சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, December 16, 2013

தினமணியில் நமது வலைப்பதிவு பற்றிய அறிமுகம்

தினமணி கதிரில் நேற்று நமது தோத்தவண்டா வலைத்தளத்தைப் பற்றி அறிமுகம் வந்து இருந்தது. தீபாவளிக்கு முன்பு தோழர் மபா அலைபேசியில் அழைத்து தீபாவளிக்கு தினமணிக்காக தீபாவளி மலர் தயாராகிறது என்றும், அதற்காக வலைத்தளத்தின் விவரங்களை அனுப்பச் சொல்லி கேட்டார். 



பிறகு தவிர்க்க முடியாத காரணங்களினால் பிரசுக்க இயலவில்லை என்றும் தெரிவித்தார். அதன் பிறகு அந்த அறிமுகம் தினமணி கதிரில் வெளியாகியுள்ளது. வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் வாழ்த்துக்கள். 

மற்ற பதிவர்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் என்றால் இணையம் என்பதும் எழுத்து என்பதும் நமக்கு தொழில்முறையாகவோ விருப்பமிகுதியாலோ அறிமுகமாகவில்லை.

பதிவர்களில் மிகப் பெரும்பாலானோர் எழுத்துத்துறை, சினிமாத்துறை, பத்திரிக்கைத்துறை மற்றும் கணினி சார்ந்த வேலைகளில் இருக்கின்றனர். நமக்கு அந்த கொடுப்பினையும் வாய்ப்பும் இல்லை. 

2009 வாக்கில் தமிழில் எழுதப்பட்ட புத்தகங்கள் வாங்கி படித்து அலுத்துப் போன பிறகு ஒரு வாரப் பத்திரிக்கையில் இணையத்திலும் புத்தகங்களை படிக்கலாம் என்று குறிப்பிட்டு இருந்தது. அதனை வைத்து எனக்கு உள்ள சிற்றறிவை வைத்து தேடி கண்டுபிடிக்கவே ஒரு மாதம் ஆனது.

பிறகு ப்ளாக்ஸ்பாட் பக்கம் வந்து பதிவுகளை படித்து மற்றவர்களின் எழுத்துக்கள் மக்களால் படிக்கப்படுவதை பார்த்து ஆசைப்பட்டு நானும் ஒரு வலைத்தளத்தை தட்டுத்தடுமாறி ஆரம்பித்து வைத்தேன். ஆனால் அதில் என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. 

மற்ற பதிவர்களின் சினிமா விமர்சனங்கள் பெரிதாக கவனிக்கப்படுவதை அறிந்து நானும் ஒரு சினிமாவுக்கு விமர்சனம் எழுதலாம் என்று ஆசைப்பட்டு போன படம் டீஸ்மார்கான். அக்ஷய் குமார், காத்ரினா கைப் நடித்த அந்த படத்தினை பார்த்து விட்டு வந்து இரண்டு மணிநேரம் முயற்சித்து என்னால் ஒரு பாரா மட்டுமே அடிக்க முடிந்தது. 

இன்றும் என் வலைத்தளத்தில் அந்த பதிவு இருக்கிறது. இப்போது எனக்கு பொழுது போகாத போது அதனை படித்துப் பார்த்து சிரித்துக் கொள்வேன். பிறகு தட்டுத்தடுமாறி எழுத முயற்சித்து எழுதவும் வராமல் எங்கோ படித்த விஷயங்களை எழுதி பதிவில் போட்டுப் பார்த்துக் கொள்வேன்.

படிப்படியாக பதிவர்களின் தனித்துவம், திரட்டிகள், ஓட்டு, சம்பிரதாய பின்னுட்டங்கள், குழு சச்சரவுகள் என அறிந்து சரியோ தப்போ சொந்தமாக எழுதுவது தான் சரி என்று மொக்கையாக இருந்தாலும் இப்போது எழுதிக் கொண்டு இருக்கிறேன். 

நமக்கு வழிகாட்டி என சொல்லிக் கொள்வது போல் ஒருவரும் இல்லையே என்பது தான் சற்று வருத்தமாக இருக்கு. எந்த எழுத்தாளர்களின் சாயல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று தான் சிரமப்படுகிறேன். 

எப்படி மேடு பள்ளங்கள் வைத்து எழுதினாலும் மற்றவர்களின் சாயல் வந்து விடுகிறது. அதற்காக ப்ளெய்னாக எழுதி எனக்கென ஒரு பாணி அமைக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறேன். படிப்பவர்கள் தான் குறையை சொல்ல வேண்டும். திருத்திக் கொள்கிறேன்.

இருந்தாலும் இப்ப நாமே சொந்தமாக ஆசிரமம் அமைத்து பதிவுலக நண்பர்களுடன் கலந்து கட்டி மகாதியானம் செய்யும் அளவுக்கு நண்பர்களை பெற்றிருப்பது சந்தோஷமே.

இப்போது சொந்த அலுவல் காரணமாக அடிக்கடி எழுத முடியவில்லை. இது போன்ற சமயத்தில் இந்த ஊக்கம் இன்னும் நான் தரமாக எழுத முயற்சிக்க வேண்டும் என்று மண்டையில் கொட்டுகிறது.

வாழ்த்திய நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா

Friday, December 13, 2013

இவன் வேற மாதிரி - சினிமா விமர்சனம்

இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாக சுவாரஸ்யம் குறையாமல் சீட்நுனியில் அமர்ந்து பார்த்து ரசிக்க ஆசை உண்டெனில் தயவு செய்து இந்த இடத்துடன் இந்த பதிவை மூடி வைத்து விட்டு வேறுவேலை பார்க்கச் செல்லவும். இப்போதைக்கு படம் பார்க்கும் எண்ணம் இல்லையெனில் மேற்கொண்டு படிக்கவும். இந்த படத்தின் எல்லா விமர்சனத்திற்கும் இந்த கருத்து பொருந்தும்.


