தினமணி கதிரில் நேற்று நமது தோத்தவண்டா வலைத்தளத்தைப் பற்றி அறிமுகம் வந்து இருந்தது. தீபாவளிக்கு முன்பு தோழர் மபா அலைபேசியில் அழைத்து தீபாவளிக்கு தினமணிக்காக தீபாவளி மலர் தயாராகிறது என்றும், அதற்காக வலைத்தளத்தின் விவரங்களை அனுப்பச் சொல்லி கேட்டார்.
பிறகு தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரசுக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார். அதன் பிறகு அந்த அறிமுகம் தினமணி கதிரில் வெளியாகியுள்ளது. வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்ற பதிவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால் இணையம் என்பதும் எழுத்து என்பதும் நமக்கு தொழில்முறையாகவோ விருப்பமிகுதியாலோ அறிமுகமாகவில்லை.
பதிவர்களில் மிகப் பெரும்பாலானோர் எழுத்துத்துறை, சினிமாத்துறை, பத்திரிக்கைத்துறை மற்றும் கணினி சார்ந்த வேலைகளில் இருக்கின்றனர். நமக்கு அந்த கொடுப்பினையும் வாய்ப்பும் இல்லை.
2009 வாக்கில் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்கள் வாங்கி படித்து அலுத்துப் போன பிறகு ஒரு வாரப் பத்திரிக்கையில் இணையத்திலும் புத்தகங்களை படிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. அதனை வைத்து எனக்கு உள்ள சிற்றறிவை வைத்து தேடி கண்டுபிடிக்கவே ஒரு மாதம் ஆனது.
பிறகு ப்ளாக்ஸ்பாட் பக்கம் வந்து பதிவுகளை படித்து மற்றவர்களின் எழுத்துக்கள் மக்களால் படிக்கப்படுவதை பார்த்து ஆசைப்பட்டு நானும் ஒரு வலைத்தளத்தை தட்டுத்தடுமாறி ஆரம்பித்து வைத்தேன். ஆனால் அதில் என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை.
மற்ற பதிவர்களின் சினிமா விமர்சனங்கள் பெரிதாக கவனிக்கப்படுவதை அறிந்து நானும் ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதலாம் என்று ஆசைப்பட்டு போன படம் டீஸ்மார்கான். அக்ஷய் குமார், காத்ரினா கைப் நடித்த அந்த படத்தினை பார்த்து விட்டு வந்து இரண்டு மணிநேரம் முயற்சித்து என்னால் ஒரு பாரா மட்டுமே அடிக்க முடிந்தது.
இன்றும் என் வலைத்தளத்தில் அந்த பதிவு இருக்கிறது. இப்போது எனக்கு பொழுது போகாத போது அதனை படித்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன். பிறகு தட்டுத்தடுமாறி எழுத முயற்சித்து எழுதவும் வராமல் எங்கோ படித்த விஷயங்களை எழுதி பதிவில் போட்டுப் பார்த்துக் கொள்வேன்.
படிப்படியாக பதிவர்களின் தனித்துவம், திரட்டிகள், ஓட்டு, சம்பிரதாய பின்னுட்டங்கள், குழு சச்சரவுகள் என அறிந்து சரியோ தப்போ சொந்தமாக எழுதுவது தான் சரி என்று மொக்கையாக இருந்தாலும் இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
நமக்கு வழிகாட்டி என சொல்லிக் கொள்வது போல் ஒருவரும் இல்லையே என்பது தான் சற்று வருத்தமாக இருக்கு. எந்த எழுத்தாளர்களின் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் சிரமப்படுகிறேன்.
எப்படி மேடு பள்ளங்கள் வைத்து எழுதினாலும் மற்றவர்களின் சாயல் வந்து விடுகிறது. அதற்காக ப்ளெய்னாக எழுதி எனக்கென ஒரு பாணி அமைக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். படிப்பவர்கள் தான் குறையை சொல்ல வேண்டும். திருத்திக் கொள்கிறேன்.
இருந்தாலும் இப்ப நாமே சொந்தமாக ஆசிரமம் அமைத்து பதிவுலக நண்பர்களுடன் கலந்து கட்டி மகாதியானம் செய்யும் அளவுக்கு நண்பர்களை பெற்றிருப்பது சந்தோஷமே.
இப்போது சொந்த அலுவல் காரணமாக அடிக்கடி எழுத முடியவில்லை. இது போன்ற சமயத்தில் இந்த ஊக்கம் இன்னும் நான் தரமாக எழுத முயற்சிக்க வேண்டும் என்று மண்டையில் கொட்டுகிறது.
வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.
ஆரூர் மூனா



















