சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, July 11, 2012

டிராபிக்னு சொல்லி எனக்கு நானே வச்சிக்கிட்ட ஆப்பு

முதல்ல ரயில்வே மொழியில டிராபிக் அப்படினா என்னன்னு சொல்லிடுறேன். அப்பத்தான் இந்த சம்பவம் புரியும்.

ஒரு ரயில்பெட்டி சென்னையில் உள்ள ஐசிஎப்பிலோ அல்லது பஞ்சாப் கபுர்தலாவில் உள்ள ஆர்சிஎப்பிலோ தயாராகிறது. அப்படி வெளி வரும் ரயில்பெட்டி மூன்று வருடங்களுக்கு பிறகு பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸூக்கு சர்வீஸ்க்காக வரும். அனைத்து ரயில்களும் இங்கு வராது. தென்னக ரயில்வேயின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வண்டிகள் மட்டும் இங்கு அனுப்பி வைக்கப்படும்.

அந்தந்த ரயில்வேக்களில் இது போல் ஒரு கேரேஜ் ஒர்க்ஸ் ஒன்று இருக்கும். அந்தந்த ரயில்வேக்களிலும் காலக்கெடுவிற்கு ஏற்றாற் போல் வண்டிகளை சர்வீஸ் செய்ய இது போலவே கேரேஜ்க்கு அனுப்பி வைப்பர். அங்கு வரும் ரயில்பெட்டியை ஆய்வு செய்து அதில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டறிந்து ஒரு சார்ட் தயார் செய்வார்கள்.

அதன் பிறகு அந்த வண்டிக்குரிய எண்ணுடன் குறைபாடுகள் அடங்கிய சார்ட் தயாராகி அந்தந்த செக்சனுக்கு அனுப்பி வைக்கப்படும் அதன் பிறகு அந்த குறைபாடுகள் பத்திலிருந்து பதினைந்து நாட்களுக்குள் சரி செய்யப்பட்டு வண்டி கடைசியாக டிஎல்டி (TLD) ஷாப்பிற்கு வரும்.

அங்கு பேசின்பிரிட்ஜ் அலுவலகத்திலிருந்து வரும் அதிகாரிகள் வண்டியை ஆய்வு செய்து சார்ட்டில் ஒகே என்று கையெழுத்திட்ட பிறகு வண்டி அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு வழக்கமாக ஒடிய எக்ஸ்ப்ரஸில் இணைக்கப்பட்டு விடும். பிறகு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்வாறு வந்து கோளாறுகள் சரி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படும்.

சரியாக வண்டி தயாரானதிலிருந்து இருபத்தி ஐந்தாம் ஆண்டு ஸ்க்ராப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டு வண்டி கண்டமாக்கப்படும். இது தான் ஒரு ரயில்பெட்டியின் வரலாறு. இதில் அதிகாரிகள் வண்டியை ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது டிராபிக் என்று அழைக்கப்படும்.

முதல் நாள் பலகையில் வண்டி எண்கள் மறுநாள் டிராபிக்குக்கு உரியவை எவை என்று எழுதி வைக்கப்படும். அந்த இறுதிக்கட்டத்தில் அந்தந்த பிரிவு அதிகாரிகள் தொழிலாளர்களை விரைவாக முடுக்கி விட்டு வேலை வாங்கி தங்கள் செக்சனுக்குரிய வேலையை முடித்து விடுவர்.

எனது செக்சன் என்பது வெஸ்டிபுள் பகுதியாகும். ஒரு பெட்டியின் கடைசியில் அதாவது டாய்லெட்டிற்கு பிறகு அடுத்த கோச்சுக்கு செல்வதற்காக வழி இருக்குமே அந்த பகுதி தான் வெஸ்டிபுள் என்றழைக்கப்படுகிறது. கடைசிப்பகுதியில் கதவு உண்டு. அது ரோலிங் ஷட்டராக இருக்கும் அல்லது ஸ்லைடிங் டோராக இருக்கும். அதில் ஏதும் குறைபாடு இருந்தால் சரி செய்வது என்னுடைய குழுவின் பணி.

மொத்த வெஸ்டிபுள் செக்சனில் 38 பேரும் என் குழுவில் மட்டும் என்னுடன் சேர்த்து 4 பேர் உள்ளனர். ஒரு செக்சனுக்கு உயரதிகாரி SSE (Senior Section Engineer) ஆவார். அவருக்கு அடுத்த நிலையில் JE (Junior Engineer) அல்லது சார்ஜ்மேன் ஆவார். அதன் பிறகு உள்ள மற்றவர்கள் என்னைப் போன்ற தொழிலாளிகள் தான்.

பொதுவாக மதியம் வேலை முடிந்ததும் அனைவரும் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். நேற்றும் அதே போல் வீட்டுக்கு சென்றதும் ஒரு உறவினரைப் பார்க்க வேண்டி இல்லாளை அழைத்துக் கொண்டு அமைந்தகரையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது என் JEயிடம் இருந்து போன் வந்தது. அவர் 5 நாட்கள் விடுமுறை எடுத்து விசாகப்பட்டினம் சென்றிருந்தார்.

இது வரை ரயில்வே பற்றி தெரியாதவர்களுக்காக சீரியஸாக சொல்லிக் கொண்டிருந்தேன். இனி நம்ம மொழியில் பதிவு மாறுகிறது.