நான் கூட காலையில் நண்பர் செங்கோவியின் விமர்சனத்தை படித்து விட்டே சினிமாவுக்கு சென்றேன். என்னுடன் பார்த்து ரசித்த மற்றவர்களை விட எனக்கு சுவாரஸ்யம் ஒரு மாற்று குறைவாகத்தான் கிடைத்தது.

ரொம்ப நாட்களாக தமிழ்சினிமா கையில் வைத்து இருந்த இடையில் மறந்திருந்த எம்ஜிஆர் காலத்து நாயகன். அது ஒன்னுமில்லீங்க சமுதாயத்துக்கு நல்லது செய்ய நினைக்கும் நாயகன்.

தனக்கு சம்பந்தமேயில்லாத ஆனால் நாட்டினை சிறுமைப்படுத்தும் சமூகத்தின் கேடு ஒன்றினை புத்திசாலித்தனத்துடன் களைகிறார். அந்த நேரம் பார்த்து எனக்கு உச்சா வந்ததால் திரையரங்கில் இடைவேளை விடுகிறார்கள். 


இடைவேளைக்கு பிறகு அந்த  சமூகத்தின் கேடு நாயகனிடம் விளையாட்டு காட்டி வம்பு வளர்க்கிறது. கடைசியில் நாயகனிடம் வழக்கம் போல அடி வாங்கி செத்து மடிகிறது. படம் ஆரம்பித்து இரண்டரை மணிநேரம் ஆனதாலும் எனக்கு பசி வந்து விட்டதாலும் அத்துடன் படத்தை முடித்து நம்மை அனுப்பி வைக்கிறார்கள்.

இதுக்கு மேல வௌக்குனா உங்களுக்கு சுவாரஸ்யம் போயிடும் மக்கா. 


படம் மிகச்சிறந்த எண்டர்டெயினர். அதில் சந்தேகமே வேண்டாம். ஆரம்பம் முதல் முடிவு வரை டெம்போவை குறைக்காமல் கொண்டு சென்றதிலேயே இயக்குனர் வெற்றி பெற்று விடுகிறார்.

இயக்குனர் சரவணன் முதல் படமாக இயக்கியது தெலுகில் கணேஷ். படம் பிளாப். இரண்டாவது தான் எஙகேயும் எப்போதும். அதனால் இந்த படத்திற்குரிய எதிர்பார்ப்பு எனக்கு சற்று குறைவாகத்தான் இருந்தது.
 
என் எண்ணம் எல்லாத்தையும் படம் அடித்து நொறுக்கி விட்டது. மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

தெலுகில் முதல் படத்திலும் இரண்டாவது படத்திலும் வாரிசு நடிகர்களான என்டிஆர், ராம்சரண் ஆகியோரின் அறிமுகக் காட்சியினை பார்த்து மிரண்டு போய் கொளப்பாக்கம் முனீஸ்வரன் கோயில் பூசாரியிடம் மந்திரித்து விட்டு வந்தவன் நான். 

ஆனால் இந்த படத்தில் விக்ரம் பிரபுவின் அறிமுகக் காட்சியில் எதார்த்தத்தை கண்டு வியந்து தான் போனேன். அந்த ஹீரோயிசம் இல்லாத எளிமையை படம் முழுதும் கண்டேன், ரசித்தேன்.

சுரபி ஒரு டெல்லி குல்பி. அப்படியே ப்ரெஷ்ஷாக இருக்கிறார். நான் வேண்டிக் கொள்வது எல்லாம் இந்த பொண்ணு தெலுகு பக்கம் போயிடக் கூடாதுன்னு தான். 

இப்படித்தான் மாஸ்கோவின் காவிரி படத்தில் ஒரு பொண்ணு பார்க்க செம செம செம பிகராக இருந்தது. தமிழில் கவனிக்கப்படாமல் தெலுகு பக்கம் போய் அவர்களின் வில்லங்க ட்ரீட்மெண்ட்டால் வத்திப் போய் வசீகரம் இழந்து முன்னணி நாயகி என்ற நிலையை அடைந்தார். வேறு யாருமல்ல சமந்தா தான் அவர்.

நாயகி சென்னையிலேயே தங்கி தமிழ் படங்களில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக ஆக அருள் புரிவாய் கருணைக்கடலே. 

வம்சி கிருஷ்ணா தெலுகில் பல வருடங்களாக அடியாள் பாத்திரத்தில் வந்து பிறகு சின்ன சின்ன வில்லன் கதா பாத்திரங்களில் நடித்து முன்னணி வில்லனாக ப்ரமோட் ஆகியவர். தமிழில் தடையற தாக்க படத்திற்கு பிறகு கிடைத்த இந்த வாய்ப்பை பிரமாதமான பெர்பார்மன்ஸ் மூலம் தக்க வைத்துள்ளார்.

படத்தின் பாடல்களில் ஒன்றைத் தவிர மற்றதெல்லாம் மான்டேஜ் ஆக இருப்பது நன்றாகவே இருக்கிறது. இசையும், பின்னணி இசையும் ரசிக்கும் படியே இருக்கின்றன. 

கயிறு கட்டி பறந்து பறந்து அடிக்கும் ஆக்சன் காட்சிகள் போல் அல்லாமல் இயல்பாக சண்டைக் காட்சிகள் அமைத்துக் கொடுத்த ஸ்டண்ட் மாஸ்டருக்கு வாழ்த்துக்கள்.

