சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, April 10, 2013

திருவாரூரும் ஹோம்சிக்கும்

பனிரெண்டாம் வகுப்பு வரை திருவாரூரில் படித்தேன். அங்கு ஓவராக ஆட்டம் போட்டதால் இனி திருவாரூரில் வைத்திருந்தால் பையன் வெளங்க மாட்டான் என்று என் குடும்பமே திட்டமிட்டு என்னை சென்னைக்கு நாடு கடத்தியது. அதுவரை குடும்பத்தில் என்னைக் கண்டால் யாருக்குமே பிடிக்காது.


திருவாரூரில் விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தம் தான் எங்களது ஏரியா. காலையில் 6 மணிக்கே எழுந்து நிறுத்தத்தில் அமர்ந்தால் 6.30 மணிக்கு வேலைக்கு செல்லும் யாமினி முதல் 09.30 மணிக்கு வேலுடையார் பள்ளிக்கு செல்லும் ரோஜா வரை வழியனுப்பி வைத்து விட்டு தான் வீட்டுக்கு வருவேன்.

அடுப்படியில் டிபன் இருக்கும். நானே போட்டுக் கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டதும் ஒரு தூக்கம் போட்டு விட்டு மதியம் சாப்பாட்டையும் ஒரு கட்டி விட்டு கிரிக்கெட் விளையாட கிரவுண்டிற்கு சென்றால் இருட்டும் வரை விளையாடி விட்டு மறுபடியும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்து சரக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்தால் 12 மணி வரை கதைகளும் பஞ்சாயத்துகளும் ஒடும்.


அதன் பிறகு வீட்டிற்கு சென்று படுப்பேன். தினமும் அம்மாவிடமும் அப்பாவிடமும் வசவுகள் தான். அதுவும் என் அப்பாவுக்கு என்னைப் பார்த்தால் வில்லன் போலவே இருக்கும். என்னைப் பார்த்தால் ஒரு ஆக்சன் காட்சியை நிகழ்த்தி விட்டு அரைகிலோ அறிவுரையும் விலையில்லா பொருளாக தந்து விட்டு தான் கடந்து செல்வார்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத பெற்றோர் என் மாமாவிடம் ஒரு சதியாலோசனை செய்து சென்னையில் அப்ரெண்டிஸ் நுழைவுத் தேர்வு எழுத அனுப்பி வைத்தனர். எனக்கு கூட ஊர்பாசமெல்லாம் இல்லாமல் இந்த வீட்டை விட்டு வெளியேறினால் போதும் என்றே தேர்வு எழுதினேன்.


அதில் தேர்ச்சி பெற்று சென்னையில் சேர்ந்ததற்கு பிறகு தான் ஒரு விஷயம் தெரிய வந்தது. நான் மட்டும் தான் இங்கிருக்கிறேன், என் உயிர் திருவாரூரிலும் வீட்டிலும் தான் இருக்கிறது என்பதை. எந்தநேரமும் வீட்டு நினைவு ஊர் நினைவு தான். ஒவ்வொரு சனியன்று மதியம் பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு சென்று திருவாரூர் செல்லும் பேருந்திற்குள் ஏறியதும் தான் முகமே மலர்ச்சியாகும்.

எப்படியும் ஒரு தெரிந்த முகமாகவது பேருந்தில் தென்பட்டு விடும். பிறகு அவர்களுக்கு கதைத்துக் கொண்டே சென்றால் நேரம் போவதே தெரியாது. பேருந்து சன்னாநல்லூர் தாண்டியதும் எனக்கு ஒரு ஊர் வாசனை அடிக்கும். அப்போதே ஊரில் இறங்கி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு விடும்.

கல்லுபாலத்தில் இறங்கியதும் நண்பர்கள் குழாம் கண்ணுக்கு தென்பட்டு விடும். பிறகென்ன அப்படியே பேருந்து நிறுத்தம் சென்று கூத்தடித்து விட்டு வீட்டுக்கு செல்ல 12 மணியாகி விடும். ஞாயிறு விழித்ததும் வீட்டை விட்டு வெளியே செல்ல மாட்டேன். வீட்டின் மீது எனக்கிருந்த பிரியம் அதனை பிரிந்தது தான் தெரிய வந்தது.

