சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, January 31, 2012

ஆட்டோ சங்கர் - தூக்கு தண்டனை - வழக்கு விவரம் - பகுதி 1


தமிழ்நாட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்குகளில் ஆட்டோ சங்கர் மீதான வழக்கு ஒன்றாகும். 1988ம் ஆண்டு தொடங்கி சுமார் 5 ஆண்டு காலம் நீடித்தது. ஆட்டோ சங்கர் தனது கூட்டாளிகளுடன் நடத்திய கொலை சம்பவங்கள், `திகில்' சினிமா படங்களில் வரும் காட்சி கள் போல அமைந்தன. காதலி உள்பட 6 பேரை கொடூரமான முறையில் படு கொலை செய்த ஆட்டோ சங்கருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. சேலம் ஜெயிலில் தூக்கில் போடப்பட்டான். அப்பொழுதே இந்த வழக்கு மிகப்பரபரப்பாக பேசப்பட்டதால் தற்போதைய காலக்கட்டத்தில் மறந்தவர்களுக்கு நினைவூட்டும் தொகுப்பு.

வழக்கின் விவரங்களை தொகுத்து கொடுத்துள்ளேன். ஐந்து பகுதி வரும் என்று நினைக்கிறேன். சென்னை திருவான்மியூரில் பெரியார் நகர் காந்தி தெருவில் வசித்தவன் சங்கர் (வயது 29) ஆட்டோ டிரைவர். இதனால் ஆட்டோ சங்கர் என்று அழைக்கப்பட்டான். சங்கர் ஆட்டோவில் கள்ளச்சாராயம் கடத்திக்கொண்டு வந்து திருவான்மியூர் பகுதியில் விற்பனை செய்தான். அதன் பிறகு அவன் ஆட்டோ ஓட்டும் தொழிலை கை கழுவினான். சாராய தொழிலில் அவன் மிகவும் தீவிரமாக ஈடுபட்டான்.

திருவான்மியூரில் உள்ள ஒரு ஓட்டலில் (லாட்ஜ்) சங்கர் அறை எடுத்து சாராய வியாபாரத்தை கவனித்தான். அங்கு அழகிகளை அழைத்துக்கொண்டு வந்து விபசாரம் நடத்தினான். சாராயம், விபசாரம் ஆகிய தொழில் நடத்தியதன் மூலம் சங்கர் பெரும் பணக்காரன் ஆனான். பெரியார் நகரில் 2 பங்களா கட்டினான். அங்கு எல்லா அறைகளையும் "ஏர்கண்டிஷன்" வசதி செய்தான். விலை உயர்ந்த கட்டில்கள், கலர் டெலிவிஷன், டெலிபோன் வசதிகளை செய்து ஆடம்பர சொகுசு பங்களாவாக மாற்றினான்.

இந்த நவீன பங்களாவுக்கு கோடம்பாக்கம், சேலம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் இருந்து அழகிகள் அடிக்கடி வந்து போவார்கள். முக்கிய பிரமுகர்களுக்கு அந்த சொகுசு பங்களாவில் சங்கர் விபசார விருந்து படைப்பான். ஆட்டோ சங்கருக்கு ஜெகதீசுவரி என்ற மனைவியும், குழந்தைகளும் இருந்தார்கள். ஆனாலும் விபசார தொழிலில் இறங்கியதால் அவனுக்கு பல காதலிகள் இருந்தார்கள். அழகிகளை மயக்கி மனைவி ஆக்கிக் கொள்வான்.

இப்படி பெங்களூரில் இருந்து வந்தவள் அழகி லலிதா (வயது 19). சங்கர் அவளை தனது 4வது மனைவி ஆக்கிக்கொண்டான். அவள் திடீரென்று ஆட்டோ சங்கரை விட்டு ஓடி, சுடலை (மற்றொரு ஆட்டோ டிரைவர்) என்பவனுடன் வசித்து வந்தாள். அதோடு தொழிலில் ஏற்பட்ட போட்டி சங்கரை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இந்த சூழ்நிலைகளும், நண்பர்களின் துதி பாடல்களும் அவனை சிக்கலில் மாட்டி விட்டன.


ஆரூர் மூனா செந்தில்

(தொடரும் ...)

Monday, January 30, 2012

நிஜ மம்பட்டியானின் கடைசி நாள்...


மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், "தேடுதல் வேட்டை" முடுக்கிவிடப்பட்டது. காடுகளில் சென்று தேடும் விசேஷ பயிற்சியைப்பெற்ற மலபார் சிறப்பு போலீஸ் படை வரவழைக்கப்பட்டது. கோவை, சேலம் ஆகிய நகரங்களில் இருந்து சிறப்பு ஆயுதப்படை போலீசார் விரைந்தனர்.

மைசூர் போலீஸ் உதவியும் கேட்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிரி தலைமையில் இந்த அதிரடிப்படை செயல் பட தொடங்கியது. மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பெண்ணாகரம் காட்டுப்பகுதிக்குள் மம்பட்டியான் சுற்றித்திரிந்து கொண்டிருந்தான். அப்போது சிக்கல்ராம்பட்டியைச் சேர்ந்த கருப்பண்ணன் என்பவன் மம்பட் டியானின் நண்பன் ஆனான். அவன் கள்ளச்சாராயம் விற்பவன். சில சமயம் அவனைத்தேடி அவன் வீட்டிற்கே மம்பட்டியான் சென்றான்.

கருப்பண்ணனுக்கு 2 தங்கைகள். மூத்த தங்கை, கணவனை இழந்த விதவை. அடிக்கடி ஏற்பட்ட சந்திப்பில் மம்பட்டியானுக்கும், அவளுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் ரகசியமாக சந்தித்து வந்தார்கள். இந்த சந்தர்ப்பத்தில் கருப்பண்ணனின் 2வது தங்கை நல்லம்மாள் ஒரு நாள் மம்பட்டியானின் கண்ணில் பட்டுவிட்டாள். அவள் நல்ல அழகி. அவளையும் அடைந்துவிட வேண்டும் என்று மம்பட்டியான் ஆசைப்பட்டான்.

போலீசாரின் வேட்டை தீவிரம் அடைந்ததை உணர்ந்த மம்பட்டி யான், தன்னுடைய இருப்பிடத்தை மாற்றத் திட்டமிட்டான். நல்லம்மாளையும் தன்னுடன் அழைத்துச்சென்று விடவேண்டும் என்று நினைத்தான். தன்னுடைய இந்த விருப்பத்தை கருப்பண்ணனிடமும், அவரது தந்தை பொன்னப்ப கவுண்டரிடமும் கூறினான். ஆனால் அவர்கள் சம்மதிக்கவில்லை.

"ஏற்கனவே விதவைத் தங்கையுடன் தொடர்பு வைத்திருக்கிறாயே! அவளையே கல்யாணம் செய்து அழைத்துக்கொண்டு போ! 2வது தங்கையை தரமாட்டேன்" என்று கருப்பண்ணன் அடித்துச் சொல்லிவிட்டான். இதனால் மம்பட்டியானுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. "நல்லம்மாளைதான் திருமணம் செய்வேன். அவளை என்னுடன் அனுப்பு. ரூ.1,000 தருகிறேன். நீ சம்மதிக்காவிட்டால் அவளைத் தூக்கிக் கொண்டு போய்விடுவேன்" என்று கூறிவிட்டு மம்பட்டியான் காட்டுக்குள் சென்று விட்டான்.

தங்கைகளின் பிரச்சினையால் மனக்குழப்பம் அடைந்த கருப்பண்ணன், போலீஸ் உதவியை நாடினான். பெண் ணாகரம் போலீஸ் நிலையத்துக்குச் சென்று சப் இன்ஸ்பெக்டரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தான். அவர் மூத்த அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து உதவி செய்வதாக உறுதி அளித்து அனுப்பி வைத்தார். அதன் பிறகு கருப்பண்ணனை சந்தித்த ஒரு அதிகாரி, "மம்பட்டியானுடன் மோதி உன்னால் ஜெயிக்க முடியாது. விஷத்தைக் கொடுத்து அவனைக் கொல்ல முயற்சி செய்" என்று ஆலோசனை கூறினார்.

27.03.1964 அன்று கருப்பண்ணன் கையில் துப்பாக்கியுடன் காட்டிற்குள் சென்று கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மம்பட்டியான் அவன் முன் வந்து நின்றான். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. "நீ என்னை போலீசில் காட்டிக் கொடுக்கப்போவதாக சொன்னாயாமே! எங்கே காட்டிக்கொடு பார்ப்போம்" என்று கூறிக்கொண்டே, மம்பட்டியான் கருப்பண்ணனை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். ஆனால், குறி தவறியது.

உடனே கருப்பண்ணன் தனது கையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து மம்பட்டியானை நோக்கி 2 முறை சுட்டான். மம்பட்டியான் வயிற்றில் ஒரு குண்டும் இடுப்பில் ஒரு குண்டும் பாய்ந்தன. மம்பட்டியான் கீழே விழுந்தான். கருப்பண்ணன் ஓடிப்போய் மம்பட்டியான் கையில் இருந்த துப்பாக்கியைப் பிடுங்கிக்கொண்டு மீண்டும் ஒரு முறை சுட்டான். மம்பட்டியான் அதே இடத்தில் செத்தான். இதுவே அதிகாரபூர்வ தகவலாகும்.

இது தவிர அதிகாரபூர்வமற்ற முறையில் மற்றொரு தகவல் உலவியது. நல்லம்மாளை கூப்பிடுவதற்காக மம்பட்டியான் சம்பவ தினத்தன்று கருப்பண்ணன் வீட்டிற்கு சென்றான். மம்பட்டியானுக்கு வீட்டில் விருந்து கொடுத்தான். அந்த சமயத்தில் தர்பூசணியில் விஷத்தை ஏற்றி கொடுத்தான். அதை சாப்பிட்ட மம்பட்டியான் சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு விழுந்தான். உடனே மம்பட்டியானை கருப்பண்ணன் துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிட்டான். இவ்வாறு பரவலாக பேசப்பட்டது.

எது எப்படியோ, மம்பட்டியானை கருப்பண்ணன் தீர்த்து கட்டிவிட்டான்.

தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் அதிகாரி கிருஷ்ணராஜ், உதவி சூப்பிரண்டு வி.பொன்னையா, பெண்ணாகரம் சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.

மம்பட்டியானுக்கு வயது சுமார் 30 இருக்கும். 5 அடி உயரத்தில் கம்பீரமான தோற்றத்துடன் இருந்தான். முறுக்கு மீசை வைத்திருந்தான். ராணுவ வீரரை போல உடை அணிந்திருந்தான். இடுப்பில் பெரிய `பெல்டு' கட்டியிருந்தான். அதில் துப்பாக்கி தோட்டாக்கள் இருந்தன. அவன் கையில் 2 அடி நீள பெரிய கத்தி இருந்தது. கையில் கெடிகாரம் கட்டியிருந்தான். கழுத்தில் தங்கச் சங்கிலி அணிந்திருந்தான். அதில் புலி நகம் கோர்க்கப்பட்டிருந்தது.

ஒரு கட்டுச்சோறு மூட்டையும் வைத்திருந்தான். அதில் மான் கறி குழம்பும், சோறும் கலந்த சாப்பாடு இருந்தது. மம்பட்டியானின் உடல் பரி சோதனைக்காக தர்மபுரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியது.

பிரேத பரிசோதனைக்குப்பிறகு மம்பட்டியான் உடல் பொதுமக்கள் பார்வைக்காக ஆஸ்பத்திரியில் ஒரு மணி நேரம் வைக்கப்பட்டது. மம்பட்டியான் உடலை வாங்க உறவினர்கள் யாராவது வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை.