அந்த காதல் போர்ஷன் வெகு இயல்பாக ரசிக்கும் படி இருக்கிறது. நாயகியை விட நாயகியின் தங்கையாக வருபவர் முகத்தில் அதிக எக்ஸ்பிரசன்களை கொடுக்கிறார். நல்ல எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். 

அது போல் படத்தின் ஒவ்வொரு காதல் காட்சியிலும் படத்தின் வேறொரு சம்பவத்தின் லிங்கை வைத்து பாதிக்கு பிறகு ஒவ்வொன்றாக இணைப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது.

மொத்தத்தில் ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு. உங்களுக்கும் தான். 

ஆரூர் மூனா

Friday, December 6, 2013

கல்யாண சமையல் சாதம் - சினிமா விமர்சனம்

எப்போதுமே அடிதடி க்ரைம் மசாலா படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறோமே இந்த முறையாவது ஒரு நீட் அண்ட் க்ளீன் மூவியாக போவோம் என்று முடிவு செய்து கல்யாண சமையல் சாதம் படத்தை தேர்வு செய்தேன். ஆனால் அது எவ்வளவு தப்பு என்பதை படம் போட்ட பத்து நிமிடத்தில் தெரிந்து விட்டது.


பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக பார்ப்பனர்களை வைத்து பார்ப்பனிய திருமணத்தை சார்ந்து வில்லங்க கதைக்கருவுடன் எடுக்கப்பட்ட பார்ப்பணீய திரைப்படம் கல்யாண சமையல் சாதம்.

படம் துவங்கியவுடன் ஒரு அக்மார்க் மாடர்ன் அய்யர் வீட்டுக்குள் நுழைந்த மாதிரி தோன்றியது. படம் முடியும் வரை அந்த பீல் போகவேயில்லை. ஏனப்பா இந்த கதைக்கருவுக்கு உங்களுக்கு எப்படி பார்ப்பனர்களை பின்புலமாக வைத்து எடுத்து அவர்களை கேவலப்படுத்த வேண்டும் என்று தோன்றியது.


நல்ல அய்யர் வீட்டு பையன் பிரசன்னாவுக்கும் நல்ல அய்யர் வீட்டு பொண்ணு லேகாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என பேஸ்புக் டிவிட்டர் ப்ளாக் கலந்து கட்டி எல்லாவற்றிலும் தங்களது புரிதலை வளர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு ஒரு நல்ல நாளில் இருவரும் சரக்கடித்து (நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்) ஒன்று சேர முற்படுகின்றனர். அந்த நேரம் பார்த்து நாயகனுக்கு தற்காலிக எழுச்சியின்மை ஏற்படுகிறது.


இதனை தவறாக நினைக்காத நாயகியும் ஜஸ்ட் லைக் தட் (என்ன கொடுமை இது) எடுத்துக் கொள்கிறார். நாயகன் தன் உதவாக்கரை நண்பர்களுடன் கண்ட இடங்களுக்கு சென்று மருத்துவம் பார்க்க நினைக்கிறார். 

சில பல கலாட்டாக்களுக்கு பிறகு நாயகனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை வெறும் மன அழுத்தம் தான் என்று தெரிய வர சுமூகமாக திருமணம் நடைபெறுகிறது.

நான் மட்டும் சென்சார் போர்டு அதிகாரியாக இருந்திருந்தால் படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுத்து இருப்பேன். பொதுவாக ஆச்சாரம் அனுஷ்டானம் பார்க்கும் ஒரு இனத்திற்கு இப்போது சரக்கடிப்பதும் கல்யாணத்திற்கு முன்பு சேர நினைப்பதும் சகஜமான ஒன்று என்று கதையின் போக்கு இருப்பதால் தான் இந்த முடிவு

இந்த படத்திற்கு எத்தனை பார்ப்பனர் இயக்கங்கள் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கப் போகின்றனவோ.

பிரசன்னா 5ஸ்டார் படம் முதல் கண்ட நாள் முதல் படம் வரை எனக்கு மிகவும் பிடித்த நடிகர். அவரின் இயல்பான நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் இயக்கம் என்று வரும் போது சாரி பிரசன்னா, நீங்க அதை கை கழுவி விடுவது தான் அதற்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

படத்தில் நடித்துள்ள டெல்லிகணேஷ், ராகவ், உமா பத்மநாபன், கீதாரவிசங்கர், க்ரேஸி மோகன், நீலு, பிரசன்னாவின் நண்பர்கள் என எல்லாம் பிராமணர்கள் தான்.

லேகா வாஷிங்டன் மட்டுமே எனக்கு படத்தில் கிடைத்த ஆறுதல். 

பாடல்கள் எல்லாம் சொல்லிக் கொள்வது போல் இல்லை.

சர்வசாதாரணமாக ஆபாச வார்த்தைகளையும் பொதுவில் பேச தயங்கும் வார்த்தைகளையும் ஆங்கிலத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பேசுகின்றனர். என்ன நடக்குதுன்னு தான் புரியலை.

படம் நகைச்சுவை படமாகத்தான் இருக்கும் என நினைத்து சென்றேன். அவரும் அதை நினைத்து தான் இயக்கியிருக்கிறார். ஆனால் எனக்கு படம் முடியும் வரை ஒரு புன்முறுவல் கூட வரவில்லை என்பது தான் சோகம்.