எனக்கென அறை, எனக்கென டிவி, எனக்கென பிரத்யேக சமையல் ஞாயிறு மாலை வந்ததும் உற்சாகம் வடிந்து சோகம் அப்பிக் கொள்ளும். 7.30 மணிக்கு செல்லும் திருவள்ளுவர் பேருந்தில் அப்பா டிக்கெட் வாங்கித் தருவார். பிரிய மனமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறுவேன்.

இரவு முழுவதும் கண்விழித்துக் கொண்டே சோகத்துடன் பயணமாவேன். சென்னையிலிருந்து திருவாரூருக்கு நொடிப் பொழுதில் செல்லும் பயணம் திருவாரூரிலிருந்து சென்னைக்கு பயணமாகும் போது மணிக்கணக்கில் நீளும்.

சென்னைக்கு வந்ததும் ஹாஸ்டலில் மனமே ஒட்டாது. மீண்டும் சனி எப்போது வரும் என்றே மனது கணக்கு போடும். சனியன்று உற்சாக பயணம். ஞாயிறு இரவன்று சோக பயணம் என்றே ஆறு மாதம் சென்றது.

சென்னையில் என்னுடன் படித்துக் கொண்டு இருந்த நண்பர்களுடன் நட்பு இறுகியது. வாரம் ஒரு முறை சென்று கொண்டிருந்த நான் மாதம் ஒரு முறை பயணிக்கலானேன்.  சென்னைக்கு திரும்ப வரும் பயணம் கூட வருத்தங்களை ஏற்படுத்தவில்லை.

மூன்றாம் ஆண்டில் திருவாரூருக்கு செல்வதே சுத்தமாக குறைந்து போயிருந்தது. சென்னை அதை விட அதிக உற்சாத்தை தந்ததே காரணம். முதல் வருடம் சாப்பாடு ஒத்துக் கொள்ளாமல் இருந்த காலம் போய் வெந்தது வேகாதது எல்லாத்தையும் திங்க உடல் மாறியிருந்தது.

என்னை ஒரு காலத்தில் வில்லனாக பார்த்துக் கொண்டிருந்த என் அப்பா நான் திருவாரூருக்கு வருவதே இல்லை என வருத்தப்பட்டு கடிதம் எழுதிய சம்பவம் கூட நடந்தது. படித்து முடித்து விட்டு ஹாஸ்டலை காலி செய்து திருவாரூக்கு செல்ல மனமில்லாமல் நண்பர்களை கட்டிப் பிடித்துக் கொண்டு எழும்பூர் ரயில் நிலையத்தில் கதறியழுதேன்.

ஊரில் சென்று அம்மாவிடம் நான் அழுததை சொன்னதும் சிரித்துக் கொண்டே சொன்னார். "நீ படிக்கப் போகும் போது திருவாரூரிலிருந்து போக மாட்டேன் என்று அழுதாய். இன்று சென்னையை விட்டு வர மனமில்லாமல் அழுகிறாய். ஒரு நாள் எல்லாமே பழகிப் போகும் " என்று.

ஆரூர் மூனா செந்தில்

25 comments:

  1. 3 vathu photovil irukum blue shirt senthil unga relation a?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அவனை உங்களுக்கு தெரியுமா. இப்ப சென்னையில தான் இருக்கான்.

      Delete
  2. Replies
    1. இதுக்கு நான் என்ன அர்த்தம் பண்ணிக்கிறது. நீங்க நக்கீரனுக்கு உறவா?

      Delete
    2. ம்ஹூம்...! எல்லாம் ஒரு டைம் தான்:) இப்ப மலரும் இளமையான நினைவும் கூட <3

      Delete
    3. சும்மா தமாசுக்கு கேட்டேன்

      Delete
  3. எல்லாப் பழக்கமும் நாளானால் வழக்கமாகி விடும் என்பதை அம்மா சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்...

