெஸ்ட்டில் இருந்தேன். இன்று சினிமாவுக்கு போகும் மூடெல்லாம் இல்லை.


ஆனால் பாருங்கள் நேற்று போட்ட மாத்திரைகளில் விளைவாக காலையில் எல்லாமே லேசாக குறைந்திருந்தது. பத்து மணிக்கு உடலில் பலம் சேர்ந்ததால் டொய்ங்கென்று மண்டையில் கொம்பு முளைத்தது. வீட்டில் யாரிடமும் சினிமாவுக்கு போகிறேன் என்று சொல்லாமல் கிளம்பி அரங்குக்கு வந்து விட்டேன். 

அது என்னமோ தெரியவில்லை, சசிக்குமாரின் எல்லாப் படத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து விடுகிறேன். சுப்ரமணிபுரம் முதலே நடந்து வரும் விஷயம் இது. ஆனால் பெரும்பாலான படங்கள் ஏமாற்றியதில்லை. ஆனால் இந்த படம் கொஞ்சம் அதிகமாகவே நெஞ்சை நக்கி விட்டது.


படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.

திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்கும் கூடவே டைம்பாஸ்க்கு காதலிக்கும் ஹீரோ. அவரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம். அவரையும் எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி.


திரையரங்கிற்கும் காதலுக்கும் பணத்தேவையின் காரணமாக சிக்கல் வர நாலாம் வகுப்பு வரை உடன் படித்த நண்பன் சினிமாவில் பெரிய இயக்குனராக இருப்பதை அறிந்து அவரிடம் உதவி கேட்க சென்னை வரும் ஹீரோ, எதேட்சையாக இயக்குனராகிறார். 

நண்பனுக்காக அந்த வாய்ப்பையும், தன் காதலியையும் விட்டுத் தருகிறார். மீண்டும் அந்த திரையரங்கமும் காதலியும் நாயகனுக்கு கிடைப்பதை கொட்டாவி விட வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.


தனக்கு வராத ஏரியாவான ரொமான்ஸ், நடனம் போன்றவற்றிலும் சிரத்தை எடுத்து செய்திருக்கிறார். சில இடம் நம்மை கஷ்டப்படுத்தினாலும் பல இடத்தில் அசால்ட்டாக பாஸ் செய்து கடந்து போகிறார்.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். அந்த சதைப்பத்து இல்லாத கன்னத்திலும் குழி விழுவது அழகாக இருக்கிறது. அதை தாண்டி எதுவும் சொல்வதற்கில்லை.

சந்தானம் ஒன்லைனர்களால் திரையரங்கில் சிரிப்பு வெடி பற்ற வைக்கிறார். கடைசி அரைமணிநேரத்தில் பெர்மார்மன்ஸிலும் பின்னுகிறார்.சூப்பர் சந்தானம்.

சென்னையில் நான் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நான் எதிர்பார்த்தது சந்தானம் சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். என்ன பஞ்சாயத்தோ என்ன அரசியலோ யாமறியேன் பராபரமே.

அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது சம்பாதித்து தியேட்டர்  ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் இருக்கிறது. 

திருப்பதி பயணமும், அங்கு ஒரு சினிமாவும், தேவையில்லாத சண்டைக் காட்சியும் நேரத்தை கடத்த மட்டுமே பயன்பட்டு இருக்கின்றன.

ஏற்கனவே சில முறை கேட்டதால் பாடல்கள் ஒன்றிரண்டு பிடிக்கிறது. 

போதும் இதற்கு மேல் விம் வைத்து விளக்க எதுவுமில்லை. எனக்கும் பசிக்கிறது, அதனால் இத்துடன் எல்லாத்தையும் முடித்துக் கொள்வோம்.

படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம். 

ஆரூர் மூனா

Friday, February 14, 2014

இது கதிர்வேலன் காதல் - சினிமா விமர்சனம்

ஒரு பேமிலி எண்டர்டெயினர்னா என்ன வேணும், வயசுக்கு வந்த பொண்ணுங்க குடும்பத்துடன் அரங்கிற்கு போய் அமர்ந்தால் முகம் சுளிக்கவைக்காமல், தந்தைக்கு மகள் பக்கத்தில் இருந்தால் நெளிய வைக்காமல் இருக்க வேண்டும். 


நான் என் பதினைந்து வயதில் என் அப்பா, பெரியப்பா, அக்காக்கள், மாமன் பொண்ணுகள், அம்மா, பெரியம்மா, புதிதாய் திருமணமான அக்கா, அத்தான் சகிதம் பெரிய குடும்பமே திருவாரூர் தைலம்மை அரங்கிற்கு பெரிய குடும்பம் என்ற படம் பார்க்க சென்றிருந்தோம்.

படத்தின் காட்சிகளை பார்த்து பெரியப்பா நெளிய எங்கப்பா என்னை உட்டு ராவ பெரிய ஏழரையாகி விட்டது. குடும்பத்தினர் எல்லோரும் என்னை காறித்துப்பினர். ஏனென்றால் குடும்பமே ஆசை படத்துக்கு போகனும் என்று சொல்ல நான் தான் வற்புறுத்தி இந்த படத்திற்கு அழைத்து வந்தேன். எல்லாம் என் கெரகம்.


உதயநிதிக்கு அது சரியாக புரிந்திருக்கிறது. தன்னால் ஆக்சனோ, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் காமெடியோ, ரப்பர் டான்ஸோ, எக்ஸ்பிரசன் நிரம்பிய நடிப்போ வராது என்று தெரிந்த பின்னர் தன் வழியை பேமிலி எண்டர்டெயினர் சினிமா பக்கம் திருப்பி விட்டார். 

கண்களில் எக்ஸ்பிரசன் வராது என்று முடிவெடுத்த காட்சிகளில் ரேபன் கிளாஸை வைத்து சமாளித்தது கூட புத்தசாலித்தனமான ஐடியா தான்.


படம் அந்த வகையில் வெற்றிப்படம் தான். இன்று அரங்கிற்கு வந்த பெரும்பாலான காதலர்கள், சில குடும்பத்தினர் கைதட்டி ரசித்து சிரித்தனர். இந்த லெவல் படத்திற்கு இது போதும்.