நாயகி கோவப்பட்டு நாயகனை போடா உஸ் என்று திட்டுகிறார். நாயகன் சில மணிநேர முறைப்புகளுக்கு பிறகு ஒன்றுமே சொல்லாமல் நாயகியை கட்டிக் கொள்கிறார். வாழ்க தமிழ் சினிமா.

வைதேகி காத்திருந்தாள் படத்தில் ஒரு வசனம் வரும், "போங்கடி நீங்களும் உங்க கல்யாணமும்." - இது தான் இந்த படத்திற்கான கமெண்ட்.

ஆரூர் மூனா

Thursday, December 5, 2013

பஞ்சேந்திரியா - தேவிலாலின் சாதுர்யம் மற்றும் புத்தக கண்காட்சி

மக்களின் அறியாமையினை ஒரு நபர் எந்த அளவுக்கு பயன்படுத்தி வாழ்க்கையில் உயர முடியும் என்பதற்கு உதாரணம் ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமருமான தேவிலால்.
இவர் அரியானா மாநிலத்தின் பெருமான்மையினமான சாட் இனத்தை சேர்ந்தவர். இதனால் அந்த இனமக்கள் தேவிலாலை தங்களது பெருந்தலைவராக கருதினார்கள். சாட் இனத்தினர் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டவர்கள். எனவே தேவிலால் விவசாயிகளுக்கு குரல் கொடுக்கும் முக்கிய தலைவராகவும் திகழ்ந்து வந்தார்.
அரியானா மாநிலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்த அவர் பலமுறை அங்கு முதல்-மந்திரியாக இருந்துள்ளார். 1989-ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது அரியானா முதல்-மந்திரியாக இருந்த தேவிலால் துணைப் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
விவசாயிகள் நிறைந்த ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் உணர்ச்சிவசப்பட்டு பேசி மக்களை ஒரு நிலையில் நிறுத்தி விட்டு உரையாற்றியதன் சாராம்சம்.

"நமது மாநிலம் இதற்கு முன்பாக பசுமையோடு இருந்தது. ஆனால் பாருங்கள் இப்போது வறண்டு போய் காணப்படுகிறது. இதனால் நம் மக்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா,"

மக்கள் : தெரியாது, தெரியாது

"மத்திய அரசாங்கம் அணைக்கட்டில் தண்ணீரை தேக்கி வைக்கிறது. அந்த நீரைப் பயன்படுத்தி மின்சாரத்தை எடுத்து விட்டு பிறகு வெறும் சக்கை நீரை மட்டும் நமக்கு தருகிறது. அந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் பார்த்தால் விவசாயம் எப்படி செழிப்பாக நடைபெறும்."

அவ்வளவு தான் மறுநாள் அத்தனை விவசாயிகளும் கடப்பாறை மண்வெட்டி சகிதம் அணைக்கட்டை உடைக்க கிளம்பி விட்டார்கள். 

வாழ்க ஜனநாயகம்

------------------------------------------------------


-----------------------------------------------

என் தெலுகு நண்பர் சொல்லக் கேட்டது. 

ஆந்திராவில் நடந்த ஒரு வேடிக்கையான சம்பவம். தெனாலி என்ற நகரில் கடந்த 27 வருடங்களாக காந்தி சிலை ஒரு இருந்து வந்தது. போன வருடம் அந்த சிலைக்கு மிக அருகில் ஒரு மதுபானக்கடை துவக்கப்பட்டது. 

முதலில் சாதாரணமாக இருந்த இந்த விஷயம் ஒரு காந்தியவாதியின் முயற்சியால் சிறிது சிறிதாக மக்களின் கவனம் பெற்று பெருதரப்பட்ட மக்களின் அதிருப்திக்கு ஆளானது.

போராட்டம் பெரிதாக வெடித்து கடையடைப்பு பேருந்துகள் மறியல் என கலவரமானது, விஷயத்தை கவனிக்க அந்த இடத்திற்கு கலெக்டர் வந்தார். மக்களின் கோரிக்கைகளை கவனமாக கேட்டு அறிந்தார். பிறகு மக்களிடம் இந்த விஷயத்திற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதியளித்து கிளம்பி விட்டார். 

சில நாட்களில் கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் மாற்றப்பட்டது. 

சற்று தள்ளி இருந்த பள்ளி மைதானத்திற்கு மாற்றப்பட்டது மதுபானக்கடை இல்லை. காந்தி சிலை.

வாழ்க ஜனநாயகம்.

-------------------------------------------------

------------------------------------------------

அதோ இதோவென்று புத்தக கண்காட்சி நெருங்கி விட்டது, புத்தகங்கள் வாங்குவதற்கென பட்ஜெட்டும் ஒதுக்கியாச்சி. ஆனால் பாருங்கள் நான் வாங்க வேண்டுமென நினைத்த அனைத்து புத்தகங்களையும் வாங்கியாச்சி, அருமையான கிளாசிக் புத்தகங்கள் உட்பட. அனைத்தையும் படித்து அடுக்கியும் வைச்சாச்சி.

இப்போது வாங்க என்னிடம் பட்டியல் ஏதும் இல்லை. படிக்க இன்ட்ரட்டிங்காக இருக்கும் புத்தகங்களின் விவரங்களை இணையத்தில் இருந்து எடுத்தாலும் வாங்கிய பின் சொதப்பி விடுமோ என சந்தேகம் வேறு இருக்கிறது.

பெரியாரின் அனைத்து புத்தகங்களும், சுஜாதாவின் ஏறக்குறைய அனைத்து புத்தகங்களும், சாண்டில்யன், கல்கி, சுந்தர ராமசாமி, தி.ஜா ஆகியோர்களின் அனைத்து புத்தகங்களும் கைவசம் இருக்கிறது. சாரு, ஜெமோ கூட தான்.

