சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, November 29, 2013

விடியும் முன் - சினிமா விமர்சனம்

 சத்தியமாக இந்த வருடம் வந்த லோ பட்ஜெட் படங்களிலேயே இந்த படம் தான் தரமுள்ளதாக இருக்கும். இன்று காலை வரை இப்படி ஒரு படம் வெளியாகிறது என்று எனக்கு தெரியவே தெரியாது. ஆனால் படம் முடிந்ததும் நானே ஐந்து பேருக்கு போனைப் போட்டு படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்திருக்கிறேன்.


துவங்கிய முதல் காட்சியிலேயே பூஜாவின் பரபரப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அந்த ரயில் பிளாட்பாரத்தில் சின்னப்பெண் மாளவிகாவுடன் ஓடி வந்து ஒரு ரயிலில் ஏறி பயணமாகிறார்.
நிற்க, இந்த படத்திற்கு மட்டும் கதையை ப்ளாட்டாக சொல்ல முடியாது. அதே போல் படத்தின் க்ளைமாக்ஸையும் சொல்ல மாட்டேன். படம் பயணிக்கும் வரிசையிலேயே சொல்கிறேன் சஸ்பென்ஸ் கெடாமல்.

ரயிலில் பயணிக்கும் இவர்களை தேடி ஒரு பவர்புல்லான தொழிலதிபரின் கட்டளைப் படி அமரேந்திரன் ஜான் விஜய்யுடன் தேடியலைகின்றனர். பூஜா மும்பைக்குத்தான் பயணமாகியிருப்பார் என கிளம்புகின்றனர். ஆனால் அவர் ஸ்ரீரங்கம் சென்றிருப்பது தெரியவர பயணத்தை திருப்புகின்றனர்.

ப்ளாஷ்பேக். ஊரில் மிகப்பெரிய மனிதர் ஒருவரின் சல்லாப தேவைக்காக அமரேந்திரன் பாலியல் தொழிலாளி பூஜாவுடன் ஒரு 13 வயது பெண்ணை தேடியலைகிறார். ஒரு குழந்தைகளை கடத்தி மும்பையில் விற்கும் மிகப்பெரிய கும்பலிடம் ஒரு குழந்தை இருப்பது தெரிய வர ஒரு நாள் வாடகைக்கு ஒரு சிறுமியை எடுக்கின்றனர். 

அந்த கும்பலின் தலைவன் மிகப்பெரிய அடியாள் குழுவை வைத்து சமூக விரோத செயல்களை செய்து வருகிறான். அப்படி எடுக்கப்படும் சிறுமியை பெரிய மனிதரிடம் கொண்டு செல்கிறார் பூஜா.தவறு நடக்கப் போகும் சமயத்தில் மனம் திருந்தும் அவர் பெரிய மனிதரை கொடூரமாக தாக்கி விட்டு சிறுமியுடன் தப்பிக்கிறார். 



அந்த பெரிய மனிதரின் மகனின் கட்டளையின் படிதான் உயிருக்கு பயந்து பூஜாவை தேடியலைகிறார் அமரேந்திரன். உதவிக்கு மற்றொரு கிரிமினலான ஜான் விஜய்யை சேர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் சிறுமி ஸ்ரீரங்கம் வந்து இருப்பது குழந்தை கடத்தும் கும்பலின் தலைவனுக்கு தெரிய வருகிறது.

ஸ்ரீரங்கத்தில் வாழும் லக்ஷமி ராமகிருஷ்ணனிடம் தஞ்சமடைகிறார் பூஜா. அவர்களின் இருப்பிடம் தெரிந்ததும் அமரேந்திரன், ஜான் விஜய், பெரிய மனிதரின் மகன், அவருடன் ஒரு ரவுடிக் குழு, பெரிய ரவுடியின் கையாள் எல்லோரும் தனித்தனியாக ஸ்ரீரங்கம் நோக்கி பயணிக்கின்றனர். 


அவர்களிடம் பூஜாவும் சிறுமியும் சிக்கினார்களா, இருவரையும் வில்லன்கள் கொன்றார்களா, அல்லது ஏதேனும் ஒரு பெரிய ஹீரோ பறந்து வந்து எல்லோரையும் தாக்கி நீதியை நிலைநாட்டினாரா அல்லது படத்தின் முடிவு தான் என்ன என்பதை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னடா படத்தின் கதையை சொல்லி விட்டானே என்று பதற வேண்டாம், இது படத்தில் வரும் கதை தான். ஆனால் இது படத்தின் மெயின் லைன் இல்லை. அந்த மெயின் லைன் படத்தின் இறுதியில் தெரிய வருகிறது.

உண்மையிலேயே இந்த படத்தின் பேப்பர் ஒர்க்குக்காக இயக்குனர் மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்து இருக்க வேண்டும். சரக்குள்ள இயக்குனர், பின்னாளில் பெரிய ஆளாக கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள் பாலாஜி கே குமார்.

பாதிக்கப்படும் சிறுமியாக நடித்துள்ள மாளவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முகபாவங்களை முகத்தில் கொண்டு வரத்தெரியாத நடிகர்களை விசிலடித்து ரசிக்கும் நாம் இந்த சிறுமியின் முகபாவனைகளை கண்டு விசிலடித்ததற்கு வெட்கப்பட வேண்டும். 

கோவம், கிண்டல், சிரிப்பு, பயம். அழுகை என எல்லாத்தையும் முகபாவனையிலேயே அழகாக சொல்லிவிடுகிறார் மாளவிகா. வாழ்த்துக்கள் மாளவிகா.

பூஜா இந்த படத்தில் நடித்ததற்காக பெருமையுடன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். லாட்ஜில் போலீசிடம் மாட்டிக் கொண்டு தலையில் புடவையை போர்த்திக் கொண்டு வரும் போதும், அமரேந்திரனுடன் காரில் பேசிக் கொண்டே பயணிக்கும் போது உரையாடும் தோரணையிலும், சிறுமியுடன் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதும், க்ளைமாக்ஸில் சிறுமியை விட்டு விடும்படி கெஞ்சும் போதும் வாரே வாஹ். வாழ்த்துக்கள் பூஜா.

அமைதியான நடிப்பிலும் வசனமே இல்லாமல் முகபாவனையிலும் கொடூரத்தை காட்டும் வில்லனாக வினோத், அசத்தல். ஒரு நாள் பதிவர் சந்திப்பின் போது டிஸ்கவரி புக் பேலஸில் சாதாரணமாக பார்த்த பையன் இவர். இப்போ நடிப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல் கலக்கியிருக்கிறார்.

சந்தர்ப்பவாத நடிப்பில் அமரேந்திரனும், ஜான்விஜய்யும்  அசத்தி இருக்கிறார்கள். ஒரு டீலிலேயே ஜான் விஜய்யின் பாத்திரப்படைப்பை சொல்லியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கூட அடடா. பாராட்ட ஆரம்பித்தால் கஞ்சா விற்கும் கிழவி வரை தொடர வேண்டியிருக்கும். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

பின்னணி இசையும் படத்தின் மூடுக்கு நம்மை தக்கவைக்கிறது. அதுவும் சிறுமியை பெரிய மனிதர் அறைக்குள் அழைத்துச் சென்றதும் பூஜா பயந்து கொண்டே படியேறும் காட்சியில் தடக் தடக்  என இதயத்தின் ஹார்ட்பீட்டை அதிகரிக்கிறது.