போனை அட்டென்ட் செய்து அவருடன் பேசினால் அவர் பேசிய தொணி புதிதாக படம் இயக்க விரும்பும் உதவி இயக்குனர் ஒருவர் தயாரிப்பாளரிடம் சென்று கதையை சொல்வது போலவே இருந்தது. படத்தின் க்ளைமாக்ஸ்ஸூக்கு முன்பு வில்லன்கள் எல்லோரும் சேர்ந்து ஹீரோவின் தாயை கொன்று விடுகிறார்கள், ஹீரோவின் தங்கையை கதறக் கதற கற்பழித்து விடுகிறார்கள் (ஏம்ப்பா சரியாத்தான் சொல்றேனா).

கடைசியாக கற்பழித்த ஒருவன் எழுந்து பேண்ட்டின் ஜிப்பைப் போடும் போது ஹீரோ உள்ளே வருகிறார். எல்லாவற்றையும் பார்க்கிறார். அந்தக் கோலத்தில் அண்ணனை காண விரும்பாத தங்கை டபக்குன்னு அழுக்கு கூடையில் இருந்த ஜமுக்காளத்தை சுத்திக் கொண்டு படியில் மூணுமாடி ஏறிச் சென்று வீல் என்று கத்திக் கொண்டு குதித்து விடுகிறார்.

ஹீரோ தங்கையின் சடலத்தை எடுத்துக் கொண்டு அம்மாவின் சடலத்துடன் வைத்து வலது தோளில் அம்மாவையும் இடது தோளில் தங்கையையும் வைத்துக் கொண்டு கதறுகிறார்.

அது போலவே என் JE "செந்தில், இன்று ஒரு வண்டி டிராபிக்கில் இருக்கிறது, அதில் ரோலிங் ஷட்டர் சரிவர லாக் ஆகவில்லையாம். SSE TLD ஷாப்பில் வண்டியருகே இருக்கிறார். வண்டி போன மாதம் 5ம் தேதியே உள்ளே வந்தது. உன் குழுவில் உள்ள மற்றவர்கள் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்கிறது. நீ மட்டும் சென்று கோளறை சரி செய்யவில்லை என்றால் அதிகாரிகள் வண்டிய டிராபிக்கில் க்ளியர் செய்ய மாட்டார்கள். அப்படி நடந்து விட்டால் SSEக்கும், JEயாகிய எனக்கும் மற்றும் உன் குழுவில் உள்ள எல்லோருக்கும் மெமோ கொடுத்து விடுவார்கள். நீ உடனே போ" என்றார்.

கதையை கேட்டு மனமிறங்கி இந்தப் படத்தை எடுத்தால் தெலுகு டப்பிங் வரைக்கும் சம்பாதித்து லாபம் பார்த்து விடலாம் என்ற பேராசையுடன் கூடிய நப்பாசையில் அட்வான்ஸ் செக்கை கொடுத்த தயாரிப்பாளரைப் போலவே நானும் இன்று எப்படியாவது அவசர வேலையை செய்து கொடுத்தால் பின்னாளில் நமக்கு வேண்டியதை கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டு " சரி சார். நான் வந்து விடுகிறேன். வந்து சரி செய்து தருகிறேன்" என்று கூறி விட்டுப் பார்த்தால் என் வீட்டம்மா கண்களில் நெருப்புடன் முறைத்துக் கொண்டு இருந்தார். ஏனென்றால் "மருத்துவமனையில் உறவினரைப் பார்த்த பிறகு அங்கிருந்து கிளம்பி ஸ்கைவாக் செல்லலாம், உனக்கு வேண்டிய உடைகளை வாங்கிக் கொள்" என்று வீட்டம்மாவிடம் சொல்லியிருந்தேன்.

பிறகு அவரை தாஜா பண்ணி அடுத்த வாரம் கூடுதலாக ரெண்டாயிரம் ஷாப்பிங்க்கு தருவதாக உறுதி கூறி அங்கிருந்து கிளம்பி அண்ணாநகர் ரவுண்டானா அருகில் வந்ததும் அவரை வீட்டுக்கு ஆட்டோவில் அனுப்பி விட்டு அவசர அவசரமாக பெரம்பூர் கேரேஜ் உள்ளே சென்றேன். என் செக்சனில் யாருமில்லை. சரி ரெயில்பெட்டியின் அருகில் சென்று பார்ப்போம் என்று TLD ஷாப்பிற்கு சென்றேன். அங்கு வண்டியருகே யாருமில்லை. சரிதான் வண்டியை டிராபிக்கில் நிப்பாட்டி விட்டார்கள் போல நமக்கு ஆப்பு தான் என்று நினைத்துக் கொண்டு SSE எங்காவது தென்படுகிறாரா என்று தேடினேன். ஆளைக் காணவில்லை.

பிறகு அடுத்த ஷாப்பான LBRல் தேடினேன். அங்கும் காணவில்லை. பிறகு JEக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. செக்சனுக்கு வந்தேன். SSE அவரது இருக்கையில் அமர்ந்திருந்தார். "சார் வண்டியை சரி பண்ணிடட்டுமா" என்று கேட்டால் "வேண்டாங்க செந்தில் வண்டி இன்னைக்கு டிராபிக் கிடையாதாம். நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் நாளைக்கு வந்து சரி பண்ணிக்கலாம்" என்றார்.

கடைசியில் அடாசு படமெடுத்து தலையில் துண்டைப் போட்ட தயாரிப்பாளரைப் போல் நான் காணப்பட்டேன் என்று சொல்லவும் வேண்டுமோ. அட போங்க சார். போய் புள்ளக் குட்டிங்கள படிக்க வையுங்க சார்.