இது தவிர தாங்கள் படித்த சிறந்த புத்தகங்களின் பட்டியலை என்னிடம் பகிர்ந்தால் இந்த ஆண்டு வாங்க உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி

ஆரூர் மூனா

Tuesday, December 3, 2013

உடம்பை குறைப்பது எப்படி

அதிகாலையில் எழுந்ததும் முதல்நாள் ஊற வைத்த கொண்டைக்கடலையை தின்று விட்டு ரெண்டு பச்சை முட்டையை அலேக்காக தலையில் தட்டி லபக்கென வாயில் கவிழ்த்து கிரவுண்ட்ல .............................

தலைப்பை பார்த்துட்டு இப்படியெல்லாம் நான் டிப்ஸ் கொடுப்பேன்னு நினைச்சிங்கண்ணா சாரி இந்த பதிவு அதைப் பற்றியதல்ல. கஜினி மாதிரி என்னுடைய விடாமுயற்சியும் அதில் நான் பெற்ற அனுபவங்களையும் பற்றிய பகிர்வு இது.


சிறு வயதில் இருந்தே எனக்கு பள்ளியில் பட்டப்பெயர் குண்டா, தடியா தான். ரோட்டில் செல்லும் போது யாராவது யாரையாவது குண்டா தடியா என்று கூப்பிட்டால் அனிச்சையாக திரும்பிப் பார்ப்பேன்.

ஆனால் உடம்பு பிட்டாக இருந்ததால் அது எனக்கு பெரிய விசயமாகவே தோணவில்லை. உடம்பு குண்டாக இருந்த போதும் பத்தாவது படிக்கும் போது ஹாக்கியில் கோல் கீப்பராக இருந்ததால் தினமும் பயிற்சி உண்டு.

அதிகாலையில் கமலாலயம் குளத்தை சுற்றி மூன்று ரவுண்டுகள் ஓடுவேன். அதுக்கப்புறம் திருவிக காலேஜ் கிரவுண்டுக்கு போய் அங்கும் விடாமல் பயிற்சிகள் மேற்கோள்வோம். 12 மணிக்கு பயிற்சி முடிந்த பிறகு சைக்கிளில் வீட்டுக்கு வந்து சாதாரணமாக 25 இட்லி சாப்பிடுவேன். 


அந்த பயிற்சிக்கு அது தேவையானதாக இருந்தது. பத்தாவது பரிட்சை எழுதி முடிந்ததும் நான் என் நண்பர்கள் கணேசன் மற்றும் சண்முகம் ஆகியோர் ஆரூரான் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தோம். 

தினமும் 4 மணிக்கு எழுந்து கமலாலயத்தை சுற்றி ஓடுவோம். 6 மணிக்கு ஜிம்முக்கு போய் பயிற்சிகள் செய்து ஒரு மாதம் வரை அக்குளில் கட்டி வந்த மாதிரியே சுற்றிக் கொண்டு இருந்தோம்.

அதன் பிறகு போரடிக்க ஆரம்பித்தது. காலையில் கணேசன் வீட்டுக்கு வந்து எழுப்பி கூட்டிச் செல்லுவான். கமலாலயம் வந்ததும் முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் உக்கார்ந்து கணேசனிடம் "மாப்ள எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நீ இரண்டு ரவுண்டு ஒடி வா, அதன் பிறகு நான் உன்னுடன் இணைந்து கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு தூங்கி விடுவேன். 


கடைசி ரவுண்டு மட்டும் ஓடி விட்டு ஜிம்முக்கு போய் வந்து கொண்டிருந்தேன். அதன் பிறகு அதுவும் போரடித்து அப்படியே இரண்டுக்கும்
ஜூட் விட்டேன்.

அதன் பிறகு கொஞ்ச நாள் இந்த பிட்னஸ் பக்கம் தலைவைக்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு ஆசை தலை தூக்கியது. அந்த நேரம் நான் ஐசிஎப் கிரவுண்டு எதிரில் உள்ள பள்ளியின் இரண்டாம் தளத்தில் இருந்த மாணவர் விடுதியில் தங்கி அப்ரெண்டிஸ் படித்துக் கொண்டு இருந்தேன்.

காலையில் உடன் தங்கியிருந்த நண்பர்களை அழைத்துக் கொண்டு காலை நாலு மணிக்கு ஐசிஎப் கிரவுண்ட்டில் ரவுண்ட் அடித்துக் கொண்டு இருப்பேன். சில நாட்களில் வழக்கம் போல போர், வழக்கம் போல ஜூட் தான்.

அதுக்கப்புறம் ரொம்ப வருசம் அதுக்குள்ளயே போகல. ஆனால் உடம்பு மட்டும் கட்டுப்பாடில்லாமல் போனது. அந்த காலக்கட்டம் தான் நான் மகாதியானத்தில் மூழ்க ஆரம்பித்த நேரம். 1997ல் 78கிலோ இருந்த நான் 2006ல் 101கிலோவை தொட்டேன். 

எனக்கு ஒரு பெரிய ஆபீசர் இருந்தார். பெரிய என்றால் நான் பணிபுரிந்த கம்பெனியின் தமிழக மண்டல அலுவலகத்தின் மூத்த அதிகாரி. என் எடை எப்போதும் அவருக்கு உறுத்திக் கொண்டே இருக்கும். 

2005 வாக்கில் எனக்கு ஒரு சவால் விடப்பட்டது. அதுவும் அபீசியலாக. ஆமாம். ஜெனரல் மோட்டார் டயட் என்ற டயட்டை நான் பாலோ செய்ய வேண்டும். என்று கம்பெனி எம்டியால் கடிதம் கொடுக்கப்பட்டது. 