படத்தின் கதை என்னன்னா, அக்காவின் குடும்ப பிரச்சனையை தீர்க்க மதுரையைச் சேர்ந்த ஆஞ்சநேய பக்தரான உதயநிதி கோவை வருகிறார். அங்கு நயன்தாராவை சந்தித்து காதல் கொள்கிறார். சில பல கலாட்டாக்களுக்கு பிறகு காதல் கைகூடுகிறது.


குடும்பத்தினரின் எதிர்ப்பை சமாளித்து காதலியை கைப்பிடிப்பதே படத்தின் கதை. ஆனால் சரியான விகிதத்தில் எல்லாவற்றையும் கலந்து சொன்ன விதத்தில் இயக்குனர் அசத்தியிருக்கிறார். சில நெருடல்கள் இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்த தேவையில்லை.

எனக்கு ஒரு திறமை உண்டு. அது எதுலனா சமையலில். நான் பெரிய கை தேர்ந்த சமையற்காரன் கிடையாது. பத்து வகை பதார்த்தங்களுக்கு மேல் சமைக்கத் தெரியாது. இன்னும் உப்புமாவுக்கு சரியான அளவில் தண்ணீர் ஊற்றத் தெரியாது. ஒன்னு கெட்டியாகிடும், இல்லைனா கஞ்சி மாதிரி இருக்கும்.

ஆனால் மற்ற பதார்த்தங்களில் சுவையை அடிச்சிக்கவே முடியாது. எந்த ஒரு தெரியாத வகை சமையலையும் அசத்தி விடலாம். இரண்டு மூன்று மசாலா பார்முலா, இதை புரிந்து கொண்டால் சுவையான சாப்பாட்டிற்கு நீங்கள் கியாரண்ட்டி. 

அது போல் இயக்குனருக்கு சினிமாவின் மசாலா பார்முலா கை வந்த கலையாக இருக்கிறது. எது எதை எந்த இடத்தில் வைத்தால் ரசிக்கும் படி கொடுக்கலாம் என்று தெரிந்திருக்கிறது. 

எனக்கு எப்படி உப்புமாவோ அது போல் இயக்குனருக்கு பாடல் வைக்கும் இடமும் படமாக்கும் விதமும். இன்னும் பார்முலா பழகவேண்டும். லேடீஸ் கூட தம்மடிக்க  வெளியில் கிளம்புகிறார்கள்.

உதயநிதிக்கு கண்டிப்பாக இது அடுத்த லெவல் தான். ஒரேடியாக ஐம்பதடி தாண்டிக் குதிக்காமல் ஐந்து அடியை தாண்டி குதித்து இருக்கிறார். நடனம், நடிப்பு, டயலாக் டெலிவரி, பாடி லாங்குவேஜ் உட்பட. ஆனால் இது பத்தாது. அடுத்த படத்திற்கு பத்து அடி தாண்டவும்.

நயன்தாரா எப்போதும் போல் அழகாக இருக்கிறார். ஆனால் சற்று முத்தலாக தெரிகிறது. முகத்தை மட்டும் தான் சொன்னேன்.  மற்றபடி ஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கு ஏக்கத்தை கொடுத்தவர் சாயாசிங் தான். ம்ம்ம். நம்மால் ஏக்கப் பெருமூச்சு மட்டும் தான் விட முடியும்.

சந்தானம் கவுண்ட்டர் காமெடியில் வழக்கம் போல் கஜகஜ தான். ஆனால் அடிக்கடி கண்ணாடியை நகர்த்தும் மானரிசம் கடுப்படிக்கிறது. இந்த படத்தில் மட்டும் ஐம்பது முறைக்கு மேல் பண்ணியிருப்பார். மற்றபடி காமெடி களை கட்டுகிறது. அதுவும் க்ளைமாக்ஸ்க்கு முன்பு மாத்திரை விழுங்கும் இடம் ஏஒன்.

படத்தின் துவக்கத்தில் வந்து மருத்துவமனையில் சேர்க்கும் இடத்தில் தெரிந்து விட்டது. இது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் வருவது போல சந்தானமாகத்தான் இருக்கும் என. 

படத்தின் குறை என்று எனக்கு தெரிந்தது இசை தான். பின்னணி இசையும் சரி பாடல்களும் சரி வெகு சுமார் தான். சரண்யா, நரேன், வனிதா, ஜெயப்பிரகாஷ் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார்கள். 

இது கதிர்வேலன் காதல் குடும்ப சென்ட்டிமெண்ட் நிரம்பிய காதல் படம். குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்.

ஆரூர் மூனா

Friday, January 31, 2014

ரம்மி - சினிமா விமர்சனம்

எந்த படம் பார்ப்பதற்கு முன்னாலும் டிரெய்லர் அல்லது படத்தினைப் பற்றிய செய்திகளை படிப்பதுண்டு. இந்த படம் பார்க்க அரங்கினுள் அமரும் வரை எந்த செய்தியும் கேள்விப்படவில்லை. அதனால் இது எந்த மாதிரி படம் என்ற ஆவலுடன் தான் அமர்ந்தேன். படத்தின் பெயர் போடும் போது பின்னணியில் ஒலிக்கும் இசை ஒரு மாதிரி லீட் எடுத்துக் கொடுத்து ஒரு வேளை த்ரில்லர் படமாக இருக்குமோ என்று யோசிக்க வைத்தது.


படத்தின் ஆகப்பெரும்பலம் ப்ராப்பர்ட்டி கன்டினியுட்டி தான். படம் நடக்கும் காலகட்டமான 1987 - 90 வரை புழக்கத்தில் இருந்த ப்ராப்பர்ட்டியை வைத்து படமாக்கியிருப்பது அவர்களின் உழைப்பைக் காட்டுகிறது. அந்த ரெனால்ட்ஸ் பேனா, இங்க் பேனா, கட்டம் போட்ட சட்டை, எஸ்விஎஸ் பஸ், பெரியார் பேருந்து நிலையம், இனிகோவின் சிகையலங்காரம், முட்டை போண்டா, திரையரங்க கழிவறை ஜோ மல்லூரியின் கார் என பார்த்து பார்த்து செய்திருக்கிறார்கள்.