இதனால் உடலை போலீஸ் லாரியில் ஏற்றி தர்மபுரி குமாரசாமிபேட்டை சுடுகாட்டுக்கு கொண்டுபோய் தகனம் செய்தனர். அங்கும் பல்லாயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடியிருந்தார்கள். மம்பட்டியான் பற்றி துப்பு கொடுத்தால் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மம்பட்டியானை கொன்ற கருப்பண்ணனுக்கு பரிசு வழங்க போலீஸ் அதிகாரிகள் சிபாரிசு செய்தனர். இதனை தொடர்ந்து கருப்பண்ணனுக்கு ரொக்கப்பணம் 2 ஆயிரமும், 5 ஏக்கர் நிலமும் வழங்கப்பட்டது. அதோடு தற்காப்பிற்காக அவனுக்கு லைசென்சு (அனுமதி) பெற்ற துப்பாக்கியும் கொடுக்கப்பட்டது.

மம்பட்டியான் கோஷ்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். 3 பேர், கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த 5 பேர்களில், சுப்பிர மணி, சாமியண்ணன், சின்னண்ணன், நல்லப்ப கவுண்டர் என்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவன் சிறுவனாக இருந்ததால், சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.


ஆரூர் மூனா செந்தில்


டிஸ்கி : நெட்டில் மம்பட்டியானின் போட்டோ கிடைக்கவில்லை.

Sunday, January 29, 2012

ப்ளாக் ஹாக் டவுன் (Black Hawk Down) - சினிமா விமர்சனம்



நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.

சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.

சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.

இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.

அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.

இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.

இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.

ஆரூர் முனா செந்தில்

Thursday, January 26, 2012

இந்திரா காந்தியின் கடைசி நாள்...



மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் நடந்த மிகக் கொடூரமான நிகழச்சி பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியாகும். 16 ஆண்டு காலம் பிரதமராகப் பதவி வகித்த இந்திரா காந்தி அவருடைய வீட்டில் பாதுகாவலர்களாலேயே (சீக்கியர்கள்) சுட்டுக் கொல்லப்பட்டார்.

சீக்கியர் பொற்கோவிலில் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போருக்குப்பிறகு, இந்திரா மீது சீக்கியர்களில் பலர் ஆத்திரம் கொண்டிருந்தனர். அதன் காரணமா, இந்திரா காந்தியின் வீட்டில் காவல் பணியில் சீக்கியர்களை அமர்த்தக் கூடாது என்று ரகசியத்துறை டைரக்டர் கருத்து தெரிவித்தார்.

ஆனால் அந்த யோசனையை இந்திரா ஏற்கவில்லை. டெல்லியில் பிரதமர் இந்திரா காந்தியின் வீடு ஒரே காம்பவுண்டுக்குள் அமைந்த இரு கட்டிடங்களைக் கொண்டதாகும். இவற்றில் பிரதமர் வசிக்கும் இல்லத்தின் வாசல், சப்தர்ஜங் ரோட்டில் உள்ளது. இந்த இல்லத்தை அடுத்த கட்டிடம், பிரதமரின் அலுவலகமாகும். இதன் வாசல் அக்பர் ரோட்டில் உள்ளது.

ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்துக்குள்ள தூரம் சுமார் 300 அடியாகும். இரண்டுக்கும் இடையில் உள்ள பாதை வழியே கார் செல்ல முடியும் என்றாலும், இந்திரா நடந்தே செல்வது வழக்கம். 1984 அக்டோபர் 31ந்தேதி காலை 8 மணிக்கு, இந்திரா காந்தி பற்றி டெலிவிஷன் படம் ஒன்றை எடுப்பதற்காக, வெளிநாட்டுப் படப்பிடிப்பாளர் ஒருவர் வந்து, பிரதமரின் அலுவலகத்தில் காத்திருந்தார். அவருக்குப் பேட்டியளிக்க இந்திரா காந்தி தன் இல்லத்திலிருந்து அலுவலகத்துக்கு நடந்து சென்றார்.

இரண்டு கட்டிடங்களுக்கும் இடையே ஒரு நடைபாதை உள்ளது. அதில் அவர் நடந்து செல்ல, அவருக்கு சுமார் 7, 8 அடி தூரத்தில் பாதுகாப்பு அதிகாரி தினேஷ் பட் மற்றும் 5 மெய்க்காப்பாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அவர்களுக்குப் பின்னால், பிரதமரின் அந்தரங்கச் செயலாளர் ஆர்.கே.தவான் வந்து கொண்டிருந்தார். பாதையின் வலது புறத்தில் புதர் போன் செடிகளுக்குப் பின்னால் பிரதமரின் இல்ல பாதுகாவலர்கள் பியாந்த்சிங் (சப் இன்ஸ்பெக்டர்), சத்வந்த்சிங் (கான்ஸ்டபிள்) ஆகியோர் நின்றிருந்தனர்.

இந்திரா காந்தி நடந்து வந்து கொண்டிருந்தபோது, பியாந்த்சிங் (வயது 33) தன் கைத்துப் பாக்கியை உருவி எடுத்து, இந்திரா காந்தியை நோக்கி ஐந்து முறை சுட்டான். அதே சமயம் சத்வந்த்சிங் (26) இயந்திரத் துப்பாக்கியால் (ஸ்டேன்கன்) சரமாரியாகச் சுட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இவ்வளவும் நடந்து விட்டன. இந்திரா காந்தியின் நெஞ்சிலும், வயிற்றிலும் குண்டுகள் பாய்ந்தன. ரத்தம் பீறிட அவர் கீழே சாய்ந்தார். (இந்திரா காந்தியை நோக்கி பியாந்த்சிங்கும், சத்வந்த்சிங்கும் திரும்பிய போது, இந்திராவின் பின்னால் வந்த மெய்க்காப்பாளர்கள் அதை கவனிக்கவே செய்தனர். ஆனால் அந்த இருவரும் இந்திரா காந்தியை நோக்கி வணங்குவதாகவே அவர்கள் நினைத்துவிட்டனர்.) இந்திரா காந்தி சுடப்பட்டு விட்டார் என்பதை தெரிந்து கொண்டதும், கொலையாளிகளை நோக்கி கமாண்டோ படையினர் சுட்டனர். இதில் பியாந்த்சிங் மரணம் அடைந்தான். சத்வந்த்சிங் படுகாயம் அடைந்தான்.

வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்த சோனியா, துப்பாக்கி சத்தம் கேட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிவந்தார். இந்திரா காந்தி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைக்கண்டு "அம்மா!" என்று கதறினார். இந்திரா காந்தியை ஆஸ்பத்திரிக்கு காரில் கொண்டு சென்றார்கள். பின் இருக்கையில் இந்திரா படுக்க வைக்கப்பட்டார். அவர் தலையை, தன் மடி மீது வைத்துக்கொண்டார் சோனியா. ஆஸ்பத்திரியில் இந்திராவுக்கு அவசர "ஆபரேஷன்" நடந்தது.

இந்திரா உடலில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன. அவற்றில் 8 குண்டுகள் உடம்பைத் துளைத்துக்கொண்டு வெளியே சென்றிருந்தன. இந்திராவைக் காப்பாற்ற டாக்டர்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டனர். ஆனால் பலன் இல்லை. 2.25 மணிக்கு இந்திரா இறந்து விட்டார்" என்று டாக்டர்கள் அறிவித்தனர். எனினும் அகில இந்திய ரேடியோ மாலை 6 மணிக்குத்தான் இந்திராவின் மரணச்செய்தியை அறிவித்தது.

இந்திரா கொல்லப்பட்ட போது, ஜனாதிபதி ஜெயில்சிங் வெளிநாட்டில் இருந்தார். ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக, மேற்கு வங்காளத்துக்குச் சென்றிருந்தார். மூத்த மந்திரியான பிரணாப் முகர்ஜியும் அவருடன் இருந்தார். அவர்கள் சென்று கொண்டிருந்த காரை, ஒரு போலீஸ் ஜீப் வழி மறித்தது. "பிரதமர் வீëட்டில் ஒரு விபத்து நடந்துள்ளது. சுற்றுப் பயணத்தை நிறுத்திவிட்டு, உடனே டெல்லிக்குத் திரும்புங்கள்" என்ற செய்தி ராஜீவ் காந்திக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே ராஜீவ் காந்தியும், பிரணாப் முகர்ஜியும் ஒரு ஹெலிகாப்டர் மூலம் கல்கத்தாவுக்குச் சென்றனர்.

அங்கு "இந்தியன் ஏர்லைன்ஸ்" விமானம் ஒன்று தயாராக காத்துக்கொண்டிருந்தது. அதில் இருவரும் டெல்லிக்குப் பயணமானார்கள். மரணத்தை தொடர்ந்து டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக கடும் கலவரம் மூண்டது. இந்தியா முழுவதும் அசாதாரண நிலை நிலவியது. ராஜீவ் காந்தி டில்லிக்கு வந்ததும் இறுதி சடங்குகள் துவங்கின. இறுதி சடங்குகள் முடிந்து சிதைக்கு தீ முட்டப்பட்டது.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, January 25, 2012

சென்னை மசாஜ் பார்லரில் ஏமாந்த அறிவாளி


என் நண்பன் ஒருவன் சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்தான். கல்லூரி படிப்பு முடித்ததும் சிங்கப்பூருக்கு சென்று தற்போது அங்கு நிரந்தர குடியுரிமை வாங்கி விட்டான். மற்ற ஊர்களெல்லாம் சுற்றி விட்டு மீண்டும் நேற்று சென்னை வந்தான். உடல் மிகவும் சோர்வாக இருப்பதாகவும் மசாஜ் பார்லர் சென்று உடலை ரீசார்ஜ் செய்தால் தான், மீண்டும் ஊர் சுற்ற முடியும் என்றான். முகவரியும் கேட்டான். எனக்கு எந்த பாரில் எந்த சரக்கு கிடைக்கும். எவன் பப்பில் அதிக சைட்டிஷ் கொடுப்பான் என்று கேட்டால் சொல்லுவேன்.

இந்த மசாஜ் சென்டரைப் பற்றி கேட்டால் எனக்கு என்ன தெரியும். அவனிடம் டெக்கான் குரோனிக்கல் பேப்பரில் விளம்பரம் பார்த்திருக்கிறேன். வாங்கிப் பார் தெரியும் என்றேன். அவனும் பார்தது ஒரு மசாஜ் நிலையத்திற்கு போன் செய்யவே அவர்கள் இடம் பற்றி கூறி விட்டு பேஜ் மசாஜ், ஹெட்மசாஜ், புல்பாடி மசாஜ், ஸ்டீம் பாத், ஹாட் வாட்டர் பாத் எல்லாம் சேர்த்து ஒருவர் செய்தால் 1000ரூபாய் எனவும், இருவர் என்றால் 1500ரூபாய் எனவும் கூறியுள்ளனர்.

அவன் இதை என்னிடம் கூறி விட்டு செல்லும் வழி கேட்டான். உடனே எனக்குள் அலாரம் அடித்தது. ஏதோ வில்லங்கமான இடம் அது என்று நினைத்து ஜொள் விட்டபடி நானும் வருகிறேன் என்று அவனுடன் கிளம்பினேன். இந்த பார்லர் அரும்பாக்கத்திலிருந்து MMDA காலனி போகும் வழியில் இருந்தது. பெரிதாக பெயர் பலகையெல்லாம் வைத்து ஒரு பெரிய அப்பார்ட்மெண்டின் மூன்றாவது மாடியிலிருந்தது. உள்ளே சென்றால் நிஜ பார்லர் போலவே இருந்தது. ஏற்கவே அங்கு ஆறு பேருக்கு பியூட்டி பார்லர் சேரில் அமர வைத்து பேஸ் மசாஜ் செய்து கொண்டிருந்தனர். எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நான் நினைத்து வந்தது வேறு. இது உண்மையான பார்லர் போல, நமக்கு இதெல்லாம் சரிவராது என்று நினைத்து அவனை மட்டும் மசாஜூக்கு செல்ல சொல்லிவிட்டு எனக்கு வேலையிருந்ததால் இரண்டுமணி நேரம் கழித்து வந்து பிக்அப் செய்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டு கிளம்பிவிட்டேன்.

