சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, May 7, 2012

நான் பழைய காங்கிரஸ்காரன்.

இன்று மனதளவில் ஈழத்துரோகம் காரணமாக காங்கிரஸை தமிழ்நாட்டில் வேரறுக்க வேண்டும் என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் சிறு வயதில் விபரம் தெரிந்த காலத்திலிருந்து நான் காங்கிரஸ்காரனாக இருந்திருக்கிறேன் என்பதை எண்ணும் போது தான் ஆச்சரியமாக இருக்கிறது. ஆம், நம்புங்கள் நான் போடுங்கம்மா ஒட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று பல தேர்தல்களுக்கு கூவிக் கூவி பிரச்சாரம் செய்திருக்கிறேன்.

திருவாரூரில் எங்கள் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் மாமா ஒருவர் இருந்தார். அவர் தான் எங்கள் வார்டில் உள்ள பசங்களின் ஆதர்ச நாயகன். ஏனென்றால் தீபாவளிக்கு அவர்களது வீட்டில் தான் மிக அதிக அளவில் பட்டாசுகள் வாங்குவார்கள். அதிகளவில் என்றால் இரண்டு சாக்கு சரம், ஒரு சாக்கு உலக்கை வெடி வாங்குவார்கள்.

எங்கள் வீட்டில் என் சிறுவயதில் பட்டாசு பட்ஜெட் நூறு ரூபாயைத் தாண்டாது. இப்பொழுதும் கூட எங்கள் அப்பாவிற்கு சில ரூல்ஸ்கள் இருக்கின்றன. வீட்டிற்கு மீன் மற்றும் ஆட்டுக்கறி வாங்குவதும், தீபாவளி சமயத்தில் பட்டாசு வாங்குவதும், பொங்கல் சமயத்தில் கரும்பு வாங்குவதும் அவரது கடமையாக இன்றும் நினைக்கிறார். நானோ எனது தம்பியோ போய் வாங்கி வந்து விட்டால் அவரது உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக நினைத்து காச்மூச்சென்று கத்துவார். அதனால் நாங்கள் இவற்றினை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று கூட 300 ரூபாய்க்குள் தான் பட்டாசு இருக்கும்.

மீண்டும் கட்டுரைக்குள் வருவோம். அவரது கட்டளைக்கு அடிபணிவதற்காகவே தெருவுக்குள் 20 பேர் இருந்தனர். அவற்றில் மிகவும் ஜூனியர் நான் தான். 7வயதிலேயே தேர்தல் பிரச்சாரங்களில் போடுங்கம்மா ஓட்டு கை சின்னத்தைப் பார்த்து என்று கூவுபவன் நானாகத் தான் இருக்கும்.

காங்கிரஸை பிடிக்க ஆரம்பித்ததற்கு காரணமெல்லாம் சொல்ல முடியாது. என் மாமா காங்கிரஸில் இருந்ததால், என்னை சிறு வயதில் கட்சிக் கூட்டங்களுக்கு கூட்டிச் சென்றதால், இந்திய சுதந்திரப் போராட்டம் காங்கிரஸின் தலைமையில் நடந்தது என சொல்லக் கேட்டதால் அந்த வயதிலேயே பிடிக்க ஆரம்பித்து விட்டது.

87 காலக்கட்டங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் என் மாமா காங்கிரஸ் கட்சியின் சார்பில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டார். வார்டுக்குள் இருந்த நான்கு தெருவையும் பிரித்துக் கொண்டு காலையிலிருந்து மாலை வரை ஒவ்வொரு வீடாக புகுந்து ஒட்டு கேட்பது நோட்டீஸ் வினியோகிப்பது என பிஸியாக இருப்பேன்.

மாமா ஜெயித்ததும் காங்கிரஸின் மீது ஆர்வம் பிறந்தது. ஆனால் அந்த வயதில் சுதந்திரப் போராட்டங்கள் பற்றி படிக்க ஆரம்பித்ததும் சுதந்திரத்திற்கு முன் இருந்த காங்கிரஸ் தான் தற்போதைய காங்கிரஸ் எ நினைத்துக் கொண்டேன். அதன் பிறகு நடந்த 89 சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் 91 சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 13வது வார்டு பூத் அலுவலகத்தில் நான் தான் நிர்வாகியாக இருப்பேன்.

வருபவர்களுக்கு சட்டையில் கை சின்னம் ஸ்டிக்கரை ஒட்டி விடுவது, கை சின்னம் பேட்ஜ் மாட்டி விடுவது அவ்வப்போது ஒட்டுப்போட வரிசையில் நிற்பவர்களிடம் கை சின்னத்திற்கே ஒட்டு போடுங்கள் என்று கேன்வாஸ் செய்வது வரை நான் தான் முன்னணியில் இருப்பேன்.