படத்தில் நடக்கும் சில விஷயங்கள் நமது பால்யத்தை நினைவுப்படுத்தி நம்மை அதற்குள் இழுத்தால் அந்த படம் நமக்கு பிடிக்க ஆரம்பித்து விடும். எனக்கு அதுதான் நடந்தது. 


ஐஸ்வர்யாவுக்கும் விஜய்சேதுபதிக்கும் ஏற்படும் காதல் போன்றே எனக்கும் பதினேழு வயதில் அரும்பியது. பிறகு நான் படிப்பதற்கு சென்னை வந்து விட்டதால் அந்த காதல் காற்றோடு போய் விட்டது. ஐஸ்வர்யாவை பார்க்கும் போதெல்லாம் எனக்கு அந்த பெண்ணின் முகம் தான் நினைவுக்கு வந்தது. அதனாலயே எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. அதையும் தாண்டி விமர்சனம் செய்ய முயல்கிறேன்.

கல்லூரியில் படிப்பதற்காக திண்டுக்கல்லில் இருந்து விஜய்சேதுபதியும் புதுக்கோட்டையிலிருந்து இனிகோவும் சிவகங்கை வட்டாரத்திற்குள் நுழைகிறார்கள்.


காதலை வெறுக்கும் ஊர்த்தலைவரை கொண்ட பூலாங்குறிச்சியில் வந்து தங்குகிறார்கள், முறையே ஆளுக்கு ஒரு பெண்ணை காதலிக்கிறார்கள். எந்த காதல் ஜோடி ஊர்த்தலைவரிடம் மாட்டிக் கொள்கிறது. எந்த ஜோடி காதலில் ஜெயிக்கிறது என்பதை சற்று சஸ்பென்சுடன் சுவாரஸ்யமாகவே சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் முக்கிய விறுவிறுப்புக்கு காரணம் எப்பொழுது எந்த ஜோடி மாட்டிக் கொள்ளப் போகிறதோ என்ற மாதிரியே காட்சிகளை கொண்டு சென்றிருப்பது தான். ஆனால் அதுவே ஓவர்டோஸாகிற போது சற்றே கண்ணை கட்டுகிறது.


வன்முறைக்கு நிறைய வாய்ப்பிருந்தும் அதனை கையில் எடுக்காதது படத்திற்கு பெரும்பலம். அப்படி ஆகியிருந்தால் நண்பனின் மரணத்திற்கு பழிவாங்கிய சுப்ரமணியபுரத்தின் வெர்ஷன் 2.0 ஆக மாறியிருக்கும் படம்.

விஜய்சேதுபதிக்கு இருக்கும் மார்க்கெட் வேல்யுவுக்கு இந்த படம் தேவையே இல்லை. ஆனால் இந்த படத்தின் மார்க்கெட்டிங்கிற்கு விஜய்சேதுபதி தேவைப்பட்டு இருக்கிறார். நண்பர்களுக்காக நடித்துக் கொடுத்து இருப்பார் என நினைக்கிறேன்.

இனிகோ துணைக் கதாப்பாத்திரம், நாயகனின் நண்பன், குணசித்திரம் என படிப்படியாக வளர்ந்து நாயகனாகி விட்டார். நன்றாக நடிக்கிறார். சரியான வகையில் படங்கள் அமைந்தால் இன்னொரு விஜய்சேதுபதி, இல்லாவிட்டால் இன்னோரு விதார்த்.

நாயகிகளாக காயத்ரியும், ஐஸ்வர்யாவும். இருவருக்குமே நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து அதற்கேற்றாற் போல் அசத்தியும் இருக்கிறார்கள். ஐஸ்வர்யா சரியான திராவிட முகம். பார்க்கும் போது மனசுக்குள் சில் என்று சாரல் அடிக்கிறது. காயத்ரி இன்னும் கொஞ்சம் சதைப் பத்தா இருந்தா இன்னும் தைரியமா ஒரு ரவுண்ட் வரலாம்.

சூரி படத்திற்கு தேவைப்படும் காமெடியை அந்த அளவுக்கே வழங்கியிருக்கிறார். பிறகு குணச்சித்திரத்தில் அசத்துகிறார்.

முதலில் விறுவிறுப்பாக ஆரம்பிக்கும் படம் ஒரு கட்டத்திற்கு பிறகு சோர்ந்து போய் விடுகிறது. அதன் பிறகு பரபர க்ளைமாக்ஸ் வந்து படத்தை விறுவிறுப்பாக முடித்து வைக்கிறது. 

முதலில் இந்த க்ளைமாக்ஸை முடிவு செய்து விட்டு தான் அதற்கு ஏற்றாற் போல் கதையை தயார் செய்திருப்பார்கள் போல. இன்றைய நாற்பது வயதுகாரர்கள் அவர்களது இளம்பருவ காலகட்டத்தினை கண்முன்னே பார்த்து மகிழ்வார்கள்.

பாடல்கள் கூட எண்பது காலக்கட்டங்களில் வந்து போலவே இருக்கிறது. கேட்க நன்றாகவும் இருக்கிறது. ஒன்றிரண்டு பாட்டு பெரிசா ஹிட்டடிக்கவும் செய்யும்.

ரம்மி அடிச்சாச்சி டிக்கு ஆனால் சுமாரான ஆட்டமே.

ஆரூர் மூனா

Thursday, January 30, 2014

இங்க என்ன சொல்லுது - சினிமா விமர்சனம்

ஒரு படத்தில் ஒன்று நல்லாயிருக்காவிட்டால் மற்றொன்று சுமாராகவாவது இருக்கும். ஆனால் எனக்கு தெரிந்து ஹீரோ, ஹீரோயின், படமாக்கம், இசை, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என சகலமும்  படு மொக்கையாக இருந்தது இந்த படத்தில் தான்.


இன்னிக்கின்னு பார்த்து நான் மூணு பேரை சினிமாவுக்கு கூட்டிக்கிட்டு போனேன். ஆக 500ஓவா எனக்கு இந்த படம் பார்த்த வகையில டஸ்சு. அடங்கொன்னியா காசு இருக்குன்றதுக்காக இப்படி ஒரு படத்தை எடுத்துட்டு படம் பார்க்க வந்த அப்பாவிகளை கொலையா கொல்றது என்னய்யா நாயம்.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என்ற தங்கர்பச்சானின் படத்தை பெரிசா டிங்கரிங் பார்த்து இந்த படத்திற்கு கதை என்ற ஒரு வஸ்துவை உருவாக்கியிருக்கிறார்கள்.