என் வேலையெல்லாம் முடித்து விட்டு அவனுக்கு போன் செய்தால் இன்னும் இரண்டு மணிநேரம் கழித்து வந்து பிக்அப் பண்ணிக் கொள் என்றான். எனக்கு கடுப்பாகி விட்டது. எனக்கு வேலையிருக்கிறது, நான் புறப்படுகிறேன். நீ ஆட்டோ பிடித்து வந்துக் கொள் என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டேன். அத்துடன் இதனை மறந்து விட்டு நான் ஐசிஎப் சென்று பிறகு வீட்டிற்கு வந்து விட்டேன்.

நேற்று இரவு அவன் எனக்கு போன் செய்து பாருக்கு வரும்படியும் கூறினான். நானும் சென்றேன். சில ரவுண்டுகள் உள்ளே போன பிறகு தான் அவனிடமிருந்து பகலில் நடந்த சம்பவங்கள் எல்லாம் வெளிவந்தன. பார்லரில் இரண்டு பெண்கள் அதுவும் சூப்பர் பிகர்கள், ஒன்று தமிழ்நாட்டுப் பொண்ணு, மற்றொன்று மிசோரம் பொண்ணு. இருவரும் அவனுக்கு சாதாரணமாக பேஸ் மசாஜ் மற்றும் ஹெட்மசாஜ் செய்துள்ளனர். அதன் பிறகு பாடி மசாஜ் என்று சொல்லி தனியறைக்கு கூட்டி சென்றுள்ளனர். அங்கிருந்து தான் வில்லங்கம் ஆரம்பிக்கிறது.

அவனை எல்லா உடைகளையும் கழற்ற சொல்லிவிட்டு ஒரு கோவணத்தை அந்த பெண்களே கட்டி விட்டிருக்கின்றனர். அதன் பிறகு எல்லாவற்றையும் இங்கு சொல்வது சபை நாகரீகமாக இருக்காது. எல்லாம் சென்சார் தான், ஒரு மணிநேரம் கழித்து ஸ்டீம்பாத் எடுத்ததும் பாத்ரூமில் வெந்நீரை ஊற்றி அவர்களே குளிப்பாட்டியிருக்கின்றனர். அங்கு கட்டணமாக 1500ம் அந்த பெண்களுக்கு டிப்ஸாக ஆளுக்கு 2000ரூபாயும் கொடுத்திருக்கின்றான். வெளியில் வந்தவனுக்கு ஆசை அடங்காமல் மீண்டும் சென்று இரண்டாவது முறையாக மசாஜ் செய்து விட்டு திரும்பி வந்திருக்கிறான்.ஆக அன்று அவனுக்கு ஆன செலவு மொத்தமாக 11000 ரூபாய். அவனிடம் ஏண்டா வெறும் மசாஜூக்கு இத்தனை ரூபாய் செலவு பண்ண முட்டாள் நீதான்டா என்று திட்டி விட்டு வந்தேன்.

இவனையெல்லாம் என்னங்க பண்ணுறது, நம்ம சென்னையில் மசாஜூக்கு 11000 ரூபாய் செலவு பண்ணிட்டு சும்மா வந்தால் அவன் இளிச்சவாயன் தானே.

ஆரூர் மூனா செந்தில்

Monday, January 23, 2012

ஜான் எப் கென்னடியின் கடைசி நாள்...



அமெரிக்க மக்களை மட்டுல்ல, உலக மக்கள் அனைவரையும் கவர்ந்தவர், அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜான் எப் கென்னடி. புகழின் உச்சியிலிருந்தபோது அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அகில உலகத்தையும் திடுக்கிடச் செய்தது. கம்பீரமான தோற்றமும், நல்ல பேச்சாற்றலும் கொண்ட கென்னடி, அமெரிக்கர்களால் மட்டுமல்ல; உலக மக்களாலும் நேசிக்கப்பட்டார். அவர் ஆட்சியின்போதுதான் வானவெளி ஆராய்ச்சிகளில் அமெரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது.

1962 அக்டோபர் மாதம், அமெரிக்கா அருகில் உள்ள கியூபாவில் ஏவுகணை தளம் அமைக்க ரஷியா முயன்ற போது, கியூபாவைச் சுற்றிப் போர்க்கப்பல்களை நிறுத்தி, "கடல் முற்றுகை"யிட்டு ரஷியாவின் முயற்சியை முறியடித்தார், கென்னடி. அதே மாதத்தில், இந்தியா மீது சீனா படை யெடுத்தபோது, இந்தியாவுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவினார்.

உலகப் பெருந்தலைவர்களில் ஒருவராக விளங்கிய கென்னடி 1964ல் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், 1963 நவம்பர் 22ந்தேதி, டெக்சாஸ் மாநிலம் டல்லாஸ் நகருக்குச் சென்றார். மனைவி ஜாக்குலினுடன் காரில் ஊர்வலமாகச் சென்றபோது, ரோட்டின் இருபுறமும் திரளான மக்கள் கூடி நின்று வரவேற்றனர். மக்களைப் பார்த்து கை அசைத்தபடி சென்று கொண்டிருந்தார், கென்னடி.

திடீரென்று, ஒரு கட்டிடத்தின் 6வது மாடியிலிருந்து சீறி வந்த மூன்று துப்பாக்கிக் குண்டுகள் கென்னடியின் தலையிலும், கழுத்திலும் பாய்ந்தன. காருக்குள் சுருண்டு விழுந்தார், கென்னடி. அவரை ஜாக் குலின் தாங்கிக் கொண்டு கதறினார். கண்மூடிக் கண் திறப்பதற்குள் இந்தச் சம்பவம் நடந்து விட்டது. என்ன நடந்தது என்பது கூடப் பொது மக்களில் பலருக்குத் தெரியவில்லை. காரிலிருந்த மெய்க்காவலர்கள், காரை அருகில் இருந்த ஆஸ்பத்திரியை நோக்கித் திருப்பினார்கள். அங்கு கென்னடிக்கு ஆபரேஷன் நடந்தது. அவர் உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் பெருமுயற்சி செய்தனர். ஆனால் பலனில்லை. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரை மணி நேரத்தில் கென்னடியின் உயிர் பிரிந்தது.

கென்னடி கொல்லப்பட்ட சில மணி நேரத்திற்குள் ஆஸ்வால்டு (வயது 24) என்ற இளைஞன் கைது செய்யப்பட்டான். அவன் முன்பு கடற்படையில் பணியாற்றியவன். சிறையில் வைக்கப்பட்டிருந்த அவனைக் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக 1963 நவம்பர் 24ந்தேதியன்று போலீசார் வெளியே அழைத்து வந்தனர். ஜெயிலுக்கு முன்னால் பெரும் கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஜாக் ரூபி (வயது 42) என்பவன், ஆஸ்வால்டை வெகு அருகிலிருந்து சுட்டான். குண்டு குறி தவறாமல் நெஞ்சில் பாய்ந்தது. ஆஸ்வால்டு அதே இடத்தில் செத்து விழுந்தான். ஆஸ்வால்டு கொல்லப்பட்டதால், கென்னடியை அவன் எதற்காகச் சுட்டுக்கொன்றான், அதன் பின்னணி என்ன, அவனை யாரும் தூண்டிவிட்டார்களா என்பதே தெரியாமல் போய் விட்டது.

ஆஸ்வால்டை சுட்டுக்கொன்ற ரூபியை உடனே போலீசார் கைது செய்தனர். ரூபி "இரவு விடுதி" ஒன்றின் சொந்தக்காரன். அவன் மீது வழக்குத் தொடரப்பட்டது. அவனுக்கு 1964 மார்ச் 14ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவன் மனநோயாளி என்று டாக்டர்கள் கூறியதால் தூக்கில் போடப்படாமல் காவலில் வைக்கப் பட்டிருந்தான். சிறையிலேயே 1967 ஜனவரி 3ந்தேதி மரணம் அடைந்தான்.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, January 21, 2012

மர்லின் மன்றோவின் கடைசி நாள்...



உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 05.08.1962ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது. அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

ஆரூர் மூனா செந்தில்


Monday, January 16, 2012

N T ராமராவ் - கடைசி நாள் ...

ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்குப் பட உலகின் முடிசூடா மன்னருமான என்.டி.ராமராவ், மாரடைப்பால் காலமானார். என்.டி.ராமராவ், தெலுங்கு பட உலகில் வெற்றிக்கொடி நாட்டியபின், அரசியலில் புகுந்து பல சாதனைகளை படைத்தார். இரண்டாம் மனைவி லட்சுமி சிவபார்வதியின் தலையீட்டால் ஆட்சியை இழந்து தனிமைப்படுத்தப்பட்டார். மருமகன் சந்திரபாபு நாயுடு முதல் மந்திரி ஆனார்.

ஐதராபாத் நகரில் பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் மனைவி லட்சுமி சிவபார்வதியுடன் வசித்து வந்தார். 76 வயது ஆனபோதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்காக ராமராவ் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதுபோல 18.1.1996 அன்று காலையிலும் அவர் உடற்பயிற்சிக்கு தயார் ஆனார்.

அந்த சமயத்தில் என்.டி.ராமராவுக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது. நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார். அவரை படுக்கை அறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தனர். டாக்டர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே டாக்டர்கள் விரைந்து வந்து படுக்கையில் இருந்த என்.டி.ராமராவை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டதும் சிவபார்வதி கதறி அழுதார். என்.டி.ராமராவின் உடல் வீட்டின் தாழ்வாரத்தில் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

ராமராவின் மரணச் செய்தி கிடைத்ததும் மருமகனும், முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். மூத்த மருமகன் வெங்கடேசுவரராவ் மற்றும் மகன்கள், மகள்கள் குடும்பத்தினரும் விரைந்து சென்றனர். என்.டி.ராமராவ் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டனர். ஆந்திர கவர்னர் கிருஷ்ணகாந்த், அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர் நடிகைகள் என்.டி.ராமராவ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராமராவ் உடல் அருகே சிவபார்வதி கண்ணீர் சிந்தியபடி சோகமே உருவாக அமர்ந்திருந்தார்.

என்.டி.ராமராவ் மரணச் செய்தி ஐதராபாத் நகரில் காட்டுத்தீ போல பரவியது. ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் சாரை சாரையாக என்.டி.ராமராவ் வீட்டிற்கு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவர்களில் பலர் துக்கம் தாங்காமல் கதறி அழுதனர். பெண்கள் தரையில் விழுந்து அழுது புரண்டனர். ஐதராபாத் நகர் மட்டுமின்றி ஆந்திர மாநிலமே சோகத்தில் மூழ்கியது.