ஜிகே மூப்பனார் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோருக்கு என்னை மிக நன்றாக தெரியும். அவர்கள் திருவாரூர் வரும்போது என் மாமாவிடம் யார் இவன், இந்த சிறுவயதில் சூட்டிகையாக கட்சி வேலை செய்கிறானே என்று விசாரிப்பர். என் மாமாவும் என் சொந்தக்காரப் பையன், கட்சி மீது ஆர்வம் என்று கூறுவார்.

ஆனால் கட்சியின் ஆர்வம் 14, 15 வயதில் குறைய ஆரம்பித்தது. அதுவும் இவர்களின் கோஷ்டி சண்டையை கவனிக்க ஆரம்பித்த பிறகு சுதந்திரத்திற்கு முன்பு உள்ள காங்கிரஸூக்கும் நிகழ்கால காங்கிரஸூக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. அத்துடன் காங்கிரஸூக்கு வணக்கம் சொல்லி விட்டு வந்து விட்டேன்.

ஆனால் என் மாமா அரசியல் பண்ணத் தெரியாமல் இன்றும் காங்கிஸில் கிடந்து அல்லாடுகிறார். திமுகவிலோ, அதிமுகவிலோ யாராவது இத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தால் கமிஷன், டெண்டர் என பிழைத்து பெரிய ஆளாகியிருப்பார்.

இன்று அவர் தான் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர். ஆனால் மனிதர் ஸ்கூட்டியில் தான் செல்கிறார். ரியல் எஸ்டேட்டில் தான் ஓரளவு சம்பாதிக்கிறார். அவரிடம் அரசியல் கற்றுக் கொண்ட சின்னப் பசங்களெல்லாம் மற்ற கட்சிகளில் சேர்ந்து சம்பாதித்து வீடு, கார் என செட்டிலாகி விட்டனர்.

என்றைக்குமே வில்லங்கமானவர்கள் மட்டுமே அரசியலில் பிழைக்க முடியும் போல.

ஆரூர் மூனா செந்தில்



20 comments:

  1. அண்ணா, இத்தனை நாள் உழைச்சு பிரயோஜனம் இல்லாம போயிடுச்சே, விட்டிருந்தா அண்ணா நகர்ல பிளாட் வாங்கியிருப்பியோ.

    ReplyDelete
  2. திருவாரூர் தானா நீங்க, அங்கேயே இருந்து அரசியல்ல பெரிய ஆள் ஆகியிருக்கலாம்ல. ஏம்ப்பு சென்னையில் வந்து கஷ்டப்படுறீங்க.

    ReplyDelete
  3. அரசியல்ன்னா உனக்கு சாதாரணமா போயிடுச்சா.

    ReplyDelete
  4. /// ஸ்ரீனிவாசன் said...

    அண்ணா, இத்தனை நாள் உழைச்சு பிரயோஜனம் இல்லாம போயிடுச்சே, விட்டிருந்தா அண்ணா நகர்ல பிளாட் வாங்கியிருப்பியோ. ///

    நமக்கு அவ்வளவு ஆசையெல்லாம் இல்லைங்கண்ணா. கன்னியாக்குமரிக்கு தெற்கே கொடுத்தாலும் வாங்கிக்குவோம். நாங்க அவ்வளவு அப்பாவிங்க.

    ReplyDelete
  5. /// மயில்வாகனா said...

    திருவாரூர் தானா நீங்க, அங்கேயே இருந்து அரசியல்ல பெரிய ஆள் ஆகியிருக்கலாம்ல. ஏம்ப்பு சென்னையில் வந்து கஷ்டப்படுறீங்க. ///

    ஆமாங்கண்ணா நீங்க எந்த ஊருங்கண்ணா, நான் அங்கேயே இருந்தா வெளங்காம போயிருப்பேன்ணா.

    ReplyDelete
  6. /// தஞ்சை குமணன் said...

    அரசியல்ன்னா உனக்கு சாதாரணமா போயிடுச்சா. ///

    ஏம்ப்பா உனக்கு அரசியல்னா அவ்வளவு பெரிசா?

    ReplyDelete
  7. நேர்மையைக் கடைபிடித்து தோற்றவர்கள் இல்லை, நண்பரே.

    ReplyDelete
  8. /// FOOD NELLAI said...

    நேர்மையைக் கடைபிடித்து தோற்றவர்கள் இல்லை, நண்பரே. ///

    சரியான வார்த்தை அய்யா.