வயது அறுபதை கடக்கும் தோற்றத்தில் இருக்கும் நாயகன், பொறுப்பற்றவனாக இருக்கிறார். நிலையில்லாத வேலை. இந்த சூழ்நிலையில் ஐடி கம்பெனியில் லட்சங்களில் சம்பளம் வாங்கும் ஹீரோயினி திடீரென்று இவரை திருமணம் செய்து கொள்கிறார். 

திருமணத்திற்கு பிறகு பொண்டாட்டி காசில துன்ட்டு வெட்டியா ஊரைச் சுத்திக் கொண்டு இருக்கும் நாயகன் சொந்தப் படம் எடுக்கிறேன் என்று மனைவியின் வீட்டை அடகு வைக்கிறார். படம் எடுக்கப்படாமலே போகிறது. குதிரைப் பந்தயத்திற்காக மனைவியின் நகைகளையெல்லாம் அடகு வைக்கிறார். அந்த பணமும் அம்பேல். 


ஹீரோயினி கர்ப்பமாகிறார். வீடு ஏலத்திற்கு வருகிறது. அவமானம் தாங்காமல் ஹீரோயினி தற்கொலைக்கு முயல்கிறார். அதன் பிறகு திருந்தும் ஹீரோ மனைவியுடன் சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகிறார். அவ்வளவு தான் உருவப்பட்ட கதை.

இயக்குனர் என்ற ஒருவர் இந்த படத்திற்கு இருக்கிறாரா என்று சந்தேகமே, படத்தின் முக்கால்வாசி காட்சிகள் தொங்கலாகவே இருக்கிறது. மலையாள பிட்டு படங்களில் ஒரு விதம் இருக்கும். ஒரு மொக்கை மலையாளப் படத்தில் இடைவேளைக்குப் பிறகு பத்து நிமிடத்திற்கு பிட்டைப் போட்டு மறுபடியும் அந்த படத்தின் தொடர்ச்சியை போடுவார்கள்.


பிட்டு முடிந்ததும் பெரும்பாலான கலாரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறி விடுவார்கள். ஆனால் சில சூரர்கள் படம் முடியும் வரை அரங்கில் அமர்ந்து ஆப்பரேட்டரின் பொறுமையை சோதிப்பார்கள்.

அந்த படத்தின் காட்சியமைப்பை விட படு மொக்கையான காட்சியமைப்பு இந்த படத்தில். ஒரு காட்சிக்கும் மற்றொரு காட்சிக்கும் லிங்க்கே இல்லை. ஆங்கிள்களும் அப்படித்தான் இருக்கிறது.

நாயகனாக விடிவி கணேஷ். அடங்கப்பா உமக்கு அசாத்திய தைரியம்யா. ஆனா படம் முழுக்க இந்த முகத்தை பார்த்தால் எங்களுக்கு தான்யா கிலியடிச்சிப் போகுது. எதுக்கு சம்பந்தா சம்பந்தமில்லாமல் இங்கிலீஷ் டயலாக்கு. மொக்கை கிராமரோடு. இந்த டயலாக் டெலிவரியும் மாடுலேஷனும் கடுப்பேத்துகிறது.

அதுலயும் அடிக்கடி இந்த முகத்தை குளோசப் வேறு வைத்து அரங்கில் இருக்கும் குழந்தைகளை கதறியழவைக்கிறார்கள். இதுல இவரை மீரா ஜாஸ்மின் ரொமாண்டிக்காக பார்த்து முதலிரவில் விளக்கை அணைக்கும் போது அடிவயிறு பொறாமையில் பற்றி எரிந்தது. 

நாயகியாக பொலிவிழந்த மீராஜாஸ்மின். ரன்னில் பட்டையை கிளப்பிய மீராவா இது. ரன் வந்த சமயத்தில் எனக்கு தெரிந்த நண்பர்கள் அனைவருமே பொண்ணு மீரா மாதிரி இருக்கனும்னு அலைந்து கொண்டு இருந்தார்கள். இப்போது பார்த்தால் சப்பிப் போட்ட மாங்கொட்டை மாதிரி முகம் இருக்கிறது. அய்யகோ, ஐஸ்வர்யா ராயும் ஒரு நாள் கிழவியாவார் என்ற நிஜம் சுடுகிறது.

பாடல்கள் எல்லாம் படுமொக்கை, சூரமொக்கை. வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை.

கௌரவத் தோற்றத்தில் சிம்பு. எல்லாம் காலக் கெரகம். ஆண்ட்ரியா ஒரு சீனில் வந்து போகிறார். சாயிபாபாவின் மறுஉருவமாக சந்தானம். சந்தானம் இவ்வளவு மொக்கையாக வேறு எந்த படத்திலும் நடித்ததேயில்லை.

சொர்ணமால்யா வேறு இருக்கிறார். ஒரு காலத்தில் தமிழகத்தின் இளைஞர்களை ஜொள்ளு விட வைத்த அவர் காலத்தின் கோலத்தால் வடிவமே மாறியிருக்கிறார். இந்த உடற்கட்டோடு லெக்கின் போட்டு வருகிறார். பாக்கிறவன் எல்லாம் தெறிச்சி ஒடுறானுங்க.

காலையிலேயே பட்சி இந்த படம் வேணாம்னு சொல்லுச்சு. ஆனா ரெண்டு வாரமா சினிமாவுக்கு போகலையேன்னு இந்த படத்துக்கு போனேன். போனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சிது, இந்த படத்துக்கு செலவு பண்ண காசுக்கு நாலு குவார்ட்டரை வாங்கி எட்டு பிச்சைக்காரனுக்கு கொடுத்து இருக்கலாம்னு.