பின்னர் என்.டி.ராமராவ் உடல் வீட்டில் இருந்து ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக லால்பகதூர் ஸ்டேடியத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. தொண்டர்களும், ரசிகர்களும் பின்தொடர்ந்து சென்றனர். அங்கு விசேஷ மேடை அமைத்து என்.டி.ராமராவ் உடல் வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

என்.டி.ராமராவ் மறைவு செய்தியை கேட்டு பிரதமர் நரசிம்மராவ் அதிர்ச்சி அடைந்தார். விசேஷ விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு வந்து அஞ்சலி செலுத்தினார். சிவபார்வதிக்கும், ராமராவின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார். ராமராவின் மகனும், போக்குவரத்து மந்திரியுமாக இருந்த ஹரிகிருஷ்ணா வெளிநாட்டில் இருந்தார். ராமராவ் மரண செய்தி கிடைத்ததும் அவர் தனது சுற்றுப்பயணத்தை ரத்து செய்து விட்டு, ஐதராபாத் திரும்பினார்.

தமிழக கவர்னர் சென்னா ரெட்டி, பாராளுமன்ற சபாநாயகர் சிவராஜ் பட்டீல், முன்னாள் பிரதமர்கள் வி.பி.சிங், சந்திர சேகர், முதல் மந்திரிகள் தேவேகவுடா, ஜோதிபாசு, லல்லுபிரசாத் யாதவ், மனோகர் ஜோஷி, பா.ஜனதா தலைவர் எல்.கே.அத்வானி, வ.கம்ï னிஸ்டு தலைவர் இந்திர ஜித்குப்தா, ஜனதா தள தலைவர் எஸ்.ஆர்.பொம்மை, பிஜ× பட்நாயக், நடிகர்கள் சசிகபூர், நாகார்ஜ×னா, கிருஷ்ணா, டைரக்டர்கள் டி.ராமா நாயுடு, தாசரி நாராயணராவ் உள்பட திரளானபேர் அஞ்சலி செலுத்தினார்கள்.

மறுநாள் (19ந்தேதி) பிற்பகல் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராமராவின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் வைக்கப்பட்டது. தலைப்பகுதியில் அவருடைய படமும், முதல் மனைவியின் படமும் வைக்கப்பட்டு இருந்தன.

ராமராவின் தலைப்பகுதியில் மூத்த மருமகன் வெங்கடேசுவரராவும், கால் பகுதியில் சந்திரபாபு நாயுடுவும் அமர்ந்து இருந்தனர். லட்சுமி சிவபார்வதியும் அலங்கார வண்டியில் ஏறி, ராமராவ் உடல் அருகே அமர்ந்தார். இதை பார்த்ததும் அருகில் நின்று கொண்டிருந்த ராமராவின் மகன்களான ஹரிகிருஷ்ணாவும், நடிகர் பாலகிருஷ்ணாவும் ஆவேசத்துடன் சென்றனர். சிவபார்வதிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஹரிகிருஷ்ணாவின் ஆதரவாளர்கள் சிவபார்வதியை பிடித்து கீழே தள்ளினார்கள். இதனால் அவமானமும், துயரமும் அடைந்த சிவபார்வதி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

இறுதி ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று புத்த பூர்ணிமா வளாகத்தை அடைந்தது. அங்கு ராமராவின் உடல், "சிதை"யின் மீது வைக்கப்பட்டு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் சிதைக்கு ராமராவின் மூத்த மகன் ஜெயகிருஷ்ணா தீமூட்டினார். ஆந்திர மாநில போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் 21 குண்டுகளை சுட்டு அஞ்சலி செலுத்தினர்.

ராமராவ் மறைவுக்கு பிறகு லட்சுமி சிவபார்வதி "என்.டி.ஆர். தெலுங்கு தேசம்" Linkஎன்ற கட்சியைத் தொடங்கி தேர்தலில் குதித்தார். ஆனால் அரசியலில் அவரால் காலூன்றி நிற்க முடியவில்லை. தேர்தலில் அவருடைய கட்சி தோல்வி அடைந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் போட்டியிட்டு சிவபார்வதி "டெபாசிட்" இழந்தார்.

Saturday, January 14, 2012

வேட்டை சினிமா விமர்சனம்

அய்யா எல்லாருக்கும் வணக்கம்,

சத்தியமா சொல்றேன், நான் வேணும்னு நண்பன் விமர்சனம் போடல. எங்க ஏரியாவுல ரிலீசாகல, அத யாராவது கேட்டீங்களா, நான் பாக்காம போட்டேன்னு இவ்வளவு பேர் சொல்றீங்களே, நான் மட்டும் சொல்லாட்டி யாராலயாவது கண்டுபிடிக்கமுடிஞ்சதா, மனசாட்சிக்கு உண்மையா இருக்கனும்னு தான் உண்மைய சொன்னேன். அத வுடுங்க, இன்னக்கி போடுறது உண்மையான வேட்டை பட விமர்சனம் தான்.

----------------------------------------------------

அதுக்கு முன்னாடி ஒரு பர்சனல், நான் சும்மா எழுதுறேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். நேற்று இரவு ஒரு போன் வந்தது. சார் நான் காளையார் கோவிலில் இருந்து பேசறேன். நான் உங்க பிளாக்கின் ரசிகன், நான் மட்டுமல்ல என் கூட நான்கு பேர் உள்ளனர். அவர்களும் உங்கள் எழுத்தின் ரசிகர்கள், நாங்க உங்களை நேரில் பார்க்க வருகிறோம் என்று போன் வந்தது. நான் சத்தியமா நினைச்சேன். யாரோ நம்மளை நல்லா கலாய்க்கிறாங்கன்னு. ஆனால் இன்று காலையில் ஒரு போன் வந்தது. சார் நாங்கள் உங்களை பார்கக திருவாரூர் வந்துள்ளோம் என்று. எனக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் வந்தது. வீட்டிற்கு வந்தார்கள். என் பிளாக்கைப் பற்றி ஒரு மணிநேரம் ரசித்து பேசினார்கள். எனக்கு தாங்க முடியாத ஆச்சரியம், என்னையும் என் பிளாக்கையும் மதித்து சிலர் நேரில் வந்து பேசுகிறார்களே என்று. ஆனால் நான் அவர்களை நன்றாக உபசரித்து அனுப்பினேன். என்ன கொடுமைடா சாமி.

------------------------------------------------------

படத்திற்கு வருவோம், சில பிளாக் ரசிகர்கள் வந்ததால் சினிமாவுக்கு செல்ல 10 நிமிட்ம் லேட்டாகி விட்டது. முதல் பாட்டு ஓடும் போது தான் தியேட்டருக்குள் சென்றேன். ஒன்னும் பிரச்சனையில்லை, அப்போதிலிருந்து பார்த்தாலும் படம் புரிந்தது.

படத்தின் கதைக்கு வருவோம். மாதவனும் ஆர்யாவும் அண்ணன் தம்பி. அவர்களது அப்பாவாக சிரஞ்சீவியின் அண்ணன் ராம்பாபு. மாதவன் பயந்த சுபாவம் உள்ளவர். அவருக்கு ஏதாவது பிரச்சனை எனறால் தம்பி ஆர்யா அடிதடியில் இறங்கி காப்பாற்றுகிறார். ராம்பாபு போலீசாக இருந்து இறந்து விடுகிறார். அவர் இறந்ததால் அவரது போலீஸ் வேலை மாதவனுக்கு கிடைக்கிறது. போஸ்டிங் தூத்துக்குடியில் கிடைக்கிறது.

அங்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரவுடிகள் இருப்பதனால் அவர்களை வேட்டையாடும் வேலை மாதவனிடம் உயரதிகாரியால் தள்ளிவிடப்படுகிறது. அவருக்கு துணையாக ஆர்யா நின்று வில்லன்களை பந்தாடி மாதவன் பெரிய முரட்டு போலீஸ் என்று அனைவரையும் நம்ப வைக்கிறார். அந்த சமயத்தில் அண்ணன் ச்சே. அக்காவான (முகத்தைப் பார்த்தால் அண்ணன் போல தான் தெரிகிறது) சமீரா ரெட்டியை மாதவன் மணமுடிக்கிறார். தங்கச்சி அமலா பாலை ஆர்யா காதலிக்கிறார். மாதவன் பயந்தாங்கொள்ளி என்று வில்லன் குரூப்களுக்கு தெரிய வருகிறது. அவரை தனியாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து அடித்து விடுகறார்கள். ஆர்யா மாதவனுக்குள் உள்ள ஆண்மைத்தனத்தை வெளிக்கொண்டு வந்து அவருடன் சேர்ந்து வில்லன்களை கொன்று தூத்துக்குடியை காப்பாற்றுகிறார். இது தான் படத்தின் கதை.

இரண்டு நாட்களுக்கு முன்பு சிபி அண்ணன் படத்தின் நாட்டை சொல்லியிருந்தார். என்னே சிபி அண்ணனின் புத்திசாலித்தனம்.

ஆர்யா தான் படத்தின் நாயகன். தற்போதைய மார்க்கெட்டின் அடிப்படையில் அவருக்கு படத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நன்றாக செய்கிறார். நன்றாக அடிக்கிறார். அடுத்தது மாதவன், முதல் பாதியில் பயந்த சுபாவம் உள்ளவராகவும் அதன் பின் வீரத்தில் வில்லன்களை அடித்து துவைப்பதுமாக நன்றாக நடித்துள்ளார்.

சமீரா ரெட்டி என்ற ரெண்டும் கெட்டான். அதனை பெண்ணாகவும் ரசிக்க முடியவில்லை ஆணாகவும் நினைக்க முடியவில்லை. அமலா பால் நச்சுன்னு உள்ளார். லிப் கிஸ்ஸில் அசத்துகிறார்.

வழக்கம் போல் வில்லன்கள் தூத்துக்குடியை ஆளுகிறார்கள். கதாநாயகனிடம் தோற்கிறார்கள். ஏண்டா நான் நேரில் பார்த்த தூத்துக்குடி நன்றாக உள்ளது. சினிமாவில் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக காண்பிக்கிறீர்கள்.

பப்பரப்பா பாடலை நான் நன்றாக எதி்ர்பார்த்தேன். ஆனால் பார்க்க சுமாராக உள்ளது, நால்வரும் சேர்ந்து பாடுவது போல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ம்ச்சே அதுவு்ம் போச்சு.

லிங்குசாமி ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுக்கிறார். இது தொடர்ந்தால் சில நாட்களில் ஓரம் கட்டப்படுவார். டெம்ப்ளேட்டில் இருந்து விலகி எடுத்த பீமாவும் சரி ஜியும் சரி ஓடவில்லையென்றால் அவர் என்ன செய்வார் பாவம்.

படம் நன்றாக உள்ளது. ஆனால் திரும்ப பார்த்த லிங்குசாமி படம் போலவே உள்ளது.

நன்றி வணக்கம்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : நான் திருவாரூரில் இருப்பதனால் நாளை மறுநாள் வரை பின்னூட்டத்திற்கு பதிலளிக்க முடியாது. மன்னித்துக் கொள்ளவும்.

Friday, January 13, 2012

நண்பன் விமர்சனத்தில் நடந்த தில்லுமுல்லு

அய்யா எல்லாருக்கும் வணக்கமுங்க.

எல்லாரும் என்னை மன்னிக்கனுமுங்க. நானா வேணும்னு செய்யலீங்க. நான் நேர்மையாத்தான் செய்யனும்னு நெனச்சேனுங்க. ஆனா நேத்து அது என்னகடுப்பேத்திச்சிங்க. அதனால நான் பதிலுக்கு விமர்சனத்தை போட்டுப்புட்டேங்க. உண்மையா உழைச்ச சிபிகிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்கறேனுங்க. போன் செய்து பேசியும் வாய் வரைக்கும் வந்த உண்மைய கஷ்டப்பட்டு மறைச்ச மோகன் குமார் அண்ணன் கிட்டயும் மன்னிப்பு கேட்டுக்கிறேனுங்க.