    ReplyDelete
  9. இன்னமும் காங்கிரஸ் என்று சொன்னால் மக்கள் கல்லால் அடிக்காமல் இருப்பதற்கு காரணம் இவர் போன்ற பழைய காங்கிரசு காரர்களே...
    அவர்களில் இன்னும் நிறைய பேர் காங்கிரசில் இருக்கின்றனர், பலர் ஜனதா, ஜனதா தளம் , பா.ஜா என போய்விட்டனர். வாழப்பாடி இருக்கும் வரை நன்றாகத்தான் இருந்தது. மத்திய தலைமையை கேள்விகேட்க , எதிர்த்து போர்க்கொடி உயர்த்த , சொந்த செல்வாக்கில் தனித்து நின்று ஓட்டு வாங்க முதுகெலும்புள்ள தைரியமான தலைமை(காமராசர்,வாழப்பாடி,மூப்பனார் போல் )தற்போது தமில்நாட்டிலில்லை. அது தான் ஈழப்பிரச்சினை வரை அனைத்து அநீதிகளுக்கும் காரணமானது.

    ReplyDelete
  10. /// vivek kayamozhi said...

    இன்னமும் காங்கிரஸ் என்று சொன்னால் மக்கள் கல்லால் அடிக்காமல் இருப்பதற்கு காரணம் இவர் போன்ற பழைய காங்கிரசு காரர்களே...
    அவர்களில் இன்னும் நிறைய பேர் காங்கிரசில் இருக்கின்றனர், பலர் ஜனதா, ஜனதா தளம் , பா.ஜா என போய்விட்டனர். வாழப்பாடி இருக்கும் வரை நன்றாகத்தான் இருந்தது. மத்திய தலைமையை கேள்விகேட்க , எதிர்த்து போர்க்கொடி உயர்த்த , சொந்த செல்வாக்கில் தனித்து நின்று ஓட்டு வாங்க முதுகெலும்புள்ள தைரியமான தலைமை(காமராசர்,வாழப்பாடி,மூப்பனார் போல் )தற்போது தமில்நாட்டிலில்லை. அது தான் ஈழப்பிரச்சினை வரை அனைத்து அநீதிகளுக்கும் காரணமானது. ///

    உண்மையைத்தான் சொல்லியுள்ளீர்கள். மூப்பனார் மற்றும் வாழப்பாடி இருந்த வரை காங்கிரஸூக்கு தமிழ்நாட்டில் ஒரு மரியாதை இருந்தது. தற்போது மானம் கூட இல்லை.

    ReplyDelete
  11. //அதன் பிறகு நடந்த 89 சட்டசபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் 91 சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்களில் 13வது வார்டு பூத் அலுவலகத்தில் நான் தான் நிர்வாகியாக இருப்பேன்.

    வருபவர்களுக்கு சட்டையில் கை சின்னம் ஸ்டிக்கரை ஒட்டி விடுவது, கை சின்னம் பேட்ஜ் மாட்டி விடுவது அவ்வப்போது ஒட்டுப்போட வரிசையில் நிற்பவர்களிடம் கை சின்னத்திற்கே ஒட்டு போடுங்கள் என்று கேன்வாஸ் செய்வது வரை நான் தான் முன்னணியில் இருப்பேன்.//

    மூனா,

    இது போன்ற பள்ளிக்கால அனுபவங்கள் நமக்கும் உண்டு. ஆனா நீங்க சொல்வது கொஞ்சம் ஓவெரா இருக்கு.

    பூத்துக்கு 100 மீட்டர் வட்டத்துக்குள் சின்னமோ,பிரச்சாரமோ செய்ய முடியாது, அப்படி இருக்கும் போது பூத்தில் வரிசையில் நிற்பவர்களிடம் சின்னம் குத்தினேன், ஓட்டுப்போட கேன்வாஸ் செய்தேன் என சொல்வது எப்படி :-))

    ReplyDelete
  12. /// வவ்வால் said...

    மூனா,

    இது போன்ற பள்ளிக்கால அனுபவங்கள் நமக்கும் உண்டு. ஆனா நீங்க சொல்வது கொஞ்சம் ஓவெரா இருக்கு.

    பூத்துக்கு 100 மீட்டர் வட்டத்துக்குள் சின்னமோ,பிரச்சாரமோ செய்ய முடியாது, அப்படி இருக்கும் போது பூத்தில் வரிசையில் நிற்பவர்களிடம் சின்னம் குத்தினேன், ஓட்டுப்போட கேன்வாஸ் செய்தேன் என சொல்வது எப்படி :-)) ///

    நீங்கள் வரலாறை சரியாக அணுகவில்லை என்று நினைக்கிறேன். 1996 ம் ஆண்டிற்கு பிறகு தான் அதாவது டிஎன் சேஷன் காலத்திற்கு பிறகு தான் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. அதற்கு முன்பு அவ்வாறு கிடையாது. கேன்வாசிங் மற்றும் ஸ்டிக்கர் ஒட்டுதல் மட்டுமின்றி உடலநலம் சரியில்லாத பெரியவர்களை கட்டிலில் படுக்க வைத்து தூக்கி வந்து கணக்கு காட்டி அவருக்கு பதிலாக ஒட்டுப் போடுவதும் நடக்கும்.