ஆரூர் மூனா

Friday, January 17, 2014

வீரம் - சினிமா விமர்சனம்

கொஞ்சம் லேட்டான விமர்சனம் தான். போட வேண்டாம் என்று தான் இருந்தேன். ஆனாலும் சில வாசக நண்பர்கள் விமர்சனம் போடுங்கள் என்று தனி மெயிலிலும் உள்டப்பியிலும் கேட்டதால் இந்த பதிவை பகிர்கிறேன். (டேய் செந்திலு, போதும் சுயதம்பட்டம் பதிவுக்கு போ)


கதையெல்லாம் ஏகப்பட்ட பதிவுகளில் கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டு விட்டார்கள். அதனால் அந்த பக்கம் போக வேண்டாம், எனக்கு படம் எப்படி இருந்தது, மற்றும் நான் ரசித்த காட்சிகளை தங்களுடன் பகிர்கிறேன். நன்றி.

மாட்டுப் பொங்கல் அன்று மதியம் நண்பன் போலி பன்னிக்குட்டி டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு சினிமாவுக்கு வா வா என்று அழைத்துக் கொண்டு இருந்தான். இரவு தாத்தாவுக்கு அனைத்து அசைவ வகைகளையும் வைத்து படையல் போட வேண்டியிருந்தது, அந்த வேலைகளை காலையில் இருந்து செய்து கொண்டு இருந்தேன். மதியம் வீட்டுக்கே வந்து அழைத்ததால் ஒன்றும் சொல்ல முடியாமல் திரையரங்கிற்கு போய் விட்டேன்.


கடந்த நான்கைந்து படங்களாக எப்போதும் விரைத்துக் கொண்டே திரியும் அஜித்தைப் பார்த்து சற்று அலுப்படைந்திருந்தேன். ஆனால் இந்த படத்தின் துவக்கத்தில் இருந்தே இயல்பான நடிப்புக்கு வந்து ரசிக்க வைத்தார். 

பக்கா மசாலா தான் என்று தெரிந்தும் பல இடங்களில் அஜித்தின் ஆக்சன் காட்சிகளில் விசிலடித்து கைதட்டி மகிழ்ந்தேன். அதே மாதிரி பல இடங்களில் புகையவும் வைத்தார்.


இடையில் ஒரு விஷயம், இணையத்தில் ஜில்லாவை புறந்தள்ளி விட்டு வீரம் படத்திற்கு ஏகப்பட்ட புரமோசன்கள். படம் வராமலேயே படத்தின் கதை இது தான் என்று ஆளாளாளுக்கு கலந்து கட்டி அடித்தார்கள். இதன் காரணமாக முன்பதிவு நேரத்தில் ஜில்லாவுக்கு டிக்கெட் தாராளமாக கிடைத்தது. வீரம் எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல்.

கடைசியில் பார்த்தால் இரண்டுமே மாற்றான் படத்து சூர்யா போல தான் என்று தெரிய வந்த போது நொந்தே போனேன். இணையத்தில் அஜித்தை புடிச்சவன் கூட குறைவா தான் இருப்பான். விஜய்யை புடிச்சவன் ஒருத்தன் கூட கிடையாது போல. வர்றவன் போறவன் எல்லாம் ஜில்லாவை கண்டமேனிக்கு கழுவி ஊத்துறானுங்க.


தமன்னா நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் பார்ப்பதால் ப்ரெஷ்ஷாக தெரிந்தார். அஜித்துடன் ஒப்பிடும் போது தான் சற்று தொங்கலாக இருந்தது. தமன்னாவின் கொச்சச்சன் போலவே அஜித் தெரிந்தார்.

முதல் பாதியில் எந்தவித இடையூறும் இல்லாமல் கலகலவென படத்தை நகர்த்தி இருந்தார்கள். சந்தானத்தின் காமடி சிறிது நாட்களுக்கு பிறகு வாய்விட்டு சிரிப்பது போல் இருந்தது. இப்படியே நடிச்சிட்டு வாங்க, இல்லைன்னா விவேக் கதி தான், உங்களுக்கும்.

விதார்த்தை போட்டு வீணடித்து இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் தமிழில் பீலாவாசு சாரி பீ.வாசு இயக்கத்தில் காதல்கிசுகிசு படத்தில் நாயகனாக நடித்த பாலாவும் படத்தில் வந்து போகிறார். 

இடைவேளைக்கு பிறகு எனக்கு என்டிஆர் படத்தை பார்த்த மாதிரியே இருந்தது. இருந்தாலும் தெலுகு படங்களையே அசால்ட்டாக கடந்து வந்தவனுக்கு முன்னால் இந்த படம் எம்மாத்திரம்.

தம்பிராமையா ரொம்பவே கடுப்பேத்துகிறார். என்ன வகை நடிப்பு, இந்த ஸ்டீரியோ ரக கத்தல். போங்க சார். போய் புள்ளக்குட்டிகள படிக்க வையுங்க. அது மாதிரி பேராசிரியர் பெரியார்தாசனுக்கு இது தான் கடைசி படம். திரையில் பார்க்கும் போது என்னவோ செய்தது.

அது என்னய்யா ரயிலு மேல சண்டை. ஏன் செயினை புடிச்சி இழுத்து காட்டுக்குள்ள இறங்கி சண்டை போட வேண்டியது தானே. தயாரிப்பாளருக்கு செலவாவது குறைஞ்சிருக்கும்.

படம் பார்த்து ரெண்டு நாள் ஆயிடுச்சா, அதான் பல காட்சிகளும், பார்க்கும் போது நான் எழுத நினைத்த பாயிண்ட்டுகளும் மறந்து விட்டது. சீக்கிரம் சிட்டுக்குருவி லேகியம் தின்னு ஞாபக சக்தியை அதிகப்படுத்திக்கனும். நினைவில் இருப்பதை வைத்து விமர்சனம் மாதிரி இருக்குமளவுக்கு ஒப்பேத்தி உள்ளேன், ஏதோ பாத்து செய்யுங்க.

ஆரூர் மூனா

Friday, January 10, 2014

ஜில்லா - சினிமா விமர்சனம்

இணையமும் மக்களும் வீரம் படத்திற்கு முன்னால் ஏன் ஜில்லாவை குறைத்து மதிப்பீட்டார்கள் என்று தான் தெரியவில்லை. கங்கா காம்ப்ளக்ஸில் முன்பதிவு துவங்கிய அன்று நான் டிக்கெட் வாங்க சென்றது வீரம் படத்திற்கு தான் கவுண்ட்டரில் இருந்தவன் அசால்ட்டாக வீரம் முன்பதிவு முடிந்து விட்டது, வேணும்னா ஜில்லா வாங்கிக்க என்று சொன்னான். 