நடந்தது என்னன்னா எங்க ஏரியாவுல நேத்து நண்பன் படம் ரிலீசாகல. அம்பத்தூர், ஆவடி, பாடி எங்கேயும் படம் நேத்து வெளியாகல. நேத்து காலையில 7 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிட்டு ராக்கி வந்தேன், படம் இல்லை. அடுத்ததா முருகன் வந்தேன், அங்கேயும் இல்லை. அப்புறம் 8 மணிக்கு கொளத்தூர் கங்காவுல ஷோவுன்னு கேள்விப்பட்டு அங்கே போனேன். டிக்கெட் கிடைக்கவில்லை. என்னடா கடுப்பேத்துதேன்னு மற்றொரு நண்பன் கிட்ட போன் பண்ணி வேற நம்ம பக்கம் எங்க ஒடுதுன்னு கேட்டேன். மூலக்கடை சண்முகான்னு சொன்னான். அங்கே போனேன். அங்கேயும் டிக்கெட் இல்லை.

பொறுமை இழக்க ஆரம்பித்தேன். அப்புறம் 9 மணிக்கு கோயம்பேடு ரோகிணில பாக்கலாம்னு வந்தேன். அங்கேயும் ஹவுஸ்புல். கொலைவெறியாகிட்டு வீட்டுக்கு வந்தேன். ஏன்னா அதுக்கு மேல படம் பார்த்திட்டு வந்து விமர்சனம் எழுதினா வேஸ்ட் ஆகிடும்.

ஒயின்ஷாப்ல ப்ளாக்ல ஆப் சரக்கு வாங்கினேன். வந்து ஆப்பையும் அடிச்சேன். த்ரீ இடியட்ஸ் மனசுல ஒட்டிக்கிட்டேன். கேரக்டர் பேரு வேணும்ல அதுக்காக யூடியூப்ல டிரைலர் டவுன்லோட் பண்ணேன். விவரங்கள் எடுத்துக்கிட்டேன். த்ரீ இடியட்ஸை அப்படியே நானே தமிழ்பெயர்களுடன் விமர்சனம் எழுதினேன். மட்டையாகிட்டேன். மதியம் மோகன் குமார் அண்ணன் போன் செய்து என்னுடைய விமர்சனத்தை யாரோ காப்பியடி்த்து போட்டிருக்கிறதா சொன்னார். நானே பொய்யான விமர்சனம் போட்டேன். அதையும் ஒரு நாதேரி காப்பியடிச்சிருக்கு. அதை அவர்கிட்ட சொல்ல முடியல. முழுங்கிட்டேன. சாரி மோகன் குமார் அண்ணா.

ஆனால் நாளைக்கு சத்தியமா வேட்டை படம் பார்த்திட்டு தான் விமர்சனம் எழுதுவேன். ஏன்னா இப்ப நான் இருக்கிறது என் ஊர்ல. இப்ப உண்மையிலேயே நண்பன் படத்துக்கு போறேன். நன்றி


ஆரூர் மூனா செந்தில்


Thursday, January 12, 2012

நண்பன் - சினிமா விமர்சனம் - சுடச்சுட


ஏற்கனவே பலமுறை த்ரீ இடியட்ஸ் பார்த்து விட்டதால் நமக்கு ஒவ்வொரு காட்சியும் மனப்பாடமாக தெரியுமென்பதால் அடுத்தடுத்து என்ன வரும் என்பது தெரியுமென்பதால் சுவாரஸ்யம் குறைவது போல் தோன்றுவது நிஜமே. இருந்தாலும் ஷங்கர் படத்துடனே நம்மை கட்டிப் போடுகிறார். பொங்கலுக்கு இன்னும் மூன்று நாட்கள் இருக்கும் போதே படத்தை வெளியிட்டது என்ன காரணமோ தெரியவில்லை. எதிர்பார்ப்பு வேறு கன்னாபின்னாவென்று எகிறியிருப்பதால் திரையரங்கில் கூட்டம் தாங்க முடியவில்லை. பொங்கல் பண்டிகைக்காக இன்று இரவு திருவாரூர் செல்லவிருப்பதால் பொங்கலுக்கு வெளியாகும் மற்றபடங்களின் விமர்சனங்கள் திருவாரூரிலிருந்து.

சரி படத்தின் கதைக்கு வருவோம்.

ஸ்ரீகாந்த்(வெங்கட்ராம கிருஷ்ணன்) மற்றும் ஜீவா(சேவற்கொடி செந்தில்) நண்பர்கள். மற்றொரு நண்பனான சத்யன் (ஸ்ரீவத்சன் (அ) சைலன்சர்)போன் செய்து அவர்களின் மிக முக்கிய நண்பனா விஜய்(பஞ்சமன் பாரிவேந்தன்) வந்திருப்பதாக அழைத்ததால் அவசரஅவசரமா அவர்கள் படித்த பழைய கல்லூரிக்கு வருகிறார்கள். ஆனால் அங்கு விஜய் வரவில்லை, விஜயின் இருப்பிடம் மட்டுமே தெரியுமென சத்யன் சொன்னதால் அங்கு நோக்கி செல்கிறார்கள். பிளாஷ்பேக் துவங்குகிறது. சென்னையின் நம்பர் ஒன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்க வருகிறார்கள் மேற்சொன்ன நண்பர்கள் எல்லாம்.

அந்த கல்லூரியின் முதல்வர் சத்யராஜ் (விருமாண்டி சந்தனம்). அவரின் சித்தாந்தம் விஜய்க்கு பிடிக்கவில்லை. ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் படிப்பில் பிலோ ஆவரேஜ் மாணவர்கள். விஜய் கல்லூரியிலயே முதலாக வரும் மாணவர். சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற் நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானா (ரியா)வுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

அவர்கள் இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். பிளாஷ்பேக் ஓவர். சத்யனின் உதவியால் ஸ்ரீகாந்தும் ஜீவாவும் விஜயின் இருப்பிடம் அறிந்து அங்கு செல்கின்றனர்.

ஆனால் அந்த இடத்தில் பஞ்சமன் பாரிவேந்தன் பெயரில் இருப்பவர் S.J.சூர்யா. இவர்கள் அதிர்கின்றனர். பிறகு அவரை மிரட்டி விஜயின் உண்மையான இருப்பிடம அறிந்து அங்கு செல்லும் வழியில் இலியானாவுக்கு அன்று கல்யாணம் என்பதை அறிகின்றனர். அங்கு சென்று திருமணத்தை நிறுத்தி இலியானாவையும் அழைத்துக் கொண்டு விஜயின் இருப்பிடம் நோக்கி செல்கின்றனர். அங்கு விஜயை கண்டுபிடித்ததும் தான் தெரிகிறது, விஜய் இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் என்று. அனைவரும் ஒன்று சேருகின்றனர். படம் நிறைவடைகிறது.


என்னடா படத்தின் முழுகதையும் சொல்லி விட்டேன் என்கிறீர்களா, அதான் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் த்ரீஇடியட்ஸ் படத்தை பார்த்திருப்பார்களே. அதனால் தான் கதையில் சஸ்பென்ஸ் வைக்கவில்லை. படத்தை கொடுக்கும் முறையில் ஷங்கர் வெற்றிபெறுகிறார்.

விஜய் அடக்கி வாசித்திருக்கிறார். பழைய படங்களில் உள்ள படாபடா பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும், ஜீவாவின் அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாத போது அவரை ஸ்கூட்டியில் உட்கார வைத்து மருத்துவமனையின் உள் வரை ஓட்டி வரும் போதும், முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். படத்தில் விஜய்க்கு அடுத்த இடம் அவருக்கு தான். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார்.

ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும்.

படத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் படத்தின் பாடல்கள் ஏற்கனவே பலமுறை கேட்டு விட்டு பார்க்கும் போது ரம்மியமாக இருக்கிறது.

இவ்வளவு சொல்லிவிட்டு ஹீரோயினை பற்றி சொல்லாமல் இருந்தால் எப்படி என்கிறீர்களா, என்ன செய்ய நானோ தமிழ்நாட்டுகாரனாகி விட்டேனே. நமக்கு கொழுகொழுவென்று இருந்தால் தான் பிடிக்கிறது. இவரைப் பார்த்தால் வத்தலும் தொத்தலுமாக பிடிக்கமாட்டேன் என்கிறது. எனவே என் விமர்சனத்தில் இலியானா கட்.

வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

படம் பார்த்து விட்டு அவரச அவசரமாக எழுதுவதால் இப்போதைக்கு போதும் என்று நினைக்கிறேன். திருத்தங்கள் இருந்தால் குறிப்பிடவும் பிறகு திருத்திக் கொள்கிறேன். அடப்பாவிங்களா ஹிட்டுக்காக எவ்வளவெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. காலங்கார்த்தால பல்லுகூட விளக்காமல் சினிமாவுக்கு போய் பசியோடு எழுதினால் தான் ஹிட்டு கிடைக்கிறது, என்ன செய்ய, வரவர முதல்நாள் படம் பார்த்து விமர்சனம் எழுத பதிவுலகில் பெரும் கூட்டமே உள்ளது. அதில் தனித்து தெரிய தான் இவ்வளவும்.

நண்பன் - All is Well

நன்றி ரசிகர்களே,


ஆரூர் மூனா செந்தில்

Wednesday, January 11, 2012

ஜவஹர்லால் நேருவின் கடைசி நாள்...

இந்தியா சீனா போர் மூளுகிறவரை நேருவின் தலைமைக்கு எதிராக யாரும் குரல் எழுப்பியதில்லை. சீனப்போரில் இந்திய படைகளுக்கு ஏற்பட்ட தோல்வி காரணமாக நேரு தன் வாழ்நாளில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை சந்திக்க நேர்ந்தது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோற்று பதவியில் நேரு நீடித்தபோதிலும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 75 வயதைத் தாண்டியும் இளமையோடு இருந்த அவர் 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் புவனேசுவரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டபோது பக்கவாத நோயினால் தாக்கப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார்.

பின்னர் குணம் அடைந்து பிரதமருக்குரிய பொறுப்புகளை செவ்வனே கவனித்தார். எதிர் காலத்தில் இந்தியா மீது வெளிநாடுகள் படையெடுத்தால் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக ராணுவத்தைப் பலப்படுத்தவும் நவீனப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டார். எனினும் அந்த மகத்தான தலைவரை எமன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினான்.

1964 மே 27ந்தேதி காலை 6.20 மணிக்கு அவருக்கு திடீரென்று ரத்த அழுத்தம் குறைந்தது. உணர்வு இழந்தார். டாக்டர்கள் எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பலனின்றி பிற்பகல் 2 மணிக்கு காலமானார். சுதந்திரத்துக்கு முன் 30 ஆண்டுகளும், சுதந்திரத்துக்குப்பின் 17 ஆண்டுகளும் தாய்நாட்டுக்கு உழைத்த நேரு மறைந்தார். உயிர் பிரியும்போது மகள் இந்திரா காந்தி மந்திரிகள் நந்தா, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோர் நேருவின் படுக்கை அருகே இருந்தனர்.