ஆரூர் மூனா செந்தில்

Monday, July 9, 2012

சிங்கப்பூரில் இஞ்சினியர்களுக்கான வேலை வாய்ப்பு விவரங்கள்

சிங்கப்பூரில் உள்ள கம்பெனிக்கு பல தரப்பட்ட வேலைகளுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் வரும் 14 மற்றும் 15ம் தேதி நடைபெறுகிறது. வேலைக்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டாவை senthilkkum@gmail.com என்ற மெயிலுக்கு அனுப்பி வைக்கவும். அல்லது 8883072993 என்ற எண்ணுக்கு போன் செய்யவும்.

1. Mechanical Engineers SP S$ 2250 – S$ 2750
5 yrs above experience in equipment, alignment of rotating and static equipments as well as Internal Alignment of Steel Structural.
(கல்வித்தகுதி DME அல்லது BE)

2. Quality Control Engineer SP S$ 2250 – S$ 2750
5 yrs above experience in planning and directing activities concerned with application standards for industrial processes, materials and products. Develops and initiates standards and methods for inspection, testing and evaluation utilizing knowledge in Mechanical Engineering fields.
(கல்வித்தகுதி Diploma அல்லது BE)

3. Millwright Fitter WP S$1000

4. Structural Steel Fitter WP S$ 900

5. Mechanical Fitter – Equipment Alignment WP S$ 900

6. Pipe Fitter WP S$ 950

7. Internal Tray Fitter WP S$ 800

8. Welder 6G WP S$1000

9. Material Controller WP S$1100
(கல்வித்தகுதி Any Degree)

10. Document Controller WP S$1100
(கல்வித்தகுதி Any Degree)

11. Store-Keeper WP S$ 700
(கல்வித்தகுதி Minimum Plus Two)

12. Lifting Supervisor. (Construction low levy) WP S$ 800
Minimum 2 yrs experience in Singapore. Must have Building Control SafetySupervisor Cert, Lifting Cert & Rigger/ Signaler Cert...(Construction low levy)

13. Rigger/Signalers. (Construction low levy) WP S$ 700
minimum 2 yrs working experience in Singapore with Cert


BASIC TERMS & CONDITIONS OF EMPLOYMENT


Accommodation Provided by Employer.

Passage Facilities 1 Return air-ticket to native country provided by Employer After completion of Contract Period.

Except in the case of Breach of Employment Contract (Resignation or Termination), the return air-ticket will be borne by the Employee.

Working Hours Normal working hours – 8 hours a day, 44 hours per week. One (1) Off day per week.

Overtime Rate 1.5 of Hourly Basic Rate of Pay on Weekdays. 2.0 of Hourly Basic Rate of Pay on Sundays & Public Holidays.

Friday, July 6, 2012

நான் ஈ - சிங்கிளாக வந்த சிங்கம்

எப்பவுமே விமர்சனம் எழுதுறதுக்காக படம் பாக்கணும்னா முதல் காட்சி தான் போவேன். ஆனா போன வாரமே என் வூட்டம்மா "இந்தப் படத்துக்கு என்னையும் அழைச்சிக்கிட்டு போகணும் இல்லைனா அவ்வளவுதான்" அப்படின்னு மிரட்டி வச்சிருந்தாங்க. அதான் வேலைய முடிச்சிட்டு வீட்டுக்கு வந்து என்ர அம்மணியை அழைச்சிக்கிட்டு தியேட்டருக்கு போக வேண்டியதாயிட்டது.

ஷை படம் தெலுகுல வந்தப்பவே நான் ராஜமெளலிக்கு பரம ரசிகனாகி விட்டேன். அதன் பிறகு அவரது படம் என்றால் முடிந்த வரை முதல் காட்சி தான். சத்ரபதி, விக்ரமருக்குடு (தமிழ்ல சிறுத்தை), யமதொங்கா, மகதீரா, மரியாதை ராமண்ணா வரை எல்லாப்படமும் முதல் காட்சி பார்த்து விடுவேன்.

படம் தெலுகில் வெளியாகும் அன்றே தமிழிலும் வெளியாவதால் தமிழிலேயே பார்த்து விடலாம் என்று முடிவெடுத்து ராக்கிக்கு சென்றோம். பிரபல தமிழ் நடிகர் இல்லை, பிரபல தமிழ் இயக்குனர் இல்லை இருந்தாலும் திரையரங்கு 80 சதவீதம் நிறைந்திருந்ததது படத்தின் டிரைலர் ஏற்படுத்தியிருந்த எதிர்ப்பார்ப்பினால் தான்.

படத்தின் கதை என்ன? நாம் ஒண்ணும் படம் பார்த்து தான் கதையை தெரிஞ்சிக்கணும் அப்படின்னுலாம் ஒன்னுமில்லை. டிரைலரிலேயே தெரிந்து விட்டது. நானியும் சமந்தாவும் காதலர்கள். வில்லனான சுதீப் நானியைக் கொன்று காதலை பிரிக்கிறார். நானி ஈயாக மறுஜென்மம் எடுத்து வந்து சுதீப்பை எப்படி பழிவாங்குகிறார் என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோவாக நடித்திருக்கும் நானி உண்மையில் அழகாக இருக்கிறார். ஹான்ட்சம் என்ற வார்த்தைக்கு உரிய உடல்வாகு. நடிக்கத்தான் ஸ்கோப் கம்மியாக இருக்கிறது. படம் துவங்கிய அரை மணி நேரத்திற்குள் செத்து விடுகிறார்.

