சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, February 24, 2012

ஆட்டோ சங்கர் - மரண தண்டனை - இறுதிப் பகுதி



தண்டனை பெற்ற 8 பேரையும் வேலூர் ஜெயிலில் அடைக்கவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். அதன்படி ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் பலத்த பாதுகாப்புடன் வேலூர் கொண்டு செல்லப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு செசன்சு கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஆட்டோ சங்கர் உள்பட 8 பேரும் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தனர். தங்கள் மனுவில் அவர்கள் கூறியிருந்ததாவது:-

"அடையாளம் கண்டுபிடிக்க முடியாத எலும்புக்கூடுகளை வைத்துக்கொண்டு காணாமல் போனவர்களின் எலும்புக்கூடுகள் என்று ஊக அடிப்படையில் கூறி, அவர்களை நாங்கள்தான் கொலை செய்தோம் என்று வேண்டும் என்றே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆகவே, நிரபராதியான எங்களை விடுதலை செய்யவேண்டும்" இவ்வாறு அவர்கள் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

நீதிபதிகள் கே.எம்.நடராஜன், டி.சோமசுந்தரம் ஆகியோர் இந்த அப்பீல் வழக்கை விசாரித்தார்கள். 4 மாதம் 6 நாட்கள் இந்த அப்பீல் மனு மீது வக்கீல் வாதங்கள் நடந்தன. இந்த அப்பீல் வழக்கில் 17.07.1992 அன்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

ஆட்டோ சங்கர், எல்டின், சிவாஜி ஆகியோருக்கு செசன்சு கோர்ட்டு விதித்த தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். இதேபோல ஜெயவேலு, ராமன், ரவி ஆகியோருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். குற்றம் நிரூபிக்கப்படாததால் பழனி, பரமசிவம் ஆகிய 2 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்கிறோம் என்று தீர்ப்பளித்தனர். தீர்ப்பில் நீதிபதிகள் மேலும் கூறி இருந்ததாவது:-

"கொலை செய்யப்பட்டவர்களில் 5 பேர் எலும்புக்கூடுகளை வைத்து, இவர்கள்தான் ஆட்டோ சங்கரால் கொலை செய்யப்பட்டவர்கள் என்பதை ஏற்க முடியாது" என்று ஆட்டோ சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையொட்டி 5 பேரின் மண்டை ஓடுகளும் "சூப்பர் இம்பொசிசன் டெக்னிக்" என்ற நவீன கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களும், மண்டை ஓடுகளும் ஒன்றாக பொருந்தி இருப்பதை தடய இயல் நிபுணர் சந்திரசேகர் ஐகோர்ட்டில் நிரூபித்துக் காட்டியதை இக்கோர்ட்டு ஏற்கிறது. மேலும், செசன்சு கோர்ட்டு நீதிபதி இந்த வழக்கை தீவிரமாக விசாரணை நடத்தி தெளிவான முறையில் தீர்ப்பு கூறியதை இக்கோர்ட்டு பாராட்டுகிறது."

இவ்வாறு தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருந்தார்கள்.

இந்த வழக்கில் துப்பு துலக்கிய குற்றப்பிரிவு ரகசிய போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுகத் அலி மற்றும் வக்கீல்களுக்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தார்கள். தீர்ப்பு மொத்தம் 371 பக்கங்களில் இருந்தது. ஐகோர்ட்டில் கூறப்பட்ட கிரிமினல் வழக்கு தீர்ப்புகளில் இதுவே மிகவும் பெரிய தீர்ப்பாக அமைந்தது.

ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆட்டோ சங்கரும், மற்றவர்களும் சுப்ரீம் கோர்ட்டில் "அப்பீல்" செய்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜெயசந்திரரெட்டி, ஜி.என்.ரே ஆகிய 2 நீதி பதிகள் விசாரித்தனர். இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் 05.04.1994ல் தீர்ப்பு கூறப்பட்டது.