முதல் முறை நானும் சற்று பயந்து போய் கெடுபிடியாக இருந்தேன். ஒரு வாரத்தில் சட்டென 7 கிலோ இறங்கியது. பிறகு ரெகுலர் டயட். ஒரு வாரத்திற்கு பிறகு மறுபடியும் டயட். 

ஆனால் இந்த முறை பயம் தெளிந்து கிடைத்த கேப்பில் எக்ஸ்ட்ரா உணவுகளை அள்ளி விட ஆரம்பித்தேன். அந்த அளவுக்கு எடை குறையவில்லை, பிறகு ஒரு நாளில் அதுவும் காற்றில் பறக்க விடப்பட்டது. 

2007 ஜனவரியில் சென்னை அண்ணா நகரில் உள்ள தல்வாக்கர் என்ற ஜிம்மில் கட்டாயமாக உடம்பை குறைக்க வேண்டுமென உயர் அதிகாரியால் சேர்க்கப்பட்டேன். அதற்கான கட்டணம் ரூ30,000 கம்பெனி கணக்கில் செலுத்தப்பட்டு என் கணக்கில் பற்று வைக்கப்பட்டது.

சேர்ந்த அன்று டயட்டிசியன் நாப்பது பக்கத்துக்கு நான் சாப்பிட வேண்டியது சாப்பிடக் கூடாதது லிஸ்ட்டை கொடுத்தது. என் அறையில் இருந்த மற்ற பேச்சிலர் பையன்கள் காலையில் கையேந்திபவனில் ரெண்டு இட்லியை பிய்த்து தின்று விட்டு வேலைக்கு போகும்  போது நான் மட்டும் சிறு அடுப்பு வாங்கி வைத்து ஓட்ஸ் கிண்டிக் கொணடு இருப்பேன். கடுப்பாக இருக்கும். 

அந்த சார்ட் படி ஏழு மணிக்குள் டின்னரை முடித்து விட வேண்டும் அதுவும் ரெண்டு சப்பாத்தி மட்டுமே. சாப்பிட்டு பத்து நிமிசத்தில் பசிக்க ஆரம்பித்து விடும். ராத்திரி பசியால் தூங்க முடியாமல் தவிப்பேன்.

ஜிம்மின் உள்ளே செல்லவே எனக்கு மிகுந்த தயக்கமாக இருக்கும். ட்ரெட்மில்லில் திணறித் திணறி ஓடிக் கொண்டு இருப்பேன். பக்கத்து ட்ரெட்மில்லில் சினிமா நாயகி கணக்காக அம்சமான ஒரு பெண் அசால்ட்டாக ஒடிக் கொண்டு இருக்கும். வெட்கமாக இருக்கும்.

ஒர்க்அவுட் செய்யும் போது சில பெண்கள் சில இடங்களில் உள்ள குறிப்பிட்ட சதைப்பகுதியை குறைக்க வேண்டி பக்கத்தில் பயிற்சி செய்து கொண்டு இருப்பார்கள். நான் முழு ஏரியாவையும் குறைக்க பகீர ப்ரயத்தனப்பட்டுக் கொண்டு இருப்பேன்.

இது மட்டுமே சற்று பலனளித்தது. ஏனெறால் காசு கட்டியதால் பல்லைக் கடித்துக் கொண்டு ஜிம்முக்கு போய்க் கொண்டு இருந்தேன். 20 கிலோ வரை குறைந்தேன். அந்த சமயத்தில் காதல் துவங்கி தினமும் நள்ளிரவு போனில் பேசிப் பேசியே நேரத்தை கழித்ததால் அதிகாலை தூங்கி ஜிம்முக்கு போக முடியாமல் போய் அதுவும் பணாலானது.

பிறகு திருமணம் விருந்து என பிஸியானதால் எடை கூட ஆரம்பித்து இப்போது இந்த நிலையை வந்தடைந்திருக்கிறது.

இப்போது ஒரு பேஸ்புக் ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவில் இணைந்து டயட்டைப் பற்றி பேச ஆரம்பித்து இருக்கிறேன், ஒரு முறை சோதித்தும் பார்த்து விட்டேன். மற்றவர்களின் டயட் முறைகளை பார்க்கும் போது நானும் டயட்டை துவங்கி குறைத்து விடுவேன் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் இந்த முறை யாரும் என்னை வற்புறுத்தவில்லை. நானாக ஆர்வப்பட்டு ஆரம்பித்திருப்பதால் வந்த நம்பிக்கை இது.

ஆரூர் மூனா

Friday, November 29, 2013

விடியும் முன் - சினிமா விமர்சனம்

 சத்தியமாக இந்த வருடம் வந்த லோ பட்ஜெட் படங்களிலேயே இந்த படம் தான் தரமுள்ளதாக இருக்கும். இன்று காலை வரை இப்படி ஒரு படம் வெளியாகிறது என்று எனக்கு தெரியவே தெரியாது. ஆனால் படம் முடிந்ததும் நானே ஐந்து பேருக்கு போனைப் போட்டு படத்தை பார்க்குமாறு பரிந்துரை செய்திருக்கிறேன்.