ஹீரோயின் சமந்தா, பாப்பா மாஸ்கோவின் காவிரி படத்தில் பூத்த பூ போல் அப்படி ஒரு ப்ரெஷ்ஷாக இருந்தார். இப்பொழுது சப்பிப்போட்ட மாங்கொட்டை போல் இருக்கிறார். ஏகப்பட்ட படம் அதற்குரிய கமிட்மெண்ட்ஸ். அதுவும் தெலுகில் என்றால் அதற்குரிய விலையை கொடுத்து தானே ஆக வேண்டும்.

வில்லனாக சுதீப் படத்திற்கென அவர் தனியாக நடிக்க வேண்டியதில்லை. செலிபரிட்டி கிரிக்கெட் லீக்கில் எப்படி இருந்தாரோ அப்படியே படத்திலும் வந்து போகிறார். கன்னடத்தில் வசூல் மன்னன் தமிழிலும் தெலுகிலும் மார்க்கெட்டை எதிர்பார்த்து காலை நுழைத்திருக்கிறார். இந்தப் படத்தை விசிட்டிங் கார்டாக வைத்து தான் அடுத்தடுத்து வாய்ப்பு தேட வேண்டும்.

படம் நன்றாக இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. படத்தில் லாஜிக் என்ற ஒரு வஸ்துவை மறந்து விட்டு படத்துடன் மக்கள் ஒன்றி விடுகின்றனர். அந்த ஈயின் பழி வாங்கும் நடவடிக்கை ஒவ்வொன்றுக்கும் விசில் சத்தம் பறக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பலமே நம்புவது போல் இருக்கும் காட்சியமைப்புகள் தான். ஈ காரை கவிழ்த்து விபத்தை ஏற்பத்துவது, சுதீப்பை தூங்க விடாமல் இம்சிப்பது, லாக்கரில் உள்ள பணத்தை எரிப்பது, வீட்டுக்குள் ஏகப்பட்ட தடைகள் இருந்த போதும் திறமையாக உள்ளே நுழைவது, மந்திரவாதி ஏவிவிட்ட பறவைகளை ஏமாற்றி கொல்வது எல்லாம் அதிகப்படியாக இல்லாம் இருப்பது தான் படத்தின் பலம்.

மந்திரவாதி வந்தவுடன் ஏதோ நடக்கப் போகிறது என்று எதிர்பார்த்தால் பெரிசா கோலம்லாம் போட்டு ஜிகுஜிகுவென பூஜையை ஆரம்பித்து பொசுக்கென செத்துப் போகிறார்.

உண்மையில் கிராபிக்ஸ் என்பது என்னவெனில் அது படத்தில் இருப்பதே தெரியக்கூடாது. படத்தில் காட்சிகளுடன் இயல்பாக வர வேண்டும். அது சரியாக வந்திருப்பது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கும்.

படத்தின் பாடல்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. படமாக்கப்பட்ட விதமும் கூட. சந்தானம் ஒரே காட்சியில் படத்தில் வந்து விட்டு இறுதியில் படம் முடிந்த பின் இன்னொரு காட்சியிலும் வருகிறார். படத்தின் மார்க்கெட்டிங்கிற்காக நுழைக்கப்பட்டிருக்கிறார்.

படத்தை குடும்பத்துடன், குழந்தைகளுடன் பார்த்து மகிழ்ந்து விட்டு வரலாம். சகுனிக்கு பல மடங்கு தேவலாம்.

நான் ஈ - சிங்கிளாக வந்த சிங்கம்

ஆரூர் மூனா செந்தில்

Thursday, July 5, 2012

பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்

ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்)

10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் அருண் ஐஸ்கிரீமுமே மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்)

****

பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை

10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )


எப்பூடி

ஆரூர் மூனா செந்தில்
(இணையத்தில் படித்தேன் பிடித்திருந்தது, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்)
0

Wednesday, July 4, 2012

சாட்டையடி சித்திரம் - தண்ணீர் தண்ணீர்

சின்ன வயதில் இருந்தே என் மாமாக்கள் மற்றும் சித்தப்பாக்கள் தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி சிலாகித்து சொல்வார்கள். அது போல் பல பத்திரிக்கைகளின் கட்டுரைகளிலும் தண்ணீர் தண்ணீர் படத்தைப் பற்றி படித்துள்ளேன். ஆனால் அந்தப் படத்தை நான் சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு காட்சி கூட பார்த்தது கிடையாது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு என்ன படம் என்று தெரியாமல் விஜய் டிவியில் சில காட்சிகள் பார்த்து விட்டு சென்று விட்டேன். ஆனால் இன்று விஜய் டிவியில் சரியாக படம் துவங்கும் நேரமான 02.30 மணிக்கு படம் பெயர் போடும் போதே பார்த்து விட்டதால் இன்று படத்தை முழுவதும் பார்த்து விடுவது என்று படம் முடியும் வரை அதிசயமாக விளம்பர இடைவெளியிலும் மற்ற சேனல்கள் மாற்றாமல் பார்த்தேன்.

இந்தப் படத்தை எப்படி இத்தனை நாள் தவற விட்டேன் என்று எனக்குள் கோவமாக வந்தது. இந்திய அரசியலமைப்பை முக்கியமாக தமிழ்நாட்டு அரசியல் கூத்தை 1980களிலேயே இந்த அளவுக்கு சாடி வந்தது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது வரை நான் பார்த்த அரசியல் சார்பு படங்களிலேயே மிகச்சிறந்த படம் இது தான்.