இணையத்தில் மக்களும் முடிந்த அளவுக்கு ஜில்லாவை காலி செய்தனர். எனக்கு கூட சந்தேகமாவே இருந்தது.................... போதும் இத்துடன் நிறுத்திக்குவோம். இது எல்லாம் படம் பார்த்த கதை பதிவில் எழுத வேண்டும். அதனால் நேரடியாக படத்துக்கு போய் விடலாம்.

பெரிசா மனதை உலுக்கும் கதை, நெஞ்சை பிழியும் செண்ட்டிமெண்ட், வித்தியாசமான திரைக்கதை இந்த ஒரு புண்ணாக்கையும் இந்த படத்துல எதிர்பார்க்க முடியாது. 

போக்கிரி ஸ்டைல்ல படம் இருக்கிறது. அதாவது ஒரு சண்டை, அது முடிந்த பின்னால் அறிமுகப்பாடல், பிறகு நகைச்சுவை, பிறகு சண்டை, பிறகு காதல், பிறகு பாட்டு, பிறகு சண்டை.


இந்த டெம்ப்ளேட்டை இம்மி பிசகாமல் படத்தை எடுத்து இருக்கின்றனர். ஆனால் படம் பார்கக ஒரளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கிறது என்பது தான் ஆச்சரியம். போக்கிரி அளவுக்கு எல்லாம் படம் ஓடாது. ஆனால் ஓடும், பெப் முடியும் வரை ஓடும்.

படத்தின் முதல் ஆச்சரியம் ஓவர் பில்டப் இல்லாத விஜய். படத்திற்கு ஏற்ற ஹீரோயிசம் மட்டும காட்டியிருக்கிறார். வழக்கம் போல காமடி, நடனத்தில் அசத்துகிறார். சண்டைக்காட்சியில் நிஜம் போல பல்டிகள் அடித்து பிரமிக்க வைக்கிறார். 


படத்தின் கதைக்கு போவோம். மதுரையில் உள்ள டான் மோகன்லால். அவரது வளர்ப்பு மகன் விஜய். போலீசுடன் லாலுக்கு உரசல் ஏற்பட தனது தேவைக்காக போலீசே பிடிக்காத விஜய்யை அசிஸ்டெண்ட் கமிசனராக்குகிறார். 

போலீசான விஜய்க்கு லால் செய்வது தவறு என புரிய வருகிறது. அதனால் அவரை திருந்த வைக்க முயற்சிக்கிறார். பிடிவாதம் பிடிக்கும் லாலேட்டன், படம் துவங்கி மூன்று மணிநேரமாகி விட்டதே என்று கவலைப்பட்டு க்ளைமாக்ஸில் திருந்துகிறார்.


இதற்கு இடையே மானே தேனே பொன்மானே எல்லாம் பொருத்தமான இடத்தில் போட்டு ஓரளவுக்கு ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியிருக்கிறார்கள்.

எந்த இடத்திலும் எதற்காகவும் லாஜிக் பார்க்கக் கூடாது. பார்த்தால் நாம் மடையனாகி விடுவோம். இதனை நம்பி படக்குழுவும் நம் தலையில் நல்லா மசாலா அரைத்து இருக்கிறார்கள். ஆனாலும் ஒரு இரவில் கமிசனர் நினைத்தால் வேலைக்கு புதிதாக சேர்ந்த அசிஸ்டெண்ட் கமிசனரை டெபுடி கமிசனராக்குவது எல்லாம் ரொம்ப ஓவர்.

லாலேட்டன் மீண்டும் தமிழில். லாலேட்டனை நம்பி நான் பார்த்த தமிழ்ப்படம் பாப்கார்ன். அது இரண்டாம் ஆட்டம் போய் படம் முடிந்து தலைவலி தாங்க முடியாமல் ப்ளாக்கில் சரக்கு வாங்கி விடிய விடிய குடித்தவன். அதன் பிறகு அவரது மலையாள படம் என்றாலும் நிலவரம் தெரிந்து தான் படத்திற்கு போவேன். ஆனால் இந்த முறை காப்பாற்றி இருக்கிறார்.

ஊறுகாயாக தொட்டுக் கொள்ள காஜல். யம்மாடி நீ வர்றதே கவர்ச்சிக்காக மட்டும் தான். இந்த மேக்கப்பையாவது ஒழுங்கா போட்டு வந்தா என்னவாம். ஏன் இப்படி ஒரு மேக்கப், இப்படி ஒரு காஸ்டியும், சகிக்கல போ.

பாடல்கள் நான் இதற்கு முன்பு கேட்கவில்லை. படத்தில் கேட்கும் போது காது வலிக்கிறது. கண்டாங்கடி சேலை பாட்டு மட்டும் ஓகே. ரீரெக்காடிங் நன்றாக இருக்கிறது. ஆக்சன் சீக்வன்ஸில் விஜய்க்கு வரும் ஆர்ஆர் நன்றாக இருக்கிறது. 

சூரி முயற்சிக்கிறார். வேறென்ன சிரிக்க வைக்கத்தான். நாம் தான் சிரிக்க மாட்டேங்கிறோம். ரவிமரியாவுக்கு சர்க்கார் படத்தில் வரும் ரவிகாலேவை மனதில் வைத்து மொட்டை போட்டு இருப்பார்கள் போல. புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாகத்தான் இருக்கிறது.

விஜய்யும் காஜலும் மாறி மாறி பின்பக்கத்தில் புடித்துக் கொள்கிறார்கள். இது என்ன தமிழ்சினிமாவின் புது பேசனா. ஆனாலும் பார்க்க நல்லாத்தான் இருக்கு. ஹிஹி.

படத்தில் போரடிக்கும் விஷயமென்றால் கடைசி அரைமணிநேரம் ஜவ்வு மாதிரி இழுக்கிறது தான். வில்லன் யாரென்று தெரிந்த பிறகு அவரை விட்டு வைப்பதில் ஹீரோயிசம் அடிபட்டு போகிறது. அப்புறம் தம்பி செத்ததும் பொங்குறது பொருத்தமா இல்லை.