ஆட்டோ சங்கர், எல்டின், ஆகிய 2 பேருக்கும் தூக்குத்தண்டனையை நீதிபதிகள் உறுதி செய்தனர். மற்றும் சிவாஜி, ஜெயவேலு, ராமன், ரவி ஆகிய 4 பேர்களுக்கும் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. போலீஸ் தரப்பில் அரசாங்க வக்கீல்கள் சுப்பிரமணியம், கே.வி.வெங்கடராமன், அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் ரெட்டி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

சுப்ரீம் கோர்ட்டில் ஆட்டோ சங்கர் மற்றும் எல்டின் சார்பாக ஆஜராகிய வக்கீல்கள், "வன்முறை மற்றும் ஆபாசம் நிறைந்த உள்ளூர் சினிமா படங்களின் பாதிப்பு காரணமாகவே இந்த குற்றங்கள் நடந்துள்ளன. எனவே, இதற்கு காரணமான, அந்த சினிமா தயாரிப்பாளர்களே இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும்" என்று வாதாடினார்கள். இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் 76 பக்க தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

"வன்முறை மற்றும் ஆபாச காட்சிகள் நிறைந்த சினிமா படங்களினால் குற்றம் ஏற்படுகிறது என்பதை ஒத்துக்கொள்கிறோம். ஆனால், ஆட்டோ சங்கர் மற்றும் எல்டினைப் பொறுத்தவரையில், வன்முறை மற்றும் ஆபாச சினிமாக்கள் தான் அவர்களை குற்றவாளிகளாக மாற்றியது என்று சொல்லுவதற்கு இல்லை. ஏனென்றால் அவர்கள் இதற்கு முன்பாகவே கொடூரமான குற்றவாளிகளாக இருந்தனர்.

சினிமா என்றால் கதாநாயகிகள், வளைவு, நெளிவுடனும், அதிகப்படியான கவர்ச்சியுடனும் தோன்ற வேண்டிய அவசியம் என்ன என்பது தெரியவில்லை. அதேபோல, கொடூர செயலில் ஈடுபடும் வில்லன்களை கொடூரமாக பழிவாங்கும் கதாநாயகர்கள் என்பது சினிமாவில் தவிர்க்க முடியாத நடைமுறையா என்பதும் தெரியவில்லை.

சினிமா என்பது கலையையும் கலாசாரத்தையும் வளர்க்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் கொண்டது ஆகும். ஆனால், அந்த கலை கலாசாரத்தை ஆபாசமாகவும் வன்முறை காட்சிகளாகவும் சித்தரிப்பதால், அந்த நோக்கத்துக்காகத்தான் சினிமா எடுக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது."

இவ்வாறு நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினார்கள்.

தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட ஆட்டோ சங்கரும், எல்டினும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார்கள். அவை தள்ளுபடி செய்யப்பட்டன. எனவே, சேலம் ஜெயிலில் ஆட்டோ சங்கரை 27.04.1995 அன்று காலை 05.30 மணிக்கும், எல்டினை மதுரை மத்திய சிறையில் 28.04.1995 அன்று காலை 05.30 மணிக்கும் தூக்கில் போட உத்தரவிடப்பட்டது. தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று இருவர் சார்பிலும் கவர்னர் சென்னாரெட்டியிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதுதவிர ஆட்டோ சங்கர் மனைவி ஜெகதீசுவரி, எல்டின் மனைவி சாந்தி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் ஏ.நடராஜன் மூலம் 2 `ரிட்' மனுக்களை தாக்கல் செய்தனர். அதில், "இருவரையும் தூக்கில் போட தடை விதிக்கவேண்டும். தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கவேண்டும்" என்று கூறி இருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி சிவராஜ்படேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வக்கீல் ஜோதி, எதிர்தரப்பில் வக்கீல் ஏ.நடராஜன் ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள். பிறகு 2 மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:-

"தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவேண்டும் என்ற கோரிக்கைக்கு, ஐகோர்ட்டில் மனு செய்ய முடியாது. அரசியல் சட்டம் 32வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டில் தான் மனு செய்யவேண்டும். மேலும் மனுதாரர்கள் கூறும் காரணங் கள் போதுமானதாக இல்லை. தூக்கில் போடுவதற்கு இடைக்கால தடை விதிக்கமுடியாது."