இதுவரை இந்திய சினிமாக்களில் அதிகம் பேசப்பட்டு நான் பார்க்காத விஷயம் தண்ணியில்லாத காடு. எந்த ஒரு நேர்மையான அரசு அதிகாரியையும் தமிழ் சினிமாவில் தண்ணியில்லா காட்டுக்கு மாத்தி விடுவேன் என்று கடமைக்கு மிரட்டுவதோடு சரி. அப்படிப்பட்ட தண்ணியில்லா காடு தான் படத்தின் கதை களம்.

படத்தின் கதை, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு கிராமம் அத்திப்பட்டி. (மக்களே இது அதுவல்ல, சிட்டிசன் படத்தில் வந்தது நாகப்பட்டினம் அருகில் உள்ள அத்திப்பட்டி, இது வேற. கதையில் கான்சன்ட்ரேசன் வேணும்) பல வருடங்களாக மழை பொய்த்துப் போனதால் ஊரில் உள்ள அனைத்து ஏரி கண்மாய்களும் நீரின்றி வறண்டு விட வாழ்ந்த மக்களில் பாதிப் பேர் ஊரை விட்டு போய் விடுகின்றார்கள்.

பிறந்த ஊரை விட்டு போக விரும்பாத 300 பேர் மட்டும் சிரமப்பட்டு அந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராமத்தில் பிறந்து பக்கத்து ஊரில் போலீஸ்காரனான ராதாரவிக்கு வாக்கப்பட்டு பிரசவத்திற்காக சொந்த ஊரில் இருக்கிறார். தன் வீட்டுக்கு மட்டும் கைக்குழந்தையுடன் 10 மைல் சென்று தேனுத்தில் இருந்து தினமும் சிரமப்பட்டு எடுத்து வருகிறார்.

திருநெல்வேலியில் ஒரு எம்எல்ஏவின் மகனை பெயில் செய்ததற்காக தண்ணியில்லாக் காடான அத்திப்பட்டிக்கு மாற்றலாகி மூன்று வருடங்களாக வசிக்கிறார் ஒரு ஆசிரியர். விவசாயம் பொய்த்துப் போனதால் அந்த ஊரில் உள்ள ஆண்கள் எல்லாம் அடுத்த ஊரில் உள்ள ஒரு நாயக்கரின் தோப்புக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

அந்த ஊருக்கு வரும் நாடோடியான வெள்ளைச்சாமி தண்ணியில்லாது தவிக்கும் அந்த ஊரினை பார்த்து இரக்கப்பட்டு அந்த ஊர் பஞ்சாயத்தை கூட்டி தான் தினமும் 10 மைல் தள்ளி உள்ள ஊற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வருவதாகவும் அதற்காக தனக்கு வண்டியும் மாடும் கொடுத்தால் போதும் என்று சொல்கிறான். அதன்படி ஊரார் அவனுக்கு வண்டியும் மாடும் கொடுக்க தினமும் தண்ணியெடுத்து வந்து அந்த கிராமத்தின் தாகத்தை தணிக்கிறான் வெள்ளைச்சாமி.

பிறகு ஒருநாள் வெள்ளைச்சாமி கொலைகாரன் என்பது அந்த ஊருக்கு தெரிய வர பஞ்சாயத்து கூடுகிறது. விசாரித்ததில் அவன் பக்கம் நியாயம் இருப்பது தெரிய வர மக்கள் அவனை போலீசிடம் காட்டிக் கொடுக்க மாட்டோம் என்று பஞ்சாயத்தில் சத்தியம் செய்கின்றனர்.

பிறகு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஊற்றிலிருந்து அத்திப்பட்டிக்கு தண்ணீர் எடுத்து வர 10 மைல் வாய்க்கால் தங்களின் சொந்த முயற்சியிலேயே வெட்டுகின்றனர். முடியும் தருவாயில் போலீசுக்கு வெள்ளைச்சாமி அங்கிருப்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர்கள் வெட்டிய வாய்க்காலுக்கு அனுமதியில்லை என்று மூடச் சொல்கின்றனர். பெரும் கலவரம் மூண்டு போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி ஏகப்பட்ட பேரை கொல்கின்றனர்.

ஊருக்கே தண்ணீர் தாகம் தீர்த்த வெள்ளைச்சாமி தாகத்தால் இறக்கிறான். எஞ்சிய மக்கள் இந்த ஊரே வேண்டாம் என்று ஊரை காலி செய்து போவது போல் படம் முடிகிறது.

இந்தப்படம் கோமல் சுவாமிநாதன் அவர்களின் நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம். கதை வசனம் இரண்டும் கோமல் தான். இயக்கம் பாலச்சந்தர். எனக்கு என்ன ஆச்சரியம் என்றால் எம்ஜியார் முதல்வராக இருந்த காலத்திலேயே இவ்வளவு சூடாக படம் எடுத்த பாலச்சந்தரின் துணிச்சல் தான்.

படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் அரசின் முகத்தில் பொளேரென அறைகிறது. தலைச்சுமையை தூக்கி வரும் பூவிலங்கு மோகனும் மற்றொருவனும் தாகம் தாங்காமல் குட்டையில் எஞ்சியுள்ள நீரை உறிஞ்சி குடிப்பது மனதை நெருடுகிறது.