மொத்தத்தில் கவனிக்கப்படாமல் இருக்கும் நாம் கவனிக்கவேண்டிய ஒரு படம். அப்படி செய்யாவிட்டால் மற்றவர்களாலும் கவனிக்கப்படாமலேயே போய் விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. 

நம்மால் முடிந்தது படத்தை பார்த்து விட்டு நம் நண்பர்களுக்கு இது பார்க்க வேண்டிய படம் போய்ப்பார் என்று சொல்வது தான். நான் செய்து விட்டேன் நீங்கள்.

ஆரூர் மூனா

விடியும் முன் - படம் பார்த்த கதை

முதலில் இந்த படத்திற்கு போக காரணமாக இருந்த பிலாசபி பிரபாகரனை கட்டிப் பிடித்து பாராட்டியே ஆகணும். இந்த வாரம் சொல்வது போல் படங்கள் வெளியாகவில்லை. 


நவீன சரஸ்வதி சபதம் மொக்கை என்று டிரெய்லரிலேயே தெரிந்து விட்டது. ஜன்னல் ஓரம் மலையாளத்திலேயே ஓர்டினரியாக பார்த்தாகி விட்டது. வேறு பெரிய படங்கள் வரவில்லை.
அதனால் இந்த வாரம் படம் பார்க்கும் எண்ணம் இல்லை. நான் பாட்டுக்கு காலையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். முக்கியமான வேலையில் இருந்த போது பிரபா போன் பண்ணி நாளை காலை 10 மணிக்காட்சி விடியும் முன் போகலாமா என்று கேட்டார். 

எனக்கு நாளை வேலையிருப்பதால் முடியாது என்று கூறினேன். ஆனால் படம் நன்றாக இருப்பதாக கூறி பார்க்க வருமாறு வற்புறுத்தினார். ஆனாலும் சாத்தியமில்லாததால் வரவில்லை. விஷயம் மட்டும் மனதை போட்டு குடைந்து கொண்டே இருந்தது. 


வீட்டுக்கு வந்து சமைத்து வைத்து விட்டு மதில்மேல் பூனையாக அலை பாய்ந்து கொண்டு இருந்தேன். அப்புறம் உத அண்ணனின் விமர்சனம் வேறு படித்து தொலைத்தேனா, சட்டென்று முடிவெடுத்து திரையரங்கிற்கு கிளம்பினேன். 

வில்லிவாக்கம் ஏஜிஎஸ்ஸில் 3 மணிக்காட்சி. திரையரங்கிற்கு உள்ளே சென்று பார்த்தால் மொத்தமே 8 பேர் தான் அரங்கில் இருந்தனர். இவ்வளவு கம்மியான பேர் இருந்தாலும் படத்தை சரியான நேரத்தில் போட்ட ஏஜிஎஸ் பெருந்தன்மையானவர்கள் தான்.

பெரிய நடிகர்கள் இல்லை, அரங்கில் கூட்டம் இல்லை. ஒரு விமர்சனத்தை மட்டும் நம்பி வந்தது தப்பாயிடுமோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன். ஆனால் படம் துவங்கியதிலிருந்து முடிந்தது வரை ஒரு நிமிடம் கூட நம்மை சலிக்க செய்யவில்லை இயக்குனர். 

துவங்க நொடியில் நம்மை ஆட்கொண்ட பரபரப்பு இடைவேளையில் தான் முடிந்தது. இடைவேளை முடிந்ததும் மறுபடியும் படத்தில் பயணிக்கும் நாம் படம் முடிந்து தான் தரையிறங்குகிறோம். படம் வெற்றிபெறுமா என சந்தேகம் இருக்கிறது. ஆனால் சந்தேகமேயில்லாமல் சிறந்த படம்.

ஆரூர் மூனா

டிஸ்கி : எப்போதும் விமர்சனம் எழுதிவிட்டு படம் பார்த்த கதை போடுவேன். ஆனால் இந்த முறை முன்னாலேயே படம் பார்த்த கதை பதிவு போட்டு விட்டு விமர்சனம் போடலாம் என நினைத்து பதிவிட்டேன்.

Thursday, November 28, 2013

பஞ்சேந்திரியா - கேவ்மேன் டயட்டும், போலி பன்னிக்குட்டியும்

கேவ்மேன் டயட் அனுபவம்.

நான் ஐந்து நாட்கள் முழு டயட்டில் இருந்தேன். செய்து கொடுக்க அம்மா இருந்தார். அவசர வேலையா ஊருக்கு சென்று விட்டதால் தொடர முடியவில்லை. நான் எனக்கும் சேர்த்து சமைப்பது வேலைப்பளுவை அதிகரிக்கிறது. என் வூட்டம்மாவுக்கு சமைப்பதில் எனக்கும் எடுத்துக் கொள்கிறேன்.

அந்த டயட் மூலம் எனக்கு ஐந்து நாட்களில் ஐந்து கிலோ குறைந்தது. டயட்டை விட்ட பிறகு கன்னாபின்னாவென்று பிரியாணியையும் மகாதியானத்தையும் தொடர்ந்ததால் இப்போது இரண்டு கிலோ ஏறி விட்டது. கண்டிப்பாக அடுத்த வாரம் முதல் கேவ்மேன் டயட் தான் இருக்கப் போகிறேன். அம்மா திங்களன்று சென்னை வருகிறார்.

இந்த டயட் முறையை அறிமுகப்படுத்திய காட்டான் மாம்ஸ்க்கு நன்றி.

பேஸ்புக்கில் ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற பக்கத்தை துவக்கி மக்களுக்கு டயட் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கமும் தேவைப்படுகிறவர்களுக்கு டயட் சார்ட் தயார் செய்து தரும் செல்வன்ஜி அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

கேவ்மேன் டயட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் டயட் பற்றிய ஆலோசனை தேவைப்படுகிறவர்கள் தயக்கமில்லாமல்
ரோக்கியம் & நல்வாழ்வு என்ற பேஸ்புக் பக்கத்தில் செல்வினை தொடர்பு கொண்டால் உங்களுக்கு உதவுவார்.

 ------------------------------------------------
 

------------------------------------------------

இது ஒரு பதிவர் அறிமுகம். 

நான் ஒரு சிறந்த பதிவரை எல்லாம் அறிமுகப்படுத்தப் போவதில்லை. அது மொக்கை என எனக்கும் தெரியும். இது வரை பதிவெழுதியவர்களும் எழுதப் போகிறவர்களும் மெத்தப் படித்தவர்கள் அல்லது சுமாராகவாவது படித்தவர்கள்.


ஆனால் போலி பன்னிக்குட்டி என்ற பெயரில் எழுதும் இவர் பள்ளிக்கூடம் சென்றது மூன்றாவது வரை மட்டும் தான். படிக்க பிடிக்காமல் அழுது அடம் பிடித்து அதன் பிறகு பள்ளிக்கே செல்லாமல் ஒரு டெய்லர் கடையில் வேலைக்கு சேர்ந்து தொழில் கற்று படிப்படியாக உயர்ந்து சொந்தமாக டெய்லர் கடை வைத்து நான்கு பேருக்கு வேலை கொடுக்கிறார்.

தமிழ் படிக்கத் தெரியாது. ஆனாலும் கவிதையில் மேல் ஆர்வத்தால் மற்றவர்களை படிக்கச் சொல்லி கேட்டு ரசிப்பார். இப்போ தனது கவிதைகளையும் இணையத்தில் பிரசுரிக்க முடியும் என சென்ற பதிவர் சந்திப்பிற்கு வந்த போது அறிந்ததால் தனக்கென தனி வலைப்பக்கம் துவக்கித்தரச் சொல்லி வற்புறுத்தியதால் துவக்கிக் கொடுத்தேன். 