இவ்வாறு நீதிபதி தீர்ப்புக் கூறினார்.

ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்பு, அவனுடைய மனைவி ஜெகதீசுவரி, குழந்தைகளுடன் சென்று சந்தித்தாள். "ஆட்டோ" சங்கர் துயரமிகுதியால் கண்ணீர் வடித்தான். குடும்பத்தினர் கதறி அழுதனர். பிறகு இரவு 7 மணி வரை தனது கடைசி ஆசை, உயில் ஆகியவை பற்றி குடும்பத்தினருடன் பேசினான்.

இலவச சட்ட ஆலோசனை உதவிக்குழுவை சந்திக்க ஆட்டோ சங்கர் விரும்பினான். இதன்படி இந்த குழுவினர் ஜெயிலுக்கு சென்று பார்த்தனர். அப்போது "நான் இறந்த பிறகு எனது கண்களை தானம் செய்ய விரும்புகிறேன்" என்று கூறினான். அதில் சில சட்ட பிரச்சினை இருந்ததால் அவனது கோரிக்கை ஏற்கப்படவில்லை.

சேலம் ஜெயிலில் ஆட்டோ சங்கர் தனி அறையில் அடைக்கப்பட்டிருந்தான். கோர்ட்டு மூலம் தடை உத்தரவு வந்து விடும் என்று 26ந்தேதி மாலை 6 மணி வரை எதிர்பார்த்து இருந்தான். ஆனால் தகவல் எதுவும் வராததால், மறு நாள் தூக்கில் போடப்படுவது உறுதி என்பதை தெரிந்து கொண்டான். யாருடனும் பேசவில்லை. இரவில் தூங்கவும் இல்லை.

அதிகாலை 04.30 மணி அளவில் ஜெயில் அதிகாரியும், போலீஸ் அதிகாரியும் அவன் இருந்த அறை பக்கம் சென் றனர். "நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டனர். அதற்கு, "மகளுக்கு கடிதம் எழுதிக்கொண்டி ருக்கிறேன்" என்று ஆட்டோ சங்கர் பதில் அளித்தான்.

பின்னர் சிறிது நேரத்தில் அவனுக்கு குடிக்க "காபி" வழங்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஆட்டோ சங்கரை தூக்கு மேடைக்கு அழைத்துச்சென்றனர். அப்போது அவன், கைதிகள் அணியும் உடையை அணிந்திருந்தான். முகம் சவரம் செய்யப்படாமல் இருந்தது. அவன் நடந்து சென்றபோது, அவனது நடையில் தளர்வோ, தள்ளாட்டமோ இல்லை. வழக்கம் போல மிடுக்காக நடந்து சென்றான்.

தூக்கு மேடையில் போய் நின்றதும், முகம் நீல நிற துணியால் மூடப்பட்டது. கை, கால்கள் கட்டப்பட்டன. கழுத்தில் தூக்கு கயிறு மாட்டப்பட்டது. தூக்கு மேடையைச் சுற்றிலும் ஜெயில் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், தாசில்தார், டாக்டர்கள் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். சரியாக அதி காலை 05.14 மணிக்கு தூக்கு மேடை அருகேயிருந்த ஒரு கருவி இயக்கப்பட்டது. ஆட்டோ சங்கர் நின்று கொண்டிருந்த பலகை விலகியது. ஆட்டோ சங்கர் தூக்கில் தொங்கினான். உயிர் பிரிந்த அந்த நேரத்திலும் கூட அவன் உடலில் துள்ளலோ, உதறலோ, அசைவுகளோ இல்லை. மரண ஓலமும் இல்லை. முக்கல், முனகலும் இல்லை. சில நிமிடங்கள் கழித்து அவன் இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதி செய்தனர். பிறகு அவன் அணிந்திருந்த ஜெயில் உடைகள் அகற்றப்பட்டு, உடலில் வெள்ளைத்துணி போர்த்தி கீழே கிடத்தப்பட்டது. 7 மணி அளவில், உடல் அவனது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆட்டோ சங்கரின் தாய் ஜெயலட்சுமி, மனைவி ஜெகதீசுவரி மற்றும் மகள் ஆகியோர் ஜெயிலுக்கு வந்திருந்தனர். ஆட்டோ சங்கரின் உடல் ஆம்புலன்ஸ் வேன் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. கோட்டூர்புரத்தில் இருக்கும் ஆட்டோ சங்கரின் தந்தை வீட்டில் உடல் வைக்கப்பட்டது. அவன் நெற்றியில் சிவப்பு, வெள்ளை நிறத்தில் நாமம் இடப்பட்டிருந்தது. மனைவி ஜெகதீசுவரியும் முழுக்க மஞ்சள் பூசிக்கொண்டு அழுது ஓய்ந்தவளாய் சோகத்தோடு அமர்ந்திருந்தாள்.