சேரி வீட்டு பெண்ணுக்கும் நாயக்கர் வீட்டு பையனுக்கும் காதல் ஏற்படுகிறது. அந்த பையன் குளிக்க வேண்டும் என்று பெண்ணிடம் சொல்ல அவள் சேரிப் பகுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் இரண்டு பானை தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க அவன் குளிப்பது ஆதிக்க சாதியினரின் ஜாதிவெறியை துகிலுரித்து காட்டும். அதே பெண் பிற்காலத்தில் கால்கள் செயலிழந்து போவதும் இறுதியில் அந்த இளைஞன் நக்சலைட் ஆவதும் இறுக்கமான முடிவாக இருக்கிறது.

துணிச்சலான பெண்ணாக வரும் சரிதாவின் கதாபாத்திரம் புதுமைப் பெண்ணாக படைக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மாத கைக்குழந்தையுடன் மொட்டை வெயிலில் தலையில் ஒன்றும் இடுப்பில் இரண்டு குடத்துடன் வரும் காட்சியில் உண்மையில் அந்த காலத்தில் பெண்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன். இந்த காலத்தில் துணி துவைத்து சமைப்பதற்கே கடுமையான வேலையென்று அலுத்துக் கொள்ளும் பெண்களை பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. (சத்தியமா என் பொண்டாட்டியை சொல்லலைங்க).

சாதியையும் அரசியல் கட்சிகளையும் நேரடியாக குற்றம் சாட்டும் படமாக இது இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்றால் ஊரே தேர்தல் புறக்கணிப்பில் இருக்கும் போது பூவிலங்கு மோகன் மட்டும் ஊராரின் எதிர்ப்பையும் மீறி ஒட்டுச்சாவடிக்கு ஒட்டுப் போடுவது போல் சென்று தண்ணீர் குடித்து வரும் காட்சி தான்.

என் வயதையொத்தவர்கள் இந்தப் படத்தை பார்த்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு தான். ஆனால் அவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, July 3, 2012

காதல் கவிஞனான நான் மீண்டும் கவிஞனாகிறேன்

திடீரென்று இன்று காலையில் இருந்து என் மனதில் ஒர் ஆசை அரித்துக் கொண்டே இருக்கிறது. நீ கவிஞனாகி விடு என்று. நமக்கு எழுதுறதே தகிடதிமிதோம் போடும் இதுல கவித வேறயா என்று உள்ளுணர்வு ஆப்படிக்கிறது.

நான் பெரிய கவிஞனென்று பெரம்பூர் பட்மேட்டில் உள்ள நண்பர்கள் எல்லாம் ஒரு காலத்தில் நம்பிக் கொண்டிருந்தார்கள். நான் அப்ரெண்டிஸ் படிக்கும் போது தங்கியிருந்த அறையை சுற்றியிருந்த ஏரியா நண்பர்கள் அவர்கள். அனைவருக்கும் அந்த சமயத்தில் ஒரு தலைக்காதல் இருந்தது.

முதன் முதலாக வெங்கடேஷ் என்ற ஒரு நண்பன் அவன் காதலித்த பெண்ணிடம் கொடுப்பதற்காக ஒரு காதல் கடிதம் வேண்டுமென்றும் அது கவிதையாக இருக்க வேண்டும் என்றும் என்னிடம் கூறினான். ஒசியில் குடி கிடைக்குமே என்பதற்காக அவனிடம் "ராத்திரியில் சரக்கு வாங்கிக் கொண்டு வா நான் எழுதித் தருகிறேன்" என்று கூறினேன். சத்தியமாக அதுவரை நான் ஒரு வரி கூட கவிதை எழுதியது கிடையாது.

அன்று இரவு மொட்டை மாடியில் ஜமா ஆரம்பித்தது. நான் ஒரு நோட்டு பேனாவுடன் வந்து விட சரக்கு சைட்டிஷ் ஆகியவற்றுடன் வெங்கடேஷ் வந்து சேர்ந்தான். அந்த நிமிடம் வரை எனக்கும் ஒரு கவிதை வரி கூட தெரியாது. ஆனால் அவனிடம் அதனை சொன்னால் மறுநாளிலிருந்து சரக்கு ஓசியில் கிடைக்காதே என்பதற்காக வைரமுத்து ரேஞ்சுக்கு பில்ட்அப் கொடுத்து எழுத ஆரம்பித்தேன்.

"அன்பே மரியா! சொன்னது சரியா!"

முதல் வரி வந்து விழுந்தது. அவனிடம் படித்துக் காட்ட ஆகா சூப்பர் சூப்பர் என்று சரக்கை கிளாஸில் ஊற்றி எடுத்து நீட்டினான். அதன் பிறகு என்ன எழுதினேன் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.

மறுநாள் சாயந்திரம் நான் வகுப்பு முடிந்து வரும்போது பெரம்பூர் லோகோ ஸ்டேஷன் அருகில் நண்பர்கள் சூழ்ந்து கொண்டார்கள். என்னடா ஏதோ வில்லங்கமாகி விட்டதோ என்று நான் பதற அருகில் வந்தவர்கள் என்னை கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். முதல் நாள் இரவு நான் எழுதிய கவிதையை வெங்கடேஷ் அவன் காதலியிடம் எடுத்து சென்று கொடுக்க காதல் ஓகே ஆகியிருக்கிறது. அன்றிரவு பயங்கர பார்ட்டியாகி மறுநாள் நான் வகுப்பு லீவு எடுக்கும் அளவுக்கு ஆகி விட்டது.