    மீண்டும் ஊருக்கே மீதிக் காலம் என்பதை நினைத்துப் பாருங்கள்... சிரமம் தான்... சென்னை அவரச உலகம்... சொந்த ஊர் அமைதி உலகம்... (என் அனுபவம்)

    ReplyDelete
    Replies
    1. எப்படியிருந்தாலும் 60 வயது வரை போக முடியாது. அதன் பிறகு தான் யோசிக்க வேண்டும். நன்றி தனபாலன்

      Delete
  4. அண்ணே உங்களுக்கு நேர்ந்த அதே அனுபவம் இப்ப வீட்க எனக்கு அப்பாவ பார்த்தாலே கொர் என்ன பன்றது

    ReplyDelete
    Replies
    1. பின்னாடி இதுல உங்க வரலாறுல வரும்னு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்.

      Delete
  5. நானும் (2006-07) 1 வருஷம் சென்னையில இருந்தப்ப நாலைந்து முறை திருவாரூர் வரும்போது இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

    அப்போது திருச்சி - செங்கல்பட்டு பாஸ்ட் பாசஞ்சர் ரயிலில் வருவது வழக்கம். ஒவ்வொரு முறையும் திருவாரூரை விட்டு சென்னைக்கு வரும்போது எதையோ பறிகொடுத்த மாதிரிதான் இருக்கும்.

    ------------
    திருவாரூர் இயக்குனர் பாபு கே. விஸ்வநாத் இயக்கிய கந்தா படம் சென்னையில் எதாவது ஒரு தியேட்டரிலாவது ஓடுகிறதா?

    ReplyDelete
    Replies
    1. இல்லையே சரவணன். நானும் பார்க்கலாம் என்று தான் நினைத்தேன். படம் வந்த மாதிரியே தெரியவில்லை

      Delete
    2. திருவாரூர் தைலம்மையில் ரிலீசான கந்தா படம் 5 நாட்கள் ஓடியது.

      திருவாரூரில் பட ரிலீசன்று பாபு வந்திருந்தார். அவரைப்பார்த்து பேசினேன்.

      மூன்று முறை தலா 15 லட்சத்திற்கு மேல் விளம்பரத்துக்காக செலவு செய்து படம் வரவில்லை. இப்போது விளம்பரம் இல்லை. ஆனால் படம் வந்துவிட்டது என்று இயக்குனர் சொன்னார்.

      உள்ளூர்க்காரர் என்ற சந்தோஷத்தில் இரண்டு பதிவு எழுதினேன்.

      Delete
    3. நானும் படித்தேன். நன்றி சரவணன்

      Delete
  6. super sir, Excellent Writing,

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜன்

      Delete
  7. இருக்கும் இடம் நாளடைவில் பிடித்துவிடும் என்பது உண்மைதான் போலும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி

      Delete
  8. எனக்கென்னவோ இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தான் தோன்றுகிறது... சென்னையில் இருக்கும் சில வசதிகள் சொந்த ஊரில் இருப்பதில்லை... சொந்த ஊரில் இருக்கும் சில சௌகரியங்கள் சென்னையில் இருப்பதில்லை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்வது சரிதான்.

      Delete
  9. இடுகை நன்றாக இருக்கு...ஹோம்சிக் வருவதைப் பற்றி எழுதினால் எனக்கு இப்ப தமிழ்நாடு ஹோம்சிக் வருது.

    அது சரி, எதற்கு சூப்பர் ஸ்டார் ரஜின்காந்த் படத்தை இங்கு போட்டுள்ளீர்கள்? அதாங்க. அந்த முதல் படம்...!

    ReplyDelete
    Replies
    1. அய்யோ ஏன் ரொம்ப புகழுறீங்க. அது வேதாரண்யம் கடற்கரை ஓரம் எடுக்கப்பட்டது.

      Delete
    2. நம்பள்கி.... இவரும் பதிவுலகின் சூப்பர் ஸ்டார் தான்.

      Delete
  10. நீங்களெல்லாம் ஆம்பளைங்க...
    எங்க (பெண்கள்) நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்...
    போங்கப்பா... எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வருது.....

    ReplyDelete
  11. Aruna pengal valarum podhe innoru veetirku poga pogiraval endre valarkkappadugirargal

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...