சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, October 8, 2013

வடசென்னை திருப்பதி குடை ஊர்வலம்

சென்னையில் கிட்டத்தட்ட 17 வருசமா இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட எந்த கோயில் திருவிழாக்களிலும் கலந்து கொண்டதேயில்லை. ஆனால் நான் படிக்கும் போது அயனாவரம் பகுதி நண்பர்கள் திருப்பதி குடை பற்றி சிலாகித்து பேசுவார்கள். நான் பெரிதாக கண்டு கொண்டதே கிடையாது.


ஆனால் இந்த சனியன்று உடன்பணிபுரிபவர்களால் யானை கவுனி முதல் அயனாவரம் வரை திருப்பதி குடையுடன் பயணமாக வேண்டியிருந்தது. வடசென்னையில் இவ்வளவு பெரிய திருவிழாவையும் மக்களின் உற்சாகத்தையும் பார்த்து மிரண்டு விட்டேன்.

சனியன்று அயனாவரம், பெரம்பூர், பெரியார் நகர், ஜவஹர்நகர், திருவிக நகர், பட்மேடு பட்டாளம், யானை கவுனி, ஓட்டேரி ஏரியாவில் மக்கள் தெருவுக்குத் தெரு ஏழுமலையான் விக்ரகம், போட்டோ ஏதோ ஒன்றை வைத்து பூஜித்து மக்களுக்கு சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், வடை, நீர்மோர், ரோஸ்மில்க், பானகம் போன்றவற்றை வழங்கிக் கொண்டு இருந்தனர்.

என்னுடன் வந்த மற்றவர்கள் குடையைப் பார்ப்பதில் பிஸியாக இருக்க நான் மட்டும் தெருத் தெருவாக வழங்கப்பட்டுக் கொண்டு இருந்த பிரசாதங்களை சுவைப் பார்க்கத் தொடங்கினேன். அட அட அடடா என்ன சுவை, அதுவும் அடித்த கொடூர வெயிலுக்கு ரோஸ்மில்க் இதமோ இதம்.


எப்பப் பார்த்தாலும் பிஸியாகவும் கடும் டிராபிக்காவும் இருக்கும் வடசென்னையில் இந்த ஒருநாள் பக்திமயமாய் குட்டித் திருப்பதியாகவே காட்சியளித்தது. நமக்கும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருந்தது.


எப்போதும் தண்ணீர்லாரிக்காக சண்டை போட்டுக் கொண்டு இருக்கும் பட்மேடு மக்கள் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு கோவிந்தா கோவிந்தா என்று பஜனை பாடியது எனக்கு புது அனுபவமே.

அது போல் எல்லாப் போஸ்டர்களிலும் திருப்பதி குடை கவுனி தாண்டுகிறது என்றே போட்டு இருந்தது. எனக்கு பயங்கர சந்தேகம். அது என்னடா கவுனி தாண்டுகிறது என்று போடுகிறார்களே. அதற்கு என்ன காரணம் என்று.

அது போல் எனக்கு கவலையளித்த விஷயம் இந்த முறை ஏகப்பட்ட போஸ்டர்களில் இந்துத்வ சங்கங்களின் பிரதிநிதிகளின் படங்கள் தான் ஆக்ரமித்து இருந்தது. இதுவரை இப்படி பார்த்ததில்லை. இது நம்ம ஊருக்கு நல்லது இல்லை என்றே நினைக்கிறேன்.

என்னுடன் பணிபுரிந்த நாமம் போட்ட நாராயணனை கேட்டேன். ஒரு காலத்தில் ஏழுமலையான் கவுனியில் யாரிடமோ கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்த பகுதி வரும் போது நிற்காமல் குடையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவார்களாம். இது 500 வருடமாக நடந்து வரும் சம்பிரதாயம் என்று கூறினார்.

எனக்கு தெரிந்து சென்னை உருவாகியே 380 வருடங்கள் தான் ஆகிறது என்று நினைக்கிறேன். ஆனால் நம்ம ஆட்கள் கதை கட்டி விடுவதில் உலகிலேயே சிறந்தவர்கள் ஆச்சே. விட்டா ஏழுமலையானின் மாமியார் வீடு அங்கு தான் இருந்தது என்று சொன்னாலும் சொல்வார்கள்.

ஆரூர் மூனா

13 comments:

  1. நல்லாவே ஊர் சுத்தி பார்த்திங்க போலன்னே...

    குடை ஒரு ஆள் தூக்கும் அளவிற்கு இருக்குமா?
    முழுவதும் தூக்க முடிச்சதா?