நேரு மரணம் அடைந்த செய்தியை பாராளுமன்றத்தில் மந்திரி சி.சுப்பிரமணியம் அறிவித்தார். "நேரு மறைந்துவிட்டார். இந்த தேசத்தின் ஒளி விளக்கு அணைந்து விட்டது" என்று அவர் குரல் தழுதழுக்க, கண்களில் கண்ணீருடன் கூறினார். சுப்பிரமணியத்தின் அறிவிப்பைக் கேட்டதும் பல "எம்.பி."க்கள் கதறி அழுதார்கள். உடனே பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. மந்திரிகளும், "எம்.பி."க்களும் நேரு வீட்டுக்கு விரைந்தனர். நேருவின் உடல் பொதுமக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். மாலை 5 மணிக்கு, நேருவின் வீட்டு முன் 2 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கூடிவிட்டனர். அவர்கள் வரிசையில் நின்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

நேரு மகள் இந்திரா தந்தையின் உடல் அருகிலேயே அமர்ந்திருந்தார். அவர் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது. நேரு மந்திரிசபையில் மூத்த மந்திரியாக இருந்த குல்சாரிலால் நந்தா, இடைக்கால பிரதமராகப் பதவி ஏற்றார். விரைவில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி (எம்.பி.க்கள்) கூடி, புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

நேருவின் இறுதி ஊர்வலம் மறுநாள் நடைபெற்றது. இங்கிலாந்து பிரதமர் டக்ளஸ் ஹோம், ரஷிய உதவிப்பிரதமர் கோசிஜின், இலங்கைப் பிரதமர் திருமதி பண்டாரநாயக், நேபாள மன்னர் மகேந்திரா, எகிப்து உதவி ஜனாதிபதி உசேன் சபி, அமெரிக்க வெளிநாட்டு இலாகா மந்திரி டீன் ரஸ்க் உள்பட உலகத் தலைவர்கள் பலர் வந்து இறுதி மரியாதை செலுத்தினர். ஊர்வலம் நேரு வீட்டில் இருந்து புறப்பட்டது. ஊர்வலத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று யமுனை நதிக்கரையை அடைந்தது. யமுனை நதிக்கரையில், காந்தி சமாதி அருகே சந்தனக் கட்டைகளால் அமைக்கப்பட்ட "சிதை"யில் நேருவின் உடல் தகனம் செய்யப்பட்டது. "சிதை"க்கு நேருவின் பேரன் சஞ்சய் காந்தி தீ மூட்டினார்.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, January 10, 2012

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் - பகுதி 2

அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்.. (முந்தைய பகுதி படிக்க)

எங்கள் வீ்ட்டில் ஒரு மரக்கட்டில் உண்டு. வீட்டின் கூடத்தின் மூலையில் அது இருக்கும். என்னை தரதரவென்று இழுத்து கட்டிலின் கீழ் தள்ளி விட்டார். அவர் கையில் கிரிக்கெட் பேட். கட்டிலின் கீழிருந்து வெளியேற அனைத்து பக்கமும் அடைபட்டிருந்தது. கட்டிலின் கீழ் என்னை குறி வைக்காமல் அவர் பாட்டுக்கு பேட்டை வீசுகிறார். நான் எந்த பக்கம் சென்றாலும் அடி விழுகிறது. அரைமணிநேரம் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். பாவம் அவருக்கு கை வலித்திருக்கும் போல. உடம்பு முழுக்க காயம் வீட்டிலும் யாரும் மருந்து போடக்கூட தயாரில்லை. இரவெல்லாம் அழுது கொண்டே யோசித்தேன். எப்படிடா அப்பாவுக்கு கட்டிலின் அடியில் விட்டு விளாச யோசனை வந்தது. நாமோ அவர் எப்படி அடித்தாலும் இரண்டாவது அடிக்குள் வீட்டை விட்டு வெளியில் ஒடி விடலாம் யோசித்து வைத்திருந்தோமே. கரெக்டாக கட்டிலின் கீழ் லாக் ஆகி விட்டோமே என்று. வீட்டில் அனைவரும் என்னுடன் சரியாக பேச 15 நாட்கள் ஆனது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் நான் தான் வகுப்புத் தலைவன். அது வரை எங்கள் பள்ளியில் Sports Activities என்பதே இல்லாமல் இருந்தது. திரு. இளங்கோவன் அவர்கள் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வந்து சேர்ந்தார். அதன் பிறகு தான் முதல்முறையாக பள்ளிக்கென ஹாக்கி டீம் உருவாக்கப்பட்டது. நான் தான் ஜூனியர், சீனீயர் இரண்டு டீம்களிலும் கோல் கீப்பர். ஏனென்றால் வயது இரண்டுக்கும் சரியாக இருந்தது, உருவமும் கடாமுடாவாக இருந்தது. அது வரை ஹாக்கியை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம். டீமில் இருந்த அனைவரும் புதியவர்கள். அதுவரை விடிந்தே எழுந்த நான் ஆசிரியரின் கண்டிப்பால் காலை 4 மணிக்கே எழுந்து திருவாரூர் தெப்பக்குளமான கமலாலயத்தை சுற்றி ஒட ஆரம்பித்தேன். குழுவில் இருந்த அனைவரும் தான். ஒரு முறை சுற்றவே 1.5 கி.மீ வரும். ஆறு ரவுண்டு கண்டிப்பாக ஒடவேண்டும். அதன் பிறகு அங்கிருந்து நேராக திரு.வி.க கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்று பயிற்சி. 11 மணி வரை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தால் சராசரியாக நான் முப்பது இட்லி தின்பேன். இப்பொழுதெல்லாம் நாலுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எல்லாம் காலம்.

நாங்கள் விளையாட்டு குழுவில் இருந்ததால் பள்ளிக்கு மதியம் அரை நாள் சென்றால் போதும். மூன்று மாதம் பயிற்சிக்கு பிறகு டிவிசனல் லெவல் போட்டிகள் துவங்கியது. ஜூனியர் அணிக்கான போட்டி எங்கள் பள்ளி அணிக்கு எதிராக மன்னார்குடி பின்லே பள்ளி அணி களமிறங்கியது. 0-1 என்று தோல்வி. சில நாட்களுக்கு பிறகு சீனியர் அணிக்கான போட்டி எதிரணி மன்னார்குடி நேஷனல் பள்ளி அணி. அதில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்டில் எனக்கு அடிபட்டதால் எனக்கு பதில் கணேஷ் என்ற நண்பன் கோல் கீப்பராக இருந்தான். அதிலும் 0-1 என்ற கணக்கில் தோல்வி. அத்துடன் பள்ளி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

அதிலும் ஒரு கலாட்டா நடந்தது. எங்கள் பள்ளிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரே மேனேஜ்மென்ட் தான். அந்த பள்ளியில் உள்ள ஹாக்கி டீம் தமிழ்நாடு லெவலில் சாம்பியன். நாங்களோ முதல் முதலாக விளையாடுபவர்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் ஒரு யோசனை சொன்னார். இந்த பசங்களுக்கு பெண்கள் அணியுடன் விளையாட வைத்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என்று. பசங்களுக்கோ ஒரு பக்கம் பெண்களுடன் விளையாடுவதனால் கடுப்பும் அதே சமயம் கிளுகிளுப்புமாக இருந்தது. போட்டி கல்லூரி மைதானத்தில் துவங்கியது. அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.

(தொடரும்...)
ஆரூர் முனா செந்திலு


Monday, January 9, 2012

புத்தக கண்காட்சியில் பதிவர்களுடன் கலாட்டா சந்திப்பு

புத்தக கண்காட்சி துவங்கிய இரண்டாம் நாளே நான் ஒரளவுக்கு வாங்க வேண்டும் என்று எதிர்பார்த்திருந்த புத்தகங்களை வாங்கியாகி விட்டது. சனியன்று பதிவுலக நண்பர்கள், மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி பிரபா, கேஆர்பி அண்ணன், ஓஆர்பி ராஜா அண்ணன், கேபிள் அண்ணன் ஆகியோர் புத்தக கண்காட்சியில் இருப்பதாக தெரிய வந்ததாலும் என் சித்தி மகன் சங்கர் புத்தகங்களை வாங்க வேண்டி என்னை அழைத்ததாலும் நான் சென்றேன். வெள்ளியன்று இருந்தது போல் இல்லாமல் சனியன்று கசகசவென்று ஒரே கூட்டம்.

சில புத்தகங்களை சங்கருக்கு வாங்கி கொடுத்து விட்டு டிஸ்கவரி ஸ்டால் பக்கம் வந்த போது பதிவுலக நண்பர்கள் அனைவரையும் சந்தித்து அளவளாவினேன். பாண்டிச்சேரியிலிருந்து பதிவு வாசகர் நண்பர் மனோகரனை முதன்முறையாக சந்தித்தேன். நானே சற்றும் எதிர்ப்பார்க்காத நான் படித்த பள்ளியை பற்றி எழுதிய பதிவை சிலாகித்து பேசினார். நண்பர்களுடன் சந்திப்பு மிகுந்த கலாட்டாவாக இருந்தது. அப்பொழுதே மணி இரவு 08.30 ஆகி விட்டிருந்ததால் நான் திருவாரூரைப் பற்றி குடவாயி்ல் பாலசுப்பிரமணியன் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டியிருந்ததால் அப்பொழுதே அரட்டை குழுவிலிருந்து விலகி சென்றேன். அங்கு சென்றால் அண்ணன் வீடு திரும்பல் மோகன் குமார் வந்தார். அவரிடமும் அளவளாவி விட்டு மணி 9 ஆனதால் வளாகத்தை விட்டு வெளியேறினோம்.

இரண்டாம் முறையாக சென்ற போது நான் வாங்கிய நூல்கள் :
குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதிய திருவாரூர், தஞ்சாவூர் கோயில்கள், டாக்டர் காயத்ரி எழுதிய ரஜினி பேர கேட்டாலே, நல்ல தமிழ்ப் பெயர்கள், தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள், Kbb. நவீனின் நீங்களும் இயக்குனராகலாம், காந்தியும் காங்கிரசும் - ஒரு துரோக வரலாறு, கேபிள் அண்ணனின் தெர்மகோல் தேவதைகள், சினிமா வியாபாரம், மீண்டும் ஒரு காதல் கதை, முனைவர்.வெ.மு. ஷாஜகான் கனியின் சினிமா எடுக்கலாம் வாங்க, புலவர் மு.பசுமலையசுவின் செந்தமிழும் சித்த மருத்துவமும், அமரர் கல்கியின் தியாக பூமி, ஒரு யோகியின் சுயசரிதம், சிவசங்கரியின் நண்டு, ஜெயகாந்தனின் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள், ஆதனூர் சோழனின் அமெரிக்க எதிர்ப்பின் சிற்பி பிடல் காஸ்ட்ரோ, யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன், ஜெயகாந்தனின் யுக சந்தி, சுஜாதாவின் ஓலைப்பட்டாசு, சுஜாதாட்ஸ், பா. தீனதயாளனின் கமல், ஆர். முத்துக்குமாரின் வாத்யார் எம்ஜிஆர், ரகோத்தமனின் ராஜீவ் கொலை வழக்கு ஆகியவை.


இந்த ஆண்டு புத்தகங்கள் வாங்கிய வரை போதும் என்று நினைக்கிறேன். இனிமேல் அடுத்த ஆண்டு புத்தக திருவிழாவில் தான் வாங்க வேண்டும்.

ஆரூர் முனா செந்திலு


Sunday, January 8, 2012

பி.யூ. சின்னப்பா கடைசி நாட்கள்...

"நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா, யாரும் எதிர்பாராத வகையில் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். அப்போது, அவருக்கு வயது 35. சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.

1951ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1946ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். "நாம் இருவர்" படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜ×பிடர் தயாரிப்பான "ராஜகுமாரி" மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். "சந்திரலேகா", "ஞானசவுந்தரி", "ஏழைபடும்பாடு", "வேலைக்காரி" முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

"வானவிளக்கு" என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் "சுருள் பட்டா" என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி "சுருள் பட்டா"வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து! இந்த "சுருள் பட்டா" சாகசச் செயலை "வான விளக்கு" படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் "மணமகள்" சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, "மயக்கம் வருகிறதே" என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.

இறக்கும்போது, "சுதர்சன்" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. "கோராகும்பர்" என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது. சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர். பாகவதர் நடித்த "ஹரிதாஸ்" படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். "ஹரிதாஸ்" படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை.