மற்றபடி ஒரு முறை பார்க்கலாம், தப்பில்லே

ஆரூர் மூனா

Friday, December 20, 2013

என்றென்றும் புன்னகை - சினிமா விமர்சனம்

வருடக் கடைசியில் வந்திருக்கும் சிறந்த படம். எனக்கு தெரிந்து காதலை மிகவும் ரசிப்புத்தன்மையுடன் சொன்ன படம் அலைபாயுதே. அதன் பிறகு அதே அளவுக்கு காதல் உணர்வுகளை சொன்ன படம் இது தான். 


மிக மெதுவாக ஜீவாவின் நட்பில் அலுவல் பணி காரணமாக நுழையும் த்ரிஷா படிப்படியாக ஜீவாவின் நட்பை பெற்று பிறகு அவரின் மனதில் வெகு இயல்பாக காதலை விதைக்கிறார். இந்த காட்சிகள் தான் படத்தின் ஆகப்பெரும் பலம். நாயகியாக ஜூனியர் கமலா காமேஷ் நடித்துள்ளார் என்பது தான் படத்தின் பெரிய பலவீனம்.

ஜீவா, சந்தானம், வினய் மூவரும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். ஜீவாவின் அப்பா நாசர். ஜீவாவின் அம்மா வேறொருவருடன் ஓடிப் போய் விடுகிறார். இதனால் பெண்கள் என்றாலே வெறுப்புடன் வளர்கிறார் ஜீவா.


ஒரு பிரச்சனையால் நாசருடன் பேசாமல் இருக்கிறார். நண்பர்கள் மூவரும் விளம்பர நிறுவனத்தை இணைந்து நடத்தி வருகிறார்கள். கல்யாணமே செய்ய மாட்டோம் என கல்யாணி பீர் மீது மூவரும் சத்தியம் செய்கிறார்கள்.

ஓரு விளம்பர படபிடிப்பிற்காக த்ரிஷா இவர்களுடன் இணைகிறார். மெல்ல மெல்ல நட்பாகிறார். 

ஒரு நாள் ஜீவாவிடம் சொல்லிக் கொள்ளாமல் காணாமல் போகிறார்கள் வினய்யும் சந்தானமும். திரும்பி வந்து ஜீவாவிடம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார்கள். 

கோவப்பட்டு அவர்களுடனும் நட்பை முறிக்கும் ஜீவா. த்ரிஷாவுடன் நெருக்கமாகிறார். படிப்படியாக காதல் ஜீவாவுக்குள் முளைக்கிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரிவு ஏற்படுகிறது. 


எல்லா பிரச்சனைக்கும் காரணம் தன்னுடைய ஈகோ தான் காரணம் என்பதை அறியும் ஜீவா, அதனை கைவிட்டு அப்பாவுடனும், நண்பர்களுடனும், காதலியுடனும் இணைகிறாரா என்பதே படத்தின் கதை.

படத்தின் மெயின்லைனை விளக்கி விட்டு வெறும் சந்தானம், சரக்கை வைத்தே முதல் பாதியை ஓட்டி விடுகிறார்கள். மக்களும் ரிலாக்ஸாக அரங்கில் சிரித்து மகிழ்கின்றனர். நானும் தான். 

எங்கடா படம் இலக்கில்லாமல் அலைகிறதே என்று நினைக்கும் போது நண்பர்களுக்குள் பிரிவும், இடைவேளையும் வந்து விடுகிறது. அதன் பிறகு த்ரிஷாவுடன் நெருங்கும் போது நமக்கு மனசு ஜில்லென்று பறக்கத் துவங்குகிறது. மன உணர்வுகளை இவ்வளவு இயல்பாக இப்போது வந்த படங்களில் பார்க்கவில்லை. வெல்டன் இயக்குனரே.


ஜீவா கடைசி படங்களில் தோல்வியை கொடுத்திருந்ததால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால் ரிசல்ட் வேற மாதிரி வந்திருப்பது அவருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கும்.

நடிப்பிலும் குறைவே வைக்கவில்லை மனுசன். எப்போதும் கடுகடு முகத்துடன் இருக்கும் போது கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார். கடைசியில் காதலை சொல்லும் போதும் அதே சிடுசிடு எக்ஸ்பிரசன் அப்ளாஸை அள்ளுகிறது.

வெல்டன் ஜீவா.

உன்னாலே உன்னாலே, ஜெயம்கொண்டான் படங்களில் பட்டையை கிளப்பிய வினய்யா அது அடப்பாவமே. இந்த படத்தில் அவரது பாத்திரப்படைப்பு நன்றாக இருந்தாலும் வினய்யின் உடல்மொழியும் நடிப்பும் கடுப்பைத்தான் கிளப்புகிறது.

பேஸ்புக், டிவிட்டர் மற்றும் மதுரை முத்து, இந்த ஏரியாவிலிருந்து நகைச்சுவைகளை கடன் வாங்கி படம் முழுவதும் தூவி விட்டு இருக்கிறார். சில இடங்களில் நகைக்க வைக்கிறார். பல இடங்களில் முழிக்க வைக்கிறார். சார் சரக்கு தீர்ந்துடுச்சா.

த்ரிஷா கூட நன்றாக நடித்து இருக்கிறார். வயது முதிர்ச்சி முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. கிரீடம் படத்தில் இதே ஹேர்ஸ்டைலில் பார்க்க அழகாக இருப்பார். ஆனால் இந்த படத்தில் ஹேர்ஸ்டைல் மட்டும் அழகாக இருக்கிறது.

இரண்டாம் பாதியை கலகலப்பாக அங்கங்கே சந்தானம் வினய் காமெடியை திணித்திருக்கிறார்கள். ஆனால் அதுதான் வேகத்தடையாக இருக்கிறது. இரண்டாம் பாதி அழகை கெடுக்கிறது.

ஆண்ட்ரியா மாடல் அழகியாக வருகிறார். சிரித்துப் பேசி கழுத்தறுக்கும் கேரக்டர். நிறைவாக செய்திருக்கிறார். சரியாக லாக்செய்து ஜீவாவை மன்னிப்பு கேட்கச் சொல்கிறார். ஆனால் அதற்கு ஜீவாவின் ரியாக்சன் தூள்.