துவங்கிய முதல் காட்சியிலேயே பூஜாவின் பரபரப்பு நமக்கும் தொற்றிக் கொள்கிறது. அந்த ரயில் பிளாட்பாரத்தில் சின்னப்பெண் மாளவிகாவுடன் ஓடி வந்து ஒரு ரயிலில் ஏறி பயணமாகிறார்.
நிற்க, இந்த படத்திற்கு மட்டும் கதையை ப்ளாட்டாக சொல்ல முடியாது. அதே போல் படத்தின் க்ளைமாக்ஸையும் சொல்ல மாட்டேன். படம் பயணிக்கும் வரிசையிலேயே சொல்கிறேன் சஸ்பென்ஸ் கெடாமல்.

ரயிலில் பயணிக்கும் இவர்களை தேடி ஒரு பவர்புல்லான தொழிலதிபரின் கட்டளைப் படி அமரேந்திரன் ஜான் விஜய்யுடன் தேடியலைகின்றனர். பூஜா மும்பைக்குத்தான் பயணமாகியிருப்பார் என கிளம்புகின்றனர். ஆனால் அவர் ஸ்ரீரங்கம் சென்றிருப்பது தெரியவர பயணத்தை திருப்புகின்றனர்.

ப்ளாஷ்பேக். ஊரில் மிகப்பெரிய மனிதர் ஒருவரின் சல்லாப தேவைக்காக அமரேந்திரன் பாலியல் தொழிலாளி பூஜாவுடன் ஒரு 13 வயது பெண்ணை தேடியலைகிறார். ஒரு குழந்தைகளை கடத்தி மும்பையில் விற்கும் மிகப்பெரிய கும்பலிடம் ஒரு குழந்தை இருப்பது தெரிய வர ஒரு நாள் வாடகைக்கு ஒரு சிறுமியை எடுக்கின்றனர். 

அந்த கும்பலின் தலைவன் மிகப்பெரிய அடியாள் குழுவை வைத்து சமூக விரோத செயல்களை செய்து வருகிறான். அப்படி எடுக்கப்படும் சிறுமியை பெரிய மனிதரிடம் கொண்டு செல்கிறார் பூஜா.தவறு நடக்கப் போகும் சமயத்தில் மனம் திருந்தும் அவர் பெரிய மனிதரை கொடூரமாக தாக்கி விட்டு சிறுமியுடன் தப்பிக்கிறார். 



அந்த பெரிய மனிதரின் மகனின் கட்டளையின் படிதான் உயிருக்கு பயந்து பூஜாவை தேடியலைகிறார் அமரேந்திரன். உதவிக்கு மற்றொரு கிரிமினலான ஜான் விஜய்யை சேர்த்துக் கொள்கிறார். இதற்கிடையில் சிறுமி ஸ்ரீரங்கம் வந்து இருப்பது குழந்தை கடத்தும் கும்பலின் தலைவனுக்கு தெரிய வருகிறது.

ஸ்ரீரங்கத்தில் வாழும் லக்ஷமி ராமகிருஷ்ணனிடம் தஞ்சமடைகிறார் பூஜா. அவர்களின் இருப்பிடம் தெரிந்ததும் அமரேந்திரன், ஜான் விஜய், பெரிய மனிதரின் மகன், அவருடன் ஒரு ரவுடிக் குழு, பெரிய ரவுடியின் கையாள் எல்லோரும் தனித்தனியாக ஸ்ரீரங்கம் நோக்கி பயணிக்கின்றனர். 


அவர்களிடம் பூஜாவும் சிறுமியும் சிக்கினார்களா, இருவரையும் வில்லன்கள் கொன்றார்களா, அல்லது ஏதேனும் ஒரு பெரிய ஹீரோ பறந்து வந்து எல்லோரையும் தாக்கி நீதியை நிலைநாட்டினாரா அல்லது படத்தின் முடிவு தான் என்ன என்பதை கண்டிப்பாக திரையரங்கிற்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்னடா படத்தின் கதையை சொல்லி விட்டானே என்று பதற வேண்டாம், இது படத்தில் வரும் கதை தான். ஆனால் இது படத்தின் மெயின் லைன் இல்லை. அந்த மெயின் லைன் படத்தின் இறுதியில் தெரிய வருகிறது.

உண்மையிலேயே இந்த படத்தின் பேப்பர் ஒர்க்குக்காக இயக்குனர் மண்டையை பிய்த்துக் கொண்டு யோசித்து இருக்க வேண்டும். சரக்குள்ள இயக்குனர், பின்னாளில் பெரிய ஆளாக கூடிய வாய்ப்பு இருக்கிறது. வாழ்த்துக்கள் பாலாஜி கே குமார்.

பாதிக்கப்படும் சிறுமியாக நடித்துள்ள மாளவிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார். முகபாவங்களை முகத்தில் கொண்டு வரத்தெரியாத நடிகர்களை விசிலடித்து ரசிக்கும் நாம் இந்த சிறுமியின் முகபாவனைகளை கண்டு விசிலடித்ததற்கு வெட்கப்பட வேண்டும். 

கோவம், கிண்டல், சிரிப்பு, பயம். அழுகை என எல்லாத்தையும் முகபாவனையிலேயே அழகாக சொல்லிவிடுகிறார் மாளவிகா. வாழ்த்துக்கள் மாளவிகா.

பூஜா இந்த படத்தில் நடித்ததற்காக பெருமையுடன் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம். லாட்ஜில் போலீசிடம் மாட்டிக் கொண்டு தலையில் புடவையை போர்த்திக் கொண்டு வரும் போதும், அமரேந்திரனுடன் காரில் பேசிக் கொண்டே பயணிக்கும் போது உரையாடும் தோரணையிலும், சிறுமியுடன் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் போதும், க்ளைமாக்ஸில் சிறுமியை விட்டு விடும்படி கெஞ்சும் போதும் வாரே வாஹ். வாழ்த்துக்கள் பூஜா.