ஆரூர் முனா செந்திலு

------------------------------------

எனது முந்தைய பதிவு : சிங்கப்பூரில் ஹோட்டல் வெயிட்டர் வேலை வாய்ப்பு / கல்வித்தகுதி : 10ம் வகுப்பு

-----------------------------------

சிங்கப்பூரில் ஹோட்டல் வெயிட்டர் வேலை வாய்ப்பு / கல்வித்தகுதி : 10ம் வகுப்பு

சிங்கப்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வெயிட்டர் மற்றும் கிளீனர் ஆக பணிபுரிய ஆட்கள் தேவை.

கல்வித்தகுதி : குறைந்த பட்சம் 10ம் வகுப்பு

சம்பளம் : 1100 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 44,000)

உணவு தங்குமிடம் இலவசம்

விசா : இரண்டு வருடம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8883072993
ஈமெயில் ஐடி : senthilkkum@gmail.com

**********

சிங்கப்பூரில் உள்ள ஹோட்டலில் பணிபுரிய பரோட்டா மாஸ்டர், தென்னிந்திய சமையற்காரர் தேவை.


சம்பளம் : 1200 சிங்கப்பூர் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூபாய் 48,000)

உணவு தங்குமிடம் இலவசம்.

விசா : இரண்டு வருடம்.

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 8883072993
ஈமெயில் ஐடி : senthilkkum@gmail.com

********
மற்றும் சிங்கப்பூரில் வீட்டுவேலைக்கு பெண்கள் தேவை.
மாத சம்பளம் ரூபாய் : 12000
உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
விசா இலவசம்

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள : 8883072993



Saturday, January 7, 2012

புத்தக கண்காட்சியில் முதல் சுற்றும், நாய் நக்ஸின் ஜெனரேட்டரும்

நேற்று மாலை 4 மணிக்கு புத்தக கண்காட்சிக்கு சென்று முதல் சுற்று முடித்து விடுவோம். அப்பொழுது தான் ஞாயிறன்று குடும்பத்தாருடன் செல்லும் போது வசதியாக இருக்கும் என்று நினைத்து சென்றேன். வழக்கம் போல் பார்க்கிங்கில் வண்டியைப் போட்டு விட்டு நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு உள் நுழைந்தேன். சில ஸ்டால்களில் புத்தங்கள் வந்து அடுக்கிக் கொண்டு இருந்தனர். கூட்டமும் குறைவாக இருந்தது. பதிவர்கள் யாராவது தட்டுபடுவார்களா என்று பார்த்தேன். யாரும் சிக்கவில்லை. உள்ளே நுழைந்ததும் கேஆர்பி அண்ணனுக்கு போன் செய்து பணம் புத்தகம் கிடைக்கும் இடத்தை பற்றி கேட்டு அறிந்து கொண்டேன்.

கண்காட்சியில் நேற்று எழுத்தாளர் ஞானி மற்றும் திலகவதி ஐ.பிஎஸ் ஆகியோரை பார்த்தேன். என் மனைவி மற்றும் என் அக்கா, அத்தானுடன் வந்தால் நிறைய புத்தகங்களை வாங்க முடியாது என்பதால் முதல் சுற்றிலேயே சில புத்தகங்கள் வாங்கினேன். மெட்ராஸ் பவன் சிவக்குமாரிடம் போன் செய்து விசாரித்த போது தான் இன்று (சனிக்கிழமை) வருவதாக கூறினார். அவருடன் இரண்டாவது ரவுண்டு செல்ல வேண்டும்.

சு. வெங்கடேசனின் காவல் கோட்டம், தி.ஜா வின் மரப்பசு, எல்.கே.எம் பப்ளிகேசனின் வெளியீடான பொன்னியின் செல்வன், பாலகுமாரனின் தாயுமானவன், சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகள், தோழமை வெளியீடான பிரபாகரன் - இவன் ஒரு வரலாறு, பெரியாரைப் பற்றி கிழவனல்ல கிழக்கு திசை, ஜெயகாந்தனின் ஊருக்கு நூறு பேர், சுஜாதாவின் சில வித்தியாசங்கள், சுஜாதாவின் ஜே.கே., சுஜாதாவின் வண்ணத்துப் பூச்சி வேட்டை, சுஜாதாவின் சிறுகதை எழுதுவது எப்படி, சுஜாதாவின் தோரணத்து மாவிலைகள் மற்றும் கேஆர்பி அண்ணனின் பணம் ஆகிய புத்தகங்களை வாங்கினேன். வாங்க நினைத்து வாங்க முடியாமல் வந்தது கேபிளின் சினிமா வியாபாரம், நீங்களும் இயக்குனராகலாம் ஆகியவை. எங்குமே கிடைக்கவில்லை டிஸ்கவரி புக் பேலஸ் ஸ்டாலில் கூட.

அந்த சமயத்தில் எனக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க போன் வந்தது. யாரென்று பார்த்தால் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமியாக வலம் வரும் நம்ம நாய் நக்ஸ். காலையில் தான் அவருக்கு உங்கள் பதிவில்லாமல் பதிவுலகில் பலர் பித்து பிடித்து திரிகிறார்கள். பதிவிடுங்கள் அய்யா என்று பின்னூட்டமிட்டிருந்தேன். அதற்காக போன் செய்தாராம். போனை ஆன் செய்ததுமே யோவ் சிதம்பரத்திற்கு உடனடியாக ஓரு ஜெனரேட்டர் பார்சல் அனுப்பு என்றார். ஏன் என்றால் இன்னும் அங்கெல்லாம் மின் இணைப்பு கொடுக்கப்படவில்லையாம். யோவ் உனக்கு ஜெனரேட்டர் அனுப்பும் செலவை கணக்கிட்டால் நீயே பஸ் பிடித்து சென்னை வந்து பதிவிட்டு செல் என்றேன். அவர் பதிவெல்லாம் எவ்வாறு எழுதலாம் என்று கணக்கிட்டு விட்டாராம். கரண்ட் வந்ததும் உடனடியாக பதிவிட்டு பதிவர்கள் அனைவரையும் கொல்லப் போவதாக சொல்லி போனை கட் செய்தார். ஆஹா இதற்கு தானே புயல் என்னையும் கொண்டு சென்றிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்னும் சில புத்தகங்கள் வாங்கியிருப்பேன், அதற்குள் என் அக்கா எனக்கு போன் செய்து தனக்கு ஆன்லைன் தேர்வு இருப்பதாகவும் உதவும்படியும் கேட்டுக் கொண்டதால் 5 மணிக்கே கண்காட்சியை விட்டு வெளியேறி விட்டேன். எனக்கு 'சோ'வின் சில புத்தகங்கள், வண்ணநிலவனின் நாவல்கள், வல்லிக்கண்ணனின் நாவல்கள் வாங்க வேண்டுமென்று ஆசை. ஆனால் நேற்று தேடிய ஸ்டால்கள் வரை கிடைக்கவில்லை. ஞாயிறன்று காலையிலேயே வந்து தேடிப்பார்த்து வேண்டிய புத்தகங்களை வாங்கி செல்ல வேண்டும்.

ஆரூர் முனா செந்திலு


Friday, January 6, 2012

சத்யஜித் ரே...

சத்யஜித்ரே 1921ம் ஆண்டு மே 2ந்தேதி கொல்கத்தாவில் பிறந்தார். தந்தை பெயர் சுகுமார்ராய். தாயார் சுப்ரபா. பாடகி. பட்டப்படிப்பை முடித்த பிறகு அவர் சாந்தினிகேதன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். சத்யஜித்ரே தயாரித்த "தேவி" என்ற படத்தில் சார்மிளா டாகூர். இளம் வயதிலேயே திரைப்படத்துறையிலும், இசையிலும் நாட்டம் உடையவர், சத்யஜித்ரே. இதனால் 1950ம் ஆண்டு அவர் லண்டனுக்குச் சென்றார். அங்கே உலகின் மிகச்சிறந்த படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா படத்தின் நுட்பங்களை நன்கு கற்றறிந்தவராய் இந்தியா திரும்பினார்.

தனது முதல் படமான "பாதர் பாஞ்சாலி"யை தயாரிக்கத் தொடங்கினார். படத்தை முடிப்பதற்கு பணம் இல்லாமல் அவதிப்பட்டார். பல இடங்களில் கடன் வாங்கினார். மனைவியின் நகைகளை அடகு வைத்தார். இறுதியில், மேற்கு வங்காள அரசின் பண உதவியுடன் படத்தை முடித்து `ரிலீஸ்' செய்தார். முதலில், தியேட்டர்களில் கூட்டமே இல்லை. முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் கூட்டம் அதிகரித்தது. நாட்கள் செல்ல செல்ல படத்தின் புகழ் பரவியது. அதன் பிறகு கொட்டகை நிறைந்த காட்சிகளாக படம் நீண்ட காலம் ஓடியது.

அந்த ஆண்டு, ஜனாதிபதியின் தங்கப்பதக்கம், "பாதர் பாஞ்சாலி"க்கு கிடைத்தது. பின்னர் பல்வேறு நாடுகளில் நடந்த உலகப்பட விழாக்களுக்கு "பாதர் பாஞ்சாலி" அனுப்பப்பட்டு பல பரிசுகளைப் பெற்றது. தொடர்ந்து அவர் தயாரித்த "அப்ராஜிதோ", "அபூர் சன் சார்", "சாருலதா", "ஜல் சாகர்", "தேவி", "ஆஷானி சங்கேத்", "ஜன ஆரண்யா" முதலான படங்கள் உலக நாடுகளில் திரையிடப்பட்டு, சத்யஜித்ரேக்கு உலகப் புகழை தேடித்தந்தன.

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சத்யஜித்ரே முழுக்க முழுக்க யதார்த்தமான முறையில் படம் தயாரித்து உலகப்புகழ் பெற்றவர். "டைரக்டர்களின் டைரக்டர்" என்று போற்றப்பட்டார். 1955ம் ஆண்டில் இவர் தயாரித்த "பாதர் பாஞ்சாலி" என்ற வங்காளி மொழிப்படம், உலகப் பட விழாக்களில் திரையிடப் பட்டு பரிசுகள் பெற்றது.


சத்யஜித்ரே திரை உலகுக்கு செய்த சேவையைப் பாராட்டி, 1989ல் அன்றைய பிரான்ஸ் அதிபர் மிட்ரண்ட் பதக்கம் வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் தயாரித்த எல்லா படங்களுமே, அகில உலகிலும் திரையிடப்பட்டு, பரிசும், பாராட்டும் பெற் றன. உலக திரைப்பட அரங்கில் அவர் தனக்கென்று தனி முத்திரை பதித்ததோடு, இந்திய திரைப்படங்களுக்கும் கவுரவத்தைத் தேடிக்கொடுத்தார்.

திரைப்பட டைரக்ஷன் மட்டுமின்றி, இசை அமைப்பு, ஓவியம் தீட்டுதல், குழந்தைகளுக்கான கதைகள் எழுதுதல் ஆகியவற்றிலும் சத்யஜித்ரே வல்லவர். சத்யஜித்ரே தயாரித்து டைரக்டு செய்த படங்களில் பெரும் பாலானவற்றுக்கு அவரே இசை அமைத்தார். அவர் தயாரித்த படங்களில் பெரும்பாலானவை வங்க மொழிப்படங்கள். ஒரு சில படங்கள் மட்டும் இந்தியில் வெளிவந்தன. செய்தி படங்களும் (டாக்குமெண்டரி) குழந்தைகளுக்கான படங்களும் தயாரித்தார்.