இரண்டு பாடல்கள் தவிர மற்றதெல்லாம் படத்திற்கு வேகத்தடை.

மற்றபடி கேன்சர், அதற்காக நண்பர்கள் நடிப்பது எல்லாம் சினிமாத்தனம். மனிதனின் ஈகோ தான் எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது தான் படத்தின் லைன். காதல் உணர்வுள்ள காட்சிகளுக்காகவே படத்தை பார்க்கலாம்.

ஆரூர் மூனா

Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யம் குறையாமல் சீட்நுனியில் அமர்ந்து பார்த்து ரசிக்க ஆசை உண்டெனில் தயவு செய்து இந்த இடத்துடன் இந்த பதிவை மூடி வைத்து விட்டு வேறுவேலை பார்க்கச் செல்லவும். இப்போதைக்கு படம் பார்க்கும் எண்ணம் இல்லையெனில் மேற்கொண்டு படிக்கவும். இந்த படத்தின் எல்லா விமர்சனத்திற்கும் இந்த கருத்து பொருந்தும்.


நான் கூட காலையில் நண்பர் செங்கோவியின் விமர்சனத்தை படித்து விட்டே சினிமாவுக்கு சென்றேன். என்னுடன் பார்த்து ரசித்த மற்றவர்களை விட எனக்கு சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைவாகத்தான் கிடைத்தது.

ரொம்ப நாட்களாக தமிழ்சினிமா கையில் வைத்து இருந்த இடையில் மறந்திருந்த எம்ஜிஆர் காலத்து நாயகன். அது ஒன்னுமில்லீங்க சமுதாயத்துக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன்.

தனக்கு சம்பந்தமேயில்லாத ஆனால் நாட்டினை சிறுமைப்படுத்தும் சமூகத்தின் கேடு ஒன்றினை புத்திசாலித்தனத்துடன் களைகிறார். அந்த நேரம் பார்த்து எனக்கு உச்சா வந்ததால் திரையரங்கில் இடைவேளை விடுகிறார்கள். 


இடைவேளைக்கு பிறகு அந்த  சமூகத்தின் கேடு நாயகனிடம் விளையாட்டு காட்டி வம்பு வளர்க்கிறது. கடைசியில் நாயகனிடம் வழக்கம் போல அடி வாங்கி செத்து மடிகிறது. படம் ஆரம்பித்து இரண்டரை மணிநேரம் ஆனதாலும் எனக்கு பசி வந்து விட்டதாலும் அத்துடன் படத்தை முடித்து நம்மை அனுப்பி வைக்கிறார்கள்.

இதுக்கு மேல வௌக்குனா உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடும் மக்கா. 


படம் மிகச்சிறந்த எண்டர்டெயினர். அதில் சந்தேகமே வேண்டாம். ஆரம்பம் முதல் முடிவு வரை டெம்போவை குறைக்காமல் கொண்டு சென்றதிலேயே இயக்குனர் வெற்றி பெற்று விடுகிறார்.

இயக்குனர் சரவணன் முதல் படமாக இயக்கியது தெலுகில் கணேஷ். படம் பிளாப். இரண்டாவது தான் எஙகேயும் எப்போதும். அதனால் இந்த படத்திற்குரிய எதிர்பார்ப்பு எனக்கு சற்று குறைவாகத்தான் இருந்தது.
 
என் எண்ணம் எல்லாத்தையும் படம் அடித்து நொறுக்கி விட்டது. மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

தெலுகில் முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும் வாரிசு நடிகர்களான என்டிஆர், ராம்சரண் ஆகியோரின் அறிமுகக் காட்சியினை பார்த்து மிரண்டு போய் கொளப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் பூசாரியிடம் மந்திரித்து விட்டு வந்தவன் நான். 

ஆனால் இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் அறிமுகக் காட்சியில் எதார்த்தத்தை கண்டு வியந்து தான் போனேன். அந்த ஹீரோயிசம் இல்லாத எளிமையை படம் முழுதும் கண்டேன், ரசித்தேன்.

சுரபி ஒரு டெல்லி குல்பி. அப்படியே ப்ரெஷ்ஷாக இருக்கிறார். நான் வேண்டிக் கொள்வது எல்லாம் இந்த பொண்ணு தெலுகு பக்கம் போயிடக் கூடாதுன்னு தான். 

இப்படித்தான் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஒரு பொண்ணு பார்க்க செம செம செம பிகராக இருந்தது. தமிழில் கவனிக்கப்படாமல் தெலுகு பக்கம் போய் அவர்களின் வில்லங்க ட்ரீட்மெண்ட்டால் வத்திப் போய் வசீகரம் இழந்து முன்னணி நாயகி என்ற நிலையை அடைந்தார். வேறு யாருமல்ல சமந்தா தான் அவர்.

நாயகி சென்னையிலேயே தங்கி தமிழ் படங்களில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக ஆக அருள் புரிவாய் கருணைக்கடலே. 

வம்சி கிருஷ்ணா தெலுகில் பல வருடங்களாக அடியாள் பாத்திரத்தில் வந்து பிறகு சின்ன சின்ன வில்லன் கதா பாத்திரங்களில் நடித்து முன்னணி வில்லனாக ப்ரமோட் ஆகியவர். தமிழில் தடையற தாக்க படத்திற்கு பிறகு கிடைத்த இந்த வாய்ப்பை பிரமாதமான பெர்பார்மன்ஸ் மூலம் தக்க வைத்துள்ளார்.

படத்தின் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் மான்டேஜ் ஆக இருப்பது நன்றாகவே இருக்கிறது. இசையும், பின்னணி இசையும் ரசிக்கும் படியே இருக்கின்றன. 

கயிறு கட்டி பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் காட்சிகள் போல் அல்லாமல் இயல்பாக சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்.

அந்த காதல் போர்ஷன் வெகு இயல்பாக ரசிக்கும் படி இருக்கிறது. நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். 

அது போல் படத்தின் ஒவ்வொரு காதல் காட்சியிலும் படத்தின் வேறொரு சம்பவத்தின் லிங்கை வைத்து பாதிக்கு பிறகு ஒவ்வொன்றாக இணைப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு. உங்களுக்கும் தான். 

ஆரூர் மூனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...