நான் பெரிய காதல் கவிஞன் என்று நானே நம்பி விட்டேன். பட்மேடு பகுதி நண்பர்களிடம் என் கவிதை திறமை பரவி வாரம் இருமுறை பார்ட்டியால் லீவு எடுக்கும் அளவுக்கு என் நிலைமை ஆகிவிட்டது. சில சமயம் எவ்வளவு தான் யோசித்தாலும் ஒரு வரி கூட வராது. பிறகென்ன நைசாக ரூமுக்குள் சென்று பழைய வாரமலரில் இருக்கும் கவிதையை சுட்டு எழுதிக் கொடுத்து கவிஞன் என்ற இமேஜ்ஜை காப்பாற்றிக் கொண்டிருந்தேன்.

இந்நிலையில் 1999ம் ஆண்டு காதலர் தினம் வந்தது. சோமன் என்ற மெக்கானிக் நண்பன் அவனது ஒருதலையாக காதலிக்கும் பெண்ணிற்கு காதலர் தினத்தையொட்டி ஒரு கவிதை கொடுக்க வேண்டும் எழுதிக் கொடு என்றான்.

இரவு நெப்போலியனை சுவாசித்துக் கொண்டே கவிதையை எழுதினேன்.

இந்த நன்னாளில் - உனக்கு நான்
என்ன தருவது?
வண்ண மலரை எடுத்தேன்
வாடி விட்டது!
இமயத்தின் பனிக்கட்டி எடுத்தேன்
கரைந்து விட்டது!
வெண்ணிலாவை எடுத்தேன்
காலையில் மறைந்து விட்டது!
கிழக்கில் தோன்றும் சூரியனை எடுத்தேன்
அவை - உன்னை சுட்டு விடும்!
எனவே என் இதயத்தை தருவேன்
ஏற்றுக் கொள்வாயா?

எழுதி அவனிடம் கொடுத்து விட்டு தூங்கி விட்டு மறுநாள் வழக்கம் போல் நான் வகுப்புக்கு சென்று விட்டேன். லஞ்ச் டைமில் ஒரு 20 பேர் பயிற்சி மையத்தின் வாசலில் நின்று என் பெயரை சொல்லி விசாரித்துக் கொண்டிருக்க சாப்பிட்டு விட்டு வந்த நான் மாட்டிக் கொண்டேன். அலேக்காக பைக்கில் நடுவில் உட்கார வைத்து ஏரியாவுக்குள் பைக் பறக்கிறது.

பட்மேடு 17வது தெருவில் சோமன் வீட்டு அருகே பஞ்சாயத்து நடக்கிறது. என்ன நடந்தது என்றால் காலையில் சோமன் சென்று அந்தப் பெண்ணிடம் பேப்பரை நீட்ட அந்தப்பெண் கவிதையை படித்து விட்டு தன் அப்பாவிடம் சொல்லி விட்டது. அவர்கள் குடும்பமாக வந்து சோமன் வீட்டில் பிரச்சனை துவக்க இந்த படுபாவி நான் தான் எழுதிக் கொடுத்தேன் என்றும் தனக்கு ஒன்றும் தெரியாது என்றும் கூறி விட்டான்.

பிறகென்ன நெடுநேரம் நடந்த பஞ்சாயத்தின் அடிப்படையில் நான் யாருக்கும் காதல் கவிதையோ கடிதமோ எழுதித்தரக் கூடாது என்று பெரிசுகளால் தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் பிறகு ஒழுங்காக படிப்பை மட்டும் கவனத்தில் கொண்டு ஏரியாவில் சுற்றிக் கொண்டிருந்தேன்.

இன்று என்ன கொடுமை என்றால் சோமனுக்கும் அவன் கடிதம் கொடுத்த பெண்ணுக்கும் பிற்பாடு காதல் வந்து இன்று இரண்டு குழந்தைகளுடன் வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்கள். ஆனால் பெரிய கவிஞனாகியிருக்க வேண்டிய நான் எனக்கே சொந்தமாக ஒரு கடிதம் எழுத யோசிக்கும் அளவுக்கு நிலைமை ஆகி விட்டது.

என்ன நடந்தாலும் பரவாயில்லை இன்றிலிருந்து கவிதையா எழுதித் தள்ளப்போகிறேன். படிக்க வேண்டிய தலையெழுத்து உங்களது.

முதல் கவிதையின் முதல் வரி

"அன்பே அகிலா! இன்னும் கிடைக்குமா டகீலா!"

நான் கவிஞன்டா
ஆரூர் மூனா செந்தில்

Monday, July 2, 2012

பஞ்சேந்திரியா - அபிராமி மெகாமால் தீவிபத்தும், ரிட்டையர்மெண்ட் பார்ட்டியும்

இன்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு கிளம்பிய போது என் சக நண்பன் ஒருவன் டவுட்டனில் உள்ள வங்கிக்கு செல்ல வேண்டும் என்று கூறி என்னுடன் பைக்கில் வந்தான். அபிராமி மெகா மால் அருகில் வந்த போது காட்சிகள் நடைபெறவில்லை என்ற அறிவிப்பும் ஏகப்பட்ட கூட்டமுமா இருந்தது.

வண்டியை நிறுத்தி என்னவென்று விசாரித்தால் இன்று காலை மால் துவங்கும் நேரத்திற்கு முன்பாக தரைத்தளத்தில் தீவிபத்து ஏற்பட்டு பெரிய அளவில் தீ பரவி சக்தி அபிராமி புட்கோர்ட் வரை தீயில் நாசமாகி விட்டது என அறிந்தேன். ஏற்கனவே அபிராமியின் நெரிசல் கண்டு எனக்கு ஏற்கனவே கடுப்பு உண்டு.