இப்போ தினம் ஒரு கவிதையை யோசித்து வந்து தட்டச்சு செய்து தரச்சொல்லி வற்புறுத்தி பதிவிடுகிறார். அவரது எல்லாப்பதிவுகளையும் நான் தான் தட்டச்சு செய்கிறேன். அது மொக்கை என எனக்கு தெரிந்தாலும் அவரது ஆர்வத்தினை கெடுக்க விரும்பாமல் நான் தலையிடுவதில்லை.

அவர் என்ன சொல்கிறாரோ அப்படியே பதிவிடுகிறேன். அதனை படிக்கச் சொல்லி கேட்டு ரசித்து பெருமிதப்பட்டுக் கொள்கிறார்.

கன்னாபின்னாவென்று உயர் படிப்புகளை படித்து விட்டு வந்து பதிவெழுதுகிறேன் என்று படிப்பவர்களை கொல்லும் எவ்வளவோ பேர்களை விட ஏன் என்னையும் விட (ஆமாம் இவரு பெரிய இவரு) போலி பன்னிக்குட்டி மெச்சத்தக்கவர் தான். 

அவரது வலைத்தளம் http://adhithyarb.blogspot.com/

------------------------------------------------
 

------------------------------------------------

பதிவருக்கு பாராட்டு

இந்த பதிவுகில் தவிர்க்க முடியாத, அனைவருக்கும் தெரிந்த ஒரு பதிவர் உண்டென்றால் அது திண்டுக்கல் தனபாலன் தான். எந்த புது பதிவரின் பதிவாக இருந்தாலும் சரி நன்கு அறியப்பட்ட பதிவரின் பதிவாக இருந்தாலும் சரி. முதலில் படித்து கமெண்ட் இடுபவர் தலைவர் தான். 

பதிவுலகம் பக்கம் வந்த எல்லோருக்கும் ஆரம்பத்தில் இந்த பழக்கம் இருந்திருக்கும். போகப் போக இதனை யாருமே செய்ய மாட்டார்கள். ஆனால் விதிவிலக்காக இன்று வரை விடாமல் அனைத்து பதிவர்களின் பதிவுகளையும் விடாமல் படித்து கமெண்ட் இடுபவர் தனபாலன் தான். 

தங்களுக்கு என் பாராட்டுகளும் சிரம் தாழ்ந்த நன்றிகளும் தனபாலன் சார்.

ஆரூர் மூனா

Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் - சினிமா விமர்சனம்

கண்டிப்பாக இது புது முயற்சி தான் அதில் சந்தேகமேயில்லை. ஆனால் இதனை ரசிக்கும் மக்களின் சதவீதம் குறைவாகத்தான் இருக்கும். என் கூடவே அமர்ந்து பார்த்த இரண்டு பிரகஸ்பதிகளுக்கே படம் புரியலை, மற்றவர்களை சொல்லவா வேணும்.


பாண்டஸி படங்களுக்குள் நாம் லாஜிக் பார்க்க முடியாது. அதனை சிருஷ்டிப்பவரின் மண்டைக்குள் என்ன ஓடுகிறதோ அது அப்படியே காட்சியாகும். அதனால் லாஜிக் என்ற வஸ்துவை புறக்கணித்து விட்டு படத்தை பார்ப்பதே சாலச் சிறந்தது.

ஒரு உலகம் அதில் ஒரு ஆர்யா ஒரு அனுஷ்கா அவர்களுக்குள் சிலபல ஈகோ மோதல்களுக்கு பிறகு காதல் வருகிறது. சரியாக இடைவேளைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இடைவேளை திருப்பத்திற்காக புல்தடுக்கி செத்துப் போகிறார் அனுஷ்கா.


இரண்டாம் உலகம் அதில் ஒரு ஆர்யா ஒரு அனுஷ்கா, ஆனால் அந்த உலகத்தில் காதல் என்ற கருமாந்திரம் கிடையாது. பிடிச்சவளை தூக்கிக்கிட்டு போய் குடும்பம் நடத்த வேண்டியது தான். அப்படித்தான் இரண்டாம் உலகத்து ஆர்யாவும் அனுஷ்காவும் இருக்கின்றனர். 

அந்த ஊருக்கு ஒரு கன்னித்தாய் இருக்கிறார். அவர் இருக்குமிடம் செழிப்பாக இருப்பதால் மற்றொரு கூட்டம் அவரை கடத்த முயற்சிக்கிறது. அவ்வளவு பாதுகாப்பாக இருக்கும் அந்த கன்னித்தாய் இரண்டாம் உலகத்தில் காதலை நுழைத்து நாஸ்தி பண்ண முடிவெடுக்கிறார். 


அதற்காக முதல் உலகத்தில் காதலி செத்துப் போன சோகத்தில் இருக்கும் ஆர்யாவை கொண்டு வந்து இரண்டாம் உலகத்தில் விட்டு காதலை விதைக்கிறார். அங்கு காதல் முளைத்ததும் அவரை தண்ணிக்குள் தள்ளி விட்டு மூன்றாம் உலகத்திற்கு அனுப்பி வைத்து அங்கு ஒரு அனுஷ்காவை பார்த்து காதலை விவசாயம் செய்ய வைக்கிறார்.

இதனால் இந்த படத்திற்கு அடுத்த பாகம் வருவதற்காக சூழ்நிலைகள் தெரிகிறது. மக்களே உஷாராகிக்கவும்.


நான் செல்வராகவனின் ரசிகனாக இருப்பதற்கு காரணம் அவரின் காட்சிப்படுத்தும் திறமை தான். ஒரு காட்சியை இவ்வளவு டீடெயிலிங்காக சில பல குறியீடுகளை வைத்து ரசிக்கும் படி செய்வதற்கு மனிதரை அடிச்சிக்கவே முடியாது.


அது ஓவர் டோஸாகி சில காட்சிகளை தலைகீழாக நின்று பார்த்தாலும் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாதபடி போய் விடுவது தான் சோகம். இந்த படத்திலும் இந்த இரண்டும் இருக்கிறது.

படத்திற்கு ஆணிவேராய் இருப்பது அனுஷ்கா தான். துவக்கத்திலிருந்து இறுதி வரை அவரை சுற்றி தான் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தனது பெர்பார்மன்ஸால் தாங்கி பிடிக்கிறார்.

இரண்டாம் உலகத்தில் யா ஹீ டிஸ்யும் டுமீல் டமால் என பல கோணங்களில் பறந்து பறந்து கன்பைட் காஞ்சனா வேடம் போட்டு இருக்கிறார். முதல் உலகத்தில் பார்த்து ஜொள்ளு விட வைக்கும் அளவுக்கு பெர்பார்மன்ஸில் பின்னி எடுக்கிறார்.

ஆர்யா சிறந்த படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார். வெல்டன் ஆர்யா. எல்லா படத்திலும் வருவது போல நக்கலும் நையாண்டியுமான நடிப்பை தள்ளி வைத்து கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்து இருக்கிறார். வினோத சிங்கத்துடன் கிராபிக்ஸ் பைட். பலே பலே ஆர்யா.

ஒரு சின்ன சம்பவத்தால் கூட ஒருத்தர் மீது காதல் வர வாய்ப்புள்ளது. அந்த காட்சியும் நம்பகத்தன்மையுடன் இருக்க வேண்டும். முதல் காதலில் சரியாக வந்து இருக்கிறது. 