மறுநாள் கோட்டூர்புரம் மயானத்தில் ஆட்டோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. சேலம் மத்திய சிறையில் 1977ம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை வழக்கில் தந்தை மகன் ஆகிய 2 பேர் தூக்கில் போடப்பட்டனர். அதன்பிறகு 18 ஆண்டுகள் கழித்து ஆட்டோ சங்கர் தூக்கில் போடப்பட்டான்.

28ந்தேதி அதிகாலை மதுரை ஜெயிலில் எல்டினுக்கு தூக்கு நிறைவேற்றப்பட வேண்டும். அன்று காலை 4 மணிக்கு அவனுடைய அறைக்கு ஜெயில் அதிகாரிகள் சென்றபோது, அவன் தூங்காமல் கண் விழித்தபடியே இருந்தான். அதிகாரிகளைப் பார்த்ததும் அவன் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. பிறகு அவனை குளிக்கச் செய்து, கைதிகள் உடை அணிவித்து தூக்கு மேடைக்கு அழைத்து சென்றனர்.

தூக்கு போடுவதற்கு முன்பு, "உனக்கு கடைசி ஆசை ஏதாவது உண்டா?" என்று கேட்டனர். அதற்கு அவன் "என்னுடைய மனைவிக்கு அரசு உதவி செய்யவேண்டும். ஒரே மகனின் படிப்புக்கும் உதவி செய்யவேண்டும் " என்று கேட்டுக்கொண்டான்.

பிறகு 05.22 மணிக்கு தூக்கில் போடப்பட்டான். 2 நிமிடத்தில் உடல் துடிப்பு அடங்கியது. அவனுடைய உயிர் பிரிந்தது. எல்டின் உடல் அவனுடைய மனைவி சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. எல்டின் உடல் சென்னை கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு நடந்தது. ஆட்டோ சங்கரின் குடும்பம் தற்போது புயலில் சிக்கிய படகு போல தள்ளாடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையை நகர்த்த பெரும் கஷ்டப்பட்டு வருவதாக ஆட்டோ சங்கரின் மனைவி ஜெகதீசுவரி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இத்துடன் கட்டுரை முடிவடைகிறது. இந்த கட்டுரைக்காக நான் இருபக்க விமர்சனமும் பெற்றேன். காப்பி அடிக்கிறான் என்று சிலரும் ஒரு முக்கிய சம்பவத்தை நினைவுப்படுத்தியதாக பலரும் குறிப்பிட்டிருந்தனர். அது அவரவர்களுடைய எண்ணம். மற்றபடி இதுவரை இந்த தொடருக்கு ஆதரித்தோ எதிர்த்தோ பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி. இந்த தொடருக்காக நான் பரீசீலித்தவை மாலைமலரின் காலச்சுவடுகள், நக்கீரனின் மரண வாக்குமூலம் ஆனால் இது முழுக்க முழுக்க ஆட்டோ சங்கரின் சார்பாக அமைந்திருக்கும். எனவே விவரங்களை மட்டும் சேகரித்துக் கொண்டேன். என்சைக்ளோபீடியாவிலிருந்து சில கட்டுரைகள். உண்மையில் இந்த கடைசி கட்டுரையை எழுதும் போது வாழும் போது ராஜாவாக வாழ்ந்தாலும் சமநிலை தடுமாறி தவறுகள் செய்ய ஆரம்பித்தால் அவர்களது நிலை இப்படித்தான் என்று தெளிவாக புரிந்தது. எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஆட்டோ சங்கர் வாழ்க்கை ஒரு பாடம்.