அமைதியான நடிப்பிலும் வசனமே இல்லாமல் முகபாவனையிலும் கொடூரத்தை காட்டும் வில்லனாக வினோத், அசத்தல். ஒரு நாள் பதிவர் சந்திப்பின் போது டிஸ்கவரி புக் பேலஸில் சாதாரணமாக பார்த்த பையன் இவர். இப்போ நடிப்பில் ஆர்ப்பாட்டமில்லாமல் கலக்கியிருக்கிறார்.

சந்தர்ப்பவாத நடிப்பில் அமரேந்திரனும், ஜான்விஜய்யும்  அசத்தி இருக்கிறார்கள். ஒரு டீலிலேயே ஜான் விஜய்யின் பாத்திரப்படைப்பை சொல்லியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம்.

லட்சுமி ராமகிருஷ்ணன் கூட அடடா. பாராட்ட ஆரம்பித்தால் கஞ்சா விற்கும் கிழவி வரை தொடர வேண்டியிருக்கும். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்வோம்.

பின்னணி இசையும் படத்தின் மூடுக்கு நம்மை தக்கவைக்கிறது. அதுவும் சிறுமியை பெரிய மனிதர் அறைக்குள் அழைத்துச் சென்றதும் பூஜா பயந்து கொண்டே படியேறும் காட்சியில் தடக் தடக்  என இதயத்தின் ஹார்ட்பீட்டை அதிகரிக்கிறது.

மொத்தத்தில் கவனிக்கப்படாமல் இருக்கும் நாம் கவனிக்கவேண்டிய ஒரு படம். அப்படி செய்யாவிட்டால் மற்றவர்களாலும் கவனிக்கப்படாமலேயே போய் விடக்கூடிய சாத்தியம் இருக்கிறது. 

நம்மால் முடிந்தது படத்தை பார்த்து விட்டு நம் நண்பர்களுக்கு இது பார்க்க வேண்டிய படம் போய்ப்பார் என்று சொல்வது தான். நான் செய்து விட்டேன் நீங்கள்.

ஆரூர் மூனா

விடியும் முன் - படம் பார்த்த கதை

முதலில் இந்த படத்திற்கு போக காரணமாக இருந்த பிலாசபி பிரபாகரனை கட்டிப் பிடித்து பாராட்டியே ஆகணும். இந்த வாரம் சொல்வது போல் படங்கள் வெளியாகவில்லை. 


நவீன சரஸ்வதி சபதம் மொக்கை என்று டிரெய்லரிலேயே தெரிந்து விட்டது. ஜன்னல் ஓரம் மலையாளத்திலேயே ஓர்டினரியாக பார்த்தாகி விட்டது. வேறு பெரிய படங்கள் வரவில்லை.
அதனால் இந்த வாரம் படம் பார்க்கும் எண்ணம் இல்லை. நான் பாட்டுக்கு காலையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். முக்கியமான வேலையில் இருந்த போது பிரபா போன் பண்ணி நாளை காலை 10 மணிக்காட்சி விடியும் முன் போகலாமா என்று கேட்டார். 

எனக்கு நாளை வேலையிருப்பதால் முடியாது என்று கூறினேன். ஆனால் படம் நன்றாக இருப்பதாக கூறி பார்க்க வருமாறு வற்புறுத்தினார். ஆனாலும் சாத்தியமில்லாததால் வரவில்லை. விஷயம் மட்டும் மனதை போட்டு குடைந்து கொண்டே இருந்தது. 


வீட்டுக்கு வந்து சமைத்து வைத்து விட்டு மதில்மேல் பூனையாக அலை பாய்ந்து கொண்டு இருந்தேன். அப்புறம் உத அண்ணனின் விமர்சனம் வேறு படித்து தொலைத்தேனா, சட்டென்று முடிவெடுத்து திரையரங்கிற்கு கிளம்பினேன். 

வில்லிவாக்கம் ஏஜிஎஸ்ஸில் 3 மணிக்காட்சி. திரையரங்கிற்கு உள்ளே சென்று பார்த்தால் மொத்தமே 8 பேர் தான் அரங்கில் இருந்தனர். இவ்வளவு கம்மியான பேர் இருந்தாலும் படத்தை சரியான நேரத்தில் போட்ட ஏஜிஎஸ் பெருந்தன்மையானவர்கள் தான்.

பெரிய நடிகர்கள் இல்லை, அரங்கில் கூட்டம் இல்லை. ஒரு விமர்சனத்தை மட்டும் நம்பி வந்தது தப்பாயிடுமோ என்று ஒரு நிமிடம் நினைத்தேன். ஆனால் படம் துவங்கியதிலிருந்து முடிந்தது வரை ஒரு நிமிடம் கூட நம்மை சலிக்க செய்யவில்லை இயக்குனர். 

துவங்க நொடியில் நம்மை ஆட்கொண்ட பரபரப்பு இடைவேளையில் தான் முடிந்தது. இடைவேளை முடிந்ததும் மறுபடியும் படத்தில் பயணிக்கும் நாம் படம் முடிந்து தான் தரையிறங்குகிறோம். படம் வெற்றிபெறுமா என சந்தேகம் இருக்கிறது. ஆனால் சந்தேகமேயில்லாமல் சிறந்த படம்.

ஆரூர் மூனா

டிஸ்கி : எப்போதும் விமர்சனம் எழுதிவிட்டு படம் பார்த்த கதை போடுவேன். ஆனால் இந்த முறை முன்னாலேயே படம் பார்த்த கதை பதிவு போட்டு விட்டு விமர்சனம் போடலாம் என நினைத்து பதிவிட்டேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...