பாடல்களில் இரண்டு நன்றாக இருக்கிறது. ஏற்கனவே டிரெய்லர்களில் கேட்டதால் ஹிட் அடித்து விட்டது. 

முதல் பாதி மிகச்சிறப்பாக சூப்பராக வந்து இருக்கிறது. ஆனால் இரண்டாம் பாதி தான் நொண்டியடிக்கிறது. மற்றபடி நன்றாக ரசித்து விட்டு வரலாம். மொக்கைப்படம்லாம் இல்லை.

காதலால் நாகரீகமடைந்த மனிதன் நாகரீகமில்லாத உலகத்தில் காதலை நுழைக்கிறான். அதனால் அந்த நாகரீகமில்லாத இரண்டாம் உலகம் நாகரீகம் அடையத் துவங்குகிறது என்பது தான் படத்தின் குறியீடு என்பது நான் பார்த்த வரையில் எனக்கு புரிந்தது. ஆனால் இது அப்படியே வேறு மாதிரி மற்றவருக்கு புரியும் என்பது தான் செல்வராகவன் டச்.

ஆரூர் மூனா

Thursday, November 21, 2013

பஞ்சேந்திரியா - வாகன விபத்தும், பூஸ்ட்டின் நம்பிக்கையும்

கொஞ்ச நாட்களாக பதிவு எழுதவே முடியவில்லை. வேலையில் பிரச்சனை ஒன்றும் கிடையாது. வீட்டில் தான் பயங்கர ஆணி, அதை புடுங்குறதுக்குள்ளயே நாள் முடிஞ்சிப் போயிடுது. இதுல எங்கேருந்து பதிவெழுதுறது.

இன்னிக்கி இதுக்குன்னே நேரத்தை ஒதுக்கிட்டு எழுத உக்காந்தேன். ஆனா பாருங்க, எழுத வரலை. என்ன கொடுமைடா இது. ஏதோ முயற்சி பண்ணி பார்த்ததுல சுமாரா வந்தது. இருந்தாலும் பரவாயில்லைன்னு கூட ரெண்டு பேஸ்புக் ஸ்டேட்டஸ் சேர்த்து வைத்து  போஸ்ட் பண்ணிட்டேன்.

----------------------------------------------------------------
 
முன்பு 90கிமீ வேகத்தில் அதுவும் சென்னையில் போய்க் கொண்டு இருந்த நான் எகப்பட்ட விழுப்புண்கள் வாங்கியதால் இப்பல்லாம் வண்டியில் நாற்பதை தாண்டுவதே இல்லை, ஆனாலும் சில சமயம் ஏதாவது ஆண்ட்டிகளோ அல்லது டீன்ஏஜ் பசங்களோ நம்மை விருட்டென முந்தி செல்லும் போது நமக்கு உச்சந்தலையில் நட்டுக் கொள்ளும்.

பிறகு நானும் அவர்களைப் போல் வேகமாக செல்வேன் ஏதாவது ஒரு திருப்பத்தில் பழைய விபத்துகள் நினைவுக்கு வரும், பிறகு அடக்கிக் கொண்டு பழைய மாதிரியே பொறுமையாக செல்வேன்.


 
நாலு நாட்களுக்கு முன்பு கோயம்பேடு சிக்னலில் காத்திருந்தேன். சிக்னல் விழுந்ததும் ஒரு யமஹா காரன் வண்டியை முடுக்கி சீறிக் கொண்டு பறந்தான். பார்க்கும் போதே சிக்கல் என்று தான் நினைத்தேன். அது போலவே லுகாஸ் கிட்ட பில்லரில் முட்டுக் கொடுத்துக் கொண்டு கிடந்தான்.

இரண்டு கையும் முறிந்திருந்தது. இந்த பயலுகளுக்கு எவ்வளவோ சொல்லியும் புரியமாட்டேங்குது. இனிமே எல்லாத்துக்கும் அடுத்தவன் கையை தான் எதிர்பார்த்து காத்திருக்கனும், எல்லாத்துக்கும்னா எல்லாத்துக்கும் தான். ஆனால் எனக்கு இப்பவரை புரியாத விஷயம், இதே போல் வேகமாக செல்லும் ஆண்ட்டிகள் மட்டும் ஒரு விபத்தில் கூட சிக்குவதில்லையே அது மட்டும் எப்படி.

--------------------------------------------------------------
 
பூஸ்ட் குடித்ததால் தான் சச்சினுக்கு அந்த எனர்ஜி வந்து சென்சுரியாக அடித்தார் என்றும் அதற்கு முன்பு கபில்தேவ் குடித்து தக்க வைத்திருந்த எனர்ஜியை சச்சினுக்கு கொடுத்ததால தான் சச்சின் பெரிய பேட்ஸ்மேன் ஆனார் என்றும் பத்து வயதில் பார்த்த பூஸ்ட் விளம்பரத்தை பார்த்து நம்பினேன். 

 
இது எதற்கு நிகரானது என்றால் ஜீவன்டோன் என்ற லேகியத்தை சாப்பிட்டால் அந்த விளம்பரத்தில் வருவது போல் உடற்கட்டு வரும் என்றும் வாலிப வயது வந்ததும் நானும் ஜீவன்டோன் தின்று பெரிய குஸ்தி பயில்வான் ஆவேன் என்றும் நான் நம்பியதற்கு சமம்.

பொதுவாக யார் என்ன சொன்னாலும் நான் நம்பி விடுவேன் இது என் குணம், நான் பதிவுலகிற்கு வந்த போது நக்கீரனுக்கு போன் டயல் பண்ணவே தெரியாது என்றும் அவர் யாருக்காவது பேச வேண்டும் என்றால் கூட மற்றவர்கள் தான் நம்பர் போட்டுத் தருவார்கள் என்று நம்பினேன். சங்கவியின் கவிப்புலமையை பார்த்து பண்டைய இலக்கியங்களுக்கு கவிவிருத்தம் எழுதும் ஆற்றல் உடையவர் என்றும் நம்பினேன். முதன் முதலில் மெட்ராஸ் பவன் சிவாவைப் பார்த்ததும் மன்மதன் சிம்பு போன்ற கில்மாப்பிரியன் என்றும், வீடு சுரேஷை நல்ல புள்ளை என்றும் நம்பினேன் என்றால் நான் எவ்வளவு வெள்ளந்தியானவன் என பாருங்கள். 

------------------------------------------------------------------------------
 
 ஏண்டாங்கப்பா உங்க அதுவுக்கு ஒரு இதுவே இல்லையா.

அந்த கீரையை சாப்பிட்டதால் நடிகைக்கு தொப்பை குறைந்ததாம் என்று ஒரு பதிவின் தலைப்பில் போட்டு இருந்ததும், ஏதோ அதிசய கீரை போல இருக்கு. அதனை சாப்பிட்டு நாமளும் தொப்பையை குறைக்கலாம் என்று பதிவை ஓப்பன் பண்ணிப் பார்த்தால் பசலைக்கீரையை சாப்பிடுங்கள் தொப்பை குறையும் என்று போட்டு இருக்கிறது. இது தான் எங்களுக்கே தெரியுமே இதுக்கு என்னா மயித்துக்கு ஒரு போஸ்ட்டு.