12 comments:

  1. நல்லத் தொடர் அதற்குள் முடிந்து விட்டதா?

    ReplyDelete
  2. நல்ல பதிவு, வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  3. /// மயில்வாகனா said...

    நல்லத் தொடர் அதற்குள் முடிந்து விட்டதா? ///

    அதற்கென்ன அடுத்த தொடரில் சந்திப்போம்.

    ReplyDelete
  4. /// சத்தியமூர்த்தி said...

    நல்ல பதிவு, வாழ்த்துக்கள் சார். ///

    நன்றி சார்,

    நம்மளையெல்லாம் சார் போட்டு கூப்புடுறாங்கப்பா.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    இந்த புத்தகம் படித்திருக்கிறேன்.
    நன்றி.

    ReplyDelete
  7. நல்ல பதிவு ரொம்ப நளைக்கு பின் ஒரு தொடர் கட்டுரையை !தொடர்ந்து படித்தேன் ஆர்வத்துடன். நன்றி கட்டுரையாளரே.ஆட்டோ சங்கரை தெரியும்! அவன் செய்த கொலைகளை தெரியும்! அவன் யார் என்பது தெரியாது !கொலை செய்யப்பட்டவர்கள் யார் கொலைக்கானா காரணம் தெரியாது ! தெரியவைத்த பதிவருக்கு மீண்டும் நன்றி

    ReplyDelete
  8. /// Rathnavel Natarajan said...

    நல்ல பதிவு.
    இந்த புத்தகம் படித்திருக்கிறேன்.
    நன்றி. ///

    நன்றி ரத்னவேல்

    ReplyDelete
  9. /// aburumanakdnl said...

    நல்ல பதிவு ரொம்ப நளைக்கு பின் ஒரு தொடர் கட்டுரையை !தொடர்ந்து படித்தேன் ஆர்வத்துடன். நன்றி கட்டுரையாளரே.ஆட்டோ சங்கரை தெரியும்! அவன் செய்த கொலைகளை தெரியும்! அவன் யார் என்பது தெரியாது !கொலை செய்யப்பட்டவர்கள் யார் கொலைக்கானா காரணம் தெரியாது ! தெரியவைத்த பதிவருக்கு மீண்டும் நன்றி ///

    மிக்க நன்றி நண்பரே.

    ReplyDelete
  10. // வாழும் போது ராஜாவாக வாழ்ந்தாலும் சமநிலை தடுமாறி தவறுகள் செய்ய ஆரம்பித்தால் அவர்களது நிலை இப்படித்தான் என்று தெளிவாக புரிந்தது. //

    சிலர் வாழ்க்கை நமக்கெல்லாம் நல்ல பாடம்.உண்மைதான் நண்பரே.

    ReplyDelete
  11. /// FOOD NELLAI said...

    // வாழும் போது ராஜாவாக வாழ்ந்தாலும் சமநிலை தடுமாறி தவறுகள் செய்ய ஆரம்பித்தால் அவர்களது நிலை இப்படித்தான் என்று தெளிவாக புரிந்தது. //

    சிலர் வாழ்க்கை நமக்கெல்லாம் நல்ல பாடம்.உண்மைதான் நண்பரே. ///

    நன்றி சங்கரலிங்கம் அவர்களே

    ReplyDelete
  12. எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஆட்டோ சங்கர் வாழ்க்கை ஒரு பாடம்.

    உண்மை நண்பரே !

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...