சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, December 24, 2012

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ சேலை கட்டும் பெண்களைப் பற்றிய பதிவு என்று நினைத்து விடாதீர்கள். வாசனை பற்றி எனக்கு தெரிந்த சிற்சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தான் துவக்கியிருக்கிறேன். ஒற்றை வார்த்தையை தலைப்பாக வைக்க சற்று யோசனையாக இருந்ததால் துணைக்கு ரஜினி பாடலை சேர்த்திருக்கிறேன்.

வாசனை என்று பொதுவாக சொல்லிஅடையாளப்படுத்துவதை விட அதனை நுகர்வதால் ஏற்படும் கிளர்ச்சியை பகிர்ந்திருக்கிறேன். பிறந்ததிலிருந்து நமக்கு ஏதாவது ஒரு வாசனையுடன் ஒன்றியே வாழ்கிறோம். அது அம்மாவின் மடியிலிருந்து துவங்குகிறது.

எனக்கு கற்பூரத்தின் வாசனை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே கோயில்களில் கற்பூரம் ஏற்றி பக்தர்களுக்கு தரப்படும் ஆரத்தி தட்டில் இருந்து அனைவரும் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். நான் அப்படியே கையில் தீபத்தை ஒற்றி எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து கொள்வேன்.

அந்த வாசனை சில நிமிடங்களுக்கு எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. எந்த வயதில் இருந்து ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. ஆனால் இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.

ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் ஜாமெண்ட்ரி பாக்ஸில் ஒரு கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்வேன். அவ்வப்போது எடுத்து முகர்ந்து பார்க்கும் போது ஒரு கல்ப் அடித்த புத்துணர்வு ஏற்படும்.

அதன் பிறகு ரொம்ப நாட்களுக்கு ஒரு கற்பூரம் டப்பாவை வாங்கி எனது செல்ஃப்பில் வைத்திருந்தேன். அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் ஒரு முறை முகர்ந்து விடுவது வழக்கம். பிறகு இந்த பழக்கத்தை விட்டு விட்டாலும் கூட நண்பர்களின் கடைக்கு செல்லும் போது அவர்களில் பூஜை செல்ஃப்பில் கற்பூரம் டப்பாவை பார்த்து விட்டால் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வேன்.

இன்று கூட என் தொழிற்சாலை பிரிவில் வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து வைக்கப்படும் ஆரத்தி தட்டில் முழுவதும் கற்பூரம் எரிந்த பின் மிச்சமிருக்கும் எரிந்த பகுதியில் விரல் வைத்து தேய்த்து முகர்ந்து பார்த்தால் வாசனை என்னை கவர்ந்திருந்து இழுத்திருக்கும்.

என்னைப் போலவே என் நண்பன் ஒருவன் இருந்தான், அவன் பெட்ரோலின் வாசத்திற்கு அடிமையானவன். பள்ளி படிக்கும் காலத்தில் அவர்கள் வீட்டிற்கு யாராவது பைக்கில் வந்திருந்தால் அவர்களிடம் இருந்த சாவியை வாங்கி டேங்க்கை திறந்து முக்கை விட்டு அதன் வாசத்தை முகர்ந்து கொண்டிருப்பான்.

ரொம்ப நாட்களுக்கு அவர்கள் வீட்டில் தெரியாமல் இருந்து பிறகொரு நாள் தெரிந்து நாலு சாத்து சாத்தி மருத்துவமனையில் அனுமதித்து அவனை அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்தார்கள். இப்போது கூட அவன் வண்டியில் பெட்ரோல் இருக்கா என்று டேங்க்கை திறந்து பார்க்கும் போது ரகசியமாக முகர்ந்து கொள்வான்.

யோசித்து பார்த்தால் சிறுவயதில் இருந்தே நாம் பார்க்க பிடித்ததும் முகர்ந்து பார்க்க வாசனையாக இருந்ததும் தான் ஈர்ப்புகளுக்கு பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

என் பாட்டி ஒருவர் எப்போதும் பேரப்புள்ளைகளுக்காக தன் மடியில் கடலை மிட்டாயை முடிந்து வைத்திருப்பார். எந்த பேரப்புள்ளையை பார்த்தாலும் தன் மடியில் இருந்து அவிழ்த்து ஒரு கடலை மிட்டாயை கொடுப்பார். எனக்கு அதில் ஒரு உழைத்த பெண்மணியின் வாசம் தான் தெரியும். அதற்காகவே அவரை தினம் சென்று பார்த்து கடலை மிட்டாயை வாங்கி வருவதை பழக்கமாக வைத்திருந்தேன் அவர் இறக்கும் வரை.