ஏண்டா வெங்காயங்களா கத்தியை எடுத்து உன் அதுவை ஒரே போடா போடல என் பெயரை மாத்திக்கிறேண்டா

-------------------------------------------------------------------------
 
போன வருசம் ஒரு ஊர்ல(ஊர் பெயர் மட்டும் தெரிஞ்சா பையன் மாட்டிக்குவான்) என் நண்பன் ஒருத்தனை சந்திக்க சென்றோம். நெடுநாட்கள் கழித்து எங்களை பார்த்த சந்தோசத்தில் வீட்டம்மாவிடம் நாங்கள் அவசரமாக கோவை செல்ல வேண்டியிருக்கிறது. இரவு வரமாட்டேன் என்று சொல்லி விட்டு எங்களுடன் அதே ஊரில் ஒரு லாட்ஜில் ரூம் போட்டு சரக்கடிக்க திட்டம் போட்டான்.

என்னுடன் வந்திருந்த மற்ற நண்பர்களோ இரவுக்குள் ஊருக்கு திரும்பியாகனும் அதனால் நாம் சரக்கடிக்க வேண்டாம் அவனை ஏமாற்றி திரும்பி விடுவோம் என்று முடிவு செய்தோம். ஆனால் பையனோ வீட்டில் வெளியூர் செல்வதாக சொல்லி விட்டதால் முதலிலேயே சரக்கடித்து விட்டு எங்களுக்கும் சரக்கு வாங்கி வந்தான். 

அவனிடம் அவசரமாக பக்கத்து தெருவில் ஒருத்தரை பார்க்க வேண்டியிருக்கிறது. சரக்கடித்தால் பேச முடியாது. அதனால் அவரிடம் பேசி விட்டு வந்து சரக்கடிக்கிறோம் என்று சொல்லி விட்டு கிளம்பி ஊருக்கு வந்து விட்டோம். பையன் இன்னும் கூடுதலாக சரக்கை போட்டு எங்களுக்காக காத்திருந்தான். 

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து போன் செய்தான். நாங்கள் ஊருக்கு வந்து விட்டதாக சொல்லவே செம கோவப்பட்டு போனை வைத்து விட்டான். சரக்கடித்து விட்டதால் வீட்டுக்கும் திரும்ப முடியாமல் தனியே அறையில் இருக்கவும் பிடிக்காமல் பேருந்தை பிடித்து ஊர் ஊராக சுற்றி மறுநாள் மாலை வீடு போய் சேர்ந்திருக்கிறான். 

அதற்கப்புறம் ஆறுமாசம் வரை எங்களுடன் பேசாமல் இருந்தான். ரொம்ப கோச்சுக்கிட்டு இருக்கான் பையனை சமாதானப்படுத்துவோம் என்று ஒரு டூர் புரோகிராம் போட்டு அவனிடம் நாங்கள் தான் செய்தது என்று சொல்லாமல் மற்றொரு நண்பனை விட்டு சொல்லச் சொல்லி அந்த இடத்திற்கே வந்து அவனிடம் நிறைய அடிவாங்கி பிறகு சமாதானமாகி .............. பிறகென்ன அதே தான்.

ஆரூர் மூனா

Tuesday, November 5, 2013

நான் பழைய காங்கிரஸ்காரன்

இன்று மனதளவில் ஈழத்துரோகம் காரணமாக காங்கிரஸை தமிழ்நாட்டில் வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிறு வயதில் விபரம் தெரிந்த காலத்திலிருந்து நான் காங்கிரஸ்காரனாக இருந்திருக்கிறேன் என்பதை எண்ணும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம், நம்புங்கள் நான் போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று பல தேர்தல்களுக்கு கூவிக் கூவி பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

திருவாரூரில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் மாமா ஒருவர் இருந்தார். அவர் தான் எங்கள் வார்டில் உள்ள பசங்களின் ஆதர்ச நாயகன். ஏனென்றால் தீபாவளிக்கு அவர்களது வீட்டில் தான் மிக அதிக அளவில் பட்டாசுகள் வாங்குவார்கள். அதிகளவில் என்றால் இரண்டு சாக்கு சரம், ஒரு சாக்கு உலக்கை வெடி வாங்குவார்கள்.

எங்கள் வீட்டில் என் சிறுவயதில் பட்டாசு பட்ஜெட் நூறு ரூபாயைத் தாண்டாது. இப்பொழுதும் கூட எங்கள் அப்பாவிற்கு சில ரூல்ஸ்கள் இருக்கின்றன. வீட்டிற்கு மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்குவதும், தீபாவளி சமயத்தில் பட்டாசு வாங்குவதும், பொங்கல் சமயத்தில் கரும்பு வாங்குவதும் அவரது கடமையாக இன்றும் நினைக்கிறார். நானோ எனது தம்பியோ போய் வாங்கி வந்து விட்டால் அவரது உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக நினைத்து காச்மூச்சென்று கத்துவார். அதனால் நாங்கள் இவற்றினை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று கூட 300 ரூபாய்க்குள் தான் பட்டாசு இருக்கும்.

மீண்டும் கட்டுரைக்குள் வருவோம். அவரது கட்டளைக்கு அடிபணிவதற்காகவே தெருவுக்குள் 20 பேர் இருந்தனர். அவற்றில் மிகவும் ஜூனியர் நான் தான். 7வயதிலேயே தேர்தல் பிரச்சாரங்களில் போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று கூவுபவன் நானாகத் தான் இருக்கும்.

காங்கிரஸை பிடிக்க ஆரம்பித்ததற்கு காரணமெல்லாம் சொல்ல முடியாது. என் மாமா காங்கிரஸில் இருந்ததால், என்னை சிறு வயதில் கட்சிக் கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றதால், இந்திய சுதந்திரப் போராட்டம் காங்கிரஸின் தலைமையில் நடந்தது என சொல்லக் கேட்டதால் அந்த வயதிலேயே பிடிக்க ஆரம்பித்து விட்டது.

87 காலக்கட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் என் மாமா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். வார்டுக்குள் இருந்த நான்கு தெருவையும் பிரித்துக் கொண்டு காலையிலிருந்து மாலை வரை ஒவ்வொரு வீடாக புகுந்து ஒட்டு கேட்பது நோட்டீஸ் வினியோகிப்பது என பிஸியாக இருப்பேன்.

மாமா ஜெயித்ததும் காங்கிரஸின் மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் அந்த வயதில் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி படிக்க ஆரம்பித்ததும் சுதந்திரத்திற்கு முன் இருந்த காங்கிரஸ் தான் தற்போதைய காங்கிரஸ் என நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நடந்த 89 சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் 91 சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 13வது வார்டு பூத் அலுவலகத்தில் நான் தான் நிர்வாகியாக இருப்பேன்.

வருபவர்களுக்கு சட்டையில் கை சின்னம் ஸ்டிக்கரை ஒட்டி விடுவது, கை சின்னம் பேட்ஜ் மாட்டி விடுவது அவ்வப்போது ஒட்டுப்போட வரிசையில் நிற்பவர்களிடம் கை சின்னத்திற்கே ஒட்டு போடுங்கள் என்று கேன்வாஸ் செய்வது வரை நான் தான் முன்னணியில் இருப்பேன்.





ஜிகே மூப்பனார் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு என்னை மிக நன்றாக தெரியும். அவர்கள் திருவாரூர் வரும்போது என் மாமாவிடம் யார் இவன், இந்த சிறுவயதில் சூட்டிகையாக கட்சி வேலை செய்கிறானே என்று விசாரிப்பர். என் மாமாவும் என் சொந்தக்காரப் பையன், கட்சி மீது ஆர்வம் என்று கூறுவார்.