    ReplyDelete
    Replies
    1. 2லிருந்து 3பேர் வரை தூக்குவார்கள்

      Delete
  2. வணக்கம்

    பதிவு அருமை நேரில் பார்த்தது போல உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன்

      Delete

  3. நீங்கள் கூட இப்படி சொன்னால் எப்படி? வாஸ்கோடகாமா கண்டுபிடிப்பதற்கு முன் இந்தியா இல்லாமல் இருந்ததா? பிரிட்டீஷ்காரன் கோட்டைக்காக நிலம் வாங்கிய கணக்குதான் இந்த 380 வருடங்கள் எல்லாம். அதற்கு முன்பே மயிலாப்பூர் இருந்தது, மாடம்பாக்கம் இருந்தது. அப்போ திருவள்ளுவர் பிறந்தபோது மயிலாப்பூர் காடாக இருந்ததா? தாம்பரம் அருகே மாடம்பாக்கம் என்ற ஊரில் ராஜராஜ சோழனின் அப்பா சுந்தரசோழன் 1050 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய கோவில் இருக்கிறது. ஊரே இல்லாத இடத்தில் எதற்கு அவ்வ்வளவு பிரம்மாண்ட கோவில் கட்டினார்கள். சென்னை என்ற பெயர் ஏற்பட்டு 380கள் ஆகின்றன. அதற்கு முன்பே இவ்விடத்தில் கிராமங்கள், சிற்றூர்கள், பெரிய ஊர்கள் எல்லாம் இருந்தது, கவனியும் இருந்திருக்கலாம். உங்கள் எழுத்துக்கள் எனக்கு பிடிக்கும் ஆனால் எல்லோரையும் போல நீங்களும் நுனிப்புல் மேயாதீர்கள்

    ஷீஜிசுதாகர்

    ReplyDelete
  4. நான் சென்னைவாசியா இருந்தும் இந்த திருப்பதி குடை கவுனி தாண்டும் நிகழ்ச்சி பார்த்ததே இல்லை. கூட்டம் அம்முதுன்னு வீட்டுலே அப்பெல்லாம் போகவிடமாட்டாங்க.

    குடைகள் யானைகவுனி (எலிஃபெண்ட் கேட்)எல்லை தாண்டிப்போற துதான் அந்த கவுனி தாண்டுதல்.அதுவரை நிதானமாப்போகும் ஊர்வலம் அப்புறம் வேகமெடுத்துரும். குடைகளை மடக்கிருவாங்கன்னு நினைக்கிறேன். சரியாத் தெரியலை:(

    ReplyDelete



  5. // அட அட அடடா என்ன சுவை, அதுவும் அடித்த கொடூர வெயிலுக்கு ரோஸ்மில்க் இதமோ இதம்.//

    ஏற்கனவே வெயிட்டு கண்ணா பின்னான்னு எகிறி கிடக்கு .

    //ஏழுமலையான் கவுனியில் யாரிடமோ கடன் வாங்கியிருந்தாராம். அதனால் அந்த பகுதி வரும் போது நிற்காமல் குடையை தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவார்களாம்.//

    சிரிச்சு மாலல. நல்ல கூத்துதான் இது

    ReplyDelete
  6. அட... எங்க ஏரியா...! ம்... இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

    ReplyDelete
  7. எங்க ஊருக்கும் வந்தது மச்சி..

    ReplyDelete
  8. குடை ஊர்வல பகிர்வு அருமை! நன்றி!

    ReplyDelete
  9. நண்பரே சரியாக சொன்னீர்கள். திருப்பதி குடை என்பது வட சென்னையின் திருவிழா. மத பேதமின்றி மக்கள் நல்லிணக்கத்துடன் இணையும் பொதுவிழா. அதை பத்துப் பதினைந்து வருடங்களாக கோமுட்டிச் செட்டிகளிடமிருந்து ஜி க்கள் களவாடி விட்டார்கள். அதன் தன்மை மாறிவிட்டது.

    குடை கவுனி தாண்டுகிறது எனும் பழைய சுவரொட்டி முண்டாசு அணிந்த இருவர் எதிரும் புதிருமாக குடையை தூக்கி வைத்திருப்பதைப் போன்றது இருக்கிறதா? ரங்கம் பிரதர்ஸ் சென்னை என்ற அச்சுக்கூடத்தின் பெயரோடு நீலம் சிவப்பு வண்ணத்தில் அச்சுவரொட்டிகள் இருக்கும். தேடிக் கொண்டிருக்கிறேன்,
    கிடைத்தால் தெரிவியுங்கள் veeorr@ymail.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...