பத்து வயதில் என்னுடன் விளையாடும் அபிராமியின் உடையில் முக்கியமாக பாவாடையில் இருந்து ஒரு வாசனை வரும். வியர்வையின் வாசம் அது. நீங்கள் பாட்டுக்கு எதுவும் வில்லங்கமாக கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள். பத்து வயதில் விளையாட்டு மட்டும் நமக்கு தெரியும். ஐஸ்பாய் என்றொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது அவள் எங்கு ஒளிந்திருப்பாளோ நானும் அவளுடனே ஒளிவேன், அந்த வாசத்துக்காக.

ஏன் அவள் உடையில் அந்த வாசம் வரும் என்றால் அவள் வீட்டில் எல்லா வேலைகளையும் அவள் தான் செய்வாள். அம்மா கிடையாது, சித்தியின் கொடுமை காரணமாக வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என எல்லா வேலைகளையும் அந்த வயதிலேயே செய்வாள். அது உழைத்த வியர்வையின் வாசம். இன்று யோசித்து பார்த்தால் அவள் மீது இருந்தது வாசத்தின் பிரியம் மட்டுமல்ல பப்பி லவ்வும் கூடதான் என்று.

முக்கியமாக சாப்பாட்டின் வாசம் என்பது என்னை பல வீடுகளில் மானத்தை வாங்கியிருக்கிறது. நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தால் அசைவ குழம்புகளின் வாசத்தை வைத்தே என்ன சமையல் என்று கண்டுபிடித்து விடுவேன். அப்புறம் என்ன ஒரு கட்டு கட்டிவிட்டு தான் நடையை கட்டுவேன்.

என் அம்மா கூட அப்படித்தான். அதனை ஒரு சம்பவம் மூலம் விளக்க நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு அவர் உடல் எடை அதிகரித்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். நான் அவரிடம் ஜெனரல் மோட்டார்ஸ் டயட் சார்ட்டை சொல்லி முயற்சித்தால் ஏழு நாட்களுக்குள் ஏழு கிலோ குறைக்கும் விஷயத்தை சொன்னதும் ஆர்வமாகி அன்றே துவங்கினார்.

மூன்று நாள் தாக்கு பிடித்த அவரால் அதற்கு மேல் அசைவம் இல்லாமல் முடியவில்லை. உடனே வாலை கருவாடு போட்டு குழம்பு வைத்து முட்டை அவித்து அந்த வாசத்தை முகர்ந்த பிறகே பழைய உற்சாகம் வந்தது.

ஒரு முறை கறம்பக்குடியில் என் பெரியம்மாவின் வீட்டில் அமர்ந்து தம்பிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். ஒரு வித தீய்ந்த வாசம் வந்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல துணி தீயும் வாசம் உடன் சேர்ந்து வேறு வித கெட்ட வாசம் வந்து கொண்டே இருந்தது. எல்லோரும் சுற்றிச் சுற்றி தேடிப் பார்க்கிறோம். எங்கிருந்து வாசம் வருகிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெளிச்சம் வரவே அங்கு சென்று பார்த்தால் பக்கத்து வீட்டு சாரதா அக்கா காதல் தோல்வியின் காரணமாக தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் சத்தம் போட்டால் அடுத்தவர்கள் வந்து நெருப்பை அணைத்து விடுவார்கள் என்று கடைசி வரை முனகல் கூட இல்லாமல் செத்துப் போனார். ரொம்ப நாட்களுக்கு என் மூக்கில் அந்த கெட்ட வாசம் சுற்றிக் கொண்டே இருந்தது ஏனென்றால் அவரின் காதலுக்கு நான் தான் தூதுவன்.


ஆரூர் மூனா செந்தில்

15 comments:

  1. தலைப்புக்கும் முடிவுக்கும் - வாசனையை சொன்ன விதம் சிலிரிக்குது மனம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி முத்தரசு

      Delete
  2. ஆரம்பம் அருமை .. முடிவு கொடுமை ...

    ReplyDelete
  3. உங்க மூக்கில ஏதோ சக்தி இருக்கு ,ஆனா கடைசியா நடந்த நிகழ்விலே உங்களால் காப்பாற்ற முடியாமை சோகம்
    இருந்தாலும் உங்களின் கற்பூர நுகர்வு அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணே.

      Delete
  4. ஒரு அருமையான சிறுகதை .

    ReplyDelete
  5. வாசனை மூக்கை மிகவே துளைத்துவிட்டது!

    ReplyDelete
  6. சூப்பர் பாஸ்.. குழந்தையில் இருந்து இப்பவரைக்கும் அத்தனையும் சொல்லிட்டிங்க அருமை..

    ReplyDelete
  7. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை....!
    அப்படின்னு உன்னை யாரும் சொல்லமுடியாது மச்சி!

    ReplyDelete
    Replies
    1. ஏன் மச்சி இந்த கொலவெறி?

      Delete
  8. எனக்கு பெற்ரோல் டீஸல் வாசனை ரெம்பப் பிடிக்கும்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...