ஆனால் கட்சியின் ஆர்வம் 14, 15 வயதில் குறைய ஆரம்பித்தது. அதுவும் இவர்களின் கோஷ்டி சண்டையை கவனிக்க ஆரம்பித்த பிறகு சுதந்திரத்திற்கு முன்பு உள்ள காங்கிரஸூக்கும் நிகழ்கால காங்கிரஸூக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. அத்துடன் காங்கிரஸூக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஆனால் என் மாமா அரசியல் பண்ணத் தெரியாமல் இன்றும் காங்கிஸில் கிடந்து அல்லாடுகிறார். திமுகவிலோ, அதிமுகவிலோ யாராவது இத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தால் கமிஷன், டெண்டர் என பிழைத்து பெரிய ஆளாகியிருப்பார்.

இன்று அவர் தான் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர். ஆனால் மனிதர் ஸ்கூட்டியில் தான் செல்கிறார். ரியல் எஸ்டேட்டில் தான் ஓரளவு சம்பாதிக்கிறார். அவரிடம் அரசியல் கற்றுக் கொண்ட சின்னப் பசங்களெல்லாம் மற்ற கட்சிகளில் சேர்ந்து சம்பாதித்து வீடு, கார் என செட்டிலாகி விட்டனர்.

என்றைக்குமே வில்லங்கமானவர்கள் மட்டுமே அரசியலில் பிழைக்க முடியும் போல.

ஆரூர் மூனா

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. இந்த வாரம் கடுமையான வேலைகள் இருக்கிறது. அதனால் பதிவு போட நேரமில்லை. அதற்காக வலைத்தளத்தை சும்மா விட முடியாதில்லையா. அதான் இது.



Saturday, November 2, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா - சினிமா விமர்சனம்

நான் கூட படம் பார்த்து விட்டு வந்து வெளியே கிர்ராகத்தான் திரிஞ்சேன். உடனே போய் விமர்சனம் அடிக்க கிளம்பினேன். அப்ப மணி 10.15. 10.30 மணிக்காட்சி பாண்டிய நாடு இருந்தது. வீட்டுக்கு போய் திரும்பவும் ஏன் திரையரங்கிற்கு வரணும் பேசாம இந்த படத்தையும் பாத்துட்டே போய்டலாமேன்னு நினைச்சேன்.


வீட்டம்மாவுக்கு போனைப் போட்டு பர்மிசன் கேட்டேன். "எது வேணும்னாலும் செஞ்சிக்க எனக்கு 1.30 மணிக்கு சாப்பாடு வந்துடனும்"னு மறைமுக அனுமதி கிடைத்தது. நண்பனுக்கு போனைப் போட்டு வீட்டில் எக்ஸ்ட்ரா சமைத்து டப்பாவில் போட்டு வைக்கவும் நான் வந்து எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு டிக்கெட் எடுத்துட்டு சினிமாவுக்கு போயிட்டேன்.

படம் முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தா ஆல்இன்ஆல் அழகுராஜாவை ஆளாளுக்கு கழுவி ஊத்தியிருக்காங்க. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். படம் மொக்கை தான், ஆனால் பார்க்க முடியாத அளவுக்கு சூர மொக்கை கிடையாது.

ஒருத்தர் கடுமையாக கலாய்த்து விமர்சனம் போட அடுத்தடுத்தவர்கள் அப்படியே தொடர்ந்து விட்டார்கள். நாங்க இதைவிட கடுமையான மொக்கையை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து போனவர்கள், இந்த படமெல்லாம் எங்களுக்கு எம்மாத்திரம்.


எப்போதுமே ராஜேஷ் படங்களில் சொல்லிக் கொள்வது போல் நெஞ்சை நக்கும் கதையெல்லாம் இருக்காது. நல்லா நாலு சீன், சுமாரா ஆறு சீன் அதுக்கு பட்டி டிங்கரிங் பார்த்து ரசிக்கக் கூடிய படமாக எடுத்து விடுவார். இந்த படத்தையும் அப்படித்தான் எடுத்துள்ளார். ஆனால் பெரும்பாலான காட்சிகளை ரசிக்க முடியவில்லை. அதற்காக ஒரேடியாக ஒதுக்கி விட முடியாது.

அதற்கு மிக முக்கியமான காரணம் எம்எஸ் பாஸ்கர் காஜலின் நகைச்சுவை காட்சிகள். நான் பெரிய விமர்சகன், தரமான காட்சிகளைத்தான் ரசிப்பேன் என்றெல்லாம் தலையில் வைத்துக் கொள்ளாமல் சி கிளாஸ் ரசிகனாக என்னை மறந்து வாய் விட்டு சத்தமாக சிரித்தது அந்த காட்சிகளில் தான், நான் மட்டுமல்ல, அரங்கமே சிரித்தது.

படத்தின் பெரும் குறையாக தெரிவது கார்த்தி சந்தானம் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் தான். அவர்கள் சிரிப்பு வரும் என்று எடுத்திருக்கிறார்கள். நமக்கு தான் வரவில்லை.


கார்த்தி ஒரு சிறுநகரத்தில் லோக்கல் சானலை நடத்திக் கொண்டு வருகிறார். அதில் சந்தானம் வேலை பார்க்கிறார். பக்கத்து ஊரைச் சேர்ந்த காஜலைக் கண்டதும் கார்த்திக்கு காதல் வருகிறது. அவரிடம் காதலை சொல்லி அவரை சம்மதிக்க வைக்க சிரமப்படுகிறார்.

ஒரு வழியாக காதலுக்கு காஜல் சம்மதம் தெரிவிக்கிறார். அப்பா அம்மாவான பிரபு சரண்யாவுடன் பொண்ணு பார்க்க செல்லும் போது காஜல் யார் வீட்டுப் பெண் என்பதை அறிந்த பிரபு திருமணத்திற்கு மறுக்கிறார். அதற்கு காரணத்தை பிளாஷ்பேக்கில் சொல்கிறார். அதுவும் இன்ட்ரஸ்ட்டாக இல்லை.

பிறகு உண்மைகள் தெரிந்து நாயகனும் நாயகியும் ஒன்று சேர்வதே படத்தின் முடிவு.


கார்த்திக்கு கண்டிப்பாக ஹிட் தேவைப்படும் நேரம் இது. வரிசையாக பிளாப்புகளாக வந்துக் கொண்டு இருக்கிறது. அவரும் சிரத்தை எடுத்து நடித்துக் கொடுத்து இருக்கிறார். காட்சியமைப்புகளில் சரக்கில்லாததால் எல்லாம் வீணாகிப் போய் விட்டது.

சந்தானம் சார், கொஞ்சம் கவனியுங்கள். இந்த படம் போல் இன்னும் ஐந்து படங்கள் கொடுத்தால் உங்கள் நிலைமையும் கவலைக்கிடமாகி விடும். அது என்ன அந்த கேவலமான சிரிப்பை ப்ளாஷ்பேக் முழுவதும் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டுமா.

அதுவும் கரீனா சோப்ரா கதாபாத்திரமும் கோட்டா சம்பந்தப்பட்ட சீன்களும் கூட போரடிக்கத்தான் செய்கிறது. மக்களின் ரசனை மாறி விட்டது. ராஜேஷ் அவர்களே நீங்களும் மாறிக் கொள்ளுங்கள்.

காஜல் இந்த படத்துலயே உருப்படியான ஒரே பீஸூ. இந்த பொண்ணு மாதிரி எங்கூர்லயும் நிறைய பொண்ணுங்களை பார்த்து இருக்கிறேன். ஆங்கிலத்தில் ஒழுங்கா பேசத் தெரியாமல் பசங்க முன்னாடி பீ்ட்டர் விடும் என் பள்ளி கால தோழி நந்தினி கூட காஜல் வகையறா தான்.

எம்எஸ் பாஸ்கர் சாட்டையால் அடித்துக் கொண்டு பிச்சை எடுப்பவர். காஜலிடம் பெரிய பரத நாட்டிய குரு என்று கார்த்தி கோர்த்து விடுகிறார். பாஸ்கரும் அவர் சாட்டையை அடிக்கும் போது செய்யும் மேனரிசங்களை பரதநாட்டியம் என்று காஜலுக்கு கற்றுக் கொடுக்கிறார்.

அந்த காட்சிகளில் திரையங்கமே சிரித்து தெறிக்கிறது. உண்மை தெரிந்து காஜல் காட்டும் எக்ஸ்பிரசன்களும் சூப்பர். இதைத் தவிர நல்ல விஷயம் 80களின் சாயலில் உள்ள பாட்டு.

மற்றபடி மோசமான படம்லாம் சொல்ல முடியாது. யாராவது டிக்கெட் வாங்கிக் கொடுத்தா போய் பாத்துட்டு வாங்க.

ஆரூர் மூனா

பாண்டிய நாடு - சினிமா விமர்சனம்

ரவுடிகள் சூழ்ந்த ஊரில் பயமின்றி நண்பர்களுடன் பொழுதை கழித்து நாயகியுடன் காதல் செய்து குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதை தான். ஆனால் திரைக்கதையில் பழைய படங்களின் சாயல் செய்ததில் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.


படத்தின் ஆகச்சிறந்த பலம் பாரதிராஜா தான். என்னா நடிப்பு, மனிதர் பிச்சு உதறியிருக்கிறார். இது போன்ற பாத்திரங்களில் இனி கவனம் செலுத்தினால் இயக்கத்தைப் போல் நடிப்பிலும் உச்சத்தை அடையலாம். மகன் இறந்ததும் தப்பாக கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட மறுத்து பொங்கி அழும் காட்சியிலும் மகனை கொன்றவர்களை கூலிப்படை வைத்தாவது கொல்ல வேண்டும் என்று செயலில் இறங்கும் போதும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ரவுடிகளால் ஆளப்படும் மதுரையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். குடும்பத் தலைவர் பாரதிராஜா. இளைய மகன் விஷால் ஒரு செல்போன் கடை வைத்துக் கொண்டு, காமெடிரவுடி அடித்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு செல்லும் சாதுவான பையன். மூத்த மகன் சுரங்கத் துறையில் அதிகாரி. ஒரு பிரச்சனையில் பெரிய ரவுடியின் கனிம சுரங்கத்தை சீல் வைக்கிறார்.


கொதித்தெழும் ரவுடி விபத்து ஏற்பட்டது போல் அந்த பெரிய பையனை கொன்று விடுகிறார். மகனை கொன்றவர்களை பழி வாங்க கூலிப்படையினரைத் தேடி அலைகிறார் பாரதிராஜா. அப்பாவுக்குத் தெரியாமல் ரவுடியை கொல்ல பின் தொடர்கிறார் விஷால். பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு வில்லனை கொன்று குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுகிறார் விஷால்.

விஷாலுக்கு இந்த நேரத்தில் முக்கியமான படம் இது. கொஞ்சம் கூட ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான இளைஞனாக வருகிறார். பஞ்ச் டயலாக் கிடையாது. அதிரடி அறிமுகம் கூட கிடையாது. கடைசி நிமிடத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கும் போது பின்னி எடுக்கிறார்.


லட்சுமி மேனன் அம்சமாக இருக்கிறார். புடவை கட்டும் விதத்திலும் சரி, மேக்கப்பிலும் சரி. அதே போல் அடக்கமாக நடிக்கவும் செய்கிறார். இடைவேளைக்கு பிறகு தான் கதையின் தேவை கருதி காணாமல் போகிறார்.

சூரியின் காமெடிகள் சில இடத்தில் எடுபடுகின்றன. நகைச்சுவைக்கென்று மட்டும் இல்லாமல் கதையின் போக்குக்கு ஏற்ப சீரியஸாகவும் நடித்துப் போகிறார். நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்ராந்த். நன்றாக செய்திருக்கிறார்.

சிறு வயதில் ஒரு வில்லனை கண்டால் நாமும் கொல்ல வேண்டும் போல்  ஒரு எண்ணம் தோன்றும். சற்று மெச்சூர்ட் ஆன பிறகு அப்படி எந்த படத்திலும் தோன்றியதில்லை. ஆனால் இந்த படத்தில் வில்லனை நாமே கொல்ல வேண்டும் தோன்றியதில் நிற்கிறது படத்தின் வெற்றி.

பாடல்கள் நன்றாக இருக்கின்றன எடுக்கப்பட்ட விதத்திலும் கூட. படத்தில் ஆரம்பத்திலிருந்து சண்டை பிரச்சனை என்று காட்டாமல் சண்டை நடக்கப்போகிறது என்ற பெப்பை கிரியேட் பண்ணி க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.

ஆல்இன்ஆல் அழகுராஜா பார்த்துட்டு பே..ன்னு முழிச்சிக்கிட்டு இருந்த என்னை பாண்டிய நாடு தான் மீட்டெடுத்தது.

கொளத்தூர் கங்கா தியேட்டர் காம்ப்ளக்ஸில் என்ன கொடுமை என்றால் ஆரம்பம் படத்துக்கும் ஆல்இன்ஆல் அழகுராஜா படத்துக்கும் ஹவுல்புல் பாண்டிய நாடு என்னுடன் திரையரங்கில் பார்த்தவர்கள் 50பேர் தான் இருக்கும், அதுவும் முதல்நாள் முதல் காட்சி அதுவும் சென்னையில்.

ஆரூர் மூனா

Friday, November 1, 2013

ஆரம்பம் படம் பார்த்த கதை

ஸ்டார் வேல்யு நடிகர்களின் படங்களை பார்க்கும் போது கிடைக்கும் பரவசம் மற்ற படங்களுக்கு கிடைக்காது. முக்கியமாக ரசிகர்களின் அலப்பறைகள், படத்தை விட அதைத்தான் அதிகம் ரசிப்பேன்.


இந்த முறையும் ஆரம்பம் படத்திற்கு முதல் காட்சி எத்தனைய மணியாக இருந்தாலும் போய் விடுவது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் முதல் காட்சி எத்தனை மணிக்கு துவக்கம் என்ற க்ளியர் பிக்சர் கிடைக்கவில்லை.

அம்பத்தூர் திரையரங்கங்களில் நாலு மணிக்காட்சி இது போன்ற பெரிய படங்களுக்கு இருக்கும். ஆனால் இந்த படத்திற்கு முன்பதிவு துவங்கியதும் 11 மணிக்கு தான் முதல் காட்சி என்று அறிவித்தார்கள். கொளத்தூர் கங்காவில் 5 மணிக்காட்சி உண்டு என்று அறிவித்தவர்கள் இடையில் என்ன நடந்தோ முதல் காட்சி 9 மணிக்கு என்று மாற்றி விட்டார்கள்.