    தற்போது எல்லாம் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரமே கிடையாது. அப்போதெல்லாம் முக்கிய தலைவர்கள் பிரச்சாரத்திற்கு வருவதே நடுராத்திரியில் தான் இருக்கும்.

    நான் சொன்னதில் சிறிதளவு கூட கற்பனையில்லை, அனைத்தும் உண்மை.

    ReplyDelete
  13. திருவாரூர் தானா நீங்க, அங்கேயே இருந்து அரசியல்ல பெரிய ஆள் ஆகியிருக்கலாம்ல. ஏம்ப்பு சென்னையில் வந்து கஷ்டப்படுறீங்க. ///

    ஆமாங்கண்ணா நீங்க எந்த ஊருங்கண்ணா, நான் அங்கேயே இருந்தா வெளங்காம போயிருப்பேன்ணா.//////

    இப்ப மட்டும் என்னாவாம்....
    பிளாக்கர் ஆகிட்டில்ல.......

    ReplyDelete
  14. /// NAAI-NAKKS said...


    ஆமாங்கண்ணா நீங்க எந்த ஊருங்கண்ணா, நான் அங்கேயே இருந்தா வெளங்காம போயிருப்பேன்ணா.//////

    இப்ப மட்டும் என்னாவாம்....
    பிளாக்கர் ஆகிட்டில்ல....... ///

    ஆமாங்கண்ணா, உங்க கூட சேர்ந்ததுக்கப்புறம் வெளங்க முடியுங்களாண்ணா.

    ReplyDelete
  15. பாடப்புத்தகத்தில் படித்த காங்கிரசுக்கும் நிஜ காங்கிரசுக்கும் பல வித்தியாசம் என்பது எனக்கு பல வருடங்களுக்குப் பின்பு தான் தெரிந்தது. உங்க சிறு வயது அனுபவத்தை சுவை பட எழுதி உளீர்கள் அருமை


    சென்னை சிங்காரச் சென்னை

    ReplyDelete
  16. /// seenuguru said...

    பாடப்புத்தகத்தில் படித்த காங்கிரசுக்கும் நிஜ காங்கிரசுக்கும் பல வித்தியாசம் என்பது எனக்கு பல வருடங்களுக்குப் பின்பு தான் தெரிந்தது. உங்க சிறு வயது அனுபவத்தை சுவை பட எழுதி உளீர்கள் அருமை ///

    நன்றி சீனுகுரு

    ReplyDelete
  17. எல்லாருக்கும் சின்ன வயசுல ஒரு ஈடுபாடு இருக்கும் கொள்கையில்லாம அண்ணன் அப்பா இவர்கள் இருக்கும் கட்சியில் ஈடுபாடு இருக்கும் வளர்ந்த பிறகு நாம இந்த கட்சியிலா இருந்தோம் என நம்மளை நாமளே நாமே தலையில் குட்டிக்கொள்வோம்....

    ReplyDelete
  18. கை சின்னத்திற்கும் காமராஜருக்கும் இம்மியளவுகூட சம்மந்தம் கிடையாது,அதேபோல் காங்கிரஸ்-ஐ இந்திராவிடம் அடகுவைத்த மூப்பனாருக்கும் காமராஜருக்கும் சம்மந்தம் கிடையாது.

    ReplyDelete
  19. /// வீடு சுரேஸ்குமார் said...

    எல்லாருக்கும் சின்ன வயசுல ஒரு ஈடுபாடு இருக்கும் கொள்கையில்லாம அண்ணன் அப்பா இவர்கள் இருக்கும் கட்சியில் ஈடுபாடு இருக்கும் வளர்ந்த பிறகு நாம இந்த கட்சியிலா இருந்தோம் என நம்மளை நாமளே நாமே தலையில் குட்டிக்கொள்வோம்.... ///

    அப்படி யோசித்ததன் விளைவு தான் இந்த பதிவே சுரேஷ்.

    ReplyDelete
  20. /// vizzy said...

    கை சின்னத்திற்கும் காமராஜருக்கும் இம்மியளவுகூட சம்மந்தம் கிடையாது,அதேபோல் காங்கிரஸ்-ஐ இந்திராவிடம் அடகுவைத்த மூப்பனாருக்கும் காமராஜருக்கும் சம்மந்தம் கிடையாது. ///

    எல்லாம் சரிங்கண்ணா, ஆனா 10 வயசுல விவரம் பத்தாதுல்ல.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...