சந்து பொந்துகளில், படிக்கட்டுகளில் எல்லாம் கடை வைத்து கடுப்பேற்றிக் கொண்டிருப்பர். டிக்கெட்டும் 180, 160 என்று இஷ்டத்திற்கு விலை நிர்ணயம் உள்ள திரையரங்கம் இது. சாப்பிடுவதற்காக புட்கோர்ட் வந்தால் பத்து கடையின் பிரதிநிதிகள் வந்து நம்மை சூழ்ந்து கொண்டு நாம் எதை சாப்பிடுவது என்ற குழப்பத்தை ஏற்படுத்தி பர்ஸை காலி செய்து விடுவர்.

இத்தனைக்கும் 90களில் எனக்கு மிகவும் பிடித்த தியேட்டராக அபிராமி இருந்தது. திரைவளாகம் முன்பு மிகப்பெரிய கார்பார்க்கிங். கம்ப்யூட்டர் முன்பதிவு, நல்ல ஸ்பீக்கர்கள் என முன்னணியில் இருந்தது. காலியிடத்தை கட்டிடம் கட்டி காசு பார்க்க ஆரம்பித்த பின் எல்லாம் போய் விட்டது.

தீ விபத்து மட்டும் வாரயிறுதி நாட்களில் நடந்திருந்தால் கடுமையான உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும். நல்லவேளையாக மால் துவங்கும் முன்பே தீவிபத்து ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த மெகா மால் தொடங்க அனுமதி வழங்கிய அதிகாரிகள் பாதுகாப்பு காரணங்களை காட்டி வழிகளை விசாலப்படுத்தினால் மட்டுமே இன்னொரு முறை இதுபோன்ற விபத்து ஏற்பட்டால் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அரசு விழித்துக் கொள்ளுமா?

--------------------------

சகுனி விஷயத்தில் நான் சொன்னது போலவே நடக்கிறது. படம் எப்படியும் கலகலப்பைப் போல் ஒடிவிடும் என்று சொன்னேன். அது போலவே சகுனி ஒடும் திரையரங்குகள் இன்று வரை கூட்டத்தில் நிரம்பி வழிகின்றன. பதிவர்களாகிய நாம் தான் படம் டப்பா அது இது என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பாட்டுக்கு படத்தை ஒட்டி காசு பார்த்து விட்டார்கள். படம் பார்த்தவனும் என்னடா படம் இது நல்லாவேயில்லை என்று புலம்பிக் கொண்டு தான் இருக்கிறான். ஆனால் கூட்டம் எப்படித்தான் சேருகிறதோ யாருக்கும் புரியவில்லை.

------------------------

சனிக்கிழமையன்று தான் முதன் முதலாக என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் 60வயதில் ஒய்வு பெறும் நிகழ்வு நடைபெற்றது. இது வரை இது போன்ற நிகழ்ச்சிகளை காணாத எனக்கு புதிதாகவே இருந்தது. ஜூலை மாதத்தில் மட்டும் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸில் இருந்து 47 பேர் ஒய்வு பெற்றுள்ளனர். சனியன்று காலை என் செக்சனுக்கு சென்றதுமே சக ஊழியர் ஒரு கட்டிங்கை கொடுத்து அன்றைய நாளை மகிழ்வுடன் துவக்கினார்.

அன்று மட்டும் அபீசியல் வேலைகள் இல்லாமல் மேடை அமைத்தல், சால்வை வாங்கி வருதல், பிரியாணி பார்சல் வாங்கி வருதல் என செக்சனே களை கட்டியது. அரைமணிக்கொரு கட்டிங் வேறு. நான் பணிபுரியும் வெஸ்டிபுள் (Vestibule) செக்சனில் என்னுடன் 40 பேர் பணிபுரிகின்றனர். 55 வயதை கடந்தவர்கள் மட்டும் 30 பேர். ஆனால் இது போன்ற கொண்டாட்டங்களில் வயது வித்தியாசமில்லாமல் எல்லோரும் கூடி ஒய்வு பெற்ற ஊழியரை சந்தோஷமாக வீடு வரை சென்று விட்டு வந்தோம். நமக்கு தான் சந்தோஷம் எல்லாம் ஆனால் அந்த 36 வருடங்கள் பணிபுரிந்து ஒய்வு பெற்ற ஊழியர் மனம் வருத்தப்படும் என்பதை நினைத்தால் எனக்கு வருத்தம் தான் வந்தது.

-------------------------

யூரோ கப்பில் எதிர்பார்த்தப்படியே ஸ்பெயின் வெற்றிப் பெற்று விட்டது. மாட்ச் தான் நடுராத்திரியில் 12.15 மணிக்கு துவங்கியது கண்முழித்து பார்த்த எனக்கு இன்றைய நாளை சோம்பலாக்கி விட்டது. ஆட்டம் துவங்கியதிலிருந்தே ஸ்பெயினின் ஆதிக்கம் தான். முதல்பாதி வரை 2-0 என்ற கோல்கணக்கில் இருந்த ஸ்பெயின் ஆட்டத்தை 4-0 என்று அட்டகாசமாக முடித்து விட்டது. தொடர்ச்சியாக இரண்டாம் முறை வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது ஸ்பெயின்.

ஆரூர் மூனா செந்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...