பிறகு ஒரு வழியாக பிருந்தாவில் 6 மணிக்காட்சி இருக்கிறது என்று தெரிய வந்ததும் டிக்கெட் எடுத்து விட்டேன். இந்த இடத்தில் ஒரு ப்ளாஷ்பேக். கடந்த வாரத்தில் நான் சிவா செல்வின் கேஆர்பி வீட்டில் சந்தித்த போது சிவா "என்னிடம் 4 மணி அல்லது 5 மணிக்காட்சி என்றால் மட்டும் எனக்கும் சேர்த்து எடுக்கவும். அதற்கப்புறம் காட்சி என்றால் வேண்டாம்" என்றார்.


செல்வினுக்கு வெளியூர் செல்ல வேண்டிய புரோகிராம் இருந்ததால் அவர் வரவில்லை என்று சொல்லி விட்டார். ப்ளாஷ்பேக் ஓவர். டிக்கெட் எடுத்ததும் சிவாவுக்கு போன் செய்தால் 6 மணிக்காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை எனக்கும் எடுத்திருக்கலாமே என்றார். எனக்குள் டொய்ங் என்று பல்பு எரிந்தது.

சரி நம்ம சிவா தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டு இப்ப டிக்கெட் எடுத்து வரவா என்று கேட்டேன். அதெல்லாம் வேண்டாம், இப்ப எடுத்தால் வரிசை மாறி நான் தனியே உட்கார வேண்டியிருக்கும் என்றார். சரிங்க யாரையாவது புடிச்சு பக்கத்து சீட்டு வாங்கி வர்றேன் என்று சொல்லி விட்டு அரங்கிற்கு சென்றால் ஹவுஸ்புல் போர்டு மாட்டி விட்டான்.




சிவாவிடம் எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டேன். இதற்கிடையில் செல்வின் வெளியூர் புரோகிராம் கேன்சலானதால் அவருக்கும் ஒரு டிக்கெட் எடுக்க வேண்டியிருந்தது. என் நண்பன் அசோக் அப்புறம் போலி பன்னிக்குட்டி இருவரும் வருகிறோம் என்று சொன்னதால் மொத்தம் நாலு டிக்கெட் எடுக்க வேண்டியிருந்தது.

நண்பனின் நண்பன் ஒருவன். அவனது மாமனார் பிருந்தா தியேட்டரில் வேலை பார்த்து வந்தார். அவரைப் பிடித்து கூடுதல் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியாச்சி.

இந்த இடத்தில் பிருந்தா திரையரங்கை பற்றிய ஒரு பிளாஷ்பேக் அனுபவம்.

நான் சென்னைக்கு அப்ரெண்டிஸ் படிப்பதற்காக வந்த சமயம். நண்பர்கள் ஒன்று சேர்ந்து காதலுக்கு மரியாதை படம் பார்க்கலாம் என்று முடிவு செய்தோம். அப்போது சென்னையில் பெரிய படங்கள் கூட சில திரையரங்கில் மட்டும் தான் படம் வெளியாகும்.


படம் பெரிய ஹிட்டானதால் எங்குமே டிக்கெட் கிடைக்கவில்லை. பிருந்தாவில் ஒருவழியாக முன்பதிவு செய்து பத்து பேர் போக இருந்தோம். அப்போது என் நண்பன் தணிகைவேல் நான் கார் எடுத்து வருகிறேன் அதில் போகலாம் என்றான்.

எல்லோரும் காத்திருக்க வந்தது காண்டசா கார். அதில் இருந்த நாலு கதவுகளில் மூன்று ரிப்பேர் ஒரு கதவு தான் திறக்கும். கிண்டலடித்துக் கொண்டே பத்து பேரும் அந்த காரில் முண்டியடித்துக் கொண்டு ஏறினோம்.

சர்ரென்று வேகமாக சென்ற கார் திரையரங்கின் உள்ளே நுழைந்தது. ஏற்கனவே ஹவுல்புல்லானதால் பிளாக் டிக்கெட் விற்பவர்கள் காரை சூழ்ந்து டிக்கெட் வேண்டுமா என்று கேட்டார்கள். அது மட்டுமில்லாமல் வித்தியாசமான காராக இருந்ததால் அரங்கில் இருந்த கூட்டம் எங்களையே நோக்கியது.

ஒரு கதவை திறந்து கொண்டு பத்து பேரும் இறங்கியதைப் பார்த்து மொத்த கூட்டமும் கொல்லென சிரித்தது. மானம் போனது தான் மிச்சம். அதன் பிறகு நிறைய படங்கள் அங்கு தான் பார்த்திருக்கிறேன். முக்கியமாக 1996 முதல் 2002 வரை வெளியான ரஜினி படங்கள் எல்லாம் இங்கு தான் பார்த்தேன்.

பிருந்தா பிளாஷ்பேக் ஓவர்.

காலை அரக்கப்பரக்க எழுந்து நண்பர்களை அழைத்துக் கொண்டு திரையரங்கிற்கு சென்றால் ஆல்ரெடி சிவாவும் செல்வினும் ஆஜராகியிருந்தனர். எல்லோரும் சேர்ந்து திரையரங்கின் உள் சென்று அமர்ந்தோம்.

ஒரு அதிதீவிர அஜித் ரசிகன் போல. விஜய் ஒரு %$^&$# பய என்று கத்திக் கொண்டே இருந்தான். ஆகா ஏழரையை கூட்டுவானுங்க போலயே என்று நினைத்த போது போலீஸ் வந்து அவனை அதட்டி அமர்த்தியது. அதன் பிறகு அவனிடம் இருந்து சத்தமே இல்லை.

இதுக்கு மேல நடந்தது எல்லாம் விமர்சனத்தில் சொல்லியாச்சி.

அதனால ஆங் ஒரு மேட்டர்.

இடைவேளையில் ஒன்னுக்கடிக்க சென்ற போது எனக்கு முன்னால் ஒருவன்  ஒன்னுக்கு போய்க் கொண்டு இருந்தான். எனக்கு அடுத்த வரிசையில் சிவா அடுத்தது செல்வின் நின்றோம். ஒவ்வொருவராக மாறிக் கொண்டே இருக்க எனக்கு முன் நின்றவன் மட்டும் இடத்தை விட்டு அகலவில்லை.

சிவாவும் செல்வினும் கூட காரியத்தை முடித்து விட்டு அரங்கிற்கு சென்று விட்டார்கள். அப்பவும் அவன் வெளியேறவே இல்லை. எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குதுன்னு சலித்துக் கொண்டு அடுத்த வரிசைக்கு மாறினேன். கிட்டத்தட்ட பத்து நிமிடம் அவன் இடத்தை ஆக்ரமித்து இருந்தான். அவன் வயிறு என்ன வாட்டர் டேங்க்கா.

ஆரூர் மூனா


நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள், குடு்மபத்துடன் இணைந்து மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாடுங்கள்.

நாளை காலை 7.30 மணிக்காட்சி ஆல்இன்ஆல் அழகுராஜா, விமர்சனம் 11.30க்கு நமது வலைத்தளத்தில் படிக்கலாம். விமர்சனம் அடித்து முடித்ததும் அடுத்த காட்சி பாண்டிய நாடு படத்திற்கு கிளம்ப வேண்டியது தான். ஊரில் இருந்தால் வேலை இருக்கும் ஒரு சினிமாவுக்கு மேல் போக முடியாது. சென்னையில் வீட்டில் தனியாக இருப்பதால் பொழுதுபோக்க சினிமாவுக்கு தான் போயாகனும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...