கலைத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளை பாராட்டி லண்டன் பல்கலைக்கழகமும், இந்தியாவில் டெல்லி உள்பட பல்வேறு பல்கலைக்கழகங்களும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தன. அதோடு 1959ல் "பத்மஸ்ரீ" பட்டமும், 1965ல் "பத்மபூஷண்" பட்டமும், 1976ல் "பத்ம விபூஷன்" பட்டமும் அவருக்கு கிடைத்தன.

உலக அளவில் சிறந்த சினிமா படங்கள், திரைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது "ஆஸ்கார்" விருது ஆகும். சிறந்த டைரக்டருக்கான "ஆஸ்கார்" விருதை சத்யஜித்ரேக்கு வழங்க ஆஸ்கார் குழு முடிவு செய்தது. 1991ம் ஆண்டு இறுதியில் இது அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் `ஆஸ்கார்' விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொள்ள சத்யஜித்ரேக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. நேரில் சென்று இந்த விருதை பெற சத்யஜித்ரே விரும்பினார். ஆனால் சத்யஜித்ரேக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மாரடைப்பு காரணமாக உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதனால் ஆஸ்கார் பரிசை அவரிடம் ஒப்படைக்க லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 2 பேர் கொண்ட "ஆஸ்கார் குழு" கொல்கத்தாவுக்கு வந்தது. சினிமா உலகுக்கு சத்யஜித்ரே செய்த சிறப்பான சேவைகளை பாராட்டி தங்கத்தினால் ஆன "ஆஸ்கார்" விருதை அவரிடம் இந்த குழுவினர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஒப்படைத்தனர். சத்யஜித்ரேயின் குடும்பத்தினர் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் முன்னிலையில் இந்த விருது வழங்கப்பட்டது. படுத்த படுக்கையில் இருந்த சத்யஜித்ரே கண்களில் கண்ணீர் மல்க "ஆஸ்கார்" பரிசை பெற்றுக்கொண்டு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தார்.

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிக உயர்ந்ததான "பாரத ரத்னா" விருது சத்யஜித்ரேக்கு வழங்கப்பட்டது. சத்யஜித்ரே ஆற்றியுள்ள தொண்டுகளுக்காக அவருக்கு "பாரத ரத்னா" விருது வழங்கப்படுகிறது என்று ஜனாதிபதி மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இந்திய சினிமாத்துறையில் "ஆஸ்கார் விருது", "பாரத ரத்னா" விருது ஆகிய இரண்டு மிகப்பெரிய விருதுகளை பெற்றவர் சத்யஜித்ரே ஒருவர்தான். "பாரத ரத்னா" விருது கிடைத்ததை யொட்டி சத்யஜித்ரே தயாரித்த புகழ் பெற்ற சினிமா படங்கள் டெலிவிஷனில் ஒருவார காலம் ஒளிபரப்பப்பட்டன.

சுமார் 3 மாத காலம் ஆஸ்பத்திரியிலேயே இருந்த சத்யஜித்ரே உடல் நிலையில் அவ்வப்போது முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும் அபாய கட்டத்திலேயே இருந்து வந்தார். மூச்சு திணறல் காரணமாக அவர் அவதிப்பட்டார். 23.4.1992 அன்று அவரது உடல் நிலை மிகவும் மோசம் அடைந்தது. மாலை 5.45 மணிக்கு உயிர் பிரிந்தது. சத்யஜித்ரே உடல் கொல்கத்தாவில் உள்ள நந்தன் அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன்பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஆரூர் முனா செந்திலு

Thursday, January 5, 2012

அடிமையாக்கும் வலைப்பூ




கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டரில் வைரஸ் பிராப்ளம் இருந்ததால் என்னால் பதிவெழுத முடியவில்லை. கடந்த 6 மாதங்களாக மட்டும் தான் நான் தீவிரமாக பதிவெழுதி வந்தேன். ஆனால் அதன் பாதிப்பு அதனை விட்டு சில நாட்கள் விலகியிருந்தால் தான் தெரிகிறது. ஒருநாள் எழுதாவிட்டால் ஏதோ நம்மை விட்டு ஒன்றை இழந்த அளவுக்கு மனது பாதிப்படைகிறது. தூங்கும் போதும் கனவுகள் பதிவு, ஒட்டு, பின்னூட்டம், சர்ச்சை, ஈரோடு பதிவர் சந்திப்பு, மெட்ராஸ் பவன் சிவக்குமார், கேஆர்பி அண்ணன், அபி அப்பா ஆகியவைகளை தொடர்பு படுத்தியே அமைகின்றன. இனிமேல் இணையத்தில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். தற்பொழுது பரவாயில்லை, வேலையில் சேர்ந்த பிறகு இந்த அளவுக்கு நேரத்தை செலவிட முடியுமா என்பது சந்தேகம் தான்.

முன்பெல்லாம் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இணையத்தில் இருப்பேன். சாப்பிடுவதும் கம்ப்யூட்டர் முன்பு தான். இந்த ஐந்து நாட்களாக அது இல்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறேன். மாற்றம் தெரிகிறது. வாங்கி பல நாட்களாக படிக்காமல் இருந்த பல புத்தகங்களை இந்த ஐந்து நாட்களுக்குள் படித்து முடித்து விட்டேன்.

ஆனால் பாருங்கள். இன்று கம்ப்யூட்டர் சரி செய்யப்பட்டு விட்டது. மறுபடியும் இணையத்தில் இருந்தால் மற்ற வேலைகள் கடினம் என்பது புரிய ஆரம்பித்து விட்டது. ஆனால் மனது பதிவெழுது, பின்னூட்டமிடு என்றே தூண்டுகிறது. இது போதாது என்று வலைச்சரத்தில் எழுதுமாறு சீனா அய்யா அவர்கள் கேட்டிருக்கிறார். அதில் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமாம். அதற்காக புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வேலை முடித்தவுடன் இணையத்தில் இருக்கும் நேரத்தை குறைக்க முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன்.


ஆரூர் முனா செந்திலு

டிஸ்கி : சில நாட்களாக என்னால் எனது பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. யாராவது உதவி செய்யுங்கள்.

Monday, January 2, 2012

முதறிஞர் ராஜாஜியின் கடைசி நாள்...

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இரண்டு முறை பதவி வகித்தவர் ராஜாஜி. "இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவர். "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்டவர். உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர். ரத்தத்துடன் சிறுநீர் கலந்துவிடும் "யூரிமியா" என்ற நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக, 17.12.1972 அன்று சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் ராஜாஜி சேர்க்கப்பட்டார். தொடக்கத்தில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டபோதிலும், பிறகு பின்னடைவு ஏற்பட்டது. மூன்று நாட்கள் மரணத்துடன் போராடினார். டாக்டர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும், குணம் ஏற்படவில்லை. டிசம்பர் 25ந்தேதி மாலை 5.44 மணிக்கு ராஜாஜி மரணம் அடைந்தார். உயிர் பிரியும்போது சி.ஆர்.நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, பேரப்பிள்ளைகள், முதல் அமைச்சர் கருணாநிதி ஆகியோர் அருகில் இருந்தனர்.

ராஜாஜி மரணம் அடைந்த செய்தியை, டாக்டர் சத்தியநாராயணா அறிவித்தார். அப்போது, ஆஸ்பத்திரியில் கூடி இருந்தவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். ராஜாஜியை பார்க்க, நிருபர்கள் அனுமதிக்கப்பட்டனர். இறந்த பின்னும் தூங்குவது போலவே ராஜாஜியின் முகம் அமைதியாக காட்சி அளித்தது. அருகே, ராஜாஜியின் மகன் நரசிம்மன், மகள்கள் நாமகிரி, லட்சுமி, குடும்ப நண்பர் "கல்கி" சதாசிவம், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் கதறி அழுதபடி இருந்தனர். ராஜாஜியின் உடலைப் பார்த்து முதல் அமைச்சர் கருணாநிதி, பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆகியோரும், அமைச்சர்களும், சுதந்திரா கட்சி பிரமுகர்களும் கண் கலங்கிய படி நின்றனர். ராஜாஜியின் உடல் மீது, டாக்டர்கள் சார்பில் மலர் மாலை ஒன்று வைக்கப்பட்டது.

சில மதச் சடங்குகளுக்குப்பின், மாலை 6.50 மணிக்கு ஆஸ்பத்திரியில் இருந்து ராஜாஜி மண்டபத்துக்கு ராஜாஜியின் உடல் கொண்டு போகப்பட்டது. ராஜாஜியின் உடலை ராணுவ அதிகாரிகள் ஒரு "ஆம்புலன்ஸ்" வண்டியில் ஏற்றினார்கள். இந்த ஆம்புலன்சுக்கு முன்னால் 4 ராணுவ வீரர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றார்கள். அதன் பிறகு போலீஸ் அதிகாரிகள் 2 "ஜீப்" களில் சென்றார்கள். இதன்பின் "ஆம்புலன்ஸ்" வண்டி சென்றது. "ஆம்புலன்ஸ்" வண்டியில் ராஜாஜியின் மகன் நரசிம்மன், பேரன் ராஜ்மோகன் காந்தி, சுதந்திரா கட்சித் தலைவர் ஹண்டே ஆகியோர் இருந்தார்கள். ராஜாஜி உடல் வந்து சேருவதற்கு முன்பாகவே முதல் அமைச்சர் கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும், தலைவர்களும் ராஜாஜி மண்டபத்திற்கு வந்து இருந்தார்கள். ராஜாஜியின் உடல் கொண்டு வந்து வைக்கப்பட்டதும் அதன் மீது கருணாநிதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மற்றவர்களும் மலர் வளையம் வைத்தனர். 6 அடி உயர மேடை மீது ராஜாஜி உடல் வைக்கப்பட்டது. உடல் மீது தேசியக்கொடி போர்த்தப்பட்டது. மேடையின் 4 பக்கங்களிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியை தலைகீழாக பிடித்தபடி நின்றார்கள். ராஜாஜி மரணச்செய்தி சென்னை நகரில் காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக ராஜாஜியின் உடல் மேடை மீது வைக்கப்பட்டதும், ஆண்களும், பெண்களும் சாரி சாரியாகச் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்கள். ராஜாஜியின் உடல் அருகே மகன் நரசிம்மன், மகள்கள், பேரன் பேத்திகள் சோகமே உருவா அமர்ந்திருந்தனர். ராஜாஜி மறைவுக்கு தமிழக அரசு சார்பில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று, முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். "இந்த 7 நாட்களும், அரசு விழாக்கள் ரத்து செய்யப்படும். எல்லா கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்" என்று அவர் அறிவித்தார். மத்திய அரசும், 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தது.

ரேடியோவில், வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, சோக இசை இசைக்கப்பட்டது. ராஜாஜி மறைவையொட்டி, மறுநாள் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. ராஜாஜியின் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்ட சிறிது நேரத்திற்கெல்லாம், ஜனாதிபதி வி.வி.கிரி வந்து, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கறுப்பு உடை அணிந்திருந்தார். சிறிது நேரம் வரை ராஜாஜியின் உடலைப் பார்த்தபடி கைகூப்பி நின்றார். அப்போது அவர் கண்கள் கலங்கின. பிறகு கவர்னர் கே.கே.ஷா ராஜாஜியின் உடல் மீது மலர் வளையம் வைத்து வணங்கினார். கைகூப்பியபடி மூன்று முறை மேடையை சுற்றி வந்தார்.

பழைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், டெல்லி மந்திரிகள் சி.சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம், தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள், எம்.ஜி.ஆர். ஆகியோரும் மலர் வளையம் வைத்து வணங்கினார்கள். ராஜாஜிக்கு அனைத்து கட்சிகள் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

ஆரூர் முனா செந